பொள்ளாச்சி செல்லவிருக்கும் நாளன்று கடமைக்காக வளர்மதியையும் அழைத்திருந்தார்கள் வடிவேலன் தம்பதியினர். அவரோ பொண்ணு பாக்க போறோம் என்று சொன்னதற்கே ஒரு ஆட்டம் ஆடி… என் மகளை விட்டு விட்டு வேறு ஒருத்தியை மணம் முடிக்க எவ்வளவு தைரியம் என்று அநியாயத்திற்கு பேசி, இறுதியில் தான் திருமணத்திற்கு வரவே இல்லை என்பது வரை சொல்லி விட்டார்.
அதற்கு யாரும் அலட்டிக் கொள்ளவும் இல்லை. இதெல்லாம் அறிந்தது தானே என்று விட்டு விட்டனர். ஆனால், இன்பவள்ளி மட்டும் ‘அவரால் நிச்சயம் திருமணத்திற்கு வராமல் இருக்க முடியாது. மகனின் திருமணத்தில் என்ன நிகழ்கிறது’ என்பதை நோட்டம் பார்ப்பதற்காகவே வருவார் என்று யூகித்துக் கொண்டார்.
இதோ பொள்ளாச்சியில் அவர்களின் இல்லத்தை அடைந்திருந்தனர் சர்வேஷின் குடும்பத்தினர். அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றனர் மணிகண்டன் குடும்பம் மொத்தமும்.
மணிகண்டனின் நான்கு மகள்கள், மாப்பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் என அனைவருமே அங்கே இருக்க, சதீஷ் அன்னையின் காதில் “மினி கிராமமே இருக்கும் போல” என்றான் கிசுகிசுப்பாக.
மகன் சொன்னதை கேட்டு முறைத்தவர், “வாய மூடுடா. யாரும் கேட்டா சங்கடமா நினைப்பாங்க. விளையாட்டு வினையா மாறிடும்” என்று மகனை அதட்டியவர் அனைவரும் தங்களை கவனிப்பது கண்டு சிரிப்புடன் அமர்ந்து கொண்டார்.
பரஸ்பர அறிமுகத்திற்கு பின்னர், பொதுவான பேச்சுகள் தொடங்கி சீர் வரிசையில் வந்து நிற்க, “எங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு. பொண்ணுக்காக தான் வந்தோம். சீர் பத்தி எல்லாம் எங்களுக்கு எந்த எதிர் பார்ப்பும் இல்லங்க” என்று தெளிவாகவே சொல்லி விட்டார் இன்பவள்ளி.
அதில் மணிகண்டனுக்கு அத்தனை நிம்மதி. பணக்கார பகட்டின்றி எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் அவர் பேசிய விதம் நிம்மதியை தந்தது.
“நீங்க இப்படி பேசுறது உங்க பெருந்தன்மை சம்மந்தி அம்மா. ஆனா, நாங்க செய்ய வேண்டிய முறைன்னு ஒன்னு இருக்குல்ல. ஊருக்குள்ள இதை வச்சு நாள பின்ன பேச்சு வரத் தான் செய்யும்” என்று ஆரம்பித்த நீலகண்டன்,
“எனக்கு ஒரு பொண்ணு பிறந்ததும் சம்சாரம் இறந்துட்டாங்க. ஆசையா வளத்த பொண்ணும் அவ வாழ்க்கையை அவளே முடிவு பண்ணிக்கிட்டா. அன்னைல இருந்து என் தம்பி தான் ஒரே உறவுன்னு ஆகிப் போச்சு. அவன் மகளுங்க தான் எனக்கும் மகளுங்க. மொத நாலு பேருக்கும் அவன் அம்பது பவுன், நான் முப்பது பவுன்னு எங்களால முடிஞ்சது போட்டு நல்லா ஜாம் ஜாம்னு கட்டிக் கொடுத்துட்டோம்” என்று அங்கிருந்த நான்கு பெண் பிள்ளைகளின் குடும்பத்தை பெருமிதமாக பார்த்துச் சொன்னவர்,
“ஆனா, கடைசி பொண்ணு எங்க கீர்த்தி. அவளுக்கு கொஞ்சம் கூட செய்யணும்னு எனக்கு ஒரு ஆசை. எனக்கும் அவன்னா கொஞ்சம் பாசம் ஜாஸ்தி. துறுதுறுன்னு இருக்கும் பிள்ள” என்று சொல்லும் போதே அவர் குரல் நெகிழ்ந்து விட்டது. கூடவே அவர் மகளின் நினைவுகளும்.
