மகன் முகத்தை ஆராய்ந்தவாறே அவனுக்கு இரவு உணவினை பரிமாறினார் இன்பவள்ளி! எப்போதும் அமைதியாய் தான் உண்பான். இன்றும் அதே போல் தான் இருந்தான். ஆனால், முகத்தில் வானில் மின்னும் நட்சத்திரத்தின் ஒளி!
அதனைக் கண்டு உள்ளத்தில் அப்படி ஒரு நிறைவு. அவருக்கு மட்டுமா? அனைவருக்குமே நிறைவான நாளாக அமைந்திருந்தது அன்றைய தினம்!
பெண் பார்த்து முடித்து, இன்னும் நாற்பது நாட்களில் திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர் பெரியோர்கள் அனைவரும்.
அனைத்தையும் சுபமாக முடித்துக் கொண்டு கீர்த்தன்யாவின் இல்லத்தில் இருந்து கிளம்பி இருந்தனர். காரில் வரும் போதும் சரி.. இல்லம் வந்த பிறகும் சரி.. சர்வேஷிடம் வழக்கமான மௌனம் தான்! ஆனால், அதில் அழுத்தத்திற்கு பதிலாக அகத்தின் உணர்வே விஞ்சி இருந்தது.
அனைவருக்குமே கீர்த்தன்யாவை பிடித்திருந்தது. அதுவும் இருவரும் ஒன்றாக நின்ற போது கண்ணுக்கு நிறைவாய் இருந்த அவர்களின் ஜோடிப் பொருத்தமே அவர்களை மகிழ்விக்க, அனைவரின் மனதிலும் அத்தனை திருப்தி.
இருவரும் தனியே பேசி விட்டு வந்த பின்னர் சக்ரவர்ஷினி நிகிதாவுடன் இணைந்து கீர்த்தன்யாவிடம் பேச அவளுக்கும் அத்தனை பிடித்து விட்டது தன் வருங்கால அண்ணியை!
அதுவும் நிகிதாவின் மூலம், கீர்த்தன்யாவின் அலைபேசி எண்ணையும், இன்ஸ்டா அக்கவுண்ட்டின் விவரங்களையும் சேகரித்து இருந்தாள் சக்ரவர்ஷினி.
சக்ரவர்ஷினியிடம் கீர்த்தன்யாவின் அலைபேசி எண்ணை பகிரும் போதே “அக்கா… நான் தான் கொடுத்தேன்னு யாருக்கும் சொல்லிட வேண்டாம். தாத்தாங்களுக்கு தெரிஞ்சா அவ்ளோ தான்” என்று நிகிதா சிறு பயத்துடன் சொல்லி இருக்க,
“நம்பர் தானே? இதனால என்ன நிகி? எங்க அண்ணா கிட்ட ஷேர் பண்ண தான் கேட்டேன்.. ரெண்டு பேரும் கல்யாணம் முடியிற வரைக்கும் பேசிக்கலாம் இல்லையா?” என்ற சக்ரவர்ஷினிக்கு அவளின் பயத்தை கண்டு விநோதமாக தான் இருந்தது.
“அய்யோ.. அதுக்கு தான் சொல்றேன். என் அம்மா, சித்திங்க இப்படி யாரு கிட்டடையும் மொபைல் போன் கூட இருந்தது இல்ல. கீர்த்தி மட்டும் தான் காலேஜுக்கு ரொம்ப தேவை படுதுன்னு அடம் பிடிச்சு வாங்கினா. அதுக்கும் பெரிய தாத்தா கிட்ட அவ்ளோ திட்டு வாங்கி அனுபவிச்சிருக்கா” என்றவள்,
சக்ரவர்ஷினி வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்ததை கண்டு சிரித்து “இங்க அப்படி தான். தாத்தாங்க ரெண்டு பேரும் ஸ்டிரிக்ட்! அவுங்கள மீறி ஒன்னும் பண்ண முடியாது. நர்மதா சித்தி, சுஜி சித்தி இப்படி யாருமே அவுங்களுக்கு பாத்த மாப்பிள்ளைங்க கூட பேசினது கிடையாது! எனக்கு தெரிஞ்சு கீர்த்திக்கும் அதே தான் ஃபாலோ பண்ணுவாங்க” என்றாள் நிதர்சனத்தை.
சக்ரவர்ஷினிக்கு தலையே சுற்றி விட்டது! ‘இப்படியுமா கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள் இந்தக் காலத்திலும்?’ என்று ஆயாசமாக தோன்றினாலும் வார்த்தைகளை விடாமல் அமைதியாய் இருந்தாள்.
