ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 10
தூரத்தில் இதயா வந்துகொண்டிருப்பது தெரிந்தது. தனியாய் ஒரு பெண்ணிற்காக இப்படி காத்திருப்பது அத்தனை சுகமாய் இருந்தது. அதை ஆசையுடன் உணர வைத்தாள் அவள்.
பார்த்த முதல் நாள் தொட்டு, பெண் பார்க்கும் வைபவம், அடுத்து நிச்சயம் என்று ஒவ்வொரு நாளும் புதிதாய் இருந்தது கண்ணனுக்கு.
முதலில் தயக்கத்துடன் அவளிடத்தில் அலைபேசி என்னை வாங்கிக்கொண்டவனுக்கு அந்த தயக்கத்தையே மறக்க செய்யும் விதமாய் அவளின் பேச்சுக்கள் கவர்ந்துகொண்டன.
நித்தமும் அவளின் அழைப்புகள் இன்றி அந்த நாள் முடியாது அவனுக்கு. இதயா அழைக்க வேண்டும் என்று இல்லாமல் தானே சில நேரங்களில் அழைத்து அவளிடம் பேசிக்கொண்டு இருப்பான்.
படிப்பு, வேலை, சமூக புத்தகங்கள், அரசியல் அது சார்ந்த துறைகள் பற்றிய பேச்சுக்களாக இருந்தாலும் அவனிடத்தில் அவள் அதனை சற்றும் சுணக்கமின்றி கேட்டுக்கொள்வாள்.
அதே நேரத்தில் அவனின் ஒவ்வோர் ரசனைகள், அவனின் பிடித்தங்கள் எல்லாமே இதயாவிற்கு அத்துபடி.
பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் அதையும் தாண்டிய நேசம் அவர்களிடத்தில் வேரூன்றி இருந்தது.
காதலிப்பது ஒரு சுகமென்றால் பிடித்த பெண்ணிடத்தில் காதலிக்கப்படுவது அபார சந்தோஷம் அல்லவா? அதை விரும்பியே அனுபவித்துக்கொண்டு இருந்தான் கண்ணபிரான்.
இதயாவின் ஒவ்வொரு பேச்சிலும் அவன் மீதான அன்பு எப்போதும் அவனை பிரமிக்க வைக்கும். இப்போது அதற்கு பழகி அதில் திளைத்து அதை விட்டு வெளிவரமுடியாத அளவிற்கு முழுமையாய் அவளின்பால் சாய்ந்திருந்தான்.
அவனுக்கு மட்டுமேயான பிரத்யோக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், போட்டோஸ் என்று அவனை பழக்கி இருந்தாள்.
“இதை எல்லாம் வைக்கிற? வீட்டுல பார்த்தா உனக்கு உதை தான்…” என்று முதல் முறை அவன் திகைக்க,
“இது உங்களுக்கு மட்டும் தான் விசிபிள் ஆகும் ஆபீசர். அதனால பயப்படாதீங்க…” என்று கண்சிமிட்டுவாள் வீடியோ காலில்.
ஒவ்வொரு நாளும் அவனின் உடை என்ன? எதை அணிகிறான்? என்று கேட்டு தெரிந்துகொண்டு அதன் போட்டோவையும் வாங்கிக்கொள்வாள்.
முதலில் சிறுபிள்ளைத்தனம் என்று நினைத்தவன் பின் அதற்கு விரும்பியே அடிமையாகி தானாகவே அதை செய்ய ஆரம்பித்தான்.
இதோ இன்றுவரை நேரில் தனியே பார்க்க வேண்டும் என்று இதயாவே என்றும் நினைத்ததில்லை. பேசுவதே போதும் என்றிருக்க கண்ணனுக்கோ பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இன்று வரவழைத்துவிட்டான்.
இது அவளிடம் அவனின் முதல் அழைப்பு. இவனுக்கு இவள் தான் என்று ஊரறிய பேசி முடித்து தாம்பூலம் மாற்றி நிச்சயத்தின் பின்னர் அவன் முதன் முதலாக அவளை தனியே சந்திக்க அழைத்திருந்தான்.
