“ஒரு ஆபீசர் ஜாயின் பண்ண வரும் போது அந்த ஆபீஸ் ஸ்டாப்ஸ் எல்லாம் அன்னைக்கு இருக்கனும்ன்றது தானே ரூல்ஸ்…”
“எஸ் ஸார். பட் சுட்சுவேஷன் அந்த மாதிரி…” என்றவள் மறந்தும் என்னவென்று வாய் திறக்கவில்லை.
அதில் இன்னும் கோபம் தான் அவனுக்கு கூடியது. ‘இதுதான் காரணம், அதான் வரமுடியலைன்னு சொல்றாளா இவ? சரியான அடமென்ட்’ என்று உள்ளுக்குள் பொரிந்தவன்,
“என்னவாவும் இருக்கட்டும். இங்க உங்க வேலையை நீங்க தான் செய்யனும் மிசஸ்.பூவிதயா. ரைட்…”
“தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க ஸார். மிஸ். பூவிதயா அய்யாசாமி…” என்று அவனை திருத்த,
“ஈஸ் இட்…” என்று இதழ்கள் நெளிய அவளை பார்த்து லேசாய் சிரிக்க,
“நான் போகலாமா ஸார்…” என்றாள் அவள்.
“நான் அப்படி சொல்லவே இல்லையே. இன்னைக்கு எல்லாரும் என்னென்ன டிபார்ட்மென்ட், என்ன வொர்க் ஹேண்டில் பன்றாங்க, அவங்களோட மெயின்டனஸ் என்னன்னு தெரிஞ்சது. நீங்க இன்னும் சொல்லலை. லீவ் போட்டதுக்கு இன்னும் ஒரு அப்பாலஜிஸ் இல்லை…” என்று கேட்க இதயாவும் தனது பணிகளை சொல்லியவள்,
“லீவ் போட்டதுக்கு அப்பாலஜி எதுக்குனு புரியலை ஸார். ஈவன் நான் அதிகமா லீவ் எடுக்கறதும் இல்லை. இன்னைக்கு என்னோட சூழ்நிலை…” என்று சொல்ல,
“உங்க வீடு வேலையை செய்யவா இங்க சம்பளம் வாங்கறீங்க? இந்த மாதிரி இர்ரெஸ்பான்ஸிபிள் பெர்சனா இருந்தா வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுலையே இருந்து பார்த்துக்க வேண்டியது தானே?…”
முகத்தில் எந்த கோபத்தையும் காட்டாமல் அத்தனை அமர்த்தலாக அவன் கேட்க அவளுக்கும் தெரிந்தது வேண்டுமென்றே சீண்டுகிறான் என்று.
அதுவரை அதிகாரி என்னும் பட்சத்தில் அவனிடம் தன்மையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தவளுக்கு கோபம் மூள,
“என்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டி என்னன்னு எனக்கும் நல்லாவே தெரியும் ஸார். நீங்க இன்னைக்கு தான இங்க வந்திருக்கீங்க. அதே மாதிரி இந்த வேலையில இருக்கனுமா? வேண்டாமானும் நான் முடிவு பண்ணிக்கிறேன். நீங்க சொல்றதுக்கு எல்லாம் நான் ரிசைன் பண்ண முடியாது…”
“ஓஹ், நானே உங்களை…”
“உங்களால முடியாது ஸார். முடிஞ்சா இதுக்கு எனக்கு வார்னிங் குடுக்கலாம். மெமோ கூட. ஆனா இது எல்லாம் ஒரு சீப் மெண்டாலிட்டியை தான் காண்பிக்கும். அதை நீங்க செய்யமாட்டீங்க தானே?…”
இப்போது இதயாவின் குரலில் நக்கல் தொனி அப்பட்டமாய் தெரிய கண்ணனும் முறைத்து பார்த்தான்.
“என்னோட லைஃப்ல எந்த முடிவா இருந்தாலும் நான் தான் ஸார் எடுப்பேன். ஒரு விஷயத்தை வேணும்னாலும், வேண்டாம்னாலும். அது என்னோட சாய்ஸா தான் இருக்கும். அதுக்கு நான் கலெக்ட்டரா இருக்கனும்னு அவசியமில்லை. ஒரு சுயசிந்தனை உள்ள பொண்ணா இருந்தாலே போதும்…”
“இதயா…”
“பூவிதயா. நமக்குள்ள இருக்கறது வெறும் அபிஷியல் ரிலேஷன்ஷிப் மட்டும் தான்…” என்றவள் முகமும் கடுமையாகி போனது.