“நான் என் அண்ணன் கிட்ட நம்பரே ஷேர் பண்ணல நிகி! எதுக்கு? எதாவது உங்க வீட்டுக்கு தெரிஞ்சு பிராப்ளம் ஆகிட போகுது” என்று சக்ரவர்ஷினி பயந்தே சொல்ல,
“அட… என்ன அக்கா நீங்க? காரியத்தை கெடுத்துடுவீங்க போல. நீங்க உங்க அண்ணா கிட்ட தாராளமா ஷேர் பண்ணுங்க. நானும் கீர்த்தி கிட்ட ஷேர் பண்றேன். எதோ நம்மளால முடிஞ்ச சேவையை அவுங்களுக்கு செய்வோம். ஆனா, வெளில தெரிய வேண்டாம்” என்று நிகிதா அழகாய் எடுத்துச் சொல்ல,
“உங்க தாத்தாஸ்க்கு தெரிஞ்சா” என்று சக்ரவர்ஷினி கேட்க, “தெரிய விட்டா தான?இந்த பெருசுங்கள ஓரம் கட்ட வேண்டியது தான்! உங்க வீட்ல யாரும் சொல்லாம இருந்தா சரி! இங்க என்னைத் தவிர யாருக்கும் இந்த விஷயம் வெளிய போகாது. கீர்த்தி கிட்டையே நான் இனிமேல் தான் சொல்ல போறேன்” என்றவளின் கூற்றில் சிரித்த சக்ரவர்ஷினி,
“ஓகே டன்” என்றவள், அவளிடம் சர்வேஷ்வரனின் எண்களை பகிர்ந்து கொண்டு கீர்த்தியின் எண்களை பெற்றுக் கொண்டாள்.
இப்போது அமைதியாக உண்ணும் அண்ணனின் முகம் பார்த்த சக்ரவர்ஷினி, “அண்ணா..” என்று அழைக்க, அதில் அவளை நிமிர்ந்து பாராமலே “சொல்லு வர்ஷி” என்றான் உண்டபடி.
“ஹ்ம்ம் கேளு” என்றவன் முகத்தில் எந்த ஒரு மாறுதலும் இல்லை.
இன்பவள்ளி தானும் அமர்ந்து கொண்டார் டைனிங் டேபிளில். அவரிடம் விஷயத்தை சொல்லி இருந்தாள் மகள். எனவே, அவள் கேட்கப் போவதற்கு மகனின் பதிலை அறிய ஆவலாக இருந்தார்.
“அண்ணி நம்பர் வாங்குனீங்களா?” என்று மெல்ல ஆரம்பிக்க, ஒரு நொடி உண்பதை நிறுத்தி விட்டு தங்கையை பார்த்தவன், “இல்ல” என்று சாதாரணமாக சொல்லி விட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தான்.
இன்பவள்ளிக்கு சப்பென்று ஆகிப் போனது! “இவன் இடிச்ச புளியே தான்!” என்று முணுமுணுக்க, அன்னையை நிமிர்ந்து பார்த்தவன், சிரிப்புடன் “அப்படியாமா?” என்று கேட்க,
“அப்படித் தான்டா!” என்றார் அவரும் கடுப்புடன்.
“இன்பூ.. புடிச்ச பிள்ளையாரை விட்டுட்ட” என்று சதீஷ் எடுத்துக் கொடுக்க, “ஹ்ம்ம்.. அதுவும் தான்!” என்று கடுப்பாக சொன்னவர் மகனின் முகத்தை அதே கடுப்புடன் ஏறிட்டார்.
“ஓ..” என்று தோள் குலுக்கிக் கொண்டவன் உண்டு முடித்து கைகளை கழுவி வர, “ஏன்டா.. உனக்கு பேசணும்னு ஆசையா இல்லையா? அவுங்க வீட்ல இருக்கும் போதே தரகரை விட்டு கேக்கச் சொல்லலாம்னு சொன்னேன். நீ வேணாம்னு சொல்லிட்ட!” என்று இன்பவள்ளி குறைபட,
அதில் சிரித்தவன், “இப்ப என்ன? நானும் உங்க மருமகளும் மணிக் கணக்கா பேசினா தான் பொழுது நகருமா?” என்று புருவமுயர்த்தி கேட்டவனிடம்,
“அப்படி இல்ல.. பேசுறதுல நீ ஆர்வம் காட்டவே இல்ல.. அதான்..” என்று இழுத்தார் இன்பவள்ளி.
