அன்று மும்பையில் ஒரு பெரிய தொழிலதிபரின் மகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி! வடிவேலன் குரூப் ஆஃப் கேட்டரிங்ஸ் தான் அந்த நிகழ்ச்சிக்கான விருந்தோம்பல் சேவையை மேற்கொண்டு இருந்தனர்.
மேலும், மும்பையில் இருந்த அவர்களின் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் அந்நிகழ்ச்சியும் நடக்க, அன்று முழுவதும் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலையில் மூழ்கிப் போய் இருந்தனர் சர்வேஷ்வரனும் சதீஷ்வரனும்.
வடிவேலன் தமிழ் நாட்டிற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கு மட்டுமே தலைமை வகிப்பார். மற்றபடி அனைத்தும் மூத்த மகனின் தலைமை பொறுப்பு தான்.
அன்று காலையில் இருந்து வேலையில் மூழ்கிப் போய் இருந்த இருவராலும் அலைபேசியை தொடக் கூட முடியவில்லை. இன்பவள்ளி வேறு இடை விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் இளைய மகனுக்கு.
அவனோ அழைப்பை ஏற்றதும் “அம்மா.. இங்க கொஞ்சம் பிசி. நாளைக்கு கோயம்பத்தூர் ரீச் ஆகிட்டு பேசுறேன்” என்று பட்டென்று அழைப்பை துண்டித்து விட,
“அட விவரங் கெட்டவன். விஷயத்தை சொல்றதுக்குள்ள பொசுக்குன்னு கட் பண்ணிட்டான்” என்று இன்பவள்ளி கடுகடுக்க, அவரைக் கண்டு சிரித்தாள் சக்ரவர்ஷினி.
“என்ன சிரிப்பு? இல்ல என்ன சிரிப்புன்றேன். நானே எப்படா உன் அண்ணன் காதுக்கு இந்த நல்ல விஷயத்தை சொல்லுவோம்னு இருக்கேன். நீ சிரிக்கிற?” என்று மகளிடமும் கடுகடுக்க,
“இன்பூ டார்லி.. காலைல இருந்து உன் அலப்பறை தாங்கல. பொண்ணு வீட்டுக்காரங்க சம்மதம் சொல்லிட்டாங்கன்னு தெரிஞ்சதுல இருந்து என்ன ஆட்டம்? அண்ணா தான் மும்பைக்கு போய் இருக்காங்கன்னு தெரியும்ல. அதுவும் பெரிய ஃபன்ஷன் அது. எப்படி கால் அட்டன் பண்ண முடியும்? ஒரு நாள் வெயிட் பண்ணா நாளைக்கு மத்தியானம் வந்து இறங்கிடுவாங்க”
“அட உன் அண்ணன் இந்த ஒரு வாரமும் சரியே இல்ல. என்ன தான் என்கிட்ட எதுவும் கேக்கலன்னாலும் எனக்கு தெரியாதா அவனை பத்தி. வாய திறக்காம இன்னும் அழுத்தமா சுத்திட்டு திரிஞ்சான். இப்ப அவுங்க பக்கம் சம்மதம்னு சொல்லி தகவல் வந்தாச்சு. இவன் மும்பை போய்ட்டான்” என்று அலுத்துக் கொள்ள,
“நாளைக்கு மத்யானம் அண்ணா வந்துடுவாங்க. அது வரைக்கும் உன் ஆர்வத்தை அடக்கி வாசி. சின்ன அண்ணாக்கு விடாம போன் பண்ண மாதிரி பெரிய அண்ணாக்கு போன் பண்ணாத. திட்டிட போறாங்க” என்றவள் சொன்னதும் சரியாகப் பட, மகனின் வருகைக்காக காத்திருந்தார் இன்பவள்ளி.
விஷயம் அறிந்து வடிவேலனுக்கும் அத்தனை மகிழ்ச்சி. அவருக்கும் இந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெண் வீட்டாரின் விசாரிப்புகள் பற்றி தெரிய வந்தது தான். அப்போதே கணித்து விட்டார். எப்படியும் தங்களைப் பற்றி விசாரித்து சம்மதம் சொல்ல நான்கு நாட்கள் ஆகும் என. ஆனால், ஒரு வாரமே ஆகி இருந்தது.
