“புரிஞ்சுக்குவீங்கன்னு தான் உண்மையை சொன்னேன். இதுவே உங்க பொண்ணை பத்தி வேற பேசி பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க? பேசாம நிறுத்திட்டு வேலையை பாருங்க. நிச்சயத்துக்கு நீங்க குடுத்த ரொக்கப்பணம் இன்னும் ஒருவாரத்துல உங்க வீடு தேடி வரும்…”
இப்படி சிவசுந்தரம் மனித தன்மையில்லாமல் பேசி இதயாவை பற்றியும் மறைமுகமாக ஏதாவது பேசுவேன் என்பதை போல மிரட்டுவதை கேட்டு நொறுங்கி போனார் அய்யாசாமி.
“நான் மாப்பிள்ளைட்ட பேசுவேன்…” என்று அவர் சொல்ல,
“என் மகன் என் பேச்சை கேட்பானா உங்க பேச்சை கேட்பானா? என்னை தானே நம்புவான். இது பெரியவங்க பார்த்து செஞ்சு வச்சது. எங்களுக்கே விருப்பம் இல்லாதப்போ ஏன் அவனுக்கு சொல்லனும்னு நினைக்கறீங்க? பேசாம உங்களுக்கு ஏத்த வேற மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் செஞ்சு வைங்க….”
இப்படி பேசி முடித்து வைத்துவிட்டார் அவர். மீண்டும் மீண்டும் அதையே கேட்டு கேட்டு மனதை இறுக்கியவள் முகம் சிவந்திருந்தது.
அய்யாசாமிக்கு சிவசுந்தரத்தின் பேச்சை விட மகளின் ஆசை முகம் தான் மனதினுள் அந்த நிமிடம் அவர்களுக்கு வந்து போனது.
இவரின் அதிர்ந்த முகத்தை பார்த்து என்னவென்று கேட்க வந்து மஞ்சு விஷயம் கேட்டதுலே ரத்த அழுத்தம் கூடி மயங்கி சரிந்தார்.
இதோ இரு நாட்கள் மருத்துவமனையில் இருந்து அன்று காலை தான் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.
“பூவிக்கா அப்பா கூப்பிடறார்…” என்று நவீன் வரவும் தந்தையின் மொபைலில் இருந்த பேச்சு பதிவை தனது போனுக்கு மாற்றிக்கொண்டாள் இதயா.
“நவீ நான் வர வரைக்கும் எங்கயும் போய்டாத. அங்க போக மூணு மணி நேரம் தான். கார்ல போய்ட்டு வந்திடுவோம். பக்கத்துலையே இரு. அம்மாவுக்கு தைரியம் சொல்லு…”
“நான் பார்த்துக்கறேன் பூவிக்கா, ஆனா நீ அங்க பார்த்து பேசு. உன் முடிவு சரியா தப்பா தெரியலை. என்னால யோசிக்க முடியலை. ஆனா நீ முடிவு பண்ணிட்ட. எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன்…” என்றவனின் கையை அழுத்தமாய் பற்றிக்கொண்டவள்,
“இது போதும்டா…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த பையில் நிச்சய ஆல்பம், பத்திரிக்கைகள் என்று சிலவற்றை எடுத்துக்கொண்டாள்.
“அப்பாட்ட பேசிட்டு…” என்ற நவீனை பார்த்தவள்,
“சொல்லிட்டு கிளம்பறேன்…” என்று வெளியே வந்தாள்.
“பூவிம்மா என்னடா மாமா சொல்றாங்க?…” என்று தள்ளாடியபடி மஞ்சு வர,
“ம்மா, உன்னை யார் இப்போ எழுந்து வர சொன்னா? போய் படு…” என்று சொல்ல,
“அம்மாடி, என்னடா, என்னடா இப்படி பன்ற? வேண்டாம்டா. அவங்க பேசினதை கேட்ட தானே? அந்த பையனோட அக்கா சொல்லுது பொண்ணை பெத்துட்டு கொஞ்சமாச்சும் அடக்கம், பயம் இருக்கனும்னு. மிரட்டுற மாதிரி பேசுதும்மா….” என்று சொல்லவும்,
“என்கிட்ட யாரும் மிரட்ட முடியாது. நான் பார்த்துப்பேன்ப்பா. நீங்க தைரியமா இருங்க….” என்று சொல்லியவள் பெயருக்கு சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டாள்.
