இரண்டு நாட்களில் சர்வேஷ்வரன் மற்றும் அவனின் குடும்பம், தொழில் வட்டம் என அனைத்தையும் ஓரளவு விசாரித்து தெரிந்து கொண்டனர் மணிகண்டனும் நீலகண்டனும்.
வாசுவும் அவர்களுக்கு உதவியாய் இருக்க, விசாரித்த வரையில் அனைத்துமே திருப்தி தான். ஜாதக பொருத்தமும் அமோகமாய் இருந்தது.
நீலகண்டன் மனதார சர்வேஷ்வரன் தான் கீர்த்தன்யாவிற்கு மாப்பிள்ளை என முடிவு செய்து விட்டார். ஆனால், மணிகண்டன் தான் ஒப்புதல் தெரிவிக்காமல் அல்லாடிக் கொண்டிருந்தார்.
விசாரித்து பார்த்த வரையில் அனைத்து வகையிலும் திருப்தி தான். ஆனால், பெரும் வசதி கொண்டவர்கள் என்பது தான் அவரின் தயக்கத்திற்கு முதற் காரணமாய் இருந்தது. ‘பணக்கார வர்கத்தினரை என்றுமே நம்ப முடியாதே..’ என்று வெகுவாய் யோசிக்க, சம்மதம் சொல்லாமல் அனைவரையும் ஒரு பாடு படுத்திக் கொண்டிருந்தார்.
நீலகண்டன் தம்பியிடம் பொறுமை இழந்து, “என்னடா சொன்னதையே சொல்லி.. அதையே யோசிக்கிற? நல்ல இடம்டா. விசாரிச்சு பார்த்த வரைக்கும் எல்லாமே திருப்தி மாப்பிள்ளை தம்பியை பத்தி. இன்னும் என்ன யோசனை பண்ணிட்டு இருக்க” கடுப்புடன் தம்பியிடம் கேட்டே விட்டார்.
“அண்ணே.. கொஞ்சம் பயமா இருக்குண்ணே. கடைசி பொண்ணு! என்ன தான் அதிக செல்லம் கொடுத்து வளக்கலேன்னாலும் கீர்த்தி தான் ரொம்ப நாளா நம்ம கூட இருந்த பொண்ணு. நமக்கு ஏத்த இடமா பாத்து கட்டி வச்சிட்டா அவளும் அப்பப்ப வந்து போற மாதிரி இருக்கும். நாமளும் கொஞ்சம் போய் பாத்திட்டு வர மாதிரி இருக்கும். ஆனா, இந்த மாதிரி பணக்கார இடங்கள்ல கட்டி கொடுத்தா இதெல்லாம் சாத்தியப் படுமா?” என்று தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக சொல்ல,
நீலகண்டனுக்கு தம்பியின் கவலை புரிந்தது. “மணி.. அதெல்லாம் பாத்தா பொம்பள புள்ளைங்கள கர சேர்க்க முடியாதுடா. நம்ம பொண்ணு நல்ல இடத்தில வாழ போறா. அதை மட்டும் மனசுல வச்சுக்க” என்றவருக்கும் சிறிது கவலை தான். ஆனாலும், சர்வேஷ்வரனை விட மனதில்லை.
மொத்தமாய் ஒரு வாரம் எடுத்துக் கொண்டனர் அவர்களின் சம்மதத்தை தெரிவிப்பதற்கு. இந்த ஒரு வாரத்திற்குள் இரு ஜீவன்கள் தான் தவித்து போனார்கள்!
ஒரு ஜீவன் சர்வேஷ்வரன்! மற்றொரு ஜீவன் கீர்த்தன்யா!
சர்வேஷ்வரன் எப்போதடா அவர்களிடம் இருந்து பதில் வரும் அவளைப் பார்க்கலாம் என்று தவிக்க, கீர்த்தன்யாவோ எப்போதடா இரண்டு கண்டன்களும் ஒரு முடிவிற்கு வருவார்கள்.. அவன் முகத்தையாவது புகைப்படத்தில் பார்க்கலாம் என்று தவித்துப் போனாள்.
ஒரு வார காலமாக வீட்டில் அவனை குறித்த பேச்சுகள் தான் ரகசியமாக ஓடிக் கொண்டிருந்தது பெரியவர்கள் மத்தியில். அவள் முன்னால் எதுவும் பேசவில்லை என்றாலும் அவள் அறைக்குள் இருக்கும் போதும், மாலை டியூஷனில் அமர்ந்து பாடம் சொல்லிக் கொண்டிருந்த போதும் உள்ளே இவர்களின் பேச்சுக் குரல்கள் கேட்கத் தான் செய்யும்.