தூரத்தில் வரும் பொழுதே பார்த்துவிட்டான் பூவிதயாவை. வந்தவளும் பூவே தான். அப்படி ஒரு மலர்ந்த சிரிப்பும், சந்தோஷமும்.
பார்க்கும் பொழுதே மற்றவர்களை தொற்றிக்கொள்ளும் ஒரு அசாத்திய புன்னகை அவளிடத்தில் எப்பொழுதுமே இருக்கும்.
இன்றும் அவனுக்கு பார்த்தவுடன் அப்புன்னகை தொற்றிக்கொள்ள மயங்கிய மனதுடன் அவளை அருகாமைக்காக காத்திருந்தான்.
ஒரு மாதத்திற்கு முன்னர் வரை யாரோ? எவளோ? ஆனால் நேரில் பார்த்து பழகி இப்போது அவளின்றி தானில்லை என்னும் ஒரு பிணைப்பு உருவாகி இருந்தது. உருவாக்கியிருந்தாள் இதயா.
இதயா. அவனின் இதயா. அப்படித்தான் சொல்லிக்கொள்வான் மனதிற்குள். விருப்பமின்றி அத்திருமணத்திற்கு தலையாட்டியவன் தான் அவன்.
தனது லட்சியத்தை அடைந்த பின்னர் திருமணம் என்று இருந்தவனின் விருப்பத்தை சிறிதும் மதிக்காமல் அவனின் வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டவள் என்றே அவன் நினைத்திருந்தான் இதயாவை பார்க்கும் வரை.
அதுநாள் வரை ஒரு இறுக்கம். முதல் முறை தோல்வியுறும் பொழுது அத்தனை ஏளனங்கள் வீட்டில்.
‘இது நமக்கு சரியா வருமா?’ என்று தந்தையும், அக்காவும் நம்பிக்கை இன்றி பேசும் பொழுதெல்லாம் அவர்களுக்கு புரிய வைக்க பிடிக்காமல் மௌனமாய் கடந்துவிடுபவன்.
அதை தாண்டி ஒரு ஆட்சியாளனாக இருக்க முதலில் தனது உணர்வுகளை கைப்பிடிக்குள் கொண்டுவர தெரிந்திருக்கவேண்டும் என்று நினைத்திருந்தான். அதை செய்தும் இருந்தான்.
இதயாவை காண்பிக்கும் முன்னர் வரை ஒரு இலகுத்தன்மை இல்லாது ஓரிரு வார்த்தைகள், நீண்ட மௌனம், அரசியல், அரசாங்க கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட புத்தகங்கள். இது தான் அவனின் உலகம்.
இதோ அவனின் உயிரும், உணர்வும் கலந்த அந்த நூதன உணர்வுகளை சங்கமிக்க வைக்கவென என முன்னால் வந்து நின்றாள் இதயா.
“ஹேப்பி பர்த்டே கண்ணன்…” என பெரிய பார்சல் ஒன்றை வந்ததும் அவனிடம் நீட்டினாள் இதயா.
“தேங்க் யூ…” என புன்னகையுடன் வாங்கிக்கொண்டவன் பார்வை அவளை மயிலிறகாய் வருடியது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாய் நடந்து முடிந்திருக்க அன்று தான் அணிவித்த செயின் இதயா கழுத்தில் புரண்டு மின்னிக்கொண்டிருந்தது.
புது பெண்ணிற்கே உண்டான திருமண களை முகத்தில் ஜொலிக்க நின்றவளை நிதானமான ரசனையுடன் அவளை அளவிட்டான்.
“கண்ணன்…” என மெல்ல இதயா அழைத்ததும்,
“ஹ்ம்ம், சிட்…” என்று இருக்கையை காட்டி அமர்ந்தான் அதே பார்வையுடன்.
“முதல்ல கிப்ட் என்னன்னு பாருங்க…” என்றவளின் பேச்சில் தலையை லேசாய் அசைத்துக்கொண்டவன் சிரிப்போடு அங்கிருந்த கல் பெஞ்சில் வைத்து அதை பிரித்து பார்த்தான்.
“புடிச்சிருக்கா?…” என அப்போது இதயா ஆர்வத்துடன் கேட்க,
“இன்னும் முழுசா பிரிக்கவே இல்லையே…” என கண்ணன் சொல்ல,
“ஓகே ஓகே, பாருங்க…” என்று லேசாய் இரண்டு விரலால் நெற்றியில் தட்டிக்கொண்டாள்.