அன்னையின் கூற்றில் பெருமூச்சை வெளியிட்டவன், “ஆர்வமும் ஆசையும் இருந்தா மட்டும் போதுமா அம்மா? அவுங்க வீட்ல இருக்க சூழ்நிலையை புரிஞ்சிக்கணும் தானே?” என்றவனுக்கு அவள் வளர்ந்த சூழல் தெரிந்து இருந்தது.
“அப்பா அவுங்களை பத்தி விசாரிச்ச அப்பவே அவுங்க அப்பாவும் பெரியப்பாவும் ரொம்ப கண்டிப்பானவங்கன்னு தெரிஞ்சது. இந்தக் கல்யாணம் கீர்த்தன்யாவுக்கு அவுங்க பாத்து ஃபிக்ஸ் பண்ணது தான். அப்படி இருக்கும் போது அவ இன்னும் அங்க அவுங்க கண் பார்வைல தான் இருக்கா. நமக்கு பேசணும்னு நம்பர் கேக்குறது சாதாரண விஷயம்! ஆனா, அவுங்க ஃபேமிலில அது அப்படி இல்ல. அதனால தான் நான் அதுல ஆர்வம் காட்டல” என்றவன்,
“இப்ப என்ன? காலம் முழுக்க இருக்கு பேச. பேசிக்கலாம். பொறுமையா! நிதானமா!” என்று விட்டான் முடிவாக.
அவனுக்கும் ஆசை இருந்தது தான்! அதை விட அவள் மீதான அக்கறையும் இருந்தது. நிச்சயம் அவள் தன்னோடு அலைபேசியில் பேசிக் கொள்வதை அவளின் தந்தையும் பெரிய தந்தையும் விரும்ப மாட்டார்கள்.
அவளும் அவர்களுக்கு பயந்த குணம் தான் என்று இன்று அவள் தன்னிடம் “நீங்க ரொம்ப கண்டிப்பானவராமே” என்று கேட்ட விதத்திலேயே தெரிந்தது.
அந்தக் கேள்வியில் “நீயும் கண்டிப்பனாவன் தானா?” எனும் பயமும் இருக்க, உருகி விட்டது அவனுக்கு! பிறந்த வீட்டில் இருந்ததை போல் மீண்டும் புகுந்த வீட்டிலுமா என்றவளின் அச்சத்தை உணர்ந்திருந்தான் அந்த ஒற்றைக் கேள்வியில்.
எனவே, தான் அவளிடம் அலைபேசி எண்ணை எல்லாம் கேட்க நினைக்கவில்லை. அவர்கள் வீட்டு பெண்ணாக இருக்கும் வரைக்கும் அவள் வாழ்ந்த முறைப்படியே அவள் இருக்கட்டும். தன் கைகளுக்குள் தன் மனைவியாகிய பிறகு அவளுக்கான எல்லாமுமாக தான் இருக்கலாம் என்று அப்போதே முடிவு செய்து விட்டான்.
அதன் பின்னர் சக்ரவர்ஷினிக்கு அண்ணனிடம் அண்ணியின் எண்ணை பகிர தைரியம் இல்லாமல் போனது. இந்த விஷயத்தை வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவலாக நிகிதாவிற்கு சொல்லியும் விட்டாள்.
அனைத்தையும் சொல்லி இருந்தவள், இறுதியில் “நம்ம சேவை இங்க தேவை இல்லை போல நிகி” என்று அனுப்பி இருக்க, அதைக் கண்ட நிகிதாவிற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
கீர்த்தியிடம் சக்ரவர்ஷினி மூலியமாக வாங்கி இருந்த சர்வேஷின் எண்ணை பகிர்ந்து, “கிடைக்குற கேப்ல கூப்பிட்டு பேசு” என்று நிகிதா சொல்லி விட,
“ஆத்தி.. என்ன நிகி? விளையாடுறியா? கண்டனுங்களுக்கு தெரிஞ்சது… அவ்ளோ தான். நான் மாட்டேன். அம்மாவும் இதெல்லாம் விரும்ப மாட்டாங்க” என்று ஒரே முடிவாக மறுத்து இருந்தாள் கீர்த்தன்யா.
அவளுக்கு அவனுடன் பேச வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் தந்தை மீதும் பெரிய தந்தை மீதும் இருந்த பயம் தடுத்தது. கூடவே, என்ன பேச என்றும் தோன்ற, தோட்டத்தில் அவனோடு மனம் விட்டு பேசியதே மனம் நிறைந்து இருந்தது.
