“தேங்க் யூ…” என்று சொல்லி இப்போது பற்றிக்கொண்டான் அவளின் கரத்தை.
“ஹ்ம்ம், விஷ் பண்ணிட்டேன். கையை விடுங்க…” என்று அவன் விடாமல் குலுக்கிக்கொண்டே இருப்பதை பார்த்து இதயா சொல்ல,
“விடலாமே, இன்னும் முழுசா விஷ் பண்ணி முடியேன்….” என்று சொல்ல,
“உங்களை யாரோ கூப்பிடறாங்க…” என்று இதயா சொல்லிய நிமிடம் கையை விட்டுவிட்டு எழுந்து நின்று சுற்றி பார்த்தவன்,
“யார் கூப்பிட்டா? எங்க? நம்மளை தான் பார்த்தாங்களா?….” என்று வரிசையாக கேள்விகளை கேட்க அதற்குள் அவனின் எண்ணிற்கு அழைப்பு வர,
“நிஷா கூப்பிடறா…” என்றபடி அட்டன் செய்தான்.
“சொல்லும்மா…” என்றதும்,
“அண்ணா உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்குது. அண்ணிட்ட இருந்து…” என சொல்லவும் இங்கே கண்ணன் இதயாவை புருவம் உயர்த்தி பார்த்தவன்,
“ஓகே, வாங்கி ரூம்ல வச்சிடு…” என சொல்ல,
“அண்ணா, உங்க ரூம் கீயை பூட்டி நான் வச்சுக்கறேன். அக்கா கேட்டா நீங்க மறதியா கொண்டு போய்ட்டதா சொல்லிருங்க….” என்று சொல்லவும் அதை கேட்டபடி வேறு பக்கம் திரும்பியவன் முகம் லேசாய் மாறியது.
அக்கா உத்ராவிற்கு எப்போதும் யாருக்கு என்ன வந்தாலும், கிடைத்தாலும் தனக்கும் அது தெரிந்திருக்க வேண்டும் என்னும் எண்ணம் நிறைய.
இதயாவிற்கு தேர்ந்தெடுத்த செயின், மோதிரம், புடவை என்று எதுவும் கண்ணனின் தேர்வுகள் அல்ல.
“இதெல்லாம் பொண்ணுங்க சமாச்சாரம். உனக்கு இதெல்லாம் புரியாது கண்ணா. நாங்க பார்த்துப்போம். நீ மாப்பிள்ளையா வந்து நின்னா போதும்…” என்று சொல்லிவிட அங்கே கண்ணன் மேற்கொண்டு பேச விரும்பவில்லை.
இதை இதயா கேட்டிருந்தாள், ‘நீங்கள் செலெக்ட் செய்ததா என்று?’ இல்லை என்று அவன் மறுத்திருக்க, அதில் அவளுக்கு வருத்தமே என்றாலும் பெரிதாய் காட்டிக்கொள்ளவில்லை.
“எனக்கு நீங்க வாங்கி குடுக்கனும்னு நினைச்சதே போதும். இப்போ என்ன கல்யாணம் ஆகவும் எடுத்து குடுங்க. சரியா? ஆனா கல்யாணத்துக்கு புடவை நீங்க சூஸ் பன்றீங்க. அதை நான் எடுக்கறேன். இதுல நோ சேஞ்சஸ்…” என கட் அன்ட் ரைட்டாக சொல்லியிருந்தாள்.
நிறைய விஷயங்களில் அவனை அனுசரணை செய்து அவனுக்கு உறுதுணையாக தான் இருப்பதாக அவனை உணர வைக்க அப்பெண்ணை அத்தனை பிடித்தது அவனுக்கு.
“ஐ’ம் சோ லக்கி ஹார்ட்பீட்…” என்பான் சில நேரம் உணர்வு மிகுதியால்.
பேச்சுக்கள் அறிவார்த்தமாக ஒரு புரிந்துணர்வோடு இருந்தாலும், அவளின் எந்த செயலையும், எந்த பேச்சையும் அவன் அலட்சியம் செய்ததில்லை. ஒவ்வொன்றையும் அவளுக்கறியாமல் தன்னிடத்தில் சேகரித்துக்கொண்டு இருந்தான்.
