மாடியில் ஆதித்தன் நுழையும் பொழுது மகனுக்கு மருந்து கொடுத்துக்கொண்டு இருந்தாள் நிஷாந்தினி.
“ப்ளீஸ் ம்மா. நோ…” என அபி கெஞ்ச,
“கொஞ்சமா தான் சிரப் அபி. ஃபீவர் வராம இருக்கனும் தானே? இல்லைன்னா திரும்ப ஹாஸ்பிடல், இன்ஜெக்ஷன், சிரப்…” என சொல்ல சொல்ல அபின் கண்கள் பயத்தில் விரிந்தது.
“ஓகே…” என சிணுங்கிக்கொண்டே சொல்லிய மகனை ஆதித்தன் பார்க்கவும்,
“ப்பா…” என்று தன் அருகே அழைத்தான்.
“மருந்து குடிக்க கூட அப்பா. ஈஸ்வரா…” என முணுமுணுப்பாய் சலித்தவள் முணங்கல் ஆதித்தனையும் எட்ட அவன் மகனருகே வந்தமர்ந்தான்.
“குடி அபி…” என்றதும் அபி வாயை திறக்க நிஷா அவனின் திறந்த வாயில் ஸ்பூனால் மருந்தை ஊற்றவும் குடித்த நொடி மகன் முகத்தை சுளிக்கவும் தண்ணீரை புகட்டினாள்.
“அவ்வளோ தான், போய்டுச்சு போய்டுச்சு…” என அவனின் நெஞ்சை நீவிவிட்டவள் மகனை தன் தோளில் சாய்த்துவிட்டு முதுகை தட்டிக்கொடுத்து ஆதித்தனை பார்த்தாள்.
அவள் பார்வையில் ஏகத்துக்கும் மிரட்டல் தான் விஞ்சி இருந்தது. மகன் முன் பேசிவிட கூடாதென எச்சரிக்கை சமிஞ்சை அது.
“ஊஃப்…” என தலையை கோதியவன் கட்டிலில் பின்னால் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
“ரூம்ல சும்மா ஒரு வாக் பண்ணு அபி. சரியாகிடும். மருந்து உள்ள போயிரும்…” என்று மகனுடன் அந்த அறையை நடந்து அளக்க அபி முகத்தில் இன்னும் மருந்து குடித்ததன் தாக்கம்.
“ம்மா கீழ போறேன்…” என நிஷாவின் கையிலிருந்து தன் கரத்தை விலக்கியவன் செல்ல போக,
“இரு அபி. கீழ வேண்டாம். இங்கயே விளையாடு…” என நிஷா சொல்ல,
“நீ போ அபி…” என்றான் ஆதித்தன்.
பல்லை கடித்த நிஷாந்தினி ஒன்றும் சொல்லாமல் அதற்கு மேல் மறுக்காமல் நின்றாள்.
“நீங்க ரெண்டுபேரும் பழம் விட்டுக்கலையா?…” என அபராஜிதன் தன் இடுப்பில் கைவைத்து பார்த்து பெற்றவர்களை கேள்வி எழுப்ப,
“நாங்க எப்போ சண்டை போட்டோம்?…” என்றாள் நிஷாந்தினி உடனே.
“இல்லையா?…” என இப்போது ஆதித்தனை பார்க்க அவன் மெல்லிய புன்னகையுடன் இல்லை என தலையசைத்தான் மகனிடம்.
இன்னும் அபி இருவரையும் மாற்றி மாற்றி பார்க்க நிஷாந்தினிக்கே அந்த பார்வையில் சிரிப்பு வந்துவிட,
“போடா…” என்றாள் சிரிப்போடு.
“அபி போய் ஆச்சியோட விளையாடு…” என சொல்லிய ஆதித்தன் மகன் சென்றதும் எழுந்து சென்று கதவை சாற்றிவிட்டு வந்தான்.
அதனை கண்டுகொள்ளாமல் தனது பேக்கில் இருந்து ஒரு பேப்பர் கட்டை எடுத்து டேபிளில் வைத்தாள் நிஷா.