“இப்போ நான் போகலாமா?…” என்று சொல்ல,
“எப்பவும் தான நினைக்கிறது மட்டுமே சரின்னு நினைச்சா வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படவேண்டி இருக்கும்…” என்ற கண்ணனிடம்,
“இதை தான் இங்க இருக்கற எல்லாருக்கும் சொல்வீங்களா நீங்க?…”
“இப்படித்தான் இங்க எந்த ஆபீசர் வந்திருந்தாலும் பேசுவியா நீ?…”
“அது அவங்க நடந்துக்கறதை பொறுத்து தான் ஸார். என்னோட செல்ப் ரெஸ்பெக்ட்ட எந்த இடத்துலையும் நான் விட்டு குடுக்கமாட்டேன்…” என்றவள் ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட கண்ணன் தலையை பிடித்துக்கொண்டான்.
“இதயா இதயா உன்னை…” என்று பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது அவனால்.
அதன் பின்பும் மீண்டும் இரண்டு முறை இதயாவை வேலை சம்பந்தமாக வரவழைத்தான் அவன்.
வந்தவன் விழிகள் அவளின்பால் மீனாய் நீந்தி செல்ல அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் காரியமே கண்ணாக வந்த வேலையை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.
அவள் அளவில் அவள் சரியாய் நின்றுகொள்ள கண்ணனுக்கு கட்டுக்கடங்காத கோபமும், அவளை ஒன்றும் பேச முடியாத ஆற்றாமையும் பொங்கியது.
மாலை கிளம்பும் வரை கண்ணனுக்கும் வேலைகள் குவிந்து போயிருக்க முதலில் எதை பார்ப்பதென பட்டியலிடவே நேரம் சரியாக இருந்தது.
மாலை ஆனதும் அனைவருமே கிளம்பி செல்ல நளினி முன்னவே கிளம்பி இருக்க மிருணா காத்திருந்தாள் இதயாவிற்காக.
“நீ கிளம்பு மிருணா. நான் போய்ப்பேன்….” என்று சொல்ல,
“என்ன போய்ப்பேன்? நான் உன்னை ஹாஸ்பிட்டல்ல ட்ராப் பண்ணிட்டு அப்படியே அப்பாவையும் பார்த்துட்டு போறேன். அதான் வெய்ட் பண்றேன்…” என்று சொல்ல,
“உனக்கு நேரமாகிடாதா?…” என்றாள் யோசனையுடன்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது. வா வா…” என்று அவளை இழுத்துக்கொண்டே சென்றுவிட்டாள் அவள்.
சொல்லியது போல நேராக ஹாஸ்பிட்டல் வந்தவள் அங்கே அரைமணி நேரம் இருந்து மஞ்சுவிடம் பேசிவிட்டு தான் கிளம்பியே சென்றாள்.
“நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணனும். திரும்ப பர்மிஷன் போட முடியாதே?…” என்று அவளை வழியனுப்ப வந்த இதயா சொல்ல,
“டிஸ்சார்ஜ் காலையில தான் பண்ணனுமா என்ன? ஈவ்னிங் வந்து பண்ணிடு…”
“ஓஒஹ், ஓகே அம்மாக்கிட்ட கேட்கறேன். என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்…” என்றதும்,
“சரி நாளைக்கு எப்போன்னு எனக்கு நைட் போன்ல சொல்லு. பை டா…” என்று சொல்லி அவள் கிளம்பிவிட மீண்டும் உள்ளே வந்தாள் இதயா.
“என்னம்மா இன்னைக்கு லேட்டா போனதுக்கு ஆபீஸ்ல ஒன்னும் சொல்லலையா?…” என மஞ்சு கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் சொல்லலைம்மா. விஷயத்த சொன்னேன். சரின்னு சொல்லிட்டாங்க…” என்றவள்,
“சரிம்மா, நான் வீட்டுக்கு போய் சாப்பிட டிபன் செஞ்சு எடுத்துட்டு வரேன். உனக்கு சேரி வேணுமா?…” என்று கேட்டு என்னென்ன வேண்டும் என்று கேட்டு கிளம்பிவிட்டாள்.
வீடு வந்ததுமே குளித்துவிட்டு சுடிதாருக்கு மாற்றியவள் இட்லி ஊற்றி சாம்பார் வைத்து, மஞ்சுவிற்கும் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் மருத்துவமனைக்கு.
அப்போது தான் வேலை முடித்து கிளம்பிய ரேகாவை பார்த்துவிட்டவள் அவளிடம் சென்றாள்.
