“அடப்பாவி மனுஷா? இதுதான் வெட்கமா? பேஷ், பேஷ்…” என்றுவேறு கேட்டு மலர்ந்து சிரிக்க ஆதித்தன் நிஷாவின் முகத்தை ஒரு கையால் பற்றி தன்னருகே இழுத்துக்கொண்டான்.
“அடி தான் உனக்கு. நான் எங்க வெட்கப்பட்டேன்?…” என்றவன் ஸ்ருங்கார சிணுங்கல் நிஷாவை இன்னும் ரசிக்க செய்ய,
“ஆமாமா, வெட்கப்பட்டுட்டாலும்…” என்று இன்னுமே சீண்டியவளின் பேச்சில்,
“வாய மூடுடி…” என அதற்குமேல் முடியாமல் கழுத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன் உடலும் சிரிப்பில் குலுங்கியது.
இரவு வீடு வந்து சேரும் பொழுது அபி அவர்களுக்காக காத்திருக்க நிஷாவை பார்த்ததும் சென்று அணைத்துக்கொண்டான்.
“பீவரா ம்மா?…” என கேட்டு தன்னுடைய மருந்துகளை எல்லாம் கொண்டுவந்து தர நிஷாவிற்கு கண்ணீர் உகுக்க ஆரம்பித்தது.
“எதை எதையோ நினைச்சு காய்ச்சலை இழுத்துக்கிட்டு இப்ப பார் கஷ்டப்படறது நம்ம பிள்ளை தான்…” என்றான் ஆதித்தன் கண்டிக்கும் விதமாய்.
“விடேன் ஆதி. வந்ததுல இருந்து திட்டிட்டே இருக்க…” என்றவர் மருமகளுக்கு கஞ்சியை வைத்துக்கொடுத்து சாப்பிட வைத்தார்.
“ம்மா நா தரேன்…” என அபி மாத்திரைகளை தானே பிரித்து கொடுத்தான்.
சங்கரலிங்கமும் மருமகளிடம் பேசிவிட்டு சென்றார். அவளை பார்த்துக்கொள்ளும்படி ஆதித்தனுக்கும் சொல்லி சென்றார்.
“ம்மா அபியை உங்களோட வச்சுக்கோங்க. நிஷாவுக்கு காய்ச்சல் முழுசா சரியாகட்டும்…” என்றான் ஆதித்தன்.
“சரிப்பா…” என்றவர்,
“அப்பறம் நிஷா மறந்துட்டேன் பாரேன். நீ வாரதுக்கு முன்னாடி உன் அம்மா கூப்பிட்டிருந்தாங்க. உன் போன் வீட்டுலையே இருக்கு போல? எனக்கு கூப்பிட்டு குடுக்க சொன்னாங்க. நான் தான் நீ ஹாஸ்பிட்டல் போயிருக்கறதா சொன்னேன். போய் பேசிடு. இல்லைன்னா பதட்டமாவே இருப்பாங்க…” என்று சொல்லி சென்றார்.
நிஷாந்தினி அனுராதாவிற்கு அழைக்கவே இல்லை. அழைக்கவும் விரும்பவில்லை.
“போன் அங்க இருக்கு…” என்ற ஆதித்தனிடம் தலையசைத்தவள் உடை மாற்றி வந்து படுத்துக்கொண்டாள்.
எதுவும் கணவன் கேட்பானோ என நிஷாந்தினியும், அவள் அனுராதாவிற்கு பேசாததை வைத்து ஆதித்தனும் அமைதியாகி விட்டனர்.
மறுநாள் காலை வழக்கம் போலவே விடிய அபி எழுந்ததுமே வந்துவிட்டான் நிஷாவை தேடி.
“நான் அனுப்பறேன் உன்னை. ரெண்டுமூணு நாள் அம்மாவை தொந்தரவு பண்ண கூடாது அபி. பாப்பா இருக்குல…” என ஆதித்தன் சொல்ல சமத்தாய் கேட்டுக்கொண்டான் அபி.