“எதுக்கு அவங்கட்ட அப்படி சொன்ன?…” என ஆதித்தன் கேட்க,
“நீங்க ஏன் அபியை இப்ப வெளில போக சொன்னீங்க?…” என எதிர்கேள்வி கேட்டாள் நிஷாந்தினி.
“இது அவன் வீடு. அவனை ஏன் இதை செய்யாதன்னு கன்ட்ரோல் பன்ற? யாருக்காகவும் அபி இங்க ரூம்க்குள்ளயே இருக்கனும்னு என்ன அவசியம்?…” ஆதித்தனும் இறுக்கமாகவே பதிலளித்தான்.
“எனக்காகன்னு வச்சுக்கலாம்….” என்றவள் அந்த பேப்பர் கட்டை பிரிக்க,
“ப்ச், இங்க பாரு…” என அவளின் கை பிடித்து திருப்பியவன்,
“எவ்வளோ தைரியம் இருந்தா எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்க சொல்லுவ? இன்னும் என்ன நினைச்சிட்டிருக்க நீ?…” என்றவன் கேள்வியின் ஆவேசம் அவன் கண்களில் கனன்றது.
“அப்போ அவங்க எது பேசினாலும் நான் பேச கூடாதா? என் அக்காவை ஏன் இழுக்கறாங்க? அதுவும் இத்தனை வருஷம் கழிச்சும்? அப்போ அதை தான் நானும் சொல்லுவேன்….”
“அப்போ நான் சம்மதிச்சா உனக்கு ஒன்னுமில்லைன்றியா?…”
“சம்மதிக்க போறீங்களா என்ன?…” அலட்சியமாகவே அவள் கேட்க ஆதித்தனின் பொறுமை கரைந்துகொண்டிருந்தது.
“நிஷா…” என்றவன் இன்னும் அவளை தன்னிடம் நெருக்க,
“இட்ஸ் ஹர்ட்டிங் மீ…” என்றாள் அவனின் கை பிடியை கண்களால் காண்பித்து வலியை முகத்தில் காண்பிக்காமல்.
“ப்ச்…” என பிடியை தளர்த்தியவன் கையை விடவில்லை.
“எனக்கு வேலை இருக்கு…” என்று சொல்லியவள் கன்னத்தை இன்னொரு கையால் தாங்கி பிடிதத்தவன்,
“ம்ம்ம், இருக்கட்டும்…” என்றான்.
நிஷாந்தினிக்கு அத்தனை ஆற்றாமை. நினைத்தால் வருவான், நிற்பான், பிடிப்பான். எல்லாம் இவன் இஷ்டமா? என பொங்கியது.
ஆனாலும் காண்பித்துகொள்ளாமல் அவனின் முகத்தையே அவள் அசையாது பார்க்க ஆதித்தனின் கோபம், எரிச்சல் எல்லாம் எங்கென்று தெரியாத ஒரு இலகுவான மனநிலை.
எப்போதும் தான் மிஞ்சினால் தனக்கும் மேல் மிஞ்சும் அவளின் இந்த திமிர் இன்னுமின்னும் ஆழி சுழலாய் அவனை இழுத்து சென்றது.
மகனின் முன்பும் வேறு யாரின் முன்பும் அவனின் மரியாதை குறைந்துவிடும் அளவிற்கு நடந்துகொண்டதே இல்லை.
என்றாவது எதார்த்தமாக சலிப்புடனோ மகனிடம் அவள் பேசிவிட்டால் பிடித்துக்கொள்வான்.
“என்ன உனக்கு சப்போர்ட்க்கு ஆள் சேர்க்கறயா?…” என்று கேட்டுவிட்டால் போதும், நிஷாந்தினி பட்டாசு தான்.
“என் மகன் அவன் அப்பாவை மதிக்க வேண்டாமா? என் பிரச்சனை உங்க கூட தான். அதை நான் பார்த்துப்பேன். அவன்கிட்ட சொல்லி உங்களை பேச வைக்கனும்னு நான் நினைக்கமாட்டேன்…” என்றுவிடுவாள்.
