ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 1
அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. சற்று முன்னர் தான் மாற்றலுக்கு உள்ளாகி புது ஆட்சியாளராக அங்கே தனது பணியை ஏற்று தொடங்கி இருந்தான்.
இளம் ஆட்சியாளன். இரண்டு வருடம் வடமாநிலம் ஒன்றில் பணிக்கு இருந்தவன் இப்போது தமிழ்நாட்டில் தடம் பதித்தான்.
அத்தனை இலகுவில் அவனுக்கு அது கிடைத்திடவில்லை. இதோ இன்று அவன் விரும்பியபடி தன் தமிழகத்தில் தன் மக்களுக்கு பணியாற்ற வந்துவிட்டான்.
வந்ததுமே வாழ்த்துகள், பாராட்டுகள் என அனைத்தும் முடிந்து இதோ அலுவலக ஊழியர்களுடன் கலந்துரையாடல் தொடங்கவிருந்தது.
“என்ன மிருணா இன்னும் நம்ம பூவி வரலை. போன் பண்ணலாம்னா நாட் ரீச்சபிள்…” என்று நளினி கேட்டுக்கொண்டு இருக்க,
“நானும் போன் பண்ணேன்க்கா. நம்ம சிசிக்கு போன் பண்ணி இன்னைக்கு பர்மிஷன் கேட்டிருக்கா போல. என்னம்மா இப்படி பண்ணிருச்சு அந்த பொண்ணுன்னு என்கிட்ட முறைச்சுட்டு போறார். போதாததுக்கு என்னவோ இவர் தான் பொறுப்புன்ற மாதிரி ஆபீஸ் ஃபுல்லா ஸீன் பண்ணிட்டார்…” மிருணாளினி வருத்தத்துடன் சொல்ல,
“ஓகே, அப்பறம் பேசலாம். ஸார் வந்துட்டார்…” என்றதுமே மிருணாளினி அளவான சிரிப்புடன் திரும்பி நிமிர்ந்து அமர்ந்தாள்.
“நளினிக்கா, என்னோட சேரி இன்னைக்கு ஓகே தானே?…” என கேட்டுக்கொள்ள,
“உதை வாங்குவ. ஒழுங்கா பேசறதை கவனி. அவர் ரொம்ப ஸ்ட்ரிக்…” என்று நளினி எச்சரிக்க,
“ஆனா ஸ்மார்ட். என்ன ஆனாலும் நம்ம ஊர்க்காரர் ஆச்சே. இன்னைல இருந்து அவர் தான் என் க்ரஷ். உங்களுக்கெல்லாம் அதுக்கு குடுத்து வைக்கலை…” என்றாள் மிருணா. நளினி சொல்லியதை பற்றி எல்லாம் அவள் கவலைப்படவே இல்லை.
“அடங்குடி. இங்க தான் பார்க்கறார்…” என்று நளினி முகத்தை சீராக்க மிருணாவும் பொறுப்பாய் அவன் பக்கம் திரும்பினாள்.
“எல்லோருக்கும் வணக்கம். என்னோட பெயர் கண்ணபிரான்…” என்று ஆரம்பித்தவன் பேச்சு அதன் பின் வெகு நிதானமாகவும் சாதுர்யத்துடனும் இருக்க அவனை விட அவனின் பேச்சுக்களை கவனிக்க ஆரம்பித்தனர் அனைவரும்.
அங்கே செய்யவேண்டிய வேலைகள், கிடப்பில் கிடக்கும் முக்கிய வழக்குகள், மோசடிகள் என்று அனைத்தையும் அன்றே அழுத்தமாகவும், அதன் முக்கிய தவறுகளை மேலோட்டமாகவும் சொல்லியவனை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பணியை ஏற்கும் முன்பே அங்கு இருப்பதை பற்றி சேகரித்திருக்கிறான் என்று தெளிவாய் தெரிந்திருந்தது அவனின் பேச்சில்.
அவன் உரையை முடித்துவிட்டு அனைவரும் கிளம்பும் வரை அமைதியாக இருந்தவன் எல்லோரும் சென்றதும் மீண்டும் தனதறைக்கு வந்து அந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
முகத்தில் இருந்த இலகுத்தன்மை குறைந்து சற்று அழுத்தம் கூட அவன் எதிர்பார்த்து காத்திருப்பவள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை.