முதல்நாள் பள்ளியில் நிகழ்ந்தவற்றை இப்போது இருவரிடமும் கதையாய் சொல்லியபடி கிளம்பி செல்ல ஆதித்தன் அவனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் லாட்ஜ் வரை சென்றிருந்தான்.
அவர்கள் அந்தப்பக்கம் செல்லவும் இங்கே அனுராதாவும், சுரேஷும் வந்துவிட்டனர் குற்றாலத்திற்கு.
“நிஷா இங்க பாரேன் யாருன்னு…” என சசிகலா புன்னகையுடன் அவர்களை எதிர்கொள்ள கீழே வந்த நிஷாவின் முகம் திகைத்து பின் சாதாரணமாக மாறியது.
முதல்நாள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் மீண்டும் ஞாபகம் வர அவளால் அவர்களை வரவேற்க கூட முடியவில்லை.
“லேசான காய்ச்சல் தான் ராதா. எதுக்கு பதறி போய் வந்திருக்கீங்க?…” என்றவர்,
“சரி உட்காருங்க. செந்தா காபி கொண்டா…” என சொல்லி அடுக்களைக்குள் சென்றார்.
“நீங்க காபி குடிச்சிட்டு இருங்க. பக்கத்துல கோவில் வரை போய்ட்டு வரேன். அதுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன்…” என சொல்லி சசிகலா சென்றுவிட்டார்.
“நிஷா நிஷாக்குட்டி, அம்மாவை…” என அவளின் கையை பிடிக்க வந்த தாயிடமிருந்து இரண்டடி பின்னே நகர்ந்தாள் நிஷா.
“இப்படி பண்ணாத நிஷா, அம்மா வாய் தவறி சொல்லிட்டேன். மன்னிச்சிடுடா…” என கெஞ்ச,
“அழு, இன்னும் நல்லா அழு. நீயெல்லாம் மனுஷியா? எப்ப இருந்து உனக்கு இந்த புத்தியோ?…” என சுரேஷ் ஆத்திரம் குறையாமல் மனைவியை பேச கல்லாய் நின்றிருந்தாள் நிஷாந்தினி.
“நிஷாம்மா, அப்பாவை மன்னிச்சிடுப்பா. இவ இப்படி பேசினது கேட்டு நான் துடிச்சு போய்ட்டேன். அதோட உனக்கு முடியலைன்னு சொன்னாங்களா. அதான் கிளம்பி வந்துட்டேன்…” என்றார் அவர்.
“நிஷா அப்பா கூட என்னை அடிச்சுட்டாங்க. அம்மா வேணும்னு பேசலைடா. உன் வீட்டுல உன் மாமியார், மாமனார் புரிஞ்சுப்பாங்க. ஆனா நிரஞ்சனி அந்நியம். அவளா தேடிக்கிட்ட வாழ்க்கை. அதுல பிரச்சனை வந்திட கூடாதுல. அவங்க எதுவும் நினைச்சிட்டா உங்களுக்குள்ள சங்கடமேன்னு தான் சொல்ல வந்து அப்படி பேசிட்டேன்…” என்றவர்,
“நீ எதையும் சமாளிக்க தெரிஞ்ச பொண்ணு. ரஞ்சி அப்படி இல்லை. அதான் ஒரு ஆதங்கத்துல அப்படி பேசிட்டேன்…” என்று சொல்ல,
“அப்பா இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம்…” என சொல்லும் பொழுதே செந்தா வந்துவிட்டாள்.
வீட்டில் அவர்கள் மட்டுமே இருக்க நிஷாவால் நிற்கவும் முடியவில்லை. அங்கேயே அமர்ந்துவிட்டாள்.
