ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 11
திருமண வேலைகள் பரபரவென்று நடந்துகொண்டிருந்தது இரு வீட்டிலுமே.
பத்திரிக்கைகள் அடித்து வந்துவிட வெளியூர் சொந்தங்கள், நண்பர்கள் என்று அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்க முக்கியமானவர்களுக்கு நேரிலேயே சென்று வைத்துவிட்டு வந்திருந்தனர் சுதாகரனும், அய்யாசாமியும்.
அத்தனை கேள்விகள் சிலரிடத்தில். ஏன் இப்படி தனியாரில் வேலை செய்யும் பிள்ளைக்கு பெண்ணை கொடுக்கிறீர்கள்? என்று கேட்க அதை எல்லாம் தாண்டி வந்தாகிற்று.
கண்ணபிரான் குடும்பத்தில் உத்ராவை தவிர்த்து வேறு எந்த உறுத்தல்களும் இல்லை என்பதே போதுமானதாக இருந்தது.
அதிலும் மகளின் பூரிப்பான முகம் வேறு இந்த திருமணம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்ற பேரவாவை விடஹித்தது அவளின் குடும்பத்தினருக்கு.
இதோ இன்னும் இரு நாட்களில் திருமணத்திற்கு முஹூர்த்தப்புடவையும், வீட்டினருக்கு புது உடைகளும் எடுக்க கிளம்ப இருந்தார்கள்.
அதற்கு முன்பே கண்ணனிடம் சொல்லியிருந்தாள் இதயா. எப்படியும் அவனின் தேர்வு தான் தன்னுடைய முகூர்த்த புடவை என்று.
“சொன்னா புரிஞ்சுக்கோ இதயா, அங்க நான் வந்து எப்படி சூஸ் பண்ண? அம்மா, அக்கா, தங்கச்சி எல்லாம் இருப்பாங்க…” என்று கண்ணன் சங்கடமாய் சொல்ல,
“அதை நான் பார்த்துக்கறேன். அவங்க எதுவும் சொல்லமுடியாது. நீங்க ஓகே தானே? இல்ல உங்களுக்கே இன்ட்ரெஸ்ட் இல்லையா?…” என்றாள் அதுவும் சாதாரணமாக.
“ச்சே, ச்சே. அதெப்படி எனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லாம போகும்? ஹ்ம்ம், ஓகே பார்த்துப்போம்…” என்று சொல்லியிருந்தான்.
அவனுக்கு சுத்தமாக நம்பிக்கை என்பதே இல்லை. நிச்சயத்திற்கு நடந்ததை பார்த்துக்கொண்டு தானே இருந்தான். தேவையற்ற வாக்குவாதம் வேண்டாம் என்று அவன் அமைதியாக போய்விட்டான்.
அதை விட அவனுக்கு அப்படியாப்பட்ட சச்சரவுகள், சின்ன விஷயத்திற்கு எல்லாம் பிரச்சனை செய்வது என்று ஒருபோதும் ஒத்துவராதது. அவனின் குணமே அப்படி இருக்க உத்ராவை முடிந்தளவு தவிர்த்துவிடுவான்.
இப்போது இதயா இப்படி கேட்டிருக்க மறுக்கவும் முடியாமல் அன்று எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்னும் வேண்டுதலுடன் கிளம்பி சென்றான்.
சிதம்பரத்திலேயே வழக்கமாக இதயா வீட்டினர் எடுக்கும் பட்டு புடவை கடைக்கே சென்றுவிட்டனர்.
அன்று காலையே சிவசுந்தரம் குடும்பத்துடன் கிளம்பி வந்துவிட்டார். வரும் பொழுதே உத்ரா வாயை வைத்துக்கொண்டு இல்லாமல்,
“மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை தானே? அதை நாங்க எடுத்துட்டு வரமாட்டோமா? நீ எதுக்கு?…” என்று ஆரம்பித்திருக்க,
“எனக்கு ட்ரெஸ் பார்க்க தான் வரான். வேஷ்டின்னா வேஷ்டி மட்டுமா? அதுக்கு முன்னாடி பின்னாடின்னு போட அவனுக்கும் ட்ரெஸ் வேண்டாமா?…” என்று வேலவன் கேட்டு வாயடைத்திருந்தான் உத்ராவை.