அதை கண்டவன் அந்த கிப்டை பிரிப்பதை தவிர்த்து மீண்டும் இதயாவை பார்த்து மெலிதாய் சிரித்தவன்,
“ஏன் நெவர்ஸா இருக்க? தனியா மீட் பண்ணினது பயமா இருக்கா?…” என்று அந்த பாக்ஸின் மீதே கையை வைத்துக்கொண்டு அவளிடம் கேட்க,
“வெய்ட் வெய்ட் வெய்ட், ப்ரீஸ்…” என்றவள் அந்த போஸில் அவனை அப்படியே தனது மொபைல் கேமராவிக்குள் சுருட்டிக்கொண்டாள்.
“என்ன பன்ற?…” என்றவனின் பேச்சை கணக்கெடுக்காமல் எடுத்த போட்டோவை ரசித்து பார்க்க கண்ணனுக்கு இன்னுமே சிரிப்பு தான்.
“ஓய், உன் முன்னாடி தானே நான் இருக்கேன். இன்னும் அசையாம. என்னை பார்க்கிறதை விட்டுட்டு போட்டோவை பார்த்து சைட்டடிக்க?…” என்று கேட்டவனின் பார்வையை தவிர்த்தவள்,
“ஹ்ம்ம், இல்ல இதுல அழகா இருக்கீங்க. அதான்…” என்று மெல்லிய குரலில் சொல்ல,
“ஓஹ் இதயா…” என்று சற்று சத்தமாகவே சிரித்தான்.
“ப்ச், இதை சொன்னாலே ஏன் இப்படி சிரிக்கறீங்க?…”
“இப்போலாம் கொஞ்சம் நீ வெட்கப்படறன்னு தோணுது இதயா. ஃப்ரன்ட் கேமரா ஆன் பண்ணி நீயே பாரேன்…” என்று அவளை கேலி பேச இன்னும் முகம் சிவந்தது இதயாவிற்கு.
நிச்சயம் வரை கூட இத்தனை வெட்கங்கள் வந்ததில்லை. மேடையில் இருவரும் ஜோடியாக நின்ற தருணம். அதற்கு சொந்தங்கள் மத்தியில் எழுந்த ஆராவாரம் என்று மனதிற்குள் பூக்கள் பூக்க செய்தது.
“பூவி, இப்பவே பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி. இப்போ நீ அவரை உன் சொல்படி ஆட்டி வைக்கலாம்…” என்று சில கேலிக்கார பெண்களும் கண்ணனின் முன்னாலேயே சொல்லியிருக்க அப்படி ஒரு வெட்கம் பொங்கியது.
முன்னை போல அவனிடம் சகஜமாய் பேசினாலும் ஒருவித நாணம் அலையாய் ததும்பியது.
“இதயா…” என அவளின் கையை எடுத்து தனது கரங்களுக்குள் பொத்திக்கொள்ள,
“அச்சோ, விடுங்க…” என்று தனது கையை உருவிக்கொண்டாள்.
“ஈஸி, எதுக்கு இத்தனை படபடப்பு? பார் வேர்த்து போச்சு…” என்று தனது கைக்குட்டையை அவளுக்கு நீட்டினான்.
“அதெல்லாம் இல்லை, ட்ராவல் பண்ணி வந்தது. அதான்….” என அவள் சமாளித்தாள்.
“சரியான ஆளு, வாய் கூசாம பொய் சொல்ற நீ? அடிக்கிற காத்துக்கு வெயில் கூட இல்லை. ஏன் வேர்க்குதாம்?…”
“அச்சோ…” என்று காலை தரையில் உதைத்தவள்,
“நான் கிளம்பட்டுமா?…” என கேட்டு அவனை பார்க்க, உடனே சிரிப்பு மறைந்து பதிலின்றி ஒரு அழுத்தமான பார்வை அவனிடத்தில்.
“இல்ல, வேற என்ன பன்றது? கிளம்பறேனே?…” கொஞ்சம் கெஞ்சலாய்.