“நிஷா அம்மாக்கிட்ட பேசுடா…” என்று கேட்க,
“ப்பா இவங்களை பேசாம இருக்க சொல்லுங்க. நேத்து இவங்க பேசினது அசிங்கம். எனக்கு அதுவே காய்ச்சல் வரை கொண்டு போய் விட்டுடுச்சு. என் குடும்பத்துக்கு, புருஷன், பிள்ளைக்கு நான் மட்டும் தான் இருக்கேன்…” என்று கண்ணீரை துடைத்துவிட்டு தெளிவாய் பேசினாள்.
“என்னால உங்களை விட்டு ஒதுங்க முடியாது. ஏன்னு கேள்வி வரும். பெத்த தாயே இப்படி மருமகனை பேசிருக்காங்கன்னு வரும்போது உண்மையா இருக்குமோன்னு பெரிய கேள்வி வரும். அது வேண்டாம். ஏற்கனவே சில நேரம் நெருப்புல இருக்கற மாதிரி தான் போகுது வாழ்க்கை…”
“திரும்ப அப்படி ஒரு அவப்பெயரை சுமக்க முடியாது. இது என் புருஷனுக்கு மட்டுமில்ல, உங்க பெரிய பொண்ணுக்கும் தான் அவப்பெயர். தேவையில்லாம இட்டுக்கட்டி பேச இடம் கொடுக்க என்னால முடியாது. அதுவும் இங்க எல்லாருக்கும் தெரிஞ்சா துடிச்சு போயிருவாங்க. அப்பறம் என்னை மொத்தமா மறந்திட வேண்டியது தான் நீங்க…”
“அதுக்காக உங்களோட நான் எப்பவும் போல இருக்க முடியாது. ஆனா குறைச்சுப்பேன். என்னை சங்கடப்படுத்தாதீங்க ப்ளீஸ். புரிஞ்சுக்கோங்க ப்பா. இதுக்கு மேல எனக்கு சுத்தமா தெம்பில்லை. என்னால முடியும், முடியும்ன்னா நிச்சயமா என்னால எதுவுமே முடியாது. விட்டுடுங்க…” என கையெடுத்து கும்பிட,
“நிஷாம்மா…” என அழுதுவிட்டார் சுரேஷ்.
“அம்மாவை மன்னிச்சிடுடா…” என்ற அனுராதாவின் கண்ணீர் அங்கே நிஷாவிற்கு தாக்கத்தை தரவில்லை.
“இப்படி நீங்க அக்காவை முன்னிறுத்தி என்னை மூச்சை அடைக்க வச்சா எனக்கு வெறுத்துடும். உங்களுக்கு அது ஏன் புரியலை? நீங்க என்னை கட்டாயப்படுத்தறதும், ரஞ்சனி குறை சொல்லாமலே அதை நீங்க பெரிய குறையா சொல்லி என்னை பேசும் போது எனக்கு வெறுப்பு வந்திடும்ன்னு உங்களுக்கு ஏன் புரியலை?…”
“இதுவே எங்களுக்குள்ள விரிசலை உண்டாக்கிடும். ஒண்ணா இருக்கனும்ன்னு சொல்லியே எங்களை பிரிக்கறீங்க நீங்க. நான் ஏற்கனவே சொல்லிட்டேன் உங்ககிட்ட. நேத்து அப்படி பேசும் போது என் மேல நெருப்ப அள்ளி கொட்டின மாதிரி இருந்துச்சு. என்ன நினைப்பு இதுன்னு?…”
“இல்ல நிஷா, உன் வீட்டுக்காரர் இன்னும் கோபமா இருக்கறதால நிரஞ்சனி வீட்டு பக்கம் இப்படி யோசிச்சா?…” என்று மீண்டும் அவர் தான் பேசியதன் காரணத்தை நியாயப்படுத்த பார்த்தார்.