“வரேன்னு தெரிஞ்சு தான் லீவ் போட்டிருப்பாளோ?…” என்ற முணுமுணுப்புடன் வலது கையின் பெருவிரலால் மற்ற நான்கு விரல்களையும் நீவியபடி அந்த சுழல் நாற்காலியில் சுழன்றுகொண்டு இருந்தான்.
“பூவிம்மா, லேட் ஆகிருச்சு. இப்போ டாக்டர் வரவும் மாட்டாங்க. அப்பாவும் தூங்க ஆரம்பிச்சுட்டார். நீ போய்ட்டு வாம்மா. புது ஆபீசர்ன்னு வேற சொன்ன. இப்பவே பாதி நாள் முடிஞ்சுருச்சு…” என மஞ்சு அவளிடம் சொல்ல,
“நிஜமா மேனேஜ் பண்ணிப்ப தானம்மா? என்னானாலும் எனக்கு உடனே கால் பண்ணிரு….” என்று கவலையுடன் சொல்ல,
“நான் பார்த்துக்கறேன்டி. ஒன்னும் ஆகாது. சாதாரண மயக்கம் தானே? இன்னைக்கு ஒரு நாள் இருக்க சொன்னதுக்காக எல்லாம் பயப்படாத. கிளம்புடா…”
“இன்னைக்கு லீவ் கூட போட்டுக்கலாம்மா. பிரச்சனை இல்லைன்னு சொன்னா கேட்கமாட்டேங்கற…” என்று இதயா மீண்டும் மஞ்சுவிடம் சொல்ல,
“ஒன்னும் வேண்டாம். சும்மா சும்மா லீவ் போடவா படிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்ச? அப்போ பேசாம வீட்டுல இரு. முடியலைன்னா நானே சொல்ல போறேன். நீ என்னன்னா இப்படி பண்ணிட்டு இருக்க?…” என மஞ்சு அதட்டவும் இதயா அமைதியாகிவிட்டாள்.
“முன்ன எப்படியோடி. ஆனா இப்போ உனக்கு இந்த வேலை அவசியம். புரிஞ்சுக்கோம்மா…” என்று கெஞ்சி, கொஞ்சி மகளை அனுப்பி வைத்தார் அவர்.
‘உனக்கு தான்ம்மா புரியலை. அங்க போகவே பிடிக்கலைன்னு தான நான் தயங்கிட்டு இருக்கேன்.’ என நினைத்தவள் அந்த அறையை விட்டு வெளியேறி வர,
“என்ன பூவி கிளம்பிட்டியா?…” என்று வந்தாள் பழக்கமான செவிலி பெண்.
“நல்லவேளை உங்களை தான் பார்க்கனும்னு வந்தேன். ரேகாக்கா அம்மா மட்டும் தான் தனியா இருக்காங்க. கொஞ்சம் பார்த்துக்கோங்க. நான் ஆபீஸ் முடியவும் கிளம்பி வந்துருவேன்…” என்று இதயா சொல்ல,
“இதை நீ சொல்லனுமா? இன்னைக்கு டே ட்யூட்டி தானே? நீ வர வரைக்கும் கண்டிப்பா இருக்கேன்…” என்று அவளின் கையை பிடித்தவள்,
“சாப்பாடு வாங்கி…”
“அதெல்லாம் சாப்பிட வச்சுட்டேன் க்கா. ரொம்ப தேங்க்ஸ். நான் கிளம்பறேன்…” என இன்னும் இரண்டு, மூன்று நன்றிகளை தெரிவித்துவிட்டு வெளியே வந்து அலுவலகம் செல்வதற்கு பஸ் பிடித்தாள்.
எப்போதும் செக்கப்பிற்கு வரும் மருத்துவமனை என்பதால் சிலர் நல்ல பழக்கமும் கூட. அதனால் நம்பி கிளம்ப முடிந்தது.
காலை கிளம்பும் பொழுது கூட இப்படி நேரும் என்று அவள் நினைக்கவில்லை. இன்று அவனின் வருகையையும், சந்திப்பையும் பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தவள் வாசலை தாண்டும் பொழுது கேட்ட மஞ்சுவின் குரலில் மீண்டும் வீட்டிற்குள் ஓடி வந்தாள்.