அப்போதெல்லாம் அவனின் நினைவுகள் தானாக அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிடும். அப்போதெல்லாம் காரணமின்றி மனதிற்குள் சுருண்டு போவாள். இன்னும் புகைப் படத்தினை கூட காட்டவில்லை. அவன் தான் மாப்பிள்ளை என உறுதியாக முடிவு செய்திருக்கவில்லை. ஆனால், அவனை காண தன் மனம் இத்தனை தூரம் விழைவதை எண்ணி அவளுக்கே ஆச்சர்யம் தான்.
அவனின் பெயர், தொழில் என அனைத்தும் நர்மதா மூலம் தெரிந்து இருந்தது தான். பிரபலமான ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர் என்று தெரிந்திருந்த வரையில் அந்த தகவல்களை கொண்டு கூகுளில் அவனைப் பற்றி தேடலாமா என்று கூட யோசித்தாள்.
ஆனால், ஏனோ அவ்வாறு செய்ய பிடித்தமில்லை. என்ன தான் மனதின் ஓரம் எட்டிப் பார்க்கும் ஆசைகளின் நச்சரிப்புகள் தாங்காமல் அவனைப் பற்றி தேடிப் பார்க்கச் சொல்லி மனம் அவளை படுத்தினாலும் வீட்டாரின் தெளிவான பதிலின்றி அவளால் எதையும் ஒரு நிலையுடன் செய்ய முடியவில்லை.
குறிப்பாக தந்தையின் யோசனையும் தயக்கமும் அவளின் ஆர்வத்திற்கு தடை விதித்தது மட்டுமின்றி அவளுள் அச்சத்தையும் சேர்த்தே விதைத்தது.
“எங்கே இந்த இடம் வேண்டாம் என்று தந்தை சொல்லி விட்டால்…” அப்படி நினைக்கும் போதெல்லாம் மனதில் சொல்லொண்ணா பாரம் குடியேறி அவனின் நினைவுகளை மேலும் கிளறி விடும்.
அப்போதெல்லாம் அவளறியாமல் வேண்டுதல்களை கடவுளிடம் அடுக்கி வைப்பாள். இப்படியே ஒரு வார காலத்தில் அவளுள் ஆழமாக வேரூன்றி நின்று விட்டான் சர்வேஷ்வரன்.
ஒரு வழியாக மணிகண்டனின் மனமும் சமாதானமாகி விட, விஷயத்தை தரகரிடம் சொல்லி விட்டனர். கீர்த்தன்யாவிற்கு அப்போது தான் மனதை அடைத்திருந்த பாரம் விலகியது போல் ஒரு ஆசுவாசம்.
அவளின் கைகளுக்கும் தெய்வானை மூலம் அவனின் புகைப்படம் தரப்பட, “பாரு கீர்த்தி. மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கான்னு..” என்றவர் வழக்கம் போல் சொல்ல, அவரை செல்லமாய் முறைத்தவள்,
“தெய்வா… இதை நீங்க இப்படி சொல்லக் கூடாது! ‘இதான் மாப்பிள்ளை.. பிடிச்சு இருந்தாலும் பிடிக்கலேன்னாலும் இதான் உன் புருஷன்’ அப்படின்னு சொல்லணும்” என்றாள் முறைப்புடன்.
அவளின் பேச்சில் மகளின் கன்னத்தை செல்லமாய் இடித்தவர், “கொழுப்பு உனக்கு? என்னமோ உனக்கும் இஷ்டம் இல்லாத மாதிரி பேசாத. இந்த ஒரு வாரமும் வழக்கத்துக்கு மாறா நீ இருந்தப்பவே எனக்கும் புரிஞ்சு போச்சு. உனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிச்சு இருக்குன்னு” மகளின் மனதை படித்தவராக சொன்னார் தெய்வானை.
அன்னையை அதிர்ந்து போய் அவள் பார்க்க, “என்னடி பாக்குற? தரகர் வந்தன்னைக்கே உனக்கும் நர்மதா மூலம் எல்லாம் தெரியும்னு எனக்குத் தெரியும். இல்லேன்னாலும் ரூமுக்குள்ள இருந்திட்டே ஜன்னல்ல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு எல்லாத்தையும் ஒட்டு கேட்டிருப்ப” என்றவர் மகளின் செயல்கள் ஒவ்வொன்றையும் வரிசை படுத்தி சொல்ல, கீர்த்தன்யா அசடு வழிந்த படி நாக்கை கடித்துக் கொண்டாள்.
