சி. ஈ. ஓ. சர்வேஷ்வரன் என்று அவன் பெயரும் பதவியும் தங்கத் தகடினாலான பலகையில் பொறிக்கப்பட்டிருக்க, அதை தாங்கிய கதவினை திறந்து கொண்டு தனது அறைக்குள் நுழைந்தவனுக்கு அப்படி ஒரு அசதி!
தனது சுழல் நாற்காலியில் அமர்ந்ததும் சரிந்து கொண்டவன், தலையை பிடித்துக் கொண்டான்.
இன்று மதியம் தான் ஹைதராபாத்தில் இருந்து நேரே கோவை வந்து இறங்கி இருந்தான். முதல் நாள் அங்கே ஒரு திருமண நிகழ்வு! அதுவும் இவர்களின் ஹோட்டலில் தான் நடந்தேறி இருந்தது.
அதற்கான உணவு பொறுப்பையும் இவர்கள் வசமே ஒப்படைத்து இருந்தனர். நேற்று இரவு தான் விழா முடிந்திருக்க, அனைத்தையும் சரி பார்த்து, கணக்கு வழக்குகளை எல்லாம் முடித்து கையோடு கிளம்பி வந்து விட்டான் கோயம்பத்தூரிற்கு.
இன்னும் இரண்டு தினங்களில் மற்றொரு முக்கிய பெரிய புள்ளியின் திருமண நிகழ்வு கோயம்பத்தூர் கொடிசியா வளாகத்தில் நடைபெறவிருந்தது.
அதற்கான உணவுப் பட்டியலை அந்த திருமண பந்தத்தில் இணையும் குடும்பங்கள் அவனுக்கு முன்பே அனுப்பி இருக்க, இன்று அதற்கான சோதனை திட்டத்தை தான் மேற்கொண்டு வந்திருக்கிறான்.
அனைத்தும் சரியாக நன்றாக தான் இருந்தது அந்த நான்கு உணவு வகைகளை தவிர! எனவே தான் மீண்டும் அதனை சமைத்து எடுத்து வரும் படி கலைவாணனிடம் பணித்திருந்தான்.
இவன் இப்படி மேற்பார்வை பார்க்காவிட்டாலும் அலட்சியம் வந்து ஒட்டிக் கொள்ளும் அவர்களுக்கு. எனவே, தான் சரியாக சமைத்திராத உணவுகளை சுவைத்து அதை தயார் செய்தவர்களை காய்ச்சி எடுத்து விட்டான்.
தந்தையை அழைத்து வந்திருந்தால் அவரின் சொல்லாடலே வேறு மாதிரி இருந்திருக்கும். சர்வேஷ் இப்படி பேசி விட்டு மீண்டும் சமைக்கச் சொல்லி வந்திருக்க, அவரோ அனைத்தையும் புன்னகையுடன் சொல்லி முடித்து விடுவார்.
“ஃபங்ஷன் அன்னைக்கு சமைக்கும் போது கவனமா இருங்க” என்று மெல்லிய தொனியில் சொல்லி விடுவார். ஆனால், சர்வேஷிடம் அந்த மெல்லிய தொனி எல்லாம் இடம் பெறாது! அதட்டலும் அழுத்தமும் தான்!
அவனின் இந்த கண்டிப்பு தான் பணியாளர்களின் அலட்சியத்திற்கு சரியான முறை என்பதால் வடிவேலுவும் அதனை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்.
இப்போது அவருக்கு உடல் நிலை முன்னர் போல் சீராக இல்லாததால் பாதி பொறுப்பினை மகன்களின் வசம் ஒப்படைத்து விட்டு ஓய்வில் இருக்கிறார் மனிதர்!
வடிவேலன் குழுமம் மிகப் பெரிய தொழில் நிறுவனம்! குறிப்பாக விருந்தோம்பல் மேலாண்மையில் பெயர் போனவர்கள்!
ஹோட்டல், கேட்டரிங், லாட்ஜிங், ரெஸ்டாரன்ட் என அனைத்து வகையிலும் அவர்களின் தொழில் நிறுவனங்கள் தமிழகம் தொட்டு, தற்போது டெல்லி ஹைதராபாத் மற்றும் மும்பையிலும் தங்களின் கிளைகளை பரப்பி இருந்தது.
