“வடிவேலன் குரூப் ஆஃப் ஹாஸ்பிட்டாலிட்டி” என்னும் பெயரைத் தாங்கி இருந்த அந்த கம்பீரமான கட்டிடத்தினுள் அமையப் பெற்றிருந்த மூன்றாம் தளமான டைனிங் ஹால் மிகவும் பரபரப்பாக காட்சி அளித்தது.
மஞ்சள் விளக்கொளிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த அப்பெரிய டைனிங் ஹாலில், தயார் செய்து வைத்திருந்த அனைத்து உணவுகளையும் அந்த ஹாலின் குறிப்பிட்ட பகுதியை விழுங்கியிருந்த நீள டைனிங் டேபிளின் மேல் வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர் பணியாட்கள் ஒவ்வொருவரும்.
அனைத்து உணவுகள் அடங்கி இருந்த கண்ணாடி பாத்திரங்கள் மற்றும் பீங்கான் பாத்திரங்கள் டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்கப் பட்டதும் தனது கையில் இருந்த மெனு லிஸ்ட்டை வைத்து சரி பார்க்கத் துவங்கினான் சதீஷ்வரன்.
தயார் செய்யச் சொல்லி இருந்த அனைத்து உணவுகளும் டேபிலிற்கு விஜயம் செய்திருக்க, “ஹப்பாடி” என்று அவனையும் அறியாமல் ஒரு பெரு மூச்சு வெளியேறியது.
அவனின் செய்கையில் சிரிப்புடன் அவனை நெருங்கிய தலைமை செஃப் கலைவாணன் “என்ன சதீஷ்? டென்ஷனா?” என்று கேட்க,
“பின்ன இல்லாமையா கலை அங்கிள். நேத்து வரைக்கும் அப்பா மட்டும் தான் ஃபுட் டெஸ்டுக்கு வரப் போறாருன்னு கொஞ்சம் லகுவா இருந்துட்டேன். இன்னைக்கு மார்னிங் அப்பா போன் பண்ணி சொல்றாங்க. அண்ணாவும் வரப் போறான். கொஞ்சம் எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சரி பார்த்து வைன்னு. அப்படியே ஜெர்க் ஆகிட்டேன். அதான் மார்னிங்கே வந்தாச்சு இங்க” என்றான் இன்னும் படபடப்பு குறையாதவனாக.
அவனின் படபடப்பைக் கண்டு மேலும் சிரித்தவர், “அண்ணன்னா அவ்ளோ பயமா சதீஷ்?” என்று கிண்டலாக கேட்க,
“ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்காதீங்க கலை அங்கிள். இவளோ கிண்டலா என்கிட்ட கேக்குறீங்கள்ல? எங்க? இப்படியே முகத்தை மெயின்டெய்ன் பண்ணி சர்வேஷ் அண்ணா வந்ததும் கேளுங்க பாப்போம்” என்று சவால் விடுத்தான் அண்ணனின் மீது அங்கிருக்கும் அனைவருக்கும் உள்ள பயத்தை அறிந்து.
அவன் சவால் விட்டதும் “நான் பாக்க வளந்தவன்டா அவன். எனக்கென்ன பயம்?” என்றவர் கர்வமாக சொல்லிக் கொண்டிருக்கையிலேயே டைனிங் ஹாலிற்குள் தன் நிதான நடையுடன் வந்து கொண்டிருந்தான் சர்வேஷ்வரன்!
அவன் வருவதைக் கண்டவர், சதீஷின் தோளில் இருந்து கையை பட்டென எடுத்துக் கொண்டதுடன் மட்டுமின்றி “எல்லாம் ரெடியா?” என்று பணியாளர்களை கவனிக்க, சதீஷ் கொடுப்புக்குள் சிரிப்பை மறைத்துக் கொண்டான்.
“ரெடிண்ணா” என்றவன், “அப்பா வரலையா?” என்று கேட்டு அதன் பின்னர் நாக்கை கடித்துக் கொள்ள, அதை கவனித்தாலும் கண்டு கொள்ளாதவனாய் “வரேன்னு தான் சொன்னார். நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றவனின் பேச்சை கேட்கும் போதே புரிந்து போனது இன்று யார் யாருக்கு என்னென்ன முறையில் காய்ச்சி ஊற்றும் வைபவத்தை வைத்திருக்கிறானோ தன் உடன் பிறப்பு என்று!