எப்படியோ மகன் ஆசைப் பட்ட பெண்ணே அவனுக்கு மனைவியாக வரப் போகிறாள் என்பது அவருக்கு ஆனந்தத்தை கொடுத்தது. மனைவியிடம் அவனுக்கு சொல்லி விட்டாயா என்று கேட்க,
“எங்க? சின்னவன் போன் எடுத்ததும் பிசி.. நாளைக்கு பேசுறேன்னு சொல்லி போனை வச்சிட்டான் ” என்றார் சலிப்பாக.
“சர்வாவுக்கே கூப்பிட வேண்டியது தானே?” என்று வடிவேலன் கேட்க, “ஆத்தி… சின்னவன் குரல்லயே அவ்ளோ டென்ஷன்.. இதுல மூத்தவனுக்கு கூப்பிட்டேன்.. என்னை கடிச்சு முழுங்கிடுவான். நான் கூப்பிடல. நீங்க வேணும்னா கூப்பிட்டு பாருங்க” என்று கணவரிடம் நேக்காக சொல்லி தப்பித்துக் கொள்ள, “உனக்கு ஏன் தான் இப்படி பயமோ” என்றவர்,
“நான் கால் பண்ணி பாக்குறேன். அட்டன் பண்ணா சொல்றேன்” என்றவர் மகனுக்கு அழைக்க, இரண்டு மூன்று முறை அழைத்த பின்னர் தான் அவனை பிடிக்க முடிந்தது.
“சொல்லுங்க அப்பா” என்றவனின் குரலில் அத்தனை பரபரப்பு! “சர்வா பிஸியா?” என்றவரிடம் “ஆமாப்பா. கொஞ்சம் பிஸி. எதுவும் முக்கியமான விஷயமா?” என்று கேட்க, “ஹ்ம்ம்.. முக்கியமான விஷயம் தான்” என்று இழுத்தவர், “சரி நீ நாளைக்கு வா. நேர்ல பேசிக்கலாம்” என்றார் அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல்.
தந்தை முக்கியமான விஷயம் என்று சொன்னதும் சதீஷிடம் சொல்லிக் கொண்டு அங்கே பார்த்துக் கொள்ள சொல்லியவன் மேல் தளத்தில் அவனின் அறைக்கு வந்து விட்டான்.
“சொல்லுங்கப்பா என்ன விஷயம்? அங்க ஹோட்டல்ல எதுவும் பிராப்ளமா?” என்று கேட்க, “ச்சே ச்சே… அதெல்லாம் இல்ல சர்வா எல்லாம் நல்ல விஷயம் தான்” என்றார் வடிவேலன்.
தந்தை நல்ல விஷயம் தான் என்று சொன்னதுமே ஓரளவு யூகிக்க முடிந்தது அவனால். நெற்றியில் கட்டை விரலால் கோடிழுத்தவன், ‘கீர்த்தன்யா’ என்று மனதிற்குள் மெல்ல முணுமுணுத்து கொள்ள, இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.
“என்னபா அமைதியாகிட்ட?” என்று வடிவேலன் மறு புறம் இருந்து கேட்க, “ஹ்ம்ம்… இருக்கேன் ப்பா” என்றவன், “பொண்ணு பாக்க வர சொல்லிட்டாங்களா?” என்றாள் லகுவாக.
ஆனாலும், குரலில் அத்தனை துள்ளல். மகனின் குரலை வைத்தே அவனின் அகத்தை கண்டு கொண்டவர் “சம்மதம் சொல்லிட்டாங்க. வெள்ளிக் கிழமை நேர்ல பாக்கலாம்னு சொல்லி இருக்காங்க” என்றார் சிரிப்புடன்.
“ஓ…” என்றவனின் முகம் சந்தோஷத்தில் பூரித்து கிடந்தது.