இப்போதும் இதயா பார்சல் அனுப்பியிருக்கிறாள் என்றால் நிச்சயம் அதை பிரித்து பார்க்கவும் உத்ரா தயங்க போவதில்லை என்று தான் நிஷா அப்படி சொல்லியது.
“சரிங்கண்ணா, நான் வைக்கறேன்…” என்று சொல்லி போனை நிஷா வைத்துவிட,
“பார்சல் வீட்டுக்கு வந்திருச்சா?…” என்றாள் இதயா கண்ணன் போனை பாக்கெட்டில் போடவும்.
“ஹ்ம்ம்…” என்று அமைதியாய் சொல்லியவன்,
“எதுக்கு இத்தனை அனுப்புற இதயா? பீல் லைக்…”
“எதுவும் சொல்ல வேண்டாம். வீட்டுக்கு போய் பிடிச்சிருந்தா எனக்கு கால் பண்ணுங்க. நான் நவீக்கு மெசேஜ் பண்ணிட்டேன். வந்து கூட்டிட்டு போக சொல்லி. அதுக்கு முன்ன போட்டிங்…” என்று இரு கைகளின் பெருவிரலையும் தண்ணீர் சூழ்ந்த பக்கத்தின் பக்கம் நீட்ட,
“வெல்…” என்று சிரித்தான்.
“ஹப்பா, இந்த முகம் சிரிக்கலைன்னா அப்படியே டெவில் மாதிரி. பார்க்க நல்லாவே இல்லை. எப்பவும் சிரிச்சுட்டே இருக்கனும். ஹ்ம்ம்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், கூடவே இரு. சிரிச்சுட்டே சந்தோஷமா இருப்பேன்…” என ஆத்மார்த்தமாக சொல்ல அவனின் முகத்தில் புன்னகைக்கு பின்னால் ஏதோ ஒரு அழுத்தம் இருக்க தானாகவே அவனின் கையோடு கையை கோர்த்துக்கொண்டாள்.
“எங்கயும் போகமாட்டேன். ப்ராமிஸ்…” என்றவளின் முகத்தில் தெரிந்த உறுதியில் கண்ணனின் மனது தான் ஆட்டம் கண்டது.
இவள் கொண்ட அன்பின் முன்னால் தான் எல்லாம் ஒன்றுமே இல்லையோ என்பதை போல அவன் நினைத்தவன் அந்த கையை இன்னும் அழுத்தமாய் பற்றி விடுவித்தான்.
“இப்போ இதை எல்லாம் எப்படி எடுத்துட்டு போக?…” என கண்ணன் பார்க்க,
“அப்போ நீங்க கிப்ட்டை ஃபுல்லா பார்க்கலை. அப்படித்தான?…” என்றவள் அந்த பெட்டியின் அடியில் ஒரு பேக்கை எடுத்து காண்பித்தாள்.
“ஒஹ், பக்கா பேக்கிங் இதான் போல?…” என்று சொல்ல அவனிடம் பேக்கை நீட்டியவள் அந்த பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்து ஜிப் போட்டாள்.
“இப்போ ஓகே தானே?…” என்று சிரிக்க தலையசைத்த கண்ணன்,
“வா…” என்ற அழைப்புடன் அவளோடு சென்று படகில் ஏறி அமர்ந்தான்.
அந்த ஏரியை சுற்றி சுற்றி வர படகை செலுத்துபவரை விட இதயா தான் அதிகமாய் பேசிக்கொண்டே இருந்தாள்.
தன் தோழிகளுடன் வந்ததை, குடும்பத்தோடு வந்ததை என்று அத்தனை நினைவுகளை பகிர்ந்துகொண்டாள். அவள் பேசியதை கேட்க தான் கண்ணனுக்கு நேரமிருந்தது.
படகை பிடித்தபடி ஒரு சிரிப்போடு அவள் சொல்ல சொல்ல தலையாட்டியபடியே அவன் இருக்க இதயா இது இன்ன இடம் என்று சொல்லி படகோட்டுபவரையும் ஒரு வார்த்தை,
“ஆமா தானேண்ணா?…” என்று கேட்டு அவர் தலையாட்ட கண்ணனுக்கு இன்னும் வாய்கொள்ளா சிரிப்பு.
சுற்றி முடித்து மீண்டும் கரையேற அவளுக்கு கை கொடுத்து அழைத்து தரையில் நிறுத்தியவன்,
“பேசாம இங்க நீ கைய்டா சேர்ந்துரு. அவ்வளோ அக்யூரேட்டா ஒவ்வொரு இடத்தையும் சொல்ற நீ…” என்று கேலி பேசினான் கண்ணன்.