திருமணம் வரை அந்தப் பேச்சே போதும் என்று தோன்றியும் விட, மெனக்கெட்டு அவனோடு பேசும் எண்ணம் எல்லாம் வரவே இல்லை அவளுக்கு.
“இப்படி பயந்தா எப்படி கீர்த்தி?” என்று அவளிடம் புலம்பியவள், “சரி.. நீயா கூப்பிட வேணாம். அவுங்க கூப்பிட்டா பேசு” என்று சொல்ல,
“என்னது.. அவுங்க கூப்பிட்டாவா?? அவுங்களுக்கு எப்படி என் நம்பர்?” என்று அவள் சொல்லும் போதே நிகிதா குறும்பாய் சிரிக்க,
“உன் வேலை தானா?” என்று பல்லைக் கடித்த கீர்த்தன்யா, “எப்படி நம்பர் கொடுத்த?” என்றாள் வேகமாய்.
“வர்ஷினி அக்கா உபயம் தான்” என்று அவளும் சிரிக்க, “அய்யயோ… ஏன் நிகி இந்த ஆகாத வேலையை பாத்து வச்சு இருக்க?” என்று கீர்த்தன்யா புலம்பித் தீர்க்க,
“அட யாரு சாமி இவ? இதுக்கு போய் இப்படி பயப்படுற? சரி விடு! எப்படியும் வர்ஷினி அக்கா உன் நம்பரை அவருக்கு கொடுத்து இருப்பாங்க. அவரா கால் பண்ணா அவாய்ட் பண்ணாத கீர்த்தி. பேசி பாரு” என்று சொல்லி விட, அறை குறையாக தலை அசைத்து வைத்தாள்.
அவன் அழைத்தால் அழைப்பை புறக்கணிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை தான்! எனினும், தாய் எப்போதும் உடனிருப்பார். தந்தையும் தோப்பில் இருந்து வந்து விட்டால் இல்லம் தான்!
இதில் எங்கே அவனுடன் தனிமையில் பேச? ‘வாய்ப்பில்ல ராஜா’ என்று எண்ணிக் கொண்டவள், “அவரா கூப்பிட்டா பாக்கலாம்!” என்று எண்ணிக் கொண்டவளுக்கு நிச்சயம் அவன் அழைக்க மாட்டான் என்றே தோன்றியது
அதை நிகிதாவிடம் சொல்லியும் இருந்தாள். “எனக்கு என்னமோ அவுங்களா கால் பண்ண மாட்டாங்கன்னு தான் தோணுது நிகி. அன்னைக்கு பேசும் போதே அப்பா, பெரியப்பா பத்தி ஓரளவு தெரிஞ்சு பேசின மாதிரி தான் இருந்தது. அதனால தான் அவரும் நம்பர்லாம் கேக்கலன்னு நினைக்கிறேன்” என்றாள் அவனோடு பேசிய பொழுதில் அவனைப் பற்றி அறிந்தவளாக.
“அப்போ பேச உனக்கு இஷ்டம் இல்லையா?” என்று நிகிதா கேட்க, “இஷ்டம் இல்லாம இல்ல.. இந்த கண்டனுங்க மத்தியில நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் இஷ்டப்பட முடியாது! அது தெரியும் தானே உனக்கு? அப்புறம் என்ன?” என்றவள்,
“கல்யாணம் ஆன பின்ன காலம் முழுக்க இருக்கே… அப்புறம் என்ன?” என்று கீர்த்தி சொல்லி விட, “என்ன டிசைனோ!” என்று எண்ணிக் கொண்டாள் நிகிதா.
ஆனால், இப்பொழுது சக்ரவர்ஷினி சொன்னவை அனைத்தையும் கேட்டதும் “அப்பப்பா..ஜாடிக்கு ஏத்த மூடி!” என்று அவளிடமும் கீர்த்தன்யா சொன்னதை சொல்லி விட, அவளும் அதையே தான் திரும்ப சொல்ல வேண்டியதாக இருந்தது.
இருவரின் புரிந்துணர்வும் இந்த அளவு இப்போதே ஒட்டி அமைந்துள்ளதை எண்ணி வியந்து போனார்கள் சின்னவர்கள் இருவரும்.
சரி இன்னும் நாற்பது நாட்கள் தானே.. மின்னல் வேகத்தில் சென்று விடும் என்று அவர்களும் அடுத்து எந்த ஒரு தேவையற்ற சேவைகளையும் மேற்கொள்ளவில்லை!