“என்னம்மா ஆச்சு?…” என கேட்க,
“அப்பாவுக்கு மூச்சு இரைக்குது பூவி. என்னன்னு தெரியலையே. நைட்டே ரொம்ப குளிருதுன்னு சொன்னாரு…” என்று பதறியபடி அய்யாசாமியின் நெஞ்சில் தைலத்தை நன்றாக சூடுபறக்க தேய்த்துவிட்டார்.
“ம்மா, குடிக்க சுடு தண்ணி கொண்டா…” என்றவள் உடனே தெரிந்த ஆட்டோவிற்கு சொல்லி தந்தை தாயுடன் கிளம்பிவிட்டாள் மருத்துவமனைக்கு.
ஏற்கனவே நுரையீரல் கோளாறு அவருக்கு. முதல்நாள் இரவு பெய்த பனியில் நின்றிருக்க சுத்தமாய் சேராமல் போனது.
மருத்துவமனை வரும் பொழுதே மயங்கியும் போக மஞ்சு பயந்து போனார். உடனே மகன் நவீனுக்கும், அண்ணன் சுதாகரனுக்கும் அழைக்க போக,
“ம்மா, என்னன்னு பார்த்துட்டு டாக்டர் சொல்லுவாங்க. அதுக்குள்ளே அவங்களை ஏன் பயம்காட்ட பார்க்கற…” என்று தாயை திட்டியவள் டாக்டர் வந்து சொல்லும் வரை ஒரு நிம்மதி இல்லை.
உடனே அலுவலகத்திற்கு அழைத்து அங்கே பர்சனல் செக்ரட்ரியான அகிலனுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி பர்மிஷனை கேட்டுவிட்டாள்.
சிலமணிதுளிகளுக்கு பின்னால் வந்த டாக்டர் ஒன்றும் பயப்படும்படி இல்லை என சொல்லி ஒரு நாள் அப்சர்வேஷனில் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிடவும் தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
அதன் பின்னர் தானே நவீனுக்கு மட்டும் அழைத்து சொல்ல அவன் உடனே கிளம்பி வரவா என்று நின்றான்.
“ஒன்னும் வேணாம்டா, அதான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன்ல. நீ அங்கே வேலையை பாரு. இப்போ தான் ஜாயின் பண்ணிருக்க. லீவ் போடாத…” என்று சொல்லியவள்,
“மாமாவுக்கு சாயந்தரம் நானே சொல்லிடறேன். நீ உளறிட்டு இருக்காத. இல்லன்னா உடனே கிளம்பி திருச்சிக்கு வந்து நிப்பாங்க…” என்று அவள் சொல்லவும்,
“ஓகே, ஆனா பார்த்துக்கோ. நான் இந்த வீக்கென்ட் வந்தே தீருவேன். நோ சொல்லாதக்கா…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டான். அதன் பின்னர் தான் அலுவலகம் கிளம்பி வந்தது.
போனை எடுத்து பார்க்க மிருணா, நளினி இருவருமே அழைத்திருந்தனர் அவளுக்கு.
வந்துகொண்டிருப்பதாக ஒரு மெசேஜை போட்டுவிட்டு ஜன்னலில் சாய்ந்துகொண்டாள் பூவிதயா. மனதில் இனம்புரியாத ஒரு உணர்வு அவளை வதைக்க கண்களை மூடி தன்னை சமன் செய்துகொண்டாள்.
வழக்கம் போல தன்னுடைய கவனத்தை முயன்று திசை திருப்பிவிட்டாள். சென்றதும் என்ன செய்யவேண்டும் என்று வகுத்துக்கொண்டவள் தன்னுடைய ஸ்டாப்பிங்கில் இறங்கி அலுவலகத்தினுள் நடந்து சென்றாள்.
“என்னம்மா இப்படி பண்ணிட்ட? அதுவும் இன்னைக்குன்னு போய்…” என்று அவளை எதிர்கொண்ட அகிலன் கேட்க உள்ளுக்குள் எரிச்சல் ஆனாலும்,
“என்ன சார் செய்ய? எங்கப்பாவுக்கு முடியலைன்னா நான் தானே பார்க்கனும். நானும் இதை நினைக்கலை…” என்று பல்லை கடித்துகொண்டு பதில் பேசினாள் தன்மையுடன்.