மகளை ஒன்றும் சொல்லமுடியாமல் சுதாகரனிடம் அத்தனை எச்சரித்து அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர்.
காரில் செல்லும் பொழுதே சுதாகரன் அவ்வப்போது இதயாவின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே தான் சென்றார்.
அவர் பார்ப்பதை உணரும் அளவிற்கு அவள் அந்த உலகத்திலேயே இல்லை. வெறுமையாக விழிகளுடன் தன் மொபைலில் அவனுடன் பேசிய குறுஞ்செய்திகளை எல்லாம் பார்த்துக்கொண்டே தான் வழியெல்லாம் வந்தாள்.
அவனுமே அந்த நொடி ஆன்லைனில் இருப்பதாய் காட்ட அதையே வெறித்து பார்த்தபடி இருந்தாள்.
சிதம்பரத்தில் இருந்து கடலூர் வந்து சேர நேராக சிவசுந்தரம் வீட்டிற்கே வந்துவிட்டனர் பூவிதயாவும், சுதாகரனும்.
“இப்பவும் கூட யோசிம்மா பூவி…” என இறைஞ்சுதலுடன் அவர் கேட்க,
“மாமா இப்போ நீங்க என் மாமாவா மட்டும் உள்ள வரலை. ஒரு போலீஸாவும் தான். இறங்குங்க…” என்று சொல்லியவள் தானும் இறங்கி அவருக்காக காத்திருக்க, வீட்டினுள் இருந்து ஒரு பெண் வாசலில் வந்து யார் கார் என்று பார்க்க வந்த அப்பெண் திகைத்து போய் நின்றது.
அவளை பார்த்த இதயா, சுதாகரன் வந்ததும் அவரோடு சேர்ந்து வீட்டு வாசற்படி ஏறி அப்பெண்ணை கடந்து சென்றாள்.
“அம்மா…” என்று இதயாவை பார்த்துவிட்டு அவளை தாண்டி உள்ளே ஓடினாள் அப்பெண்.
எதையும் கண்டுகொள்ளாத பாவனையுடன் அந்த வீட்டை சுற்றிலும் பார்வையை ஓட்டியவள் தானே சென்று இருக்கையில் அமர்ந்தாள்.
அவளை எதிர்பாராத அந்த குடும்பத்தினர் அதிர்ந்து போய் நிற்க சிவசுந்தரம் அப்போது தான் அறையை விட்டு வெளியே வந்தார்.
“நீங்க என்ன இங்க?…” என்று வந்தவரை கண்டும் அவள் எழுந்துகொள்ளாமல் அப்படியே அமர்ந்திருக்க,
“ருக்கு…” என்று அழைத்தார் தன் மனைவியை.
“சொல்லுங்க…” என வேகமாய் ஓடி வந்தவர் பூவிதயாவை பார்த்து பார்வையால் மன்னிப்பை யாசித்தார்.
அதையும் ஒருவித அழுத்தத்துடன் உள்வாங்கிக்கொண்டவள் எந்த உணர்வையும் காண்பிக்கவில்லை.
“உத்ராவுக்கு போன் போடு. உடனே கிளம்பி வர சொல்லு…” என்று மூத்த மகளுக்கு சொல்ல சொல்லியவர் சுதாகரன் பக்கம் திரும்பினார்.
“நான் தான் எல்லாமே போன்ல சொல்லிட்டேனே. அப்பறம் எதுக்கு இவ்வளவு தூரம் வரனும் நீங்க? அதுவும் இந்த பொண்ணோட?…” என்று கேட்க,
“இந்த கேள்வியை என் கிட்ட தான் நீங்க கேட்கனும். அங்க ஏன் கேட்கறீங்க? என்னை தான உங்க பையனுக்கு பேசி முடிச்சீங்க?…” என்று பட்டென்று இதயா பேசிவிட சிவசுந்தரம் ஒருநொடி திகைத்து போனார்.
