“தெரிஞ்சு பேசினதுக்கு எல்லாம் இப்படி வாய்வார்த்தையா கேட்காதீங்க. முதல்ல மன்னிப்பு கேட்கிற விதமா நடந்துக்காம இருங்க. ஒரு வயசுக்கு மேல நீங்க கேட்கிற மன்னிப்பு எங்களுக்கு சங்கடம். நீங்க உணர்ந்தா அது போதும். எல்லா நேரமும் நான் அமைதியாவே இருக்கமாட்டேன். நேத்து டாக்டர் அவ்வளோ சத்தம் போடறாங்க….” என்றவன்,
“ப்ச், உங்ககிட்ட சொல்லி என்ன? ஆனா திரும்ப நிஷாக்கிட்ட அவ மனசு கஷ்டப்படற மாதிரி, அழற மாதிரி பேசினா நான் அடுத்து என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. எனக்கு அவ தான் முக்கியம். அதுக்கப்பறம் தான் யாரும்…” என சொல்லிக்கொண்டிருக்க,
“இப்பதான் வந்தீங்களா? பைக் சத்தம் கூட கேட்கலை…” என வந்தாள் நிஷா.
சட்டென ஆதித்தன் முகத்தின் கடுமை குறைந்து அவன் கண்களில் சிறு மென்மை வந்தமர்ந்தது.
“சூப் அப்படியே இருக்கு? குடிக்கலையா நீ?…” என்றான் அவளிடம் கண்டிப்புடன்.
“வாமிட் வர மாதிரி இருந்துச்சு. அதான் போனேன். இப்ப குடிப்பேன்…”
“ஆறிருக்குமே? சூடு பண்ணி கொண்டு வரவா நிஷா?…” என எழுந்தான் ஆதித்தன்.
“அதெல்லாம் வேண்டாம். இப்பவும் லேசான சூடு இருக்கே…” என நிஷா மறுக்க,
“ஓகே பேசிட்டு வா…” என சொல்லியவன்,
“இருந்து சாப்பிட்டு போங்க…” என சொல்லிவிட்டு மடிக்கு சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில் சசிகலாவும், சங்கரலிங்கமும் கூட வந்துவிட்டனர். வந்தவர்கள் அனுராதா, சுரேஷை கவனிப்பதும், தங்கள் பார்த்துக்கொள்வதாகவும் சொல்ல அனுராதாவின் மனமே குறுகிவிட்டது.
ஆதித்தனின் பேச்சுக்களும், முதல் நாள் அவனுக்காக மகள் பேசிய பேச்சுக்களும், இப்போது கண்முன் அவன் கவனித்ததும் என எல்லாமே அவர்களின் பார்வையின் தவறை எடுத்து காண்பித்தது.
ஆனால் இனி உணர்ந்து என்ன செய்வது? காலம் கடந்த புரிதல். அனுராதா பேச்சை சுருக்கிவிட்டார்.
பிரசவத்தின் பொழுது கூட அவர்களாகவே தான் வந்து சேர்ந்தனர் மருத்துவமனைக்கு.
நிரஞ்சனியை அப்போதும் அனுராதா அழைக்க குழந்தையுடன் நிஷா சென்னை வரும்பொழுது வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.
கொடுத்த தேதிக்கு முன்பே வலி கண்டுவிட மருத்துவமனையில் இன்னும் வலி கூடட்டும் என்று சொல்லிவிட்டனர்.
கவிப்ரியா தன்ஷிகாவுடன் வந்துவிட்டாள் தகவல் தெரிந்ததுமே. ஆதித்தனின் சொந்தங்களும் வந்துவிட்டனர்.
ஆதித்தனுக்கு இருப்பு கொள்ளவில்லை. நிஷா இருந்த அறைக்குள் சுற்றுவதும், வெளியே வருவதுமாய் இருந்தான்.
கட்டிலில் சாய்ந்து நிஷா அமர்ந்திருக்க அவளின் இருபுறமும் நிஷாவின் வயிற்றை பிடித்தபடி தன்ஷியும், அபியும் பிறக்கபோகும் குழந்தைக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தனர்.
கூடவே வலிக்காமல் வருமாறு அபி சொல்ல அதையே தன்ஷியும் சொல்ல பார்க்கவே கவிதையாக இருந்தது அந்த காட்சி.