அங்கே வரிசையாக அணிவகுத்து நின்றிருந்த பணியாளர்களிடம் உணவை காண்பித்து “கோ அஹெட்” என்று சொல்ல, ஒவ்வொரு உணவாக பவுளில் வைத்து சர்வேஷிடம் கொடுத்தனர்.
வரிசையாக சுவைத்துக் கொண்டே வந்தவன், முன்னேறி அடுத்தடுத்த உணவிற்கு செல்ல சதீஷின் கண்கள் ஆச்சர்யமாய் நோக்கியது அண்ணனை!
‘என்ன? இன்னைக்கு டக்கு டக்குன்னு நெக்ஸ்ட் ஐட்டத்துக்கு தாவுறார். ஒரு வேளை டிராவல் பண்ணி நேரே இங்க வந்ததுல கடும் பசியோ?’ என்று உள்ளுக்குள் விளையாட்டாய் எண்ணிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று ஒரு உணவுப் பொருளில் தேங்கி நின்றான் சர்வேஷ்வரன்.
‘இந்தா நின்னுட்டாருய்யா.. நின்னுட்டாருய்யா..’ என்று உள்ளுக்குள் புலம்பியவன் அண்ணனை நெருங்கினான்.
அந்த உணவை சதீஷ் பார்வையிட, அது ஒரு வட நாட்டைச் சேர்ந்த இனிப்பு வகை!
‘ஷாகி துக்டா’ (shahi tukda)…
வட நாட்டைச் சேர்ந்த “ரிச் அண்ட் ராயல்” இனிப்பு வகைகளுள் இந்த ஷாகி துக்டாவும் ஒரு வகை ஆகும்!
“ஆஹா, ஸ்வீட் அதிகம் போல! அப்படின்னா அண்ணனுக்கு காரம் பத்திக்குமேடா” என்று சதீஷ் வாய்க்குள்ளே முணுமுணுக்க, “இந்த டெசேர்ட்டை ப்ரிபேர் பண்ணவங்க யாரு?” என்று கேட்க, சதீஷ் வேகமாக அவரை முன்னே வரச் சொன்னான்.
சற்றே வியர்த்து வழிந்த முகத்துடன் அங்கே வந்து நின்றான் அந்த இனிப்பு வகையை செய்தவன்.
“நீங்க நியூ ஜாய்னி தான?” என்றவன் கேள்வியில் திணறலுடன் “எஸ் சார்” என்றான் அந்தப் புது செஃப்.
“ஹ்ம்ம்… இப்ப தான் உங்களை ஒரு கேட்டரிங் டீம்ல சேர்த்து இருக்கார் அப்பா?” என்றவன் கேள்வியாக நிறுத்த, “எஸ் சார்” என்றான் திணறல் விலகாமல்.
“நார்மலா இருக்க வேண்டிய அளவை விட கொஞ்சம் தூக்கலா இருந்தா ஓகே! பீப்பிள் மே லைக் இட்! ஆனா, ஏன் இனிப்பு ரொம்ப…. தூக்கலா போட்டிருக்கீங்க?” என்று அழுத்தமாக வார்த்தைகளை கோர்த்து நிதானமாக அவன் கேட்ட பாவனையில் சர்வேஷ்வரனின் முன்னால் சர்வமும் ஒடுங்கிப் போனது அவனுக்கு.
“அது சார்.. ஃபர்ஸ்ட் டைம் இவளோ பெரிய மேரேஜ் ஆர்டர்! நியூ கேட்டரிங் டீம்ல வேற ஜாயின் பண்ணி இருந்த சந்தோஷம். அதான்.. கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கட்டுமேன்னு…”
அதற்கு மேல் அவனால் தொடர முடியவில்லை சர்வேஷின் பார்வையில்!
கையில் இருந்த துக்டாவை மேஜையின் மீது வைத்தவன், “ஐ லைக் யுவர் எக்சைட்மெண்ட் சபரி. ஆனா, உங்க சந்தோஷத்தை தனியா ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்க” என்றவன்
“இப்படி ஒரு பெரிய ஆர்டரோட ஃபுட் டெஸ்ட்ல சுகரை தூக்கலா போட்டு கொண்டாட வேண்டாம். காட் இட்!”
அவன் காட் இட்…. என்று வார்த்தைகளை முடித்த கூர்மையில் சபரி அணிந்திருந்த செஃப் கேப்பையும் மீறி வியர்வை வழிந்து கன்னங்களை நனைத்தது.
