“நிஷா எடுக்கலைன்னா எனக்கு கூப்பிட்டிருக்கனும். இல்லையா அம்மாவுக்கு கூப்பிட்டிருக்கனும். ஏன் திரும்ப திரும்ப நிஷாவுக்கு மட்டும்?…” என அவனும் விடாமல் கேட்க,
ஆதித்தன் கேட்க கேட்க அங்கே சுரேஷிற்கு பிபி எகிறியது. அருகில் அழுதுகொண்டே கன்னத்தில் கை வைத்து நின்றிருந்த அனுராதா மேல் அவ்வளவு கொலைவெறி.
ஒன்றும் செய்யமுடியாமல் மகள் என்ன நிலையில் தவித்து போயிருப்பாளோ என அவர் பதட்டத்தில் இருந்தார்.
“சொல்லுங்க மாமா, அதுவும் நிஷா ரொம்ப நேரம் வேற அவ அம்மாட்ட பேசியிருக்காளே. இன்னும் என்ன?…” ஈட்டியின் கூர்மையுடன் வந்தது அவனின் வார்த்தைகள்.
“ஆமா மாப்பிள்ளை. அப்போ நான் இல்லை. அதான் இப்ப பேசலாமேன்னு கூப்பிட்டேன்…” என சொல்லியவர் குரலில் ஏகத்திற்கும் கலக்கம், பயம்.
“நிஷா தூங்கறா. எழுந்ததும் சொல்றேன்…” என சொல்லி வைத்துவிட்டான்.
நிஷாவின் கை பேசியை சில நொடிகள் பார்த்தவனுக்கு சுரேஷ் பேசும் பொழுது அனுராதாவின் விசும்பல் சத்தம் வேறு கேட்டிருந்தது.
பிரச்சனை பெரிதாய் என்னவோ என அவன் மனம் சரியாக கணித்துவிட்டது. எழுந்து வரட்டும் என நிஷாவை பார்க்க இப்போது இன்னும் முகமும், மூக்கின் நுனியும் சிவந்து போயிருந்தது.
“நிஷா…” என்று அவளை அதிராமல் அசைத்து எழுப்பினான் ஆதித்தன்.
மருத்துவரின் அறிவுரைகள் ஒவ்வொன்றின் படி தான் அவன் அவளை பார்த்துக்கொள்கிறான்.
கண்களை திறக்கவே சிரமம் போலிருந்தது அவள் முகம். மெல்ல இமை பிரித்தவள் உடலே கனத்தது.
“எழுந்து உட்கார். சாப்பிடலாம்…” என எழுப்பியவன் இப்போது அவளின் உடல் சூட்டை இன்னும் அதிகமாய் உணர்ந்தான்.
“ஹேய் என்ன நிஷா?…” என பதறி,
“டெம்பரேச்சர் செக் பன்றேன்…” என எடுத்து பார்த்தவன் முகத்தில் கோபம் கனன்றது.
“லைட்டா ஃபீவர் போல. டேப்லெட் தாங்க. சரியாகிடும்…” என்றவள் குரல் இப்போது வெளியே வரவே இல்லை.
தொண்டைக்கட்டி போயிருந்தது அவளுக்கு. பேச முடியாமல் சிரமப்பட அப்படி ஒரு ஆவேசம் ஆதித்தன் முகத்தில்.
“அறிவிருக்காடி உனக்கு? வயித்துல புள்ளையை வச்சிட்டு அப்படி எதுக்கு அழுத?…” என அடிப்பதை போல வந்து நின்றான்.
“ஹ்ம்ம்…” என்றவளின் முகம் சுருங்க சோர்வாய் மீண்டும் சுருண்டாள் நிஷா.
“நிஷா என்ன பண்ணுது?…” என எழுப்பி சாய்ந்து அமர வைத்தான்.
“இரு சாப்பிட்டு ஹாஸ்பிட்டல் போவோம்…” என சொல்லி கீழே சென்றவன் சூடான சாதத்தில் ரசத்தை மட்டும் விட்டு எடுத்துக்கொண்டு மாடிக்கு விரைந்தான்.