சபையில் இருப்பது உணர்ந்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவர், “என் தம்பி நாலு பொண்ணுங்களுக்கும் செய்றதை தான் செய்வேன்னு முன்னாடியே சொல்லிட்டான். அதே மாதிரி என்னால சொல்ல முடியல. நான் கூடத் தான் போடப் போறேன் என் கடைசி மகளுக்கு. அம்பது பவுன்” என்று அறிவித்து விட, மணிகண்டன் தெய்வானை திகைத்தே போயினர்.
“அண்ணே…” என்று மணிகண்டன் தடுத்து பேச வர, “நீ மத்த பொண்ணுங்க என்ன சொல்வாங்கன்னு நினைச்சு தானே மணி கவல படுற. அதெல்லாம் நேத்து அவுங்க கிட்ட நான் பேசிட்டேன். எல்லாருக்கும் சம்மதம் தான்” என்று விட்டார்.
உண்மையிலேயே நான்கு மாப்பிள்ளைகளும் பொன் பொருளுக்காக ஆசைப்படும் ரகமில்லை. அது மட்டுமின்றி நான்கு பெண்களுமே குடும்பத்தை அனுசரித்து போகும் விதத்தில் தான் வளர்க்கப் பட்டு இருந்தார்கள். அப்படித் தான் புகுந்த வீட்டிலும் நற்பெயர் வாங்கி இருந்தார்கள்.
எனவே, கீர்த்தன்யாவிற்கு தான் கூடுதலாய் சீர் செய்யவிருக்கிறேன் என்று நீலகண்டன் சொன்ன போது யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. பிரச்சனையும் செய்யவில்லை.
இப்போது அதை சபையில் வைத்தும் அவர் சொல்லிவிட, சர்வேஷின் குடும்பத்திற்கு இதில் அதிக நாட்டம் இல்லை என்பதால், வடிவேலன் அவரிடம் “உங்கள் பொண்ணுக்கு நீங்க விரும்புறதை செய்யுங்க. எங்களுக்கு எந்த கண்டிஷனும் இல்ல” என்று சொல்லி விட்டார்.
“ரொம்ப சந்தோஷம்” என்ற நீலகண்டன், “வேற எதுவும் இருந்தாலும் சொல்லிடுங்க. எங்களால முடிஞ்சது நிச்சயம் செஞ்சிடுவோம். எங்களுக்கு எங்க பொண்ணு இதனால கண்ணு கலங்கி நின்னுட கூடாது. அவ்ளோ தான்” என்றார் பெறாத தந்தையாக.
“அதான் சொல்லியாச்சே சம்மந்தி” என்ற இன்பவள்ளி “பொண்ண காட்டவே மாட்டேங்குறீங்க.. எங்க என் மருமக?” என்று கேட்க, அதில் சூழ்நிலை சற்றே இயல்பானது.
“இதோ சம்மந்தி அம்மா..” என்ற மணிகண்டன் மனைவியை பார்க்க, அறைக்குள் தயாராகி அமர்ந்திருந்த கீர்த்தன்யாவை அழைத்து வந்தார்.
“வந்ததும் எல்லாருக்கும் வணக்கம் வச்சி பொதுவா விழுந்து கும்பிட்டுக்கோ கீர்த்தி” என்று அன்னை சொல்லி அழைத்து வர, பலமாய் தலையை ஆட்டியவளுக்கு உள்ளுக்குள் அத்தனை படபடப்பு.
வெளியே வந்ததும் தலையை தொங்கப் போட்டுக் கொண்டாள். அதுவரை அமைதியாகவே சபையில் அமர்ந்திருந்த சர்வேஷ்வரன், மெல்லிய கொலுசொலியில் அவளின் வருகையை உணர, இயல்பாய் அவளின் புறம் பார்வையை திருப்பினான். பார்த்ததும் இன்னுமே அவளில் வீழ்ந்து போனான்!