அவள் அப்படி பேசுவாள் என்று நினைத்ததில்லை. தங்களை போல சாராசரி குடும்பம். சமூகத்திற்கு கட்டுப்பட்டவர்கள், தன் பேச்சை எடுத்து திருமணத்தை நிறுத்திவிடுவார்கள் என்று நினைத்திருந்தார்.
உண்மையில் இதயாவையும் அவர்கள் குடும்பத்தினரையும் லேசில் தான் எடை போட்டிருந்தார் சிவசுந்தரம்.
பின்னே, ஒரு தனியார் வேலையில் இருக்கும் தன் பையனுக்கு அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பெண்ணை கொடுக்க சம்மதித்தவர்கள் ஏமாளிகளாக தானே தெரிந்திருக்கும்.
“என்னம்மா பேச்சு ஒரு தினுசா இருக்குது?…” என்று சிவசுந்தரம் விறைப்பாய் கேட்க சுதாகரன் பேச வாய் திறக்கும் முன்,
“மாமா, நான் பேசிக்கறேன். ப்ளீஸ்…” என்று அவரை தடுத்துவிட்டாள்.
“நீ பேச இங்க என்னம்மா இருக்குது? எதுவா இருந்தாலும் உன் அப்பாக்கிட்ட நான் பேசிட்டேன். என்ன, உன்னை அனுப்பி கெஞ்ச சொல்லி அனுப்பி வச்சாரா? நல்ல குடும்பம்னு இல்ல நான் நினைச்சேன். சொன்னா புரிஞ்சு ஒதுங்கிப்பீங்கன்னு…” என்று அவர் தாடையை தடவ,
“என்னப்பா இவங்களுக்கு இங்க என்ன வேலை?…” என வந்தாள் மூத்த மகள் உத்ரா.
அவர்கள் வீட்டின் அருகிலேயே அவளும் குடியிருந்தாள் தன் குடும்பத்துடன். அதனால உடனே வந்துவிட்டாள்.
“வாம்மா, நீயே பாரு. கல்யாணம் வேண்டாம்னு சொல்லியும் பொண்ணை பேச அனுப்பி வச்சிருக்காங்க…” என்று சொல்ல,
“இதென்ன புது பழக்கமா இருக்குது? அதான் நான் முதல்லையே சொன்னேனே ஒத்து வராதுன்னு…” என முகம் சுளித்தாள் அவள்.
“எப்போ சொன்னீங்க ஒத்து வராதுன்னு? அஞ்சு மாசம் முன்ன என்னை பொண்ணு கேட்டு வந்தப்போவா? இல்லை நிச்சயதார்த்தம் நடக்கும் போதா? இல்லை இப்போ உங்க தம்பிக்கு இந்த யோகம் அடிச்ச பின்னாடியா?…” என்று இதயா கேட்க,
“என்ன என் வீட்டுக்குள்ளயே வந்துட்டு என்னையே கேள்வி கேட்கற? எந்திச்சு வெளில போ முதல்ல. அதான் நீ வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்ல. என்ன கெஞ்சினாலும் எதுவும் நடக்காது…” என்று உத்ரா எகிற,
“அக்கா அவங்க அமைதியா தான பேசறாங்க. நீ ஏன் இவ்வளவு கோவப்படற? தப்புக்கா…” என்ற தங்கை நிஷாந்தியை திரும்பி பார்த்தவள்,
“உன் வாயை மூடிட்டு உள்ள போடி…” என அதட்டினாள்.
“என்னை பார்த்தா கெஞ்ச வந்தத போலவா இருக்குது?…” என்ற இதயாவின் பேச்சில் அவள் பக்கம் அனைவரும் திரும்பினார்கள்.