“ஆமா தம்பி, நான் பார்க்க வேண்டிய வேலையை இந்த பொண்ணே பார்த்துருச்சு…” என்று படகோட்டியவரும் சொல்லி செல்ல இடுப்பில் கை வைத்து கண்ணனை முறைத்து பார்த்தவள்,
“ஏதோ ஷேர் பண்ணுவோமேன்னு சொன்னா நக்கலா? நான் கிளம்பறேன்…” என்று வேகமாய் நடந்தவள் அவன் இன்னும் வராது நிற்பதை பார்த்துவிட்டு மீண்டும் அவனிடத்தில் வந்தாள்.
“ரொம்ப போட்டுட்டேனோ?…” என்று கையை கழுத்தில் வைத்து அறுப்பதை போல சொல்ல கண்ணனிடம் இப்போது வெடிச்சிரிப்பு.
“கடவுள் மனசு உனக்கு. ரம்பம் போட்டுட்டேனான்னு அப்பாவியா கேட்டு வந்து நிக்கற? உண்மையை ஒத்துக்கவும் மனசு வேணும் இதயா…” என்று சிரிக்க,
“உங்ககிட்ட வந்தேன் பாருங்க. என்னை சொல்லனும். போறேன்…” என்று நடக்க போனவள்,
“ப்ச், நீங்களும் கிளம்புங்க…” என்றாள் அவனிடத்தில்.
“ஹ்ம்ம், கிளம்பனும். நவீன் வந்தாச்சா?…”
“வந்திருப்பான்னு தான் நினைக்கேன்…” என்றபடி செல்ல நவீன் பைக்கில் அமர்ந்து போனில் பேசிக்கொண்டு இருந்தான்.
“ஹாய் நவீன்….” என்ற கண்ணனின் குரலில் பைக்கில் இருந்து இறங்கி நின்றவன்,
“ஹேப்பி பார்த் டே அத்தான்…” என்று வாழ்த்தி அணைத்தவன்,
“பூவிக்கா புறப்படலாமா?…” என்று கேட்க,
“இருடா, வா சாப்பிட்டு போகலாம்…” கண்ணன் சொல்ல,
“இல்லை, கிளம்பனும். நான் காலேஜ் வேற லீவ் போட்டுட்டு வந்துட்டேன் பூவிக்காவுக்காக…”
“ஹ்ம்ம், ஓகே. பை…” என்று அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு தானும் புறப்பட்டு கடலூர் வந்து சேர்ந்தான்.
வரும் பொழுதே உத்ரா அமர்ந்திருந்தாள் வீட்டில். கண்ணனை பார்த்ததும் வேகமாய் எழுந்து வந்தவள்,
“பிறந்தநாள் அதுவுமா எங்க போய்ட்ட கண்ணா?…” என்று கேட்டவள்,
“என்ன பேக்கும் கையுமா வந்திருக்க? பேக் புதுசா இருக்கே?…” என்று கேட்க கண்ணன் பதில் சொல்லும் முன்னர்,
“உத்ரா இந்த ரசத்துல உப்பு போதுமான்னு பாரு. அப்பறம் சரியில்லன்னு சொல்லுவ…” என உள்ளே அழைத்துவிட்டார் ருக்மணி.
தம்பியை மறந்தவளாக அடுக்களைக்குள் செல்ல நிஷா வந்து சாவியை தர அதை வாங்கிக்கொண்டவன்,
“நிஷாம்மா, நான் கொஞ்சம் நேரம் தூங்கறேன். சாப்பிட நானே எழுந்து வரேன். எழுப்ப வேண்டாம். அம்மாட்ட சொல்லிரு…” என்று சொல்ல,
“புரியுதுண்ணா. அக்கா கிளம்பற வரைக்கும் நான் கூப்பிடலை…” என்று சொல்லி சென்றுவிட்டாள்.
அதில் சிரித்தபடி கதவை திறந்து உள்ளே சென்று பூட்டிக்கொண்டவன் அங்கிருந்த பார்சலை வேகமாய் சென்று திறந்து பார்த்தான்.