“உங்களுக்கு…” என கேட்டவளை உறுத்து விழித்தவன்,
“ஏதாவது பேசின கடுப்பாகிடுவேன்…” என சொல்லி அவளுக்கு ஊட்டி விட நான்கு வாய்க்கு மேல் உண்ண முடியவில்லை.
“எழுந்திரு, கிளம்புவோம்..” என தானும் எழுந்துகொண்டான்.
“ப்ச், மாத்திரை போட்டா ஈவ்னிங் சரியாகிடும். விடுங்களேன்…” என்றவளுக்கு அவனை மறுக்கவும் முடியவில்லை.
இடுப்பில் கைவைத்து முறைத்து நின்றவனை பார்த்தவள் அமர முடியாமல் சாய பதறி தூக்கினான்.
“என்னால முடியலை. கொஞ்ச நேரம் படுக்கறேனே?…” என சொல்லியும் ஆதித்தன் கேட்கவில்லை.
“உன் இஷ்டத்துக்கு மாத்திரை எடுப்பியா நீ? அதுவும் இப்போ?…” என்று அதட்டி உடை மாற்ற வைத்து கீழே கூட்டி வந்தவன் செந்தாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.
செந்தா அப்போதே சசிகலாவிற்கு அழைத்து தகவலை சொல்ல அவர்களும் விசேஷ வீட்டில் இருந்தவண்ணம் கிளம்பி மருத்துவமனை சென்றனர்.
மருத்துவரின் முகத்தில் அவ்வளவு அதிருப்தி நிஷாந்தினியை பரிசோதித்துவிட்டு.
“என்னம்மா நீ? ஏன் இவ்வளோ பிரஷர் உனக்கு?…” என்றவர் ஆதித்தனை பார்க்க உள்ளங்கைக்குள் மடக்கப்பட்ட அவன் விரல்கள் நெரிபட்டது அவரின் பார்வையில்.
“சாதாரண காய்ச்சல் தான் டாக்டர்…” என நிஷாவிற்கு ஆதித்தனின் கடுமையான பார்வையிலேயே உடல் தூக்கி போட்டது.
“ப்ச், இவங்களை இப்படி பார்க்க வேண்டாம்ன்னு முதல்ல சொல்லுங்க. இப்படி முறைச்சே எனக்கு படபடன்னு வருது…” என்றாள் நிஷா.
“பின்ன முந்தாநாள் நல்லா இருந்த பொண்ணு இன்னைக்கு இப்ப இவ்வளோ பிரஷரும், பீவருமா இருந்தா?…” என சொல்லியவர்,
“மனசுல எதையும் வச்சுட்டு மருகாம இருக்க வேண்டாமா? அந்த அழுத்தமே உனக்கு காய்ச்சலா வச்சிருக்கு. போதாததுக்கு தொண்டை அடைச்சிருக்கு. ஜில்லுன்னு எதுவும் சாப்பிட்டியா?…” என கேட்டுக்கொண்டே ஊசியை போட,
“அதெல்லாம் இல்லை டாக்டர்…” என்றாள் நிஷா கணவனை பார்த்தபடி.
“ஆதி எதுக்கும் நிஷா இன்னைக்கு ஈவ்னிங் வரை அப்சர்வேஷன்ல இருக்கட்டும். ஈவ்னிங் நான் பார்த்துட்டு சொல்றேன். காய்ச்சல் வேற இவ்வளோ அதிகமா இருக்கு…” என சொல்லியவர் அப்போதே அவளுக்கு ஒரு தனி அறையை தந்துவிட்டார்.
“இப்போதைக்கு வேண்டாம். பார்த்துட்டு முடிவு பண்ணிப்போம். காய்ச்சலும், பிரஷரும் குறைஞ்சா தேவையிருக்காது…” என்றவர்,
“நிஷா நல்லா தூங்கனும். புரியுதா?…” என சொல்லி அனுப்பினார்.