“என்ன வெறும் ஓ மட்டும் வருது?” என்று வடிவேலன் மகனிடம் சாதாரணமாக கேட்க, “வேற என்ன சொல்ல?” என்றவனுக்கும் தந்தையின் கேலி புரியாமல் இல்லை.
இருந்தாலும் மனதிற்குள் ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.
“எப்ப விஷயம் தெரியும்?” என்று அவன் அடுத்த பேச்சிற்கு தாவ, “இன்னைக்கு காலைல தான் தரகர் போன்ல சொன்னாரு” என்றார் வடிவேலன்.
“ஓ..” என்று அதற்கும் அவன் ஓ போட, “அம்மா சதீஷ்க்கு போன் பண்ணா. அவன் பிஸியா இருந்ததால நாளைக்கு பேசுறேன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான் போல. உங்க அம்மா என்ன சொல்ல வரான்னு கூட கேக்கல. உனக்கு கால் பண்ண சொல்லி சொன்னேன். வள்ளி பயந்து நான் கூப்பிடலேன்னு சொல்லிட்டா. அதான் நானே கால் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்” என்ற வடிவேலன்,
“நாளைக்கு நீ வந்ததும் சொல்லிக்கலாம்னு இருந்தோம். நீ அட்டன் பண்ணதும் இப்பவே சொல்லிட்டேன்” என்றவர், “சரி சர்வா. மத்ததை நாளைக்கு பேசிக்கலாம். நீ அங்க வேலையை கவனி” என்று சொல்லி அழைப்பை துண்டித்தார் வடிவேலன்.
அதற்கு மேல் அவன் எங்கே வேலையில் மூழ்க? நினைவுகள் எல்லாம் அவளிடம் தஞ்சம் புகுந்து கொள்ள, சில நொடி அவளில் உழன்றவன் தலையை உலுக்கிக் கொண்டு கீழே சென்றான்.
நெஞ்சம் முழுவதும் அவளைப் பார்க்கப் போகும் நாளுக்காக கிடந்து தவித்தது. வெள்ளிக் கிழமை வர இன்னும் நான்கு நாட்கள் இருக்க, அதற்கும் அவனின் மனம் “ஓ நோ..” என்று அலுத்துக் கொண்டது.
மும்பையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இல்லம் வந்ததும் அன்னையின் உற்சாக முகம் கண்டு “என்ன இன்பூ டார்லி.. ஒரே குஷி மோடுல இருக்க?” என்று சதீஷ் அவரின் தாடையை பற்றிக் கொண்டு கேட்க, “ஆமாடா…” என்றவர் பெரிய மகனின் முகத்தை ஆர்வமாக பார்த்தார்.
அவன் எங்கே வாயை திறக்க? வந்ததும் நேராக அறைக்கு சென்று குளித்து கீழே வந்தவன், சோஃபாவில் அமர்ந்து கொண்டு காஃபியை கேட்க, இந்திரா வந்து கொடுத்ததும் அமைதியாய் பருகத் துவங்கினான்.
அவருக்கு காதில் புகை வராத குறை தான். நேற்றே அவனிடம் விஷயத்தை சொல்லி ஆகிற்று என்பது கணவரின் மூலம் அறிந்து கொண்டவர், அவன் இல்லம் வந்ததும் எதுவும் கேட்பான் என்று ஆர்வமாக அவனின் முகம் பார்த்து தவமிருக்க, அவனோ அலட்டிக் கொள்ளாமல் “எதுவும் சொல்லனுமா” என்று தன்னிடம் கேட்டது புகைச்சலை தான் கிளப்பியது.
“டேய்… நீ தான்டா சொல்லணும்? அப்பா சொன்னாரு தானே?” என்று அப்பாவியாய் சொல்ல, சர்வேஷ்வரன் புன்னகையுடன் அன்னையை பார்த்தான். அவரே சொல்லட்டும் என்பது போல்.