அகிலன் எப்போதும் யார் என்ன குற்றம் செய்வார்கள் என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு சுற்றுபவர்.
யாராவது ஏதாவது தவறுதலாக செய்துவிட்டால் அதையே பெரிதுபடுத்தி எச்சரிப்பதை போல பேசி எதிராளியை வாய் திறக்கவிடாமல் செய்வதில் அவருக்கு ஒரு சந்தோஷம்.
“சரி சரி, முதல்ல போய் அய்யாட்ட மன்னிப்பு கேட்டுட்டு உன் சீட்டுக்கு போ…” என்று அவர் சொல்லவும் சுர்ரென்று ஆனது இதயாவுக்கு.
“அய்யாவா? உங்கப்பாவா ஸார்? அவர்கிட்ட நான் எதுக்கு மன்னிப்பு கேட்கனும்?…” என்று ஒன்றும் அறியாததை போல அவள் வேண்டுமென்றே பேச,
“எம்மா, ஐயான்னா புதுசா வந்திருக்கற கலெக்ட்டரை சொன்னேன். நீ என்ன எங்கப்பா வரைக்கும் இழுக்குற? ஒன்னும் தெரியாத பச்சை மண்ணா இருக்கியே? நல்ல பொண்ணு போ…” என்றவர்,
“போய் ஒரு மன்னிப்ப கேட்டுட்டா என்ன ஆகிட போகுது? போம்மா, உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…” என்றவர்,
“அப்பறம் ரெண்டு மணிநேரம் பர்மிஷன் கேட்ட. ஆனா அரைநாள் ஆகி போச்சு. இது உனக்கு லீவ்ல சேர்ந்திரும்…” என்றும் அவளுக்கு சொல்ல,
“இதுவும் உங்க வேலையா ஸார்? இந்த ஆபீஸ்க்காக இவ்வளவு உழைக்கறீங்க நீங்க…” என்று பரிகாசம் செய்ய,
“என்ன செய்ய? ஒருத்தரும் சரியில்லன்னா நாம பார்த்து தான ஆகனும்…” என்றார் ஏதோ பெருமை போல.
“அப்போ உங்க வேலையை யார் ஸார் பார்ப்பா? போங்க போங்க. உங்களை தேட போறார் உங்க அய்யா…” என்றவள் ஒரு நக்கல் சிரிப்புடன் உள்ளே சென்றுவிட,
“இந்த பொண்ணு கேலி பண்ணுதோ?…” என்று தன் கண்ணாடியை ஏற்றி இறக்கி பார்த்து சொல்லியபடி வேகமாய் கண்ணபிரான் அறைக்கு சென்றார்.
“உங்ககிட்ட நான் கேட்ட பைல் என்னாச்சு அகிலன்?…” என்று அவர் வந்ததுமே கண்ணன் கேட்க,
“அதை எடுக்க தான் ஸார் போனேன். நம்ம ஆபீஸ்ல வேலை பார்க்கற பொண்ணு அரைநாள் லீவ் சொல்லிருந்ததுல. அது இப்போ தான் வந்துச்சு. அதான் வார்ன் பண்ணி அனுப்பி வச்சேன்….” என்று சொல்ல,
“நீங்க? வார்ன் பண்ணுனிங்களா?…” என்றான் புருவம் உயர்த்தியபடி அவரிடம்.
“ஆமா ஸார். கொஞ்சம் பயந்த சுபாவம். அப்பாவுக்கு முடியலன்னு தான் லீவ் போட்டுச்சு. நான் கூப்பிட்டு கண்டிச்சு சொல்லிட்டேன்…” என்று சொல்ல,
“ஓஹ், எந்த டிபார்ட்மென்ட்?…” என்றவன்,
“நீங்க போய் நான் கேட்ட பைல் எடுத்துட்டு வாங்க. அப்படியே அவங்களை வர சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டு தன் முன்னால் இருந்த கோப்பில் கவனம் பதிக்க அகிலன் வெளியே வந்துவிட்டார்.