“ரஞ்சனியக்கா மாமியார் வீட்டுல எதுவும் நினைப்பாங்கன்னா அப்போ என் என்ன மாமியார் நினைப்பாங்கன்ற எண்ணத்தை தராத என் மேல தான் தப்பு. என்கிட்ட, உங்ககிட்ட மாமியாரா இருக்காத என் மாமியார் மேலையும் தப்புன்னு சொல்றாங்க போல? ஓகே இனிமே இருந்திட சொல்லிருவோம். என்னப்பா?…” என நிஷா பேச,
“அப்படி இல்லைம்மா…” என்ற சுரேஷ்,
“வேணாம். நீ அழுது உடம்பை கெடுத்துக்க வேண்டாம். உனக்கு என்னைக்கு மனசு மாறுதோ அப்போ நீ பேசு. போதும்…” என மகளை ஆதுரமாய் பார்த்து.
“எனக்கு வாஷ்ரூம் போகனும். வந்திடறேன் ப்பா. நீங்க இருங்க…” என்றவள் எழுந்து உள்ளே சென்றிருக்க ஆதித்தனின் பைக் சத்தம் கேட்டது.
“கண்ணை துடைச்சிட்டு சாதாரணமா இரு. ஏதாவது பேசி பிரச்சனையை பெருசாக்கின கன்னம் திரும்ப பழுத்துடும்…” என எச்சரித்தார் சுரேஷ்.
“வாங்க…” என்றவன் சத்தத்தில் திரும்பி பார்த்த அனுராதா,
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?…” என்றார் அவனிடம்.
“நிஷா எங்க?…” என கேட்டவன் விறுவிறுவென உள்ளே சென்று அவள் பாத்ரூமில் இருக்க கண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தான்.
“உட்காருங்க…” என சொல்லி நின்றவர்களை அமர கூறி தானும் அமர்ந்தவன் அவர்கள் இருவரையும் பார்த்தான்.
“என்ன பிரச்சனை உங்களுக்கு?…” என்றொரு கேள்வி தான்.
அனுராதாவிற்கு உதற ஆரம்பித்துவிட்டது. சுரேஷ் என்ன பிரச்சனையாகுமோ என பயந்து போய் பார்க்க,
“மாப்பிள்ளை நான் தெரியாம…” என்ற அனுராதாவின் பேச்சினை கை நீட்டி தடுத்தான் ஆதித்தன்.
“ப்ச், உங்களுக்கு என்ன பிரச்சனைன்னு தான் கேட்டேன். நடந்த பிரச்சனை என்னன்னு நிஷா சொல்லாம எனக்கு தெரிஞ்சுக்க வேண்டாம்….” என்றவன்,
“நீங்க நல்லவிதமா பேசியிருக்க போறதில்லை. அதுவும் நிஷாவுக்கு காய்ச்சல் வர அளவுக்கு பேசியிருக்கீங்கன்னா எனக்கு புரிஞ்சு போச்சு. அதனால அதை உங்க மூலமா நான் தெரிஞ்சுக்க விரும்பலை…” என்றான் முகத்தில் அடித்ததை போல.
சுரேஷ் தலை குனிந்து அமர்ந்துவிட்டார் மருமகனின் இந்த பேச்சில். அனுராதா கலங்கிய கண்களை மறைக்க தலையை குனிய,
“மாசமாயிருக்கற பொண்ணுக்கு சந்தோஷத்தை தரலைன்னாலும் பரவாயில்லை. சங்கடத்தை தராம இருந்திருக்கனும்னு தெரிய வேண்டாமா உங்களுக்கு? இப்படி அழுது காய்ச்சல் வரை கொண்டு வந்திருக்கீங்க?…”
“இதுவே கடைசியா இருக்கட்டும் உங்களால நிஷா அழறது. திரும்ப இதை செஞ்சா, அவ சொல்லமாட்டா, ஆனா நான் கண்டுபிடிச்சிருவேன். அப்படி நடந்தா அப்பறம் எந்த உறவும் எங்களுக்கு தேவையில்லைன்னு முடிவுக்கு வந்திருவேன்….” என்றவன் கோபத்தில் மிரண்டு தான் போனார்கள் இருவரும்.