அதில் கடுப்பாகி இளைய மகனின் புறம் திரும்பியவர் “நீ சொன்னா மாதிரி உன் அண்ணன் புடிச்ச புள்ளையார் தான். இவனையும் நம்பி பொண்ணு வீட்டுக்காரங்க பொண்ணு தர சம்மதம் சொல்லிட்டாங்க பாரு. பாவம் என் மருமக” என இப்போதே வருங்கால மருமகளுக்கு கவலைப் பட, அதில் அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான் சர்வேஷ்வரன்.
சதீஷிற்கு விஷயம் விளங்கி விட “இதுக்கு தான் நேத்து அத்தனை வாட்டி கால் பண்ணீங்களாமா” என்றவன், அண்ணனின் சிரிப்பில் அவன் பக்கம் திரும்பி “அதான் நேத்து ஃபுல்லா கனவுல மிதக்குற மாதிரியே இருந்தீங்களா அண்ணா?” என்று அவனை வாரி விட்டு,
“உனக்கு தெரியுமா இன்பூ டார்லி.. அண்ணா ஃப்ளைட்ல வரும் போது அப்படியே விண்டோ சீட்ல உக்காந்து மேகத்தை ரசிச்சு, காதுல ஹெட் செட் மாட்டிக்கிட்டு, மில்லி மீட்டர் அளவு சிரிப்பை சிந்திட்டு, வானத்துல மிதந்து வராத குறை தான். எனக்கு அதெல்லாம் ஏன்னு அப்ப புரியல.. இப்ப புரியுது” என்று சொல்ல,
அவன் சொன்ன விதத்தில் அவனை முறைத்தாலும் சர்வேஷின் முகத்தில் புன்னகை தான்.
“அவுங்க வீட்ல பூ வைக்கவே வர சொல்லிட்டாங்க சதீஷா. எப்படியும் அதுவே மினி நிச்சயம் மாதிரி தான். அவுங்க நாலு பொண்ணுங்களுக்கு இப்படி தான் பண்ணினாங்க போல. அதனால கடைசி பொண்ணுக்கும் அதே மாதிரி தான் பண்ணுவாங்களாம். தரகர் சொன்னாரு. நான் கூட நிச்சயம்னா கிராண்ட்டா வைக்கலாமான்னு கேட்டேன். அதுக்கு ஒத்துப்பாங்களான்னு தெரியலயேன்னு தரகர் இழுத்தார். சரின்னு நானும் விட்டுட்டேன்” என்றவர்,
சர்வேஷ்வரனிடம் “நீ என்ன சொல்ற சர்வா? பொண்ணு பாக்க போற அன்னைக்கு சொல்லிப் பாக்கலாமா நிச்சயம் கொஞ்சம் கிராண்ட்டா நம்ம ஹோட்டல்லையே வைக்கலாம்ன்னு” என்று கேட்க,
“வேண்டாம்மா. அவுங்க எப்படியும் ஒத்துக்க மாட்டாங்க தான். நம்மள பத்தி விசாரிச்சு முடிச்சு ஒரு வாரம் கழிச்சு தான் பதில் சொல்லி இருக்காங்க. வசதி, அந்தஸ்து இதெல்லாம் பாத்து யோசிச்சு இருக்காங்க. அப்புறம் தான் சம்மதம் சொல்லி இருக்காங்க. அதனால அவுங்களை சங்கடப் படுத்திற மாதிரி எதுவும் நாம கேட்க வேண்டாம். அவுங்க நாலு பொண்ணுங்களுக்கு எப்படிப் பண்ணாங்களோ அதே மாதிரியே அவுங்களோட கடைசி பொண்ணுக்கும் பண்ணிட்டு போகட்டும்” என்றவன்,
“கல்யாணத்துக்கு அப்புறம் வேணும்னா நாம ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணிக்கலாம்” என்று விட்டான் முடிவாக. அனைவருக்கும் அவனின் முடிவு சரியாகவே பட, அதற்கு ஒப்புக் கொண்டனர்.
இதோ.. நான்கு நாட்கள் ஓடி மறைந்து அவளை காணச் செல்லும் நாளும் அழகாய் விடிய, பொள்ளாச்சியை நோக்கி இன்பவள்ளியின் சொந்தங்கள் சிலருடன் பயணித்தனர் அனைவரும்.