“சாரி சார். இனி இப்படி ஆகாது” என்றான் பயத்துடன்.
“ஹ்ம்ம்..” என்றவன் அடுத்தடுத்து சுவைக்க, ஒரு சில உணவுகளில் காரம் கூடிப் போய் இருந்தது. அவர்களை எல்லாம் சபரி போலல்லாமல் ஏற்கனவே பணி புரிபவர்கள் என்பதால் காய்ச்சி எடுத்து விட்டான்.
அவனின் பேச்சில் சபரிக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது. ‘அப்ப எனக்கு மட்டும் தான் கம்மி டோஸ் போல’ என்று அவன் முழிக்க, அவனின் பார்வையை வைத்தே அவன் மண்டையில் ஓடும் விஷயத்தை கிரகித்த சதீஷ் “புதுசு கண்ணா… நீ புதுசு! அதான் இந்த நிதானமான பேச்சு” என்க,
“இது நிதானமா?” என்று வாய் பிளந்தவன், பல்லைக் கடித்து பேசியது போல் தான் இருந்தது. ஆனால், இல்லை! கோபத்துடன் சொல்வது போல் தான் இருந்தது. ஆனால், இல்லை. அழுத்தமாக சொன்னது போல் தான் இருந்தது ஆனால், இல்லை! ஆக, எல்லாமே இருந்தது தான்.
தன்னிடம் காட்டிய அளவு மட்டும் சற்றே கம்மி என்று அவனின் மனம் உள்ளுக்குள் எண்ணிக் கொள்ள, அனைத்து உணவுகளையும் சரி பார்த்து முடித்திருந்தான் சர்வேஷ்வரன்!
கலைவாணனை அழைத்தவன், “இந்த நாலு டிஷ் மட்டும் இப்ப உடனே ரீ – ப்ரிபேர் பண்ண சொல்லுங்க அங்கிள். உடனே! இப்படியே இருந்தா எப்படி? இன்னும் ரெண்டு நாள்ல நாம ரெடியா இருக்கணும்! எவ்ளோ பெரிய ஃபங்ஷன் இது? டாப் மோஸ்ட் செலிப்ரிட்டீஸ்ல இருந்து பொலிட்டீஷியன்ஸ் வரை கலந்துக்க போற மேரேஜ்!” என்றவன்,
“உடனே இதை எல்லாம் ரீ குக் பண்ணி என் ரூமுக்கு கொடுத்து அனுப்புங்க” என்று சொல்லி விட்டுச் செல்ல, அவன் சொல்வதற்கெல்லாம் “சரி சர்வேஷ். சரி சர்வேஷ்” என்று மண்டையை மண்டையை ஆட்டி வைத்தார் கலைவாணன்.
அவர் மண்டையை ஆட்டிய பாவனையில் சதீஷிற்கு அப்படி ஒரு புன்னகை. அண்ணனுக்கு பயந்து இதழ்களுக்குள் அடக்கினான்!
அவன் கலைவாணனுடன் பேசியபடி வெளியே சென்று விட, அப்போது தான் அங்கிருந்த அனைவருக்குமே மூச்சு சீரானது. ஒரு நிமிடம் அறையில் சூழ்ந்திருந்த வெப்பம் குறைந்தது போல் இருக்க, அனைவரின் முகத்திலும் உடல் மொழியிலும் அப்படி ஒரு ஆசுவாசம்!
“போய் ஒழுங்கா நார்மல் சுகரோட ஷாகி துக்டாவை ரெடி பண்ணி கொண்டு வா. சுகர் தூக்கலா இருந்தது… தூக்கு.. தூக்கு.. தூக்குதுரை.. தான் அப்புறம்” என்று கிண்டலடித்து விட்டு சென்றான் சதீஷ்வரன்.
“அண்ணன் என்னடான்னா அப்படி காய்ச்சி எடுத்திட்டு போறான். தம்பி என்னடான்னா இப்படி பேசி சிரிச்சிட்டு போறான். இவனுங்களை பெத்த அப்பா ரொம்ப சாந்தமா பேசிட்டு போவார். ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டிசைன்ல தான்யா இருக்காய்ங்க” என்று வாய் விட்டே புலம்பி கொண்டவன்,
கலைவாணனின் மேற்பார்வையில் மீண்டும் ஒரு முறை துக்டாவை தயார் செய்ய ஆயத்தமானான்.