இத்தனை நாட்கள் புகைப்படத்தில் பார்த்த முகம் இதயத்தில் முகாமிட்டு இருக்க, இப்போது நேரில் வந்தவளின் வரிவடிவம் இதயத்தின் ஆழம் வரை அச்சாரமாய் பதிந்தது.
அரக்கு வண்ணத்தில் அழகாய் தங்க ஜரிகை வைத்து ஆங்காங்கே பூக்கள் உடல் முழுவதும் பரவி இருக்க, அதற்கு பொருத்தமாய் தெய்வானை கை வண்ணத்தில் தைத்திருந்த ஆரி ஒர்க் பிளவுஸ் அணிந்து மிதமான அலங்காரத்துடன் அழகாய் இருந்தாள்.
அவளில் இருந்து பார்வையை மீட்கவே முடியவில்லை சர்வேஷ்வரனால். ஏனடா அவளைப் பார்த்தோம்… இப்போது பார்க்காமல் இருக்க முடியாது என்பது போல் அவனை தவிக்க வைத்தாள்.
சுவாசம் மொத்தமும் மூச்சுக் குழாய்க்குள் அடைத்துக் கொண்டது. தம்பியும் தங்கையும் வேறு தன்னை குறுகுறுவென பார்த்ததில் முயன்று இயல்பாய் மீண்டும் பார்வையை திருப்பிக் கொண்டான்.
தன்னை விடாமல் பார்க்கும் ஓர் பார்வையின் தாக்கம் அவளை சற்றே பதட்டம் கொள்ள வைத்தது. வேறு யாராக இருக்க முடியும்? அவனே தான் என்று உள்ளம் அடித்துச் சொல்ல பார்வையை உயர்த்தவே இல்லை அவள்.
யாரையும் தலை உயர்த்தி பார்க்காமல் கை கூப்பி வணங்கியவள் அங்கிருந்த அத்தனை பேரின் கண்ணையும் கருத்தையும் நிறைத்தாள். அதுவும் இன்பவள்ளியுடன் வந்திருந்த ஒன்றிரண்டு சொந்தக் கார பெண்மணிகள் “பொண்ணு கொள்ள அழகு வள்ளி” என்று சொல்லியே விட, இன்பவள்ளிக்கு பெருமை தாங்க முடியவில்லை.
“இங்க வந்து உட்காருமா..” என்று இன்பவள்ளி சொல்ல, மெல்ல தலை உயர்த்தி தாயை பார்த்தாள்.
“கூப்பிடுறாங்க தானே.. போ” என்றார் தெய்வானை. அன்னை சொன்னதும் மெல்ல அவர் அருகில் சென்று அமர்ந்து கொண்டவளின் தாடையை பற்றி “என் அளவு அழகா இல்லைன்னாலும்.. அழகா தான் இருக்க..” என்று குறும்பாய் சொல்ல,
அதில் புன்னகை எட்டிப் பார்த்தது அவளுக்கு. அனைவருமே அவரின் இந்த இயல்பான பேச்சில் புன்னகைக்க, மணிகண்டனின் சொந்தங்கள் சிலரும் “எங்க பொண்ணு நல்ல அழகுங்க” என்றனர் விட்டுக் கொடுக்காமல்.
“என் மருமக அழகு தான்” என்று தானும் அதை ஆமோதித்தவர், “உனக்கு என் பையனை பிடிச்சு இருக்கா?” என்று அனைவர் முன்பும் கேட்க, வெட்கம், பயம், பதட்டம், என அனைத்து உணர்வுகளும் அவளை தாக்கியது.
பார்வையை சற்றே தழைத்துக் கொண்டு “ஹ்ம்ம்” என்று மெல்ல முணங்கினாள். “அதெப்படி? அவனை நிமிர்ந்து பாக்கவே இல்ல. ஆனா, ‘ஹ்ம்ம்’ சொல்லிட்ட?” என்று வம்பிழுக்க, கீர்த்தன்யாவிற்கு பெக்கே பெக்கேவென விழிக்க தான் முடிந்தது அவர் கேட்ட கேள்வியில்.