“ஓஹ், இன்னைக்கு நீ லீவ்ன்னு நினைச்சேன். ஓகே. கிளம்பு…” என்றவன் பார்வை இப்போது தனது விரல்களில் மையம் கொள்ள இதயாவால் சட்டென்று செல்ல முடியவில்லை.
“சரி போகலை. ஆனா லீவ் தான் போட்டேன் உங்களுக்காக. சும்மா முகத்தை காட்டாதீங்க. ஆனா போகனும் தானே? வீட்டுல கிளம்பும் போதே அம்மா உங்களை பார்க்க வரதை எப்படித்தான் கண்டுபிடிச்சாங்களோ? உங்களுக்கு பர்த்டேன்னு சொல்லியிருந்தான் போல நவீ. பிரசாதம் குடுத்துவிட்டாங்க…”
தனது கை பையில் இருந்த பிரசாதத்தை எடுத்து பிரித்து அவனிடம் நீட்ட வாங்காமல் அவள் பக்கம் நன்றாய் திரும்பி அமர்ந்தவன்,
“வச்சுவிடு…” என்றான்.
“என்ன நானா?…” என இதயா திகைக்க,
“இங்க வேற யாரும் இல்லை தானே?…” என அவ்விடத்தை சுற்றி பார்த்தான். அது ஒரு வாரநாள் என்பதால் கூட்டம் சுத்தமாக இல்லாது இன்னும் ஓரிரண்டுபேர் மட்டுமே தூரத்தில் தெரிந்தனர்.
“இல்லை தான்…” என்று சொல்லி அவள் இழுக்க இதயா கையில் இருந்த பிரசாதத்தை எடுத்து அவளுக்கு வைத்துவிட்டவன்,
“இப்போ எனக்கு வச்சுவிடு. நான் தானே கேட்கறேன்? என்னோட பர்த்டே. நீ விஷ் பண்ணமாட்டியா?…” என்று அவன் கேட்டதும் தயக்கம் துறந்து அவனுக்கு பூசி விட பின் கொஞ்சம் கொஞ்சமாய் பேசி அவளை வெளிக்கொணர்ந்தான்.
“நானே வந்து பிக்கப் பன்றேன்னு சொன்னா கேட்கலை. இப்போ நவீனோட வந்திருக்க? அவனையும் கூப்பிட்டிருந்திருக்கலாம் தானே?…”
“அவன் தான் வரலைன்னு சொல்லிட்டான். அவனுக்கு கோவம் அவன்கிட்ட இங்க வரதை பத்தி நான் சொல்லலைன்னு. எப்படியும் சொல்லியிருப்பேன் தான். சொல்லாம வரமுடியாதுல. ஆனாலும் கோவம் முதல்லையே சொல்லலைன்னு…”
“பின்ன எப்படி கண்டுபிடிச்சான்?…” சுவாரசியமாக கதை கேட்கும் பாவனையில் கண்ணன் பேச அப்படியே அவளின் அருகே கொஞ்சம் நெருங்கி அமர்ந்திருந்தான்.
“உங்களுக்கு கிப்ட் வாங்கிட்டு வந்தப்பவே வீட்டுல பார்த்தாங்க. உங்களுக்குன்னு சொன்னேன். பர்த்டேக்கு கிப்ட்ன்னு…”
“கொண்டையை மறந்திருக்க?…” என்று அவன் சிரிக்க,
“ஹ்ம்ம்ம், ஆமா. லீவ்ன்னு வேற உளறிட்டேன். அப்பா ஒன்னும் சொல்லலை. அம்மா தான் பார்த்துட்டு சீக்கிரம் வான்னு சொல்லி அனுப்பினாங்க…”
“ஓஹ், அதான் நவீன் வந்தானா?…”
“ஹ்ம்ம், வெய்ட் பண்ணுடான்னு சொன்னேன். கேட்கலை. உங்களுக்கு அப்பறமா விஷ் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான். இன்னும் ஒருமணி நேரத்துல வந்திருவான்…”
“அப்போ ஒன் ஹாவ்ர் தான் இங்க இருக்க போற என்னோட? இல்லையா?…” என்று அவன் கேட்கவும்,
“ம்ஹூம், இப்போதைக்கு ஒரு மணி நேரம். இன்னும் நாலு மாசம் கழிச்சு எப்பவும்…” என்று அவள் சொல்லும் பொழுதே பழைய இதயா திரும்பி இருந்தாள்.