இப்போதும் தான் அவனை செல் என்று சொல்லவும் அதனை மறுத்து நிறுத்த நினைக்கவில்லையே.
எதுவும் பேசாமல் இன்னும் அவனின் கைப்பிடிக்குள் தன்னை நிறுத்தி வைத்திருப்பவனை விலகவும் முடியாமல் அவன் பேசமாட்டான் என்றும் அறிந்தவள்,
“கேட்டு முடிசாச்சா? கையை விட்டா நான் போவேன்…” என்றாள் அவள்.
“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலை…” என ஆதித்தன் கேட்க,
“நான் சொல்லிட்டேன். திரும்ப எல்லாம் சொல்லமுடியாது…” என்றாள் நிஷாந்தினியும் பிடிவாதமாக.
அதில் மீண்டும் சுர்ரென கோபம் பெருகவும் அவளின் கன்னத்தை பற்றி இழுத்தவன்,
“அடங்கவேமாட்டியாடி நீ?…”
“எதுக்கு?…”
“இதைபத்தி பேசாதன்னு சொல்றேன். திரும்ப அதையே பேசற. அதுவும் பிள்ளையை வச்சுக்கிட்டு…”
“அந்த இங்கிதம் அவங்களுக்கு தெரியனும். கல்யாணமாகி இத்தனை வருஷமாச்சு. இன்னும் அவங்க தங்கச்சி மகளை உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியலையேன்னு நினைக்கறாங்கன்னா அதுக்கு யார் காரணம்?…”
யார் காரணம் என்ற ஒரே கேள்வியில் அவனை மொத்தமாய் சாய்க்க பார்த்துவிட்டாள் நிஷாந்தினி.
குபீரென இதயம் எகிறி குதித்தது ஆதித்தனுக்கு. என்ன கேட்கிறாள் இவள் என்று பார்த்தவன்,
“என்ன அர்த்தத்தோட பேசற?…” என பல்லை கடித்தான்.
“சரியான அர்த்தம் தான். அவங்க வரும் போதெல்லாம் இதை பேசாம கிளம்பறதில்லை. இது உங்கக்காவுக்கும் நல்லா தெரியும். இந்ததடவை நீங்க இருந்தீங்க. இல்லாதப்போ?…” என்றவள் அவனின் கையை விலக்க முயன்று முடியாது போக இப்போது கண்கள் கலங்கிவிட்டது.
“இவ்வளோ நாள் பேசாம தான இருந்தீங்க. அப்படியே இருங்க. விடுங்க. தேவைனா வந்து கேட்கறதும், பேசறதும். இல்லைன்னா சண்டை. இதுக்கு நான் ஆளில்லை…”
“நீ தான என் பொண்டாட்டி. உன்கூட சண்டை போடாம?…” என்றவனின் வார்த்தையில் அவள் அடங்கி விடுவாளா என்ன?
“எனக்கு ஞாபகமில்லை…” என்று அவனை தள்ள முயற்சித்தாள்.
“ஓஹ்…” என்றவன் அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தவுமே கை கொண்டு அவனின் இதழ்களை மூடி முறைத்தவள் அவளின் போன் அடிக்கவும் திரும்பி பார்த்தாள்.
கட்டிலில் கிடந்த போனின் முகப்பில் தெரிந்தது நிரஞ்சனியின் பெயரை தாங்கிய அழைப்பு தான்.
‘வேதாளம் முருங்கைமரம் ஏற போகுதுடோய்’ என எண்ணி முடிக்கும் முன் அவளை பிடித்திருந்த பிடியை மொத்தமாய் விலக்கியவன்,
“இனிமே இந்த வார்த்தை உன் வாய்ல இருந்து வந்துச்சு…” என கோபமாய் எச்சரித்தவன் அந்த அறையிலிருந்து கிளம்பினான்.
“ப்ச், வேற வேலை இல்லை. ரொம்ப ஆசைப்பட்டு சொல்றோமாக்கும்…” என்றவள் போனை எடுத்து பேச ஆரம்பித்தாள்.