“அப்போ எதுக்கு வந்திருக்க? உன்கிட்ட பேச எதுவும் இல்லையே. உங்க வீட்டுல குடுத்த ரொக்கப்பணம் அடுத்த வாரம் வந்து சேரும். கிளம்பு…” என்று அவள் சொல்ல,
“என் பொண்ணுதான் சொல்றால்ல. கிளம்பும்மா…” என்றார் சிவசுந்தரமும்.
“அப்போ எனக்கும் வேற வழி இல்லை. போன்னா நான் நேரா போலீஸ் ஸ்டேஷன் தான் போவேன்…” என்று இதயா சொல்லவும் அத்தனை பேரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர் சுதாகரன் உள்பட.
“என்ன முழிக்கறீங்க? போகட்டா? சரின்னு சொல்லுங்க. இப்போவே போய் உங்க மொத்த குடும்பத்து மேலையும் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு, கூடவே மானநஷ்ட வழக்கும், மிரட்டல் வழக்கும் போடுவேன்…”
“என்ன, என்ன பேசற? நாங்க என்ன மிரட்டினோம்?…” என்று சிவசுந்தரம் பேச,
“அப்பா நீங்க ஏன் பதறிட்டு வரீங்க? அவ சொல்றதை எல்லாம் எடுக்காதீங்க. என்ன பண்ணிடுவா? வழக்கு போட்டா என்ன ஆகிடும்….” என்று உத்ரா பேச,
“முதல்ல எல்லாரும் ஸ்டேஷனுக்கு போகனும். மானம் போகும். கூடவே புதுசா வந்திருக்கற கண்ணுக்கு தெரியாத அந்தஸ்தும், அத வச்சு நீங்க கண்ட கனவும் போகும். பினிஷ்…” என்று சொல்ல,
“எத வச்சு உன்னால கேஸ் குடுக்க முடியும்? என்ன விளையாடுறியா? இப்ப நீ தான் மிரட்டிட்டு இருக்க. இதென்ன ஊர் உலகத்துல நடக்காததா?…” என உத்ரா சொல்ல,
“ஊர் உலகத்துல எதுவும் நடக்கட்டும். அதை அந்தந்த வீட்டுல உள்ளவங்க கேட்கட்டும். இது எனக்கு நடந்தது. நான் தான் கேட்பேன். என்ன சொன்னீங்க? என்ன வச்சு கேஸ் குடுக்க முடியுமா?…” என்றவள் அந்த பேச்சு பதிவை ஓடவிட அனைவருமே கேட்டனர்.
“இந்த பேச்சு ஒன்னு போதுமே? என் பையனோட தகுதிக்கு பொண்ணு வேண்டாம். கல்யாணத்தை நிறுத்தலைன்னா பொண்ணு மேல அவதூறு பேசுவேன்னு வாக்குமூலமே இருக்கே…” என்றவள்,
“ஏன் உங்க மகன் என்ன செய்ய போறான்னு என்னை பேசி முடிக்கும் போது உங்களுக்கு தெரியும் தானே? அப்போ அப்பவே ஏன் என்னை பொண்ணு கேட்டு வந்தீங்க?…” என இதயா சிவசுந்தரத்தை பார்த்து கேட்க அவர் மௌனமானார்.
அவருக்கு தெரியுமே தன் பிள்ளை மீது நம்பிக்கை இல்லையே. ஏற்கனவே பரிட்சை எழுதி அதில் தோல்வியடைந்திருந்தான் என்பதால் எங்கே வெற்றி பெற்று அந்த இருக்கையில் அமர போகிறான் என்று துளி நம்பிக்கையும் இல்லாமல் அல்லவா இருந்தார்.
“பேசுங்க, பதில் சொல்ல முடியலை இல்ல? நான் சொல்லட்டா உங்களுக்கு அவர் பாஸ் பண்ணுவார்ன்னு நம்பிக்கை இல்லை. அப்படித்தானே?…” என்று சொல்ல சிவசுந்தரம் அவளை பார்வையால் துளைத்தார் கோபத்துடன்.