“பேசாம அக்காவை விட்டுட்டு வந்திருக்கலாம்…” என்று எதோ பேச்சில் நிஷா சொல்லிவிட தங்கையை அத்தனை பேச்சு பேசி அவள் அழுது மன்னிப்பு கேட்க வைத்த பின்னர் தான் ஓய்ந்தாள் உத்ரா.
“வாயை வச்சுட்டு சும்மா இரு நிஷாக்குட்டி. அவ சும்மாவே ஆடுவா. இந்த கல்யாணம் பேசினதுல இருந்து உர்ர்ருன்னுட்டு தான் இருக்கா…” என ருக்மணி தான் அவளை சமாதானம் செய்துவைத்தார்.
கண்ணன் இதை எல்லாம் கவனித்தபடி தான் முன்னே அமர்ந்திருந்தான். வெறுப்பாய் இருந்தது அவனுக்கு.
வீட்டில் நித்தமும் நடக்கும் நிகழ்வு தான். இருப்பினும் இன்னுமே எல்லாவற்றிலும் அதிகாரம் செய்து மூக்கை நுழைத்து, தன் பேச்சு தான் கடைசி என்று நிற்கும் உத்ராவை எதுவும் சொல்லமுடியவில்லை.
“அவ இன்னொரு வீட்டுக்கு போய்ட்டா. அவளை போட்டு எதுக்கு திட்டி நாம கஷ்டப்படுத்தனும்?…” என்று ஆரம்பத்தில் வக்காலத்து வாங்கிய ருக்மணியே,
“இவக்கிட்ட வாய குடுத்து மல்லுக்கு நிக்கிறதை விட பேசாம போய்டலாம்…” என்று சலித்து போவார்.
பேச்சுக்கள் அத்தனை வேகத்துடனும், பதிலுக்கு பதிலான வார்த்தைகளுடனும் இருக்கும். அதிலும் சில நேரங்களில் பேச முடியவில்லை என்றாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எனக்கு யார் இருக்கிறார் என்று கேட்டு சிவசுந்தரத்தை வைத்து கரைத்துவிடுவாள்.
“பிறந்த வீட்டுலையே எனக்கு இப்படி மதிப்பில்லாம இருந்தா என் புருஷன் வீட்டுல என்ன மதிப்பு எனக்கு?…” என்று வேறு கேட்டு வைக்க ஒருவராலும் வாயை திறக்கமுடியாது.
இப்போதும் இதயாவை சுத்தமாக பிடிக்கவில்லை அவளுக்கு. சிவசுந்தரத்திடம் எத்தனையோ விதமாய் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல சொல்லி மறுத்து பார்க்க அவரோ அரசாங்க உத்தியோகம் பார்க்கும் பெண் என்பதிலேயே நின்றார்.
“ஊரு ஊருக்கு மாத்தலாகி போய்ட்டே இருந்தா தம்பியோட எங்க சேர்ந்து வாழ? குடும்பத்துல எங்க ஒண்ணா இருக்க?…” என்றும் பேசி பார்க்க,
“கவர்மென்ட் உத்தியோகம்னா அதெல்லாம் இருக்கத்தான செய்யும்? ஏதோ புண்ணியத்துக்கு பொண்ணு அமைஞ்சிருக்கு. இத விட நல்ல இடமா உன்னால பாத்து தர முடியுமா?…” என்று வாயடைக்க செய்தார் சிவசுந்தரம்.
“இவன் மட்டும் முன்னவே கலெக்ட்டருக்கு பாஸாகி இருந்தா என் மாமியார் வீட்டு வளசலுல இருக்கற கவுன்சிலர் பொண்ணை பேசி முடிச்சிருக்கலாம். அவரு அடுத்த எலெக்ஷன்ல எம்.எல்.ஏக்கு நிக்கிறாரு. ஹ்ம்ம், குடுப்பின வேணுமே? அவங்க என்னன்னா பையன் அழகா இருந்தா போதுமான்னு கேட்கறாங்க…” என பெருமூச்சுவிட்டாள்.
“ஆகாத போகாத கதை எல்லாம் சொல்லாத…” என்று முடித்துக்கொண்டார் சிவசுந்தரம்.
ஆனால் அவருக்குமே மனதின் ஓரத்தில் அந்த ஆசை இன்னுமே பெருமளவு இருந்தது தான்.