சர்வேஷ் வந்ததும் அவனைத் தொடர்ந்து வந்திருந்தான் சதீஷ். “டிராவல்லாம் ஓகேவா ண்ணா?” என்று கேட்டவனிடம் “ஓகேடா. நாட் பேட். கொஞ்சம் ஹெட் ஏக் மட்டும் இருக்கு” என்றவன் எதிரே இருந்த இருக்கையில் தம்பியை அமரும் படி சைகை செய்தான்.
“ப்ளாக் டீ கொண்டு வர சொல்லவா ண்ணா” என்றான் அவனின் முகத்தில் தெரிந்த களைப்பையும் சோர்வையும் உணர்ந்து.
“ஹ்ம்ம்.. மிச்ச ஐட்டம் டேஸ்ட் பண்ணதும் கொண்டு வர சொல்லு” என்றவன், “எல்லா ஃபுட்டுக்கும் தேவையான ஸ்பைசஸ், ஹர்ப்ஸ், கிராம்ஸ், நட்ஸ், எல்லாம் ஸ்டாக் அவுட் பண்ணியாச்சு தானே?” என்று கேட்க, “எல்லாம் ரெடியா இருக்கு அண்ணா” என்றான் சதீஷ்.
உணவுப் பட்டியலை பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அன்னையிடம் இருந்து அழைப்பு. அழைப்பிற்கான ரிங் டோனை வைத்தே அழைத்தது தாய் தான் என்று ஊர்ஜிதம் செய்தவன் சட்டென்று மொபைலை ஆஃப் செய்ய, “அம்மா தானே.. ஆன் பண்ணு” என்றான் சர்வேஷ் தாடையில் கை வைத்து.
“இல்லண்ணா.. நான் அப்புறம் பேசிக்கிறேன்” என்று தம்பி திருட்டு முழியுடன் சமாளிக்கும் போதே அவன் மொபைலை தன் கைகளுக்கு மாற்றி இருந்தான் மூத்தவன்!
“இன்பூ டார்லி” என்ற பெயரைக் கண்டதும் சர்வேஷின் இதழ்களில் மென் நகை தவழ, “உன் டார்லி என்ன சொல்றாங்கன்னு கேட்போம்” என்றபடி ஸ்பீக்கரில் போட்டான்.
அழைப்பை ஏற்றதும் அந்தப் புறம் இன்பவள்ளி மடை திறந்த வள்ளியாகிப் போனார்!
“வரேன்னு கிளம்பி நின்ன அப்பாவை வர வேணாம்னு சொல்லிட்டு இவன் மட்டும் கிளம்பி வந்துட்டான். அங்க எத்தனை பேரை வறுத்து எடுத்தானோ.. பாவம் அந்த சமைக்குற ஜீவனுங்க. உன் அண்ணன் கிட்ட மாட்டிக்கிட்டு பேய் முழி முழிக்கிறாய்ங்க” என்றவரின் பேச்சு தொடர் வண்டியை போல் நீண்டு கொண்டே செல்ல,
அவரின் அங்கலாய்ப்பிலும், பேச்சிலும் சர்வேஷிடம் அப்படி ஒரு புன்னகை! அவனுக்கு நேர் மாறாக சதீஷின் முகத்தில் கலவரம்!
“ஐயோ இன்பூ… பேசுறது நீ தான்! ஆனா, கேக்குறது நான் மட்டும் இல்ல.. உன் மூத்த பிள்ளையும் தான்” என்று தன் போக்கில் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது அவனால்.
“என்னடா நான் பேசிட்டே இருக்கேன்! நீ உன் அண்ணன்காரன் மாதிரி இடிச்ச புளி கணக்கா அமைதியா இருக்க? இந்நேரம் நூறு இன்பூ போட்டிருப்ப? இப்ப என்னடான்னா சத்தத்தயே காணோம்?” என்று அவர் பேசிக் கொண்டே போக,
“இன்பூ” என்றான் சதீஷ் மெல்லிய குரலில்.
“என்னடா பம்முற? சர்வா பக்கத்துல தான் இருக்கானா?” என்றவரின் குரலும் இப்போது மெல்லமாகி இருக்க, அதில் சர்வேஷின் புன்னகை விரிந்தது.