“இந்த முறைப்பு, உங்க பேச்சும் மிரட்டலும் என்கிட்டே வேண்டாம். நீங்க சொன்னா உடனே கேட்கனுமா?…” என இதயா கேட்க,
“இப்போ என்ன செய்யனும்ன்ற?…” என உத்ரா விஷயத்துக்கு வந்தாள்.
“இந்த கல்யாணம் நடக்கனும்னு சொல்றேன். குறிச்ச தேதில நடக்கனும். அவ்வளோ தான்…” என சொல்ல,
“அதான் வேண்டாம்னு…”
“என்ன வேண்டாம்? தேடி வந்து பொண்ணு கேட்டு பேசி முடிச்சு ஊரை கூட்டி நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு எல்லா வேலையும் நடந்துட்டு இருக்குது. இப்போ முடியாதுன்னு டேஷ் போச்சுன்னு நீங்க போய்டுவீங்க. பொண்ணை பெத்த எங்க வீட்டுல மூலையில உட்கார்ந்து அழனுமா?…” என்று ஆவேசமாய் பேசியவள் எழுந்து நிற்க,
“இங்க பாரும்மா, வார்த்தை வார்த்தை…”
“நீங்க பேசினீங்களா அந்த வார்த்தையை பார்த்து?…”
“இப்போ என்ன வேணும்னா கல்யாண செலவுக்கு ஆனா பணத்துல நாங்க கொஞ்சம் பங்குக்கு…”
“அடச்சீ, வாயை மூடுங்க. யாருக்கு வேணும் பணம்? அதை எப்போ வேணாலும் சம்பாதிச்சுக்க முடியும். ஆனா மரியாதை? நோகாம நீங்க வேண்டாம்னு போவீங்க. அவனவன் பொண்ணுக்கிட்ட என்ன குறையோ, பொண்ணு வீட்டுல தான ஏதோ தப்பு போல, பொண்ணுக்கு எதுவும் சரியில்லயோன்னு எங்களை பேசவா?…”
“பணம்ணீ வச்சுக்கோங்களேன். ஓடா தேய தேய எங்கப்பா உழைச்சது எல்லாம் இப்படி வீணா போகறதுக்கா? அப்போ எனக்கு பின்னால என் தம்பிக்குன்னு பார்க்க வேண்டமா? வாரி வழிச்சு கேட்டீங்கல்ல வரதட்சனை. இதையும் சொல்லட்டா? வரதட்சனை குடுக்க முடியலைன்னு கல்யாணத்தை நிப்பாட்ட முயற்சி பன்றீங்கன்னு?…” என்று சொல்ல மூச்சு பேச்சில்லை அவர்களிடம்.
“செம்ம, சூப்பர்ம்மா அண்ணி. பேசட்டும்…” என்று நிஷாந்தி ருக்குவின் காதில் சொல்ல அவர் பாவமாய் நின்றிருந்தார்.
“முக்கால்வாசி பத்திரிக்கை குடுத்து முடிச்சாச்சு. எல்லார்ட்டயும் போய் நாங்க கல்யாணம் நின்னு போச்சுன்னு சொல்லனும்? அதுக்கு விளக்கம் குடுக்கனும்? ஏன் இதெல்லாம்? இல்லை, ஒவ்வொருத்தர் வீட்டுக்கா நீங்க வந்து பதில் சொல்லுவீங்களா? இப்ப எங்க அந்தஸ்து வேற அதான் பொண்ணு வேண்டாம்னு சொன்னோம்னு…”
“இந்தாம்மா…” என்று சிவசுந்தரம் கோபமாய் கையை நீட்ட,
“இந்த கை நீட்டி எகிறிட்டு வர வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். எல்லாத்துக்கு தலையாட்டிட்டு விதியேன்னு போகறவ நான் கிடையாது. ரெண்டே ஆப்ஷன். ஒன்னு இந்த கல்யாணம். இல்லை உங்களை நான் சும்மா விடமாட்டேன். வசதி தான் இல்லையே தவிர ஆள் பலம் நிறையவே இருக்கு…”
அவள் சொல்லியதை கேட்டு அரண்டு தான் நின்றனர். உண்மை தான் இதயாவின் சொந்தங்கள் வட்டாரம் அத்தனை பெரிது. இதயாவின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லமுடியவில்லை.