“இங்கயே இருந்து பேசிட்டே இருக்க போறோமா ஆபீசர்?…” என அவள் கேலி பேச,
“ஆரம்பிச்சிட்டியா?…” என்றவன் லேசாய் அவளின் தலையில் குட்டியவன்,
“வா, ஒரு ரவுன்ட் போட்டிங் போகலாம்…” என்று அழைத்தான்.
“இது எனக்கு சலிச்சு போச்சு. ஆனாலும் உங்களோட பர்ஸ்ட் டைம் போறதுல கொஞ்சம் எக்சைட்டடா இருக்கு…”
“ம்ஹூம், எனக்கு அப்படி இல்லையே…” என்று சிரித்தவன்,
“இந்த பாக்ஸ், எதுக்கு இத்தனை வாங்கி இருக்க?…” என கேட்டான்.
“அது தெரியலை. வாங்கனும்னு தோணுச்சு. அதான். பிடிச்சிருக்கான்னு சொல்லவே இல்லை இன்னும்…”
“ரொம்ப ரொம்ப. போதுமா?…” என்று தலையசைத்து கேட்க,
“இன்னும் உள்ள பிரிக்கலையே. மேலையே பார்த்துட்டு ஓகே சொன்னா?…”
“ஹ்ம்ம், பார்ப்போம்…” என்று ஒவ்வொன்றாய் பிரித்தான்.
“வாட்ச், பென் செட், ட்ரெஸ், பெர்ப்யூம், சன்க்ளாஸ்….” ஒவ்வொன்றாய் பிரித்து பிரித்து பார்த்து அவளை நிமிர்ந்து பார்க்க அவளோ அவனின் விழிகளுக்குள் அந்த பொருட்களை பார்க்கும் போது உண்டாகும் சந்தோஷத்தை கவனமாக அவதானித்துக்கொண்டு இருந்தாள்.
“டை எல்லாம் எதுக்கு?…” என்று அதை காண்பித்து கேட்க,
“எப்படியும் இந்த தடவை பாஸ் பண்ணிடுவீங்க. அப்போ ஆபீஸ்க்கு போறதுக்கு டை வாங்குவீங்க தானே? அதான் நானே வாங்கிட்டேன்…” என இதயா சொல்லவுமே முகத்தில் ஒரு வெளிச்சம் கண்ணனுக்கு.
“ஆனா யாருக்கும் நம்பிக்கை இல்லையே இதயா…” என்றான் லேசாய் வேதனையுடன்.
அவன் மறைக்க முயலும் உணர்வை அவளிடம் அங்கே காட்டிக்கொண்டு இருந்தான் கண்ணன்.
“யார் நம்பனும்? நானுமே நம்பனும்னு இல்லை ஆபீசர். இது என்ன யாருக்கோவா படிக்கறீங்க? இல்லையே, இது உங்களுக்காக எழுதறீங்க. உங்க ஆசையை, லட்சியத்தை நிறைவேத்த முயற்சி பன்றீங்க. இதுல நீங்க உங்களை நம்பினா போதும்…” என்று சொல்ல,
“என்ன இருந்தாலும் ஒரு என்கரேஜ்மென்ட்ன்றது எத்தனை இம்பார்டேன்ட்? அது இருந்தா இன்னும் கொஞ்சம் ஊக்கமா இருக்கும். அது கிடைக்காதுன்னு தெரியும் போது ஆட்டோமேட்டிக்கா மனசு ஒரு இடத்துல சோர்ந்திரும்…”
“சோர்வு நல்லா சேர்ந்துச்சு? இப்படியே அது வந்து சேர்ந்தா எப்போ நீங்க நினைச்ச இடத்துக்கு போய் சேர? அதனால அதை எல்லாம் விடுங்க. நீங்க என்ன பண்ணனுமோ அதை உங்களுக்காக பண்ணுங்க. பெஸ்ட் ஆஃப் லக்…” என்று பேச்சுவாக்கில் அவனிடம் வாழ்த்தி கையை நீட்ட,