“என்ன நிஷா உன் வாய்ஸ் டல்லா இருக்கு?…” என ரஞ்சினி கேட்கவும்,
“நல்லாருக்குடி மகராசி, ரொம்ப முக்கியம். அதெல்லாம் என்னைக்கும் போல தான் இருக்கு. எடுத்ததும் எப்ப பாரு டவுட்டாவே பேசறது…” என்று எரிச்சல் குறையாமல் அவள் பொட்டு வெடியென வெடிக்க,
“என்னன்னு கேட்டாலும் திட்டற, இல்லைன்னாலும் திட்டற. நான் என்ன பேச நிஷா?…” என்றாள் ரஞ்சனி பாவமாக.
லேசாய் குரலை உயர்த்தி அதட்டி பேசவுமே அக்காவின் குரல் பூஞ்சையாய் சுருங்கியதை எண்ணி மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டாள் நிஷா.
கமலா சொல்லியதை போல உண்மைக்கும் வாயில்லா பூச்சி தான் நிரஞ்சனி. சட்டென வாடிவிடும் அனிச்சை மலர் போல.
தங்கள் திருமணம் முடிந்ததில் இருந்து இதே தான். எங்கே தன்னை கொண்டு தங்கையை படுத்துவானோ என அவள் நிஷாந்தினி பற்றி கவலைப்படாத நாளே இல்லை.
திருமண மண்டபத்தில் அத்தனைபேரையும் அவ்வளவு பேச்சு பேசியிருந்தானே ஆதித்தனும்.
“நான் செஞ்சதுக்கு உன்னை டார்ச்சர் எதுவும் பன்றாங்களா?…” என எப்போதும் பேச்சின் முடிவில் கேட்பவள்.
இன்றுவரை சில நேரங்களில் அப்படித்தானே அவளின் குடும்பத்தினரிடம் எரிமலையாய் சீற்றம் காட்டுகிறான் ஆதித்தன்.
எப்போது தணிவான், எப்போது வெடிப்பான் என்ற ஒரு பீதியிலேயே தான் அவர்களை வைத்திருந்தான்.
ரஞ்சனியின் பேச்சுக்கள் எங்கு வந்தாலும் அவன் எடுக்கும் அவதாரம் நிஷாந்தினியை வாயடைக்க செய்துவிடும்.
“உன் அக்கா அவங்க வாழ்க்கையை தேடி போனா யார் என்ன சொல்ல போறாங்க? அது அவங்க டிசிஷன். ஊரை கூட்டி என்னை அவமானப்படுத்த அவங்க யார்? இதுல உனக்கு தெரிஞ்சும் நீ யார்கிட்டயும் சொல்லாம இருந்திருக்க?…” என பேச ஆரம்பித்துவிட்டால் அன்றைக்கு நிஷாந்தினி மௌனவிரதம்.
“பிடிக்கலையா போய்ட்டே இருக்கட்டும். யார் கேட்டா என்னை தான் கல்யாணம் செஞ்சுக்கனும்னு. நான் ஊர் உறவுகளோட அங்க வரதுக்கு முதல் நாள் கூட சொல்லியிருந்தா நான் ஏன் வந்து நின்னு அவங்க செஞ்சதுக்கு தலைகுனிய போறேன்?…” என்பான்.
“இதுக்கு நீயும் உடந்தை. ஓடவிட்டு வேடிக்கை பார்த்து என்னையும் அங்க முட்டாளா நிப்பாட்டிருக்க? என் சட்டை, பேண்ட் சைஸ் என்னன்னு கேட்க போன் பண்ணினவளுக்கு, அன்னைக்கு அவ்வளோ வசனம் பேசினவளுக்கு இதை சொல்ல முடியலையோ?…” என காய்ச்சி எடுத்துவிடுவான்.
நிரஞ்சனி அப்படி அன்றைக்கு செய்வாள் என்பது நிஷாந்தினியுமே எதிர்பாராத ஒன்று தான்.
அதுக்கு அவன் பதிலுக்கு செய்தது எல்லாம் இன்றைக்கும் பல்லை கடிக்க வைக்கும்.