“ஹ்ம்ம்” என்று சதீஷ் ம்ம் கொட்ட, “சரி சரி.. அவன் கிட்ட இருந்து தள்ளிவா. ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றதும் சர்வேஷிடம் பெரு மூச்சின் சாயல்!
அதுவும் போக தம்பியை ஒரு பார்வை பார்க்க, ‘ இதோ… இதோ.. பாருண்ணா என் பெர்ஃபார்ம்மன்சை’ என்பது போல் அண்ணனை பார்த்தவன்,
இருக்கையை அவன் அருகில் நகர்த்திப் போட்டு அமர்ந்து கொண்டு, “சொல்லு இன்பூ டார்லி. அண்ணனை விட்டு பத்தடி தூரம் பாய்ஞ்சு தள்ளி வந்துட்டேன்” என்றவன் உற்சாக குரலில் அன்னையிடம் வாயாடினாலும், அருகில் இருக்கும் அண்ணனை நினைத்து உள்ளுக்குள் நடுக்கம் தான்!
“வந்திட்டியா? சரி நம்ம தரகர் போன் பண்ணி இருந்தார்டா. நம்ம சர்வேஷ்கு வரன் வந்திருக்குன்னு சொன்னார். ஏகப் பட்ட பொண்ணுங்க ஃபோட்டோவும் கொடுத்து விட்டிருக்கார். உன் அண்ணன் கிட்ட சொன்னா எப்படி எடுப்பான்னு தெரியல! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இந்தப் பேச்சை எடுத்தப்பவே ஒரு கதக்களி டேன்சை போட்டுட்டான். இப்ப அவன் கிட்ட சொல்ல பயந்து வருது” என்றவரின் பேச்சு திருமணத்தை நோக்கி செல்லவும், சதீஷ் அண்ணனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அழைப்பை துண்டிக்க போக,
கண்களாலேயே மிரட்டி உதட்டில் கை வைத்து அவன் காதை திருகியவன் மேலும் பேசும் படி உத்தரவிட்டான்.
“உன் அப்பா கிட்ட சொன்னா வீட்டுக்கு வரட்டும். பேசிக்கலாம்னு சொல்லிட்டு போய் படுத்திட்டார். தங்கச்சிட்ட சொன்னா “நீயாச்சு… உன் பெரிய புள்ளை ஆச்சு.. என்னை கோர்த்து விடாத மம்மின்னு கழண்டுகிட்டா. அதான் இப்ப உன்கிட்ட வந்தேன். நீ தான் நல்லா ஐடியா கொடுப்பியே? எதாவது சொல்லுடா? எனக்கு அவன் வீட்டுக்கு வரதுக்குள்ள அவன் கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு ஒரு சூப்பர் ஐடியா கொடு பாப்போம்” என்று அவர் இளைய மகனிடம் சலுகையாக கேட்க,
இங்கே அழுகாத குறையாக அண்ணன் முன் அமர்ந்திருந்தான் சதீஷ்வரன். அன்னை மேலும் பேசிக் கொண்டே போக, சட்டென்று மியூட்டில் போட்ட சர்வேஷ், “அப்ப நீ தான் இன்பவள்ளிக்கு ஐடியா மணியா?” என்று முறைப்புடன் கேட்க, “ண்ணா..” என்றவனின் முகத்தில் “வேணாம்… அழுதிடுவேன்” என்னும் பாவனை!
அதில் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டவன் அன்னை தொடர்ந்து அழைப்பது உணர்ந்து மியூட்டை ரிலீஸ் செய்தான்.
“என்னடா பேசிட்டே இருக்கேன். எதாவது சொல்லுடா!” என்றவர் அலுப்பாய் சொல்ல, “அம்மா..” என்று மூத்த மகனின் குரல் கேட்கவும் “ஆத்தி….” என்று நெஞ்சில் கை வைத்து விட்டார் இன்பவள்ளி!