“பொண்ணுக்கு வெட்கமுங்க” என்று ஒரு பெண்மணி சொல்லி சிரிக்க, நீலகண்டன் தான் “அது கீர்த்தி பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம்” என்று சபைக்காக சொல்லி சமாளித்தார்.
இன்பவள்ளி சிரித்தபடி, “அதெல்லாம் யாருக்காகவும் பயப்படாத. என் மகன் என்ன சிங்கமா.. புலியா… நிமிர்ந்து பார்த்து சொல்லு.. அவன் கண்ணு காது மூக்கு வாய் இதெல்லாம் கரக்ட்டா இருக்க வேண்டிய இடத்தில இருக்கான்னு பாத்துக்க” என்று கிண்டல் செய்ய, அங்கே மெல்லிய சிரிப்பலை!
“அம்மா..” என்று மெல்லிய குரலில் அதட்டும் குரல் அவனுடையதே தான் என்று அவள் புலன்கள் உணர்ந்து கொள்ள, தலையை நிமிர்த்தி பார்க்க முயலவே இல்லை அவள்.
அவனுக்கும் அவள் தன்னைப் பார்ப்பாள் என்று எதிர்பார்ப்பு இல்லை. அத்தனை பேரின் மத்தியில் தானே அவளை இயல்பாக பார்ப்பதற்கு சாத்தியங்கள் குறைவு எனும் போது.. அவள் எப்படி பார்க்க முடியும்?
“பிடிச்சு இருக்குங்க அத்தை” என்று மட்டும் சொல்ல, அதற்கே வியர்த்து கொட்டியது அவளுக்கு. அவளின் பதட்டம் உணர்ந்தவர், “பாரு.. பொண்ணு இப்ப தான் பயந்துட்டா” என்றவர் மகனிடம் திரும்பி கேலியாக சிரிக்க, அவனோ அன்னையின் அழிச்சாட்டியத்தில் பெரு மூச்சை விட்டுக் கொண்டான்.
“மாப்பிள்ளைக்கு சம்மதம் தானுங்களே..” என்று நீலகண்டன் அவனிடம் கேட்க, சபையை மறந்த சதீஷ்வரன், “அதெல்லாம் எங்க அண்ணன் எப்பவோ அண்ணிட்ட பிளாட் ஆகிட்டார்” என்று மெல்ல முணுமுணுக்க, அந்த அமைதியில் அனைவருக்கும் அது தெளிவாகவே கேட்டது.
கொல்லென்று அனைவரும் சிரித்து விட, சர்வேஷ்வரனுக்கு அவஸ்த்தையாய் இருந்தது. தம்பியை ஏகத்துக்கும் முறைத்தவன் “பிடிச்சு இருக்கு மாமா” என்றான் கீர்த்தன்யா போலவே முறையாக அழைத்து.
“அப்புறம் என்ன? தட்டை மாத்திட்டு, பொண்ணுக்கு பூவை வச்சு விடுங்க” என்று உறவினர்கள் சொல்ல, அதன் படியே செய்தனர். இன்பவள்ளி கொஞ்சம் பூவும், சக்ரவர்ஷினி கொஞ்சம் பூவும் வைத்து விட, பெண்ணின் கூந்தல் மொத்தமும் மல்லிகைப் பூவில் நிறைந்தது.
மனமும் மல்லிகை மணத்தில் நிறைந்து விட, அந்த நிறைவில் மிளிர்ந்து நின்றான் சர்வேஷ்வரன்.
“மோதிரம் கொண்டு வந்தோம் பொண்ணுக்காக” என்று இன்பவள்ளி அதனை எடுக்க, “மாப்பிள்ளையை போட சொல்லுங்க” என்றனர் அனைவரும்.
“இந்தா சர்வா..” என்று அவனிடம் நீட்ட, அதனை வாங்கிக் கொண்டவன் எழுந்து கொண்டான்.
தெய்வானை மகளை சபைக்கு மத்தியில் நிற்க வைத்து, “விழுந்து கும்பிட்டுக்கோ” என்க, அவன் எதிரே வந்ததும் படபடத்து போய் நின்றாள்.