“எனக்கு என் குடும்பத்தோட மரியாதை முக்கியம். அது என்னால எந்த சூழ்நிலையிலையும் போக நான் அனுமதிக்கமாட்டேன். அதுவும் யாரோ ஒருத்தர் சந்தோஷத்துக்காக நாங்க சங்கடபடனுமா? வாய்ப்பே இல்லை. நானும் கவர்மென்ட் ஸ்டாப் தான். எதை, எங்க, எப்படி பேஸ் பண்ணனும்னு எல்லாம் தெரியும்…” என்றாள் அவள்.
“என்னங்க இது இந்த பொண்ணு இப்படி பேசுது?…” என உத்ரா சுதாகரனிடம் கேட்க அவரோ மருமகளின் பேச்சில் தைரியம் மீண்டவராக,
“அவ கேட்கிறதுல என்னம்மா தப்பு இருக்குது? இதுவே உங்க வீட்டு பொண்ணா இருந்தா நீங்க இப்படி விடுவீங்களா? இப்பவும் வந்ததுல இருந்து இங்க என்ன நடந்ததுன்னு எல்லாம் ரெக்கார்ட் பண்ணிட்டோம். நான் போலீஸ், தெரியும்ல…” என்று அவரும் ஒரு போடு போட,
“நான் சொன்னேனே கேட்டீங்களா? இந்த தகுதி நமக்கு இன்னைக்கு வந்தது. அதுக்காக அந்த பொண்ணை கலங்க விடலாமா? வேண்டாம்ங்க. பொண் பாவம் பொல்லாது….” என்று ருக்மணி சிவசுந்தரத்திடம் குரலில் சொல்லி விசும்ப,
“என் பையன் வரவும் பேசிட்டு…” என்று சிவசுந்தரம் சொல்ல,
“அப்பா நீங்களும் என்ன?…” என்ற உத்ராவை முறைத்தவர்,
“நீ வாயை மூடு. இப்ப நமக்கு வழி இல்லை…” என்றார்.
“என் பையன் வரவும்…” என்று மீண்டும் சொல்ல,
“உங்க மகன்கிட்ட சொல்லி தான் இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு பேசினீங்களா?…” என்றாள் இதயா.
“அது…” என்று சிவசுந்தரம் தடுமாற அவரை எள்ளலாக பார்த்தாள்.
“கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க. நான் கிளம்பறேன் மாமனாரே…” என படு நக்கலாக சொல்லியவள் தனது பேக்கை எடுத்துக்கொண்டு,
“போகலாம் மாமா…” என்று சொல்லி வாசல் பக்கம் திரும்ப அங்கே கதவில் சாய்ந்தவண்ணம் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவன். கண்ணபிரான்.
அவனை பார்த்ததுமே ஒரு நிமிடம் தடுமாறியவள் ஒரு பெருமூச்சுடன் நடந்து வாசலுக்கு சென்றாள்.
“ஒன் செகென்ட் இதயா. உன்கிட்ட நான் பேசனும்…” என அவன் சொல்ல,
“நான் பேச வேண்டிய எல்லாம் பேசிட்டேன். இனி பேச எதுவும் இல்லை. கல்யாணம் முடியட்டும்…” என சொல்லிவிட்டு அவனை தாண்டி செல்ல அவளை திரும்பி பார்த்தவண்ணம் நின்றிருந்தான் கண்ணன்.
கனவினில் வருகிறாய் கண்டதும் மறைகிறாய்
கண்களில் வாழ்கிறாய் கண்ணீரில் மிதக்கிறேன்
எதற்கென மறுக்கிறாய் இதயம் வலிக்குதே
எப்படி தாங்குவேன் என்னிடம் வா