அவனுக்கு பிடித்தமான புத்தகங்கள் அதில் இருந்தது. அத்தனையும் அவனுக்கு உபயோகமானதும் கூட.
அனைத்தையும் பார்த்தபடி கைலி, பனியனுக்கு மாறி வந்தமர்ந்தவன் இதயாவிற்கு அழைக்க,
“வீட்டுக்கு போயாச்சா?…” என்றாள் எடுத்ததும்.
“ஹ்ம்ம்ம், இப்போ தான் வந்தேன்….”
“ஓஹ்…” என்றவளின் குரலில் அவளின் எதிர்பார்ப்பை கண்டுகொண்டவன் உடனே போனை கட் செய்து வீடியோகாலில் அழைத்தான்.
“இப்போ ஓகே தானே?…” என்று கேட்டபடி சேரில் சாய்ந்தமர இதயாவும் அவனின் தோற்றத்தை பார்த்துவிட்டு புன்னகையுடன் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
அவன் பேசியதெல்லாம் அவள் அனுப்பிய புத்தகங்கள் பற்றிய பேச்சுக்களாக இருக்க அதையும் மறுக்காமல் கேட்டுக்கொண்டாள்.
அவனின் பிடித்தங்கள் தனக்கு தெரியாததாக இருந்தாலும் சலிக்காமல் அவனின் குரலுக்கு செவி சாய்த்தாள்.
இப்படி ஒவ்வொன்றும் அவளின் எதிர்கால கனவுகள் எல்லாம் அவனோடே பயணித்துக்கொண்டு இருக்க இருவருமே இருவரும் இணையும் அந்நாளுக்காக வழி மேல் விழிவைத்து காத்திருந்தனர்.
தன்னிடத்தில் இத்தனை விருப்பம் கொண்டிருப்பவனே தன்னை அலட்சியம் செய்வான் என்று நினைத்தும் பார்த்திருந்ததில்லை.
அதுவரை வாழ்வின் இனிப்பான பக்கங்களை மட்டுமே இதயா கடந்து வந்திருந்தாள். கண்ணனுடனான எதிர்காலமும் அப்படியே இருக்கும் என்று அவள் கனவுகளில் சஞ்சரித்திருக்க நடந்த நிகழ்வோ முற்றிலும் வேறு.
அந்த சூழ்நிலையில் அதற்கு அவன் சற்றும் செவி சாய்க்காதது தான் அவளின் உணர்வுகள் சுக்குநூறான தருணம்.
அவள் ஸ்வப்பனங்களின் ரகசிய திருடன் அவளின் நிம்மதியையும் திருடி செல்வான் என்று எண்ணியதில்லை.
அவளிடத்தில் சில விஷயங்களை பேசாமலே உணர வைப்பவன் அவளின் வலியையும் கூட பேசாமலே இருந்து அவளுக்கு உணர வைப்பான் என்று எண்ணியதில்லை.
பார்த்த நாளில் இருந்து நஞ்சையும் விஞ்சும் விதமாய் அவளின் இதயத்தை துரிதமாய் களவாண்டவன் அதே வேகத்தில் அந்த இதயத்தை உடைத்து போவான் என்று அவள் எண்ணியதில்லை.
பூவவளை வருடும் தென்றலென மோதியவன் சத்தமின்றி பிய்த்தெரியும் சுழல்காற்றாய் அடித்து சாய்ப்பான் என்று எண்ணியதில்லை.
எப்போதும் தன்னை வண்டாய் வட்டமிடும் அவனின் குறுகுறு பார்வையில் தேனாய் உருகியவள் ஓரிடத்தில் குற்றம் கண்டு தள்ளி நின்று தவிப்பாள் என்று அவள் எண்ணியதில்லை.
மாவட்டத்தையே ஆட்சிபுரிய இருந்தவனின் பாராபட்சம் பாராத நேர்மை தன் சொந்த வாழ்க்கையில் வலிமை இழந்து போகும் என்று அவள் எண்ணியதில்லை.
அவளின் ஸ்வப்பனங்களில் நிறைந்தவனோடான தன் வாழ்வு வெறும் ஸ்வப்பனங்களிலேயே தொலைந்து போகும் என்று எண்ணியதில்லை.
இப்படி எண்ணாத எண்ணங்கள் எல்லாம் தன் வாழ்க்கையில் அணிவகுக்கும் என்று அவள் எண்ணியதில்லை.