தாய் தன்னை கண்டு கொண்டதில் வெட்கம் வேறு முகத்தில் படற தலையை குனிந்து கொண்டாள். அவளின் முகத்தை நிமிர்த்தியவர் “நான் உனக்கு அம்மாடா கீர்த்தி. என் மக மனசு எனக்கு தெரியாதா” என்றார் ஆதூரமாய்.
அதில் கண்ணில் நீர் நிறைந்து விட்டது கீர்த்திக்கு. அன்னையின் மடி சாய்ந்தவள் கண்களில் கண்ணீர் வழிய, அதை கண்டு பதட்டம் கொண்டவர் “ஏன் கீர்த்தி? எதுக்கு அழற. அதான் உங்க அப்பா சரின்னு சொல்லிட்டாரே இந்த பையனுக்கே” என்று அவளின் தலை கோத,
“சொல்லாம போய் இருந்தா..” பட்டென்று பதில் வந்தது அவளிடம் இருந்து. அதில் சிரித்தவாறு “கீர்த்தி.. நடக்காததை பத்தி என்னைக்கும் யோசிக்க கூடாது” என்றவர், “முகம் கூட பாக்கல. ஆனா, என் பொண்ணுக்கு அந்த பையனை ரொம்ப பிடிச்சு போச்சு போலையே” சிரிப்புடன் தாய் சொன்னதை உள்வாங்கியவள்,
“பின்ன… ஒரு வாரமா ஒரே ஆளை பத்தி பேசி பேசி மனசுக்குள்ள எதிர் பார்ப்பை டெம்ப்ட் பண்ணி விட்டா இப்படி தான் தெய்வா ஆகும்” என்றாள். அதில் செல்லமாய் அவளின் தலையை கலைத்து விட்டவர் “சரி இப்பப் பாரு. ஃபோட்டோ பாத்து பிடிக்காம போனா?” என்று அவர் மகளுக்கு ஒரு இக்கு வைக்க,
கைகளில் இருந்த புகைப்பட கவரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள், “ஏற்கனவே பிடிச்சு போனவங்களை முகம் பாக்கும் போது ஏன் பிடிக்காம போகனும்? எப்படி இருந்தாலும் மனசு ஏத்துக்கும்மா” என்றாள் ஆத்மார்த்தமாய்.
“சந்தோஷமா இருக்கணும்டா கீர்த்தி” என்றவருக்கு இப்போதே மகளின் பிரிவை எண்ணி அழுகை முட்டியது. முயன்று அதனை அவளுக்காக மறைத்துக் கொண்டார். அவள் சந்தோஷமாக தன் மனதை வெளிப்படுத்தும் இத்தருணத்தில் பிரிவின் துயரை பற்றி இப்போதே பேச விரும்பவில்லை அவர்.
இந்த ஒரு வார காலமாக மகளின் முகம் வைத்தே அவளின் விருப்பத்தை அறிந்து கொண்டவருக்கு எப்படியாவது இந்த இடம் அமைந்து விட வேண்டும் என்கிற வேண்டுதல் தான். கணவரின் யோசனையை கண்டு அவருக்கும் உள்ளம் அடித்துக் கொண்டது. எங்கே வேண்டாம் என்று உறுதியாக சொல்லி விடுவாரோ என. அப்படி ஏதேனும் நடந்தால் மகளின் மனம் காயம் கொண்டு விடுமே என்று தாயாக தவித்து தான் போனார்.
எப்படியோ எல்லாம் நல்லதாக நடக்க, கணவரின் சம்மதமும் மகிழ்ச்சியை கொடுத்தது அவருக்கு. மடி மீது படுத்திருந்த மகளை எழுப்பி விட்டவர், “நீ போட்டோ பாரு. நான் போய் உன் அக்காளுங்க ஒவ்வொருத்திக்கும் போன் போட்டு சொல்றேன்” என்று எழுந்து சென்று விட்டார் வாசலுக்கு.
