தோட்டப் பக்கம் வந்ததும் வண்ண வண்ண ரோஜாக்கள் அவனை அழகாய் வரவேற்க, தான் முதல் முதலாக அவளை பார்த்த நொடி நினைவில் வந்து நின்றது.
இன்றும் அதே போல் ரோஜாக்களின் மத்தியில் நின்றவள் அவனை மயக்கிக் கொண்டிருந்தாள். அவனின் பார்வை வேறு உள்ளுக்குள் குறுகுறுக்க வைக்க, அவன் அமைதியாக நிற்பதை கண்டு தானும் அமைதியாக நின்றாள்.
முயன்று அவளில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டவன், “இதெல்லாம் உன்னோட கை வண்ணம் தானா?” என்று ஒருமையில் உரிமையுடன் அவனே பேச்சைத் தொடங்க, “ஹ்ம்ம்” என்றாள் மெல்ல தலை அசைத்தபடி.
இப்போது அவளின் பார்வையும் பூக்களை நோக்கி உயர்ந்து இருந்தது. பின்னே, எவ்வளவு நேரம் தான் குனிந்தே நிற்க? கழுத்து வேறு வலி எடுக்கத் தொடங்கியது. கூடவே, தலை முழுவதும் மல்லிகை பூவின் பாரம் வேறு.
அவனை நேராக எதிர்கொள்ளத் தான் வெட்கம் பின்னியது. எனவே, பூக்களிடம் பார்வையை பதித்தாள்.
“அழகா இருக்கு எல்லாமே..” என்றவன் குரலில் இருந்த பாராட்டு அவளை தீண்ட, “உன்ன மாதிரியே..” என்று சொன்னதும் பட்டென்று அவனில் பார்வையை பதித்தாள்.
அவன் இதழ்களோடு சேர்த்து கண்களும் சிரித்துக் கொண்டிருக்க, அவனின் முக பாவனையில் தடுமாறி தான் போனாள் கீர்த்தன்யா.
முதல் முகத் தீண்டல்! பார்வையால்!
பார்வைகள் ஸ்பரிசித்துக் கொள்ள, இதயங்களின் தாளங்கள் ஒருவருக்கு ஒருவர் மெல்லிசையாய் துடித்துக் கொண்டது.
“உன் போட்டோ இங்க நின்னு எடுத்தது தானா?” என்றவன் அடுத்த கேள்விக்குத் தாவ, “ஹ்ம்ம்..” என்று மெல்ல தலை அசைத்தாள்.
அவனின் ஒருமையான அழைப்பு அவளுள் ஒரு வித நெருக்கத்தை விதைக்க, சற்று இடைவெளி விட்டு நின்றிருந்தவன் மேல் மனம் சாய்ந்து கொண்டே சென்றது.
“என்கிட்ட எதுவும் கேக்கணுமா?” என்று கேட்டதும் வேக வேகமாக இல்லை எனும் விதமாய் தலை அசைத்தவள், மறு நொடியே மறுத்து, ஆமாம் என்பதாக தலை அசைக்க, அவளின் ஒவ்வொரு அசைவிற்கும் ஏற்றார் போல் ஆடிய ஜிமிக்கியோடு அவனின் பார்வையும் சேர்ந்தாடியது.
“ஆமாவா… இல்லையா?” என்று தலை சாய்த்து குறும்பு மின்ன கேட்டவனிடம், இப்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பாவமாய் அவள் அவனின் முகம் பார்க்க,
“கீர்த்தி பொண்ணு பயந்த சுபாவம்னு உன் பெரியப்பா சொன்னாங்க? உண்மையா?” என்றான் கேலியாக!
“அப்படி எல்லாம் இல்ல…” என்று அவள் திணற, “என்ன கேக்கணும் கீர்த்தி பொண்ணுக்கு?” என்றான் அவளை பார்வையால் வட்டமிட்டபடி.
“அது.. வந்து..” என்று அவள் திக்கிக் கொண்டிருக்கும் போதே அங்கே இரண்டு மூங்கிலாலான சாய்வில்லா இருக்கையை கொண்டு வந்தாள் நிகிதா.
“சிவ பூஜைல கரடியா என்ட்ரீ கொடுத்ததுக்கு சாரி” என்று இருவரையும் பார்த்து பொதுவாக சொன்னவள், அங்கே இருக்கைகளை வைத்து விட்டு கீர்த்தன்யாவைப் பார்த்து குறும்பாக “உக்காந்து ஃப்ரீயா பேசுங்க சித்தி..” என்று சிரிக்க,
“சித்தியா..?” என்று சர்வேஷ்வரன் சிரிப்புடன் கேட்க, கீர்த்தன்யா அக்கா மகளை நோக்கி முறைத்து பார்த்தாள். அதில் சிரித்த நிகிதா, சித்தியா என்று கேட்டவனிடம் பார்வையை திருப்பி, “ஆமா சித்தப்பா” என்றாள் குறும்பாய்.