“எம்மா பூவி, உன்னைத்தான் முதல்ல போய் பேசுன்னு சொன்னேன்ல…” என நேராக இதயாவிடம் வந்து நிற்க,
“ஸார், லெட்ஜார்ல சைன் பண்ணிட்டு என்னோட பேக்கை என் சீட்ல வைக்க வந்தேன். அதுக்குள்ளே அவசரப்படறீங்களே?…” என்று இதயா சொல்ல,
“சரியா போச்சு. இப்ப அவரே உன்னை கூப்பிடறார். நீ போய் பேசு. நான் அவர் கேட்ட பைல் எடுத்துட்டு வரேன்…” என சொல்லிவிட்டு நகர இதை எதிர்பார்த்து தான் இருந்தாள் அவள்.
“என்ன பூவி, வந்ததும் டோஸா? பார்த்தா திட்டுறவர் மாதிரி தெரியலை. ஆனாலும் கோவக்காரர்ன்னு எல்லாம் பேசிக்கறாங்க…” என்று மிருணா சொல்ல,
“நீ வேற ஏன் அவளை பயம் காட்டுறது மாதிரியே பேசற? எல்லாரும் இன்ட்ரோ ஆகிட்டோம். ஒருவேளை அதை பேச கூட கூப்பிடலாமே?…” என்று நளினி சொல்ல,
“ஆமால, அப்படித்தான். ஓகே இருக்கட்டும். நீ போய்ட்டு வா. அப்பறம் அவர் என்னோட க்ரஷா பிக்ஸ் பண்ணிட்டேன்…” என்று சொல்ல இதயா முறைக்க,
“என்னடி முறைக்கிற? அவர் ஸ்டேட்டஸ் சிங்கிள் தெரியுமா? அப்போ யார் வேணா ரசிக்கலாம்…” என்று சொல்லவும்,
“தாராளமா ரசிச்சுக்கோ. யார் வேண்டாம்ன்னா? திடீர்ன்னு வந்து ஒரு நாள் கூட ஆகலை. அதுக்குள்ளே சொல்லிட்டியேன்னு தான் ஷாக் ஆகிட்டேன். இருந்தாலும் சொல்றேன், வெளி தோற்றத்தை வச்சு யாரையும் நம்பிட கூடாது…” என்று சொல்ல,
“திடீர்ன்னு தத்துவம்லாம் சொல்ற. வயசு பொண்ணு மாதிரி பேசு பூவி…” என்ற மிருணா மேலும் பேசும் முன்,
“ஏம்மா நீ இன்னுமா போகலை. என்னம்மா நீ?….” என்று வந்துவிட்டார் அகிலன்.
“மூக்கு வேர்த்திரும் மிஸ்டர் சிசிக்கு…” என்று மிருணா திட்ட,
“ப்ச், வந்து கமென்ட் பண்ணிக்கலாம். அவ போகட்டும்…” என்று இதயாவை அனுப்பிவிட்டு தன்னிருக்கைக்கு சென்றமர்ந்தாள் நளினி.
கண்ணபிரான் ஐ.ஏ.எஸ் என்று கொட்டை எழுத்தில் போர்ட் மாட்டி இருந்த அறையை தன் விரலால் மெல்ல தட்ட,
“எஸ் கமின்…” என்ற அவனின் குரலில் ஒரு நொடி உள்ளங்கால் ஜில்லிட்டு போனது.
ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவள் தன்னை சமன்செய்துகொண்டு கதவை திறந்து உள்ளே செல்ல கையில் இருந்த கோப்பில் இருந்து கத்தி என பார்வையை அவள்மேல் செலுத்தினான் நொடிப்பொழுதில்.
அதுவரை இருந்த படபடப்பு, பதட்டம் எல்லாம் அவனின் அந்த பார்வையில் பொடிப்பொடியாக இப்போது பூவிதயாவாக அவனை தெளிவாய் நிமிர்வாய் பார்த்தாள்.
“எஸ்…” என்று கோப்பை கீழே வைத்தவன் அந்த இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டு அவளிடம் கேட்க,
“வர சொன்னேங்கன்னு அகிலன் ஸார் சொன்னார்…” என்றாள் இதயா.
நீயே சொல் என்பதை போலான அவளின் அந்த செயலில் உள்ளுக்குள் வெகுண்டாலும் இருக்கும் இருப்பும் பதவியும் அவனை நிதானப்படுத்தியது.