அன்னை சென்றதும் புகைப்பட கவரோடு தோட்டத்துப் பக்கம் நகர்ந்தவள் ரோஜா கூட்டத்தின் மத்தியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
மனம் ஏனோ படபடவென அடித்துக் கொண்டது. சுற்றி இருந்த ரோஜாக்களை கண்டவள் “எப்படி இருப்பாருன்னு தெரியலையே” என்று சொல்லியபடி சிரித்துக் கொள்ள, கவரைப் பிரித்தாள்.
மனதை நிறைத்திருந்தவனின் திருவுருவம் கண்ணையும் கருத்தையும் நிறைத்தது அந்நொடியில் இருந்து!
சொன்னது போலவே அவனைக் கண்டு விட்டதும் இதயம் அவனுக்காய் துடித்தது. இதமாய். இன்பமாய்.
கண்கள் அவனில் கலந்தாட, உள்ளம் அவனின் உருவத்தோடு நிறைந்தாட, மனதில் உருவமில்லாமல் தன் உணர்வுகளை ஆட்டிப் படைத்தவனுக்கு உருவம் கொடுத்து தன்னுள் அவனை மொத்தமாய் நிரப்பிக் கொண்டாள்.
“சர்வேஷ்வரன்..” என்று இதழ்கள் சொல்லிக் கொள்ள, தென்றல் காற்றில் ரோஜாக்கள் இதமாக அசைந்தாடியது அவளின் உள்ளத்தை போல்.
சிறிது நொடி அந்த மோன நிலையில் இருந்தவளை கலைத்தது அலைபேசி. இவள் மூத்த அக்காவின் மகள் நிகிதா தான் அழைத்திருந்தாள்.
“ஹோய்… வாழ்த்துக்கள் கல்யாண பொண்ணு” என்று அவள் ஆர்ப்பரிக்க, “தேங்க்ஸ் நிகி” என்றவளின் குரலில் இன்னுமே அந்த வெட்கத்தின் சாயலும், அவனைக் கண்டு விட்ட ஆனந்தமும் போட்டி போட,
“என்னோட சித்தி வாய்ஸ் ரொம்ப சுவீட்டா வருதே! என்ன ரகசியம்? சித்தப்பா போட்டோ பாத்துட்டு இருந்தியா சித்தி?” என்று அவள் குறும்பாய் கேட்க, அதில் புசுபுசுவென கோபம் வந்தது கீர்த்தன்யாவிற்கு.
அவளுக்கு நிகிதா தன்னை சித்தி என்று அழைப்பதே பிடிக்காது. இதில் சர்வேஷ்வரனையும் சேர்த்து சித்தப்பா என்று முறை சொல்லி அழைத்ததில் கடுப்பாகி விட்டவள்,
“நிகி.. சித்தின்னு கூப்பிட்டு கடுப்பேத்தாத” என்று பல்லைக் கடிக்க, “ஹலோ மேடம்.. உன்னை சித்தின்னு கூப்பிட்டதால கடுப்பா வருதா.. இல்ல உன் அவரை சித்தப்பான்னு சொன்னதால கடுப்பா வருதா?” கேலியாக நிகிதா கேட்க,
“ஹ்ம்ம்…. ரெண்டும் தான்!” என்றாள் கீர்த்தன்யா முறைப்பாக. “சரி சரி… இப்ப தான் அம்மாச்சி போன் பண்ணி அம்மாக்கு சொல்லிட்டு இருந்தாங்க. அதான் உனக்கு கால் பண்ணிட்டேன். உனக்கு ஓகே வா? மாப்பிள்ளையை பிடிச்சு இருக்கு தானே?” என்று பெரிய மனுஷியாய் தன் சித்தியின் விருப்பத்தை பற்றி கேட்க,
“ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. பிடிச்சு இருக்கு தான்….” என்று கீர்த்தி ராகமாய் இழுக்க, “என்ன கீர்த்தி இழுக்குற?” என்றாள் நிகிதா உற்சாகம் வடிந்து போன குரலில்.
“ஹே நிகி.. பிடிச்சு இருக்குடி. ஆனா, கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் போல. உன் கண்டன் தாத்தாங்க மாதிரி இருந்தா.. அதான் கொஞ்சம் பயமா இருக்கு” வீட்டில் பெரியவர்கள் யாரிடமும் இதனை வெளிப்படையாய் சொல்ல முடியாத நிலை.
அன்று நர்மதாவிடம் சொல்லி இருந்தாள் தான். ஆனாலும் மனம் மீண்டும் இந்த ஒரு வரியை எண்ணி எண்ணியே கவலை கொண்டது. அந்த தரகர் ஏன் தான் இதைச் சொன்னாரோ என்று கூட யோசித்து விட்டாள்.