“என்ன ரேகாக்கா, இப்போ தான் கிளம்பறீங்க?..” என்று பிடித்துக்கொள்ள,
“அவசர கேஸ். அதான் இருக்கவேண்டியதா போச்சு…” என்று சொல்லியவள்,
“அப்பாவை பார்த்துக்கோ. எப்பவும் வெதுவெதுப்பான வெந்நீரே குடு பூவி. இதோட ரெண்டாவது தடவை இப்படி ஆகியிருக்குது. கவனாமா இருக்கனும். நீ தைரியமான பொண்ணு. அதான் உன்கிட்ட நேராவே சொல்றேன்….”
“புரியுது ரேகாக்கா. தேங்க்ஸ்…” என்று அவளின் கையை பிடித்துக்கொண்டவள்,
“சரி இப்பவே நேரமாகிருச்சு. நீங்க கிளம்புங்க. நான் வேற டிஸ்டர்ப் செஞ்சிட்டு இருக்கேன்…” என்று சொல்லி அனுப்பிவிட்டு மேலே முதல் தளத்தில் தந்தையை அனுமதிக்கப்பட்டிருக்கும் அறைக்கு செல்ல அங்கே அமர்ந்திருந்தவனை விழிகள் தெறிக்க கோபத்துடன் பார்த்தாள்.
“பூவிம்மா…” என்று மஞ்சு மகளை பார்த்ததும் கதவருகே நின்றவளை கை பிடித்து உள்ளே அழைத்து வர,
“இவருக்கு இங்க என்ன வேலைம்மா?…” என்றாள் வெடுக்கென்று.
“பூவி…” என்று நைந்த குரலில் அய்யாசாமி அழைக்க,
“ப்பா…” என்று அவரின் அருகே சென்றவள்,
“ம்மா போக சொல்லு. இங்க வச்சு தேவை இல்லாம எதாச்சும் பேசி இருக்கற சூழ்நிலையை இன்னும் கஷ்டமாக்காம போக சொல்லு….” என்றாள் முகம் திருப்பியபடி.
“அம்மா சொல்றதை கொஞ்சம் கேளும்மா. அப்பாவை பார்க்கனும்னு வந்திருக்கார்…” என்று மஞ்சு இறைஞ்சுதலாக சொல்ல,
“ஓஹ், அப்போ பார்த்து பேசிட்டு போகட்டும் . அதுவரைக்கும் நான் வெளில வெய்ட் பன்றேன்…” என்று சொல்லிவிட்டு பட்டென்று அவள் வெளியேறிவிட,
“தப்பா எடுத்துக்காதீங்க தம்பி. அவ இன்னும்…”
“புரியுது அத்தை. அதை நான் பெருசா எடுக்கலை. நீங்க அதை எல்லாம் நினைக்காதீங்க. நான் கிளம்பறேன்…” என்று கண்ணன் சொல்ல,
“இருங்க தம்பி, ஒன்னும் சாப்பிடாம போவீங்களா? எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கீங்க?…” என்ற அய்யாசாமி,
“மஞ்சு பூவி என்ன கொண்டு வந்திருக்கா பாரு…” என்றதும் மஞ்சு தன் மகள் கொண்டு வந்ததில் இருந்தவற்றை பார்த்தார்.
உடைகள் தவித்து ஒரு பிளாஸ்க்கில் வெந்நீரும், இன்னொன்றில் டீயும் இருக்க, போக உணவு இருந்தது மூவருக்கும்.
“டிபனும், டீயும் இருக்குங்க…” என்ற மஞ்சு,
“தம்பி சாப்பிடறீங்கள?…” என்றதும் கையில் இருந்த வாட்சை பார்த்தவன்,
“இல்லை அத்தை, பசி இல்லை. லேட் ஆகும். டீ குடுங்க. குடிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு அய்யாசாமியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.
நிதானமாகவே எந்த அவசரமும் இன்றி பேசி முடித்தவன் அவர்களின் எதிர்பார்ப்பான பார்வைக்கு மட்டும் எந்த பதிலும் தரவில்லை.
தனக்கே விடை தெரியாத ஒன்றிற்கு தான் எப்படி பதில் கொடுக்க முடியும் என்று நினைத்துக்கொண்டவன் அந்த டீயை குடித்துவிட்டு மெதுவாக கிளம்பினான்.
வெளியே போடப்பட்டிருக்கும் இருக்கையில் இருப்பாள் அவள் என்று அவன் நினைக்க அவளோ கீழே ஹாஸ்பிட்டல் நடுவே இருக்கும் பூங்காவில் அமர்ந்திருந்தாள்.
வேண்டியே அவளை தேடிக்கொண்டு சென்றவன் அவளின் முன்னே நிற்க அவனை அங்கே எதிர்பாராதவள் எழுந்து நின்றாள்.