“சர்வா மாதிரி பேசி விளையாட்டு காட்டாத சதீஷா” என்று அப்போதும் அவர் குரலை சீர் செய்து கொண்டு பேச, “இன்பூ…. எல்லாம் அண்ணனும் கேட்டுட்டு தான் இருந்தாங்க. பக்கத்துல ரெண்டு இன்ச் கேப் விட்டு தான் உக்காந்து இருக்கேன். போன் ஸ்பீக்கர்ல இருக்கு” என்றவன் வரிசையாய் சொல்ல, அதில் ஒரு வசை மாரியை மனதிற்குள் இளைய மகனுக்கு நடத்தி முடித்தவர்,
மூத்தவன் இருக்கிறான் என்னும் நினைப்பில், “அது.. அது… வந்து சர்வா.. காலாகாலத்தில பண்றது தானே கல்யாணம். உன்கிட்ட நேரடியா சொன்னா எப்படி எடுத்துப்பன்னு தெரியல. அதான்!” என்றவர் சமாளிக்க பார்க்க,
“ஹ்ம்ம்.. கரெக்ட் தாம்மா. கல்யாணம் தான பண்ணிக்கிட்டா போச்சு. பொண்ணு பாருங்க” என்று சர்வேஷ் மிக இலகுவாக சொல்லி விட, மீண்டும் “ஆத்தி…” என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டவர், தன்னை கில்லியும் பார்த்துக் கொண்டார்.
அவரின் செய்கையை இங்கிருந்தே உணர்ந்தவனுக்கு மேலும் சிரிப்பு பொங்க, “உங்க ஐடியா மணி புள்ளையை அனுப்பி வைக்கிறேன். அவனையும் நல்லா கிள்ளி பாத்துக்கங்க. நான் சொன்னது நிஜமா இல்லையான்னு தெரிஞ்சிக்க” என்றவன், “வீட்டுக்கு வர நைட்டாகிடும். நீங்க தூங்குங்க. நாளைக்கு தெம்பா எழுந்து பொண்ணு பாருங்க” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க,
சதீஷ் வாய் பிளந்து அண்ணனை பார்க்க, அந்தப் பக்கம் இன்பவள்ளிக்கு இன்பம் தாங்கவில்லை! மகன் சொன்னது போல நாளை தெம்பாக பெண் பார்க்கவென்று இல்லாமல், இன்றே தரகர் கொடுத்தனுப்பிய புகைப் படங்களை பார்வையிட தொடங்கி விட்டார்.
போதா குறைக்கு மகளிடமும் கணவனிடமும் மகன் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியதை சொல்லிச் சொல்லி அலப்பறை செய்து விட்டார்!
வடிவேலனுக்கும் மகனின் சம்மத்ததில் அலாதி மகிழ்ச்சி தான்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் பற்றி கேட்ட போது இப்போது வேண்டாம் என்று உறுதியாக மறுத்திருந்தான்.
அவன் மறுப்பையும் மீறி இன்பவள்ளி மறைமுகமாக மகனிற்கு பெண் பார்க்க, அதை அறிந்து கொண்டு அவரை வறுத்து எடுத்து விட்டான்.
அதன் பின்னர் பெண் பார்ப்பதை மறந்தே போய் இருந்தார்.. என்று சொல்லிவிட முடியாது. தீவிரமாக பெண் பார்க்கவில்லையே தவிர, அவ்வப் போது விசேஷங்கள், கோவில் பூஜைகள், என்று சென்று வரும் போது அங்கு வரும் வயதுப் பெண்களை கண்டு மகனோடு கற்பனையிலேயே நிற்க வைத்து பார்த்துக் கொள்வார்.
அத்தோடு சரி. மறந்தும் அவனிடம் எதையும், யாரையும் பற்றி பகிர மாட்டார். வாங்கிய வசவுகள் அப்படி! எனவே கல்யாண விஷயத்தில் அவன் முழுமனதாக சரி என்று சொல்லும் வரை கப்சிப் தான் இன்பவள்ளி.
இதோ இந்த நொடி மகன் பெண் பாருங்கள் என்று சொல்லி விட, வேறென்ன வேண்டும் அவருக்கு! பார்க்க ஆரம்பித்து விட்டார் அவர் குடும்பத்திற்கும் மகனிற்கும் ஏற்ற நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு!
அவர் குடும்பத்திற்கு குத்து விளக்கேற்ற வரும் பெண்ணோ, தன் டியூஷனில் பயில வரும் மாணவர்களுக்கு “ஆனா.. ஆவன்னா…” பாடம் கற்பித்துக் கொண்டிருந்தாள்!