அவள் சொன்ன விதத்தில் சர்வேஷ் புன்னகையை சிந்த, “நிக்கி…..” என்று பல்லைக் கடித்தாள் கீர்த்தன்யா. அதில் சர்வேஷின் பார்வை சுவாரஸ்யத்துடன் அவள் பக்கம் திரும்ப,
“நான் கீர்த்தியோட ஃபர்ஸ்ட் அக்கா பொண்ணு. எனக்கும் கீர்த்திக்கும் ரெண்டு வருஷம் தான் வித்தியாசம். ஆனாலும், முறைய விட்டுக் கொடுக்கக் கூடாது தானே சித்தப்பா” என்று மீண்டும் அவள் சித்தப்பாவென சொல்ல, சர்வேஷ் அதை லகுவாய் எடுத்துக் கொண்டான்.
ஆனால், கீர்த்தன்யா கடுப்பாகி விட்டாள். “என்னையவே சித்தின்னு சொல்லாதன்னு சொல்லுவேன். இப்ப அவுங்களை வேற சித்தப்பா சொல்ற?” என்று நிகிதாவை அதட்ட,
“ஓஹோ… இப்பவே அவருக்காக என்கிட்ட சண்டை போடுறியா?” என்று நாக்கை துருத்தி அழகு காண்பித்த நிகிதா, “உங்களுக்கு ஓகே தானே?” என்று அவனிடம் கேட்க, அவனின் பார்வை தன்னைப் போல் கீர்த்தன்யாவை தீண்டியது.
அவளோ அவன் பார்வையில் விழிக்க, “ஹ்ம்ம்.. சித்தப்பா ஓகே! ஆனா, உன் சித்திக்கும் ஓகேன்னா நீ அப்படியே கூப்பிடலாம். எனக்கு நோ அப்ஜக்ஷன்” என்றான் சிரிப்புடன்.
நிகிதா வாய் பிளந்து அவனை பார்க்க, “சரியான ஆளு தான் நீங்க! நடத்துங்க நடத்துங்க..” என்றவள், “உக்காந்து பேசுவீங்களாம். எங்க பெரிய தாத்தா கொடுத்து அனுப்பினார்” என்று இருக்கையை காட்டி விட்டு அவள் நகர்ந்து விட, இருவரும் அமர்ந்து கொண்டனர்.
கீர்த்தன்யா இன்னும் கடுகடுவென இருக்க, “சித்தி.. சித்தப்பா… கஷ்டம் தான்” என்றவன் மெல்ல புன்னகைக்க, அதில் அவனை சங்கடமாக நிமிர்ந்து பார்த்தவள், “அவ சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டு போறா” என்றாள் எங்கே அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ என்று.
“ஈஸி… நோ பார்ப்ளம்” என்றவன், தலை சாய்த்து அவளைப் பார்த்தவன், “கீர்த்தி பொண்ணு.. அவுங்க அப்பா பெரியப்பாக்கு மட்டும் தான் பயந்த சுபாவம் போல” என்று சொல்லி சிரிக்க, படக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவளின் முக பாவனை அவன் சொன்னது உண்மை என்று காட்டிக் கொடுத்து விட, அதில் அவனின் சிரிப்பு விரிந்தது.
“சரி சொல்லு.. என்ன கேக்கணும்?” என்று அவன் விட்ட விஷயத்திற்கு வர, “ஹான்.. அது.. ஒண்ணுமில்ல..” என்றாள் தடுமாறிய குரலில்.
“ஒண்ணுமே இல்லையா கீர்த்தன்யா?” என்று அவன் கேட்ட விதத்தில் தான் கேட்க வந்ததை அப்படியே அவனிடம் கேட்டு விட்டாள். அதில் அவன் தான் ஒரு நொடி திகைத்து பின்னர் அடக்க மாட்டாமல் சிரித்தான்.
அவன் சிரிப்பில் தான் தவறாக கேட்டு விட்டோமோ என்று அவள் யோசிக்க, அவனோ “யாரு சொன்னா இப்படி?” என்றான் புன்னகையை இதழ்களுக்குள் அதக்கியபடி.
“ஹான்.. அது.. அது.. கேள்வி பட்டது..” என்று அவள் இழுக்க, மீண்டும் அவனின் பார்வையில் “ஹான்.. தரகர் தான் சொன்னார்..” என்று உளறி இருந்தாள்.
“ஓ..” என்றவன், அவள் கேட்டதை எண்ணி மீண்டும் மீண்டும் புன்னகையை அடக்க பெரும்பாடு பட்டான்.
“நீங்க ரொம்ப கண்டிப்பானவராமே? அப்படியா?” என்று கீர்த்தன்யா மனதிற்குள் போட்டு பயந்த விஷயத்தை அவனிடமே நேரடியாக கேட்டிருக்க, அதைக் கேட்டு தான் சர்வேஷிடம் இப்படி ஒரு புன்னகை.
“என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது?” என்று அவன் அவளிடமே புருவமுயர்த்தி புன்னகையுடன் கேட்க, அவன் கேட்ட அழகில் அவனிடம் சொக்கித் தான் போக விழைந்தது மனம்..