“மாப்பிள்ளை கிட்டடையும் ஆசீர்வாதம் வாங்கிக்க கீர்த்தி” என்று தெய்வானை சொல்ல, தன் காலில் விழ போனவளை, “இல்ல.. இருக்கட்டும்” என்று மென்மையாய் மறுத்து விட்டான்.
அனைவரும் ரகசியமாக சிரித்துக் கொள்ள, அவளோ கையை நீட்டமால் அவன் சொன்னதில் விரல்களை கோர்த்துக் கொண்டு அவன் முன்னே நின்றிருந்தாள்.
“மோதிரம் போடணும்” என்று மெல்ல சொன்னவனிடம், “ஸ்ஸ்.. சாரி..” என்றபடி இடது கை விரலினை நீட்ட, மெல்ல பற்றி மோதிரத்தை அணிவித்து விட்டான். மோதிரத்தோடு இணைந்து அவனும் அவளுள் ஆழமாய் நுழைந்து விட, விரல்களின் ஸ்பரிசங்கள் உயிர் வரை தீண்டியது!
நிகிதா தான் தனது கேமராவை எடுத்துக் கொண்டு முன்னாள் வந்து, “ஃபோட்டோ எடுத்துக்கலாமே” என்று சொல்ல, “பாப்பா..” என்று நீலகண்டனின் கண்டிப்பான குரல் அங்கே ஒலிக்க,
“சும்மா ஃபோட்டோ தானே தாத்தா.. பிளீஸ்… இதெல்லாம் மெமரீஸ்” என்று கெஞ்ச, சக்ரவர்ஷினியும் எழுந்து வந்து விட்டாள். அதற்கு மேல் எங்கே அவர் மறுக்க? அமைதியாய் இருந்து கொண்டார்.
அவர்களை அருகருகே நிற்க வைத்து புகைப் படம் எடுத்த பெண்கள் இருவரும் அப்போதே தோழிகள் ஆகி விட்டனர்.
“பொண்ணு மாப்பிள்ளையை வேணும்னா கொஞ்ச நேரம் தனியா பேச சொல்லுங்கப்பா! பேசிக்கவே இல்ல” என்று இன்பவள்ளியின் உறவுக்கார பெண்மணி சொல்லல, “அட ஆமா…” என்ற இன்பவள்ளிக்கும் அப்போது தான் அது விளங்கியது.
அவர் சம்மந்திமார்களின் முகம் பார்க்க, “நல்லா பேசிக்கட்டும் சம்மந்தி அம்மா..” என்றார் நீலகண்டன் வாயெல்லாம் பல்லாக. அவருக்கு தட்டை மாற்றிக் கொண்டு எல்லாம் உறுதி செய்து விட்டதில் அத்தனை திருப்தி.
இனி பேசிக் கொள்வதில் மட்டும் என்ன இருந்து விடப் போகிறது என்று எண்ணியவர் சரி என்று விட்டார் சம்மதமாக. அது மட்டுமின்றி மூத்த இரண்டு பெண்களுக்கு தான் இது போன்ற பேச்செல்லாம் நிகழவில்லை. மற்றபடி சுஜித்ரா மற்றும் நர்மதாவிற்கு இவை எல்லாம் நிகழ்ந்தது தான்.
எனவே, தெய்வானையிடம் கண்ணைக் காட்ட, “தோட்டத்துக்கு போய் பேசுங்க கீர்த்தி” என்றார் அவரும். கீர்த்தன்யா மெல்ல தலை அசைத்து முன்னே நடக்க, அவளுடன் நகர்ந்தான் சர்வேஷ்வரன்.
“அவுங்க பேசட்டும். நீங்க எல்லாம் சாப்பிட வாங்க. நேரம் மதியத்தை நெருங்கிடுச்சு” என்று ஆனந்தியின் கணவன் மூர்த்தி சொல்ல, நீலகண்டனும் மணிகண்டனும் வந்தவர்களை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றனர். அங்கே தான் உணவு பந்தல் போடப் பட்டிருந்தது.
ஏனையோர் அங்கிருந்து நகர்ந்து விட, இளையவர்கள் மட்டுமே கீழே. அதுவும் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு வீட்டு வாசலில் வந்து அமர்ந்து விட்டனர்.