“வலிக்கலையா நிஷா?…” என இதோடு முன்னூறு முறை கேட்டிருப்பான் ஆதித்தன்.
மருத்துவமனைக்கு அதிகாலை வந்து சேர்ந்தது. இரவாக போகிறது. இன்னும் பெரும்வலி எடுக்கவில்லை.
பல்லை கடித்து வலியை பொறுத்துக்கொண்டே அமர்ந்திருந்தவள் முகத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை அவனால்.
“வலிக்குதா நிஷா?…” என கேட்பதும்,
“டாக்டர் வலி இன்னும் வரலையாம். எவ்வளோ நேரம்?…” என மருத்துவரிடம் செல்வதுமாய் அவன் செய்த அலப்பறையில் சசிகலா கன்னத்தில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
“கொஞ்ச நேரம் உட்காரேன் ஆதி….” என கவி சிரித்துவிட,
“என்ன சிரிப்பு? ஏன் இவ்வளோ நேரம்ன்னு கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாமா?…” என சசிகலாவையும், கவியையும் முறைத்தான் அவன்.
ஆனால் அதனை பிள்ளைகள் பார்த்துவிடாமல் முகம் மாறாமல் இருக்க நினைக்க சலசலவென வியர்த்துவிட்டது.
“அப்பா நீங்க பசங்களை கூட்டிட்டு வெளில போங்க. கீழே பார்க்ல இருங்க…” என்ற கவி,
“ஆதி நீ டாக்டரை கூப்பிடு…” என்று சொல்ல,
“கவி நீ ஓடு. அவன் நிஷாவோட இருக்கட்டும்…” என்றார் சசிகலா.
மற்றவர்களும் அறையிலிருந்து வெளியே செல்ல ஆதித்தன் நிஷாவின் கைகளை பற்றிக்கொண்டான்.
அவனின் நடுக்கத்தை உணர்ந்தவள் அந்த வலியிலும் சிரித்துவிட அருகே அழைத்து அவனின் நெற்றியில் முட்டினாள்.
“வலிக்கலையான்னு இப்ப கேட்கலையா?…” என கண் சிமிட்ட கண்ணிலிருந்து நீர் பெருக்கெடுத்தது.
“அழாதடி. உனக்கு இப்படி வேர்க்குது நிஷா? இப்படித்தான் இருக்குமா?…” என கேட்டவன் மனதும் அவ்வலியை உணர்ந்தது.
“கொஞ்ச நேரம் தான். இப்ப வந்திருவா உங்க பெண்ணரசி, உங்களை ஆட்டி படைக்க….” என தொண்டைக்குழி ஏறி இறங்க கண்ணை மூடி திறந்து சொல்வதற்குள் நிஷா துடித்து போனாள்.
“ஆமா ஆட்டிப்படைக்க, உன்னை மாதிரி…” என சொல்லியவன் கைகள் இன்னும் மனைவியின் வலியை அதன்வழி உள்வாங்கியது.
நிஷாவின் கைகள் தரும் அழுத்தமும், இறுக்கமும் ஆதித்தனை மிரள செய்தது. இவ்வளவு வலிக்கிறதே என அவன் கலங்கி போனான்.
மருத்துவர் வந்துவிட நிஷாவை பிரசவ அறைக்கு அழைத்து செல்ல ஆதித்தன் உடன் சென்றான்.
“ஓடிருங்க. இதெல்லாம் பார்க்க வேண்டாம்…” என அவனை வெளியில் அனுப்ப பார்க்க,
“ம்ஹூம், நான் இருக்கேன். பார்க்கிறேன். நீ என் கையை பிடிச்சுக்கோ…” என்றவன் அவளின் கையை விடவே இல்லை.
நிஷா மருத்துவரிடமும் சொல்லி அவனை வெளியேற்ற சொல்ல ஆதித்தனின் பிடிவாதம் தான் அங்கேயும் வென்றது.
“உன் கூட தான் இருப்பேன். பேசாம இருக்கமாட்டியா நீ? எதுக்குடி வெளில போக சொல்ற?…” என்று அவளிடம் கூறியவன் விழிகள் சிவந்திருந்தது.
“நீங்க பில்டிங் ஸ்ட்ராங். பேஸ்மட்டம் வீக். அதான்…” என அவளுமே அந்த நேரமும் அவனிடம் வாயாட,