“தெரியலையே…” என்று அதற்கும் அவள் அப்பாவியாய் பதில் தர, “கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சுக்குவ” என்றான் குறும்பு மின்ன. அவனின் ஒவ்வொரு பேச்சும் அவளை அவனிடம் சரிந்து மயங்க வைத்தது.
“பிடிச்சு இருக்கா கீர்த்தன்யா?” என்றவனின் குரல் இப்போது பெரும் நிதானத்திற்கு வந்திருந்தது. என்ன கேட்கிறான் என்று விளங்கியது.
இப்போது அவனின் முகம் பார்க்காமல் இருக்க முடியவில்லை அவளால்! எப்படி சொல்வாள்?
தன்னைப் பிடித்துப் போய் விருப்பம் கூறியவனின் மேல் எப்படி பிடித்தம் வராமல் போகும்? இதோ இந்த நொடி நேர பேச்சு வார்த்தையில் மேலும் அவனை பிடிக்கத் தானே செய்தது அவளுக்கு!
உள்ளுக்குள் இருந்த சிறு அச்சம் கூட விலகி சென்றிருந்தது இப்போது.
“கீர்த்தி பொண்ணு கிட்ட இருந்து பதிலை காணோம்?” என்று அவன் அமரிக்கையான புன்னகையுடன் கேட்க, அவளிடம் மௌனமான பார்வை மட்டுமே.
“இப்படிப் பாத்தா?” என்றவனுக்கு அவள் நயங்களின் பாஷை விளங்கியது தான். ஆனால், பிடித்தங்களை வார்த்தைச் சரமாக அவள் கோர்ப்பதற்கு காத்திருந்தான்.
“பதில் வரலையே இப்பவும்? பிடிக்கலயோ என்ன?” என்று அவன் கேட்டு முடிக்கும் முன்னர்,
“என்னை ரொம்ப பிடிச்சவரை எனக்கு எப்படி பிடிக்காம போகும்!” என்றாள் குரல் கரகரக்க. கண்களை அகல விரித்து அவளைப் பாரத்தவன் உள்ளம் விண்ணை முட்டும் சந்தோஷத்தில் திக்கு முக்காடியது.
இப்போது அவன் மௌனமாக அவளைப் பார்க்க, அந்தப் பார்வையில் கீர்த்தன்யாவின் உள்ளத்தில் ஸ்ருங்கார கீர்த்தனைகள் கவி பாடியது!
“பிடிச்சு இருக்கு உங்களை. சின்ன பயம் இருந்தது. யாரோ.. எப்படியோ.. அப்படி இப்படின்னு.. ஆனா, தரகர் எல்லாமே சொன்னார். உங்களுக்கு என்னை ரொம்ப பிடிச்சது முதற்கொண்டு. எங்க வீட்ல உங்க வசதி பாத்து ரொம்ப யோசிச்சாங்க. ஒரு முடிவுக்கு வரவே இத்தனை நாளாகிடுச்சு. ஆனா, நீங்களே வசதி அந்தஸ்த்தை எல்லாம் பாக்க வேணாம்னு சொன்னதா சொன்னாங்க. அதிலயே ரொம்ப பிடிச்சது” என்றவள்,
தயங்கி, தவித்து, தடுமாறி, வெட்கத்தை விழுங்கி, அவனின் கண்ணோடு கண் நோக்கி “இப்ப பேசினதுக்கு அப்புறம் இன்னமும் பிடிச்சு இருக்கு” என்றாள் மனம் மயங்கி.
இத்தனை தூரம் மனம் திறந்து தன்னிடம் பேசுவாள் என்று சர்வேஷ்வரன் நிச்சயம் எதிர் பார்க்கவில்லை.
சட்டென்று பெய்திடும் மழை போல், அவனின் மனதை அவளின் நேசச் சொற்களால் நனைத்து குளிர்வித்திருந்தாள் கீர்த்தன்யா.
“லவ்லி கீர்த்தன்யா..” என்றவனின் குரல் அவளின் உள்ளத்தை மொத்தமாய் சுருட்டிக் கொண்டது.
அவளின் இமைகள் லேசாக பணித்து விட்டது. தனது எல்லாமுமாக மாறவிருந்தவனிடம் எல்லாம் சொல்ல வந்தது! எதையும் மறைக்க மனம் விடவில்லை!
மண்ணோடு மழை சேர்வது போல் அப்போதே இருவரும் ஒன்று சேர்ந்திருந்தனர். உள்ளத்தால். உணர்வினால். உயிரினால்.
அவளின் எண்ணங்களை நிறைத்தவன், வாழ்வின் வண்ணங்களாக அவளில் ஜொலிக்க.. தங்களை சுற்றி இருந்த ரோஜாக்களின் அழகினை போல் வாழ்க்கையும் அவர்களை அழகாய் தாங்க நேசத்துடன் கரம் விரித்தது அந்த நொடியில்!