“இன்னும் எவ்வளவு நாள் இப்படி ஓடி ஒளிஞ்சிட்டு இருப்ப இதயா?…”
“என்ன? நான் ஓடி ஒளிஞ்சேனா? மனசாட்சி இருக்கா உங்களுக்கு?…” என்றாள் எதிர்த்து.
“ப்ச், லீவ் இட். எல்லாம் போகட்டும். ஏன் மாமாவுக்கு முடியலைன்னு என்கிட்டே சொல்லலை நீ? அவ்வளோ ஈகோ, ஹ்ம்ம்…”
“உங்களுக்கு ஏன் சொல்லனும்?…”
“ஏன்னு உனக்கு தெரியாதா?…”
“மறந்து போச்சு…”
“இப்பவும் நான்…” என்றவனின் பேச்சை இடைமறித்தவள்,
“இந்த அவிலாஞ்சி, ஆலமரம், நிலா கதை எல்லாம் என்கிட்டே வேண்டாம். இதோட ஸ்டாப் பண்ணிக்கோங்க. எத்தனை வருஷத்துக்கு இப்படி தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிட்டு…” என்றவள்,
“நான் ஆபீஸ்ல வச்சு சொன்னது தான். என் வீட்டாளுங்களை பார்க்க வரது இதுவே கடைசியா இருக்கட்டும். அவ்வளோ தான்…” என்றவள் அங்கிருந்து செல்லும் போது,
“கலெக்ட்டராம், ஒரு கிளீன் ஷேவ் பண்ணிட்டு வர தெரியலை. இவர் ஊரை திருத்த கிளம்பிட்டார்…” என்று முணுமுணுத்துக்கொண்டே செல்ல அந்த சத்தமற்ற பகுதியில் அவள் சொல்லியது காதில் விழத்தான் செய்தது.
தன்னைப்போல விரல்கள் தாடையை தடவிக்கொண்டது. எப்போதும் கிளீன் ஷேவில் இருப்பவன் அன்று செய்யவும் தோன்றவில்லை.
இரண்டு நாட்கள் ஷேவ் செய்யாமல் விட்டதனால் குட்டிகுட்டி முடிகள் பூத்திருக்க அதுவும் அவனின் முகத்திற்கு அத்தனை அழகாய் இருந்தது.
அவள் செல்வதையே அமைதியாக பார்த்தபடி நின்றவனின் மொபைல் சிணுங்க எடுத்து பார்த்தால் அக்கா உத்ரா.
“சொல்லுங்கக்கா…” என்று அவன் பேசவும்,
“அங்க போனதுல இருந்து போன் பண்ணனும்னு தோணலையா உனக்கு? அம்மா அப்ப இருந்து நிஷாட்ட நச்சரிச்சுட்டு இருக்காங்க போன் வந்துச்சா இல்லையான்னு. நீ என்னன்னா செவனேன்னு இருக்க?…” என்று சொல்லியவள்,
“ஆமா அந்த சித்திராங்கி அங்க தான் இருக்காளாமே?…” என்றதும்,
“இப்போ உங்களுக்கு என்ன வேணும்? நான் இங்க வந்து ஜாயின் பண்ணிட்டேன். போதுமா?…” என்று மெல்லிய குரலில் சீற,
“என்ன போதுமா? கூட வந்து இருக்கேன்னு சொல்லுறவங்கள வேணாம்னு சொல்லிட்டு ஒத்தையில அங்க இருப்பியா நீ? இதுக்குத்தான் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணத்த…” என்றதுமே,
“நான் வைக்கறேன். இனிமே எனக்கு கால் செய்யாத…” என்று சொல்லி வைத்துவிட்டான் கண்ணன்.
பார்வை மீண்டும் இதயா சென்ற திக்கில் திரும்ப ஒரு பெருமூச்சுடன் கொதிக்கும் மனதுடன் அங்கிருந்து கிளம்பி அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் கண்ணன்.
பெயருக்கு உண்டுவிட்டு உறக்கமில்லாமல் படுத்தவனுக்கும், அவனின் நினைவுகளோடு இன்றும் போராடிக்கொண்டிருப்பவளுக்கும் நினைவுகளின் ஸ்பரிசங்கள் மட்டுமே துணை நின்றது.
அவனின் இரவுகளில் அவளின் விழிகளில் விரியும் கனவுகள் எல்லாம் மயக்கங்கள் துறந்து, ஆசைகள் கலைந்து, சிறகின்றி தவிக்கிறது.
நிஜத்தை அடையமுடியாமல் நிழலிலும் கூட அந்த ஏக்கங்கள் நீர்த்து போய்க்கொண்டிருந்தது.