இப்போது தன்னுடன் தோழியாக பழகும் நிகிதாவுடன் அவளால் இயல்பாக இதனை சொல்ல முடிந்தது.
“கீர்த்தி.. நீ அவரு ஸ்டிரிக்ட்ன்னு எப்படி சொல்ற?” என்று நிகிதா கேட்க, அன்று தரகர் வந்து சொல்லி விட்டுச் சென்றதை அவளிடம் பகிர்ந்து கொண்டாள் கீர்த்தன்யா.
“தரகர் தானே சொன்னார்? நீ இன்னும் பாக்கல தானே?” என்றவள், “எனக்கென்னமோ அவருக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சுன்னு நினைக்கிறேன். அதான் இவளோ ஃபாஸ்ட்டா மூவ் பண்ணி இருக்காங்க. தரகர் சொல்றதை வச்செல்லாம் பயப்படாத லூசு கீர்த்தி” என்று அவளுக்கு அறிவுரை வழங்கியவள்,
“அம்மா கிட்ட அம்மாச்சி சொல்லும் போதே, மாப்பிள்ளைக்கு கீர்த்தியை ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொன்னாங்க. இப்ப உனக்கும் பிடிச்சு இருக்குன்னு நீ பேசுறதுலயே தெரியுது. நல்லா பக்கா அரேஞ்டு லவ் மேரேஜ்டி உன்னோடது” என்று சிரிக்க,
“என்னது லவ்வா…” என்று நெஞ்சில் கை வைத்து விட்டாள் கீர்த்தன்யா.
“ஓய்.. கத்தாத கீர்த்தி. வீட்ல பெரிய தாத்தாவும் சின்ன தாத்தாவும் இருந்தாங்கன்னா அவ்ளோ தான்!” நிகிதா எச்சரிக்கையாக சொல்ல, “மாடே.. லவ்வும் இல்ல.. ஒண்ணுமில்ல.. அதுவும் இந்த வீட்டுக்குள்ள வளம் வரக் கூடாத ஒரே வார்த்தை அதான். நீ அதையே சொல்லி என்கிட்ட பேசுற பாத்தியா? ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு. நல்ல வேள அப்பாவும் இல்ல பெரியப்பாவும் இல்ல” என்று பெரு மூச்சை விட்டுக் கொண்டாள் கீர்த்தன்யா.
மெய்யாகவே அவளின் குரலில் அத்தனை பதட்டம். இதுவரை காதல் கத்திரிக்காய் இவை எல்லாம் அந்த வீட்டு பெண்களின் வாழ்க்கை அகராதியில் வார்த்தையாக கூட இடம் பெற்றது கிடையாது. இன்று அக்கா மகள் அதை யதார்த்தமாக சொன்ன போது கூட அத்தனை பயந்து போனாள் கீர்த்தன்யா.
நிகிதாவிற்கு அவளின் பயத்தை கண்டு பாவமாக போய் விட்டது. தாத்தாக்களை பற்றி அவளும் அன்னை மூலமாக அறிந்திருந்ததால் அதை விடுத்து அடுத்த விஷயத்தை பேச ஆரம்பித்தாள்.
“சரி அதை விடு. எப்படியும் இந்த வார வெள்ளிக் கிழமை அன்னைக்கு பொண்ணு பாத்து பூ வைக்குற ஃபன்ஷன் இருக்கும்னு நினைக்கிறேன். அம்மாச்சி அப்படி தான் சொன்னாங்க. அம்மாவும் இங்க நாளைக்கு கிளம்பி வரலாம்னு பிளான் பண்ணிட்டு இருக்காங்க. என்னன்னு நான் உனக்கு நைட்குள்ள அப்டேட் பண்றேன் கீர்த்தி” என்றாள் நிகிதா.
“வரீங்களா..” என்று கீர்த்தன்யா ஆர்வமாக கேட்க, “ஹ்ம்ம்.. அம்மா அதுக்கு தான் பிளான் பண்றாங்க கீர்த்தி. நாங்களும் ஊர் பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு தானே? எனக்கும் செமஸ்டர் லீவ். அதனால கிளம்பி வந்திடுவோம்”
அதன் பின்னர் இங்கே வந்ததும் என்ன செய்யலாம்.. எங்கே செல்லலாம் என அனைத்தையும் திட்டமிடுதலில் அவர்களின் பேச்சு நகர்ந்தது.