முதல் மாடியில் அவளுக்கான அறை ஒதுக்கப்பட்டிருக்க வீல் சேரில் அமரவைத்து அழைத்து சென்றனர்.
அதற்கு கூட தெம்பில்லாதவள் போல ஓய்ந்து போயிருந்தாள் நிஷா. ஆதித்தனின் துளைக்கும் பார்வையிலிருந்து தப்பிக்கும் வகை தான் தெரியவில்லை.
அனுராதாவிடம் பேசியதெல்லாம் கூட பின்னே சென்றிருந்தது. இப்போது கணவனை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் திணறியபடி விழிகளை திருப்ப நர்ஸ் வந்து அவளுக்கு தேவையானதை பார்த்துவிட்டு சென்றாள்.
“படுத்துக்கோ…” என சொல்லிய ஆதித்தன் அந்த அறையை சுற்றி பார்த்தான் சுத்தமாக உள்ளதா என.
“புத்தி எங்க போனாலும் இது தான். ஹாஸ்ப்பிடல்ன்னு கூட பார்க்காம…” என சத்தமின்றி நிஷா சொல்ல,
“ஓகே தான் ரூம். பாத்ரூம் கூட ஓகே…” என சொல்லிவிட்டு கதவை சாற்றியவன் அவள் எதிரில் வந்தமர்ந்தான்.
“அச்சோ போச்சு, தூங்கிட்டேன்…” என உடனே நிஷாந்தினி கண்ணை மூடியதை போல பாவனை செய்ய,
“அவ்வளவும் கொழுப்புடி. வீட்டுக்கு வா கரைக்கறேன்…” என்றவன் அதட்டலில் கூட அவள் கண் திறக்கவில்லை.
மருத்துவர் கொடுத்த மருந்திலும், செலுத்திய ஊசியிலும் தன்னை போல உறக்கம் அவளை தழுவ இப்போது ஆழ்ந்த சயனத்தில் இருந்தாள் நிஷா.
சங்கரலிங்கமும், சசிகலாவும் கிளம்பி வந்துவிட அவர்களின் வருகை கூட நிஷாவை அசைக்கவில்லை.
“ஒண்ணுமில்லைம்மா. திடீர்ன்னு தான் காய்ச்சல். டாக்டரும் சொல்லிட்டாங்க. நைட் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடறேன்…” என்றவன்,
“நீங்க கிளம்புங்க. வேணும்னா நானே கூப்பிடறேன். அபியை பார்த்துக்கோங்க. ஸ்கூல் விட்டு வந்ததும் நிஷாவை தேடுவான். வீட்டுக்கு கிளம்புங்க…” என அனுப்பி வைத்தான் ஆதித்தன்.
மாலை வரை மருத்துவமனையில் வைத்து பார்த்துவிட்டு எல்லாமே சரியாக இருக்கிறது என்றார் மருத்துவர்.
காய்ச்சலும் கூட நன்றாக குறைந்திருந்தது. அதன் அயர்வு அவளின் உடலில் இருக்க,
“இன்னும் கொஞ்சம் கவனமா இரு நிஷா. எதையும் மனசுல போட்டு உழட்டிக்காம, ரொம்ப யோசிக்காம ரிலாக்ஸா இரு….” என அவளை பரிசோதித்துவிட்டு மருத்துவர் சொல்ல ஆதித்தன் கைகளை கட்டியபடி கட்டிலின் மறுபக்கம் நின்றிருந்தான்.
இன்னும் அவள் மேலான கவனிப்பு கூடத்தான் செய்தது. இன்னும் என்ன நடந்தது என அவனிடம் சொல்லவில்லை நிஷா.
என்னவாக இருக்கும் என யோசனை இருந்தாலும் தானாக எதையும் கேட்கவில்லை ஆதித்தன்.
ஒருவழியாக மருத்துவர் எல்லாம் சொல்லிவிட்டு கிளம்பும் தருவாயில் நிஷா அவரை நிறுத்தினார்.