முதலிலேயே பெண் பார்க்க ஆரம்பிக்கும் பொழுதே இதை பற்றிய பேச்சுவார்த்தை எழும்பி இருக்க கலெக்டர் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கண்ணனை வீட்டோடு மாப்பிள்ளையாக கேட்க சிவசுந்தரம் சுதாரித்துக்கொண்டார்.
“அவன் எப்படி இருந்தாலும் எனக்கு புள்ளையா இருந்தா போதும். வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பிட்டு ஒன்னொண்ணுக்கும் நாளைப்பின்ன நானும், என் பொண்டாட்டி, பொண்ணுங்களும் அவர் வீட்டு வாசல்ல போய் நிக்க முடியுமா?…” என்று உத்ராவிடம் மறுத்துவிட்டார்.
“என்னப்பா நீங்க? நல்ல சம்பந்தம்? அவன் இங்க இருக்கறதுக்கு அங்க இருந்துட்டு போவட்டுமே?…” என்று உத்ரா எவ்வளவோ சொல்லி பார்க்க சிவசுந்தரத்தை அசைக்க முடியவில்லை.
“என்ன சொல்லு, நான் சம்மதிக்கமாட்டேன். என் மகன் கடைசி வரை இங்க தான் அவன் பொண்டாட்டியோட குடித்தனம் பண்ணுவான். மாமனார் வீடுன்றது போய் வந்து இருக்கறது தான் மரியாதை. எனக்கும் அதுதான் கௌரவம். வேற பேசலாம்…” என்றுவிட்டார்.
இப்போது இதயாவை பேசி முடிக்கவும் உத்ராவிற்கு பொறுக்கமுடியவில்லை. தான் சொல்லிய இடம் வேண்டாம் என்றுவிட்டு இது என்ன என்று ஆரம்பித்துவிட்டாள்.
“இந்த மருமக மட்டும் கூடவே இருந்துருவாளாக்கும்? இதென்னப்பா மாத்தி பேசிட்டு இருக்கீங்க?…”
“இங்கயே இருக்கறதில்லை தான். ஆனா இங்க தான வந்து இருந்தாகனும். என் மகன் கூடவே தான இருப்பான். அது போதும். இப்பவும் கவுன்சிலர் பொண்ணை குடுத்து மருமகளா நம்ம வீட்டுக்கு அனுப்ப சொல்லு, சம்மதிக்கிறேன்…” என்றுவிட்டார் இதயாவை பேசி முடிக்கும் முன்பு.
அதன் பின்னர் அந்த பேச்சுக்களை தவிர்த்தே வந்தார் சிவசுந்தரம். அந்த முறை வந்த எலெக்ஷனில் கவுன்சிலர் எம்.எல்.ஏ எலெக்ஷனில் வெற்றிபெற்றுவிட அப்போதும் உத்ரா வீட்டிற்கு வந்து அங்கலாய்த்தாள்.
“இந்நேரம் என் தம்பி எம்.எல்.ஏ வீட்டு மாப்பிள்ளை ஆகியிருக்கனும். ஹ்ம்ம், புது ராசி வந்த நேரம், காலமோ? இப்படி ஆகி போச்சு…” என்று சொல்ல,
“அக்கா, போதும். இப்போ எதுக்கு அடுத்தவங்க பேச்சு நம்ம வீட்டுல? அதுவும் இதயா பத்தி பேசறது வேண்டாம். இன்னும் இந்த வீட்டுக்குள்ளையே அவ வராம இருக்கும் போதே இத்தனை பேசறீங்க? போதும், இனி இந்த பேச்சு இருக்க கூடாது…” என கண்ணன் கோபமாக சொல்லிவிட,
“கண்ணா, நீயாடா என்கிட்டே இப்படி பேசற?…” என்று அதிர்ச்சியுடன் உத்ரா ஆரம்பிக்க அங்கே நிற்க பிடிக்காமல் வெளியே சென்றுவிட்டான் கண்ணன்.
அன்று மாலை வீட்டிற்கு வரும் பொழுது சிவசுந்தரம் அருகே அமர்ந்துகொண்டு உத்ரா விசும்பிக்கொண்டே பேச பேச அதை கண்டுகொள்ளாததை போல உள்ளே சென்றுவிட்டான் கண்ணன்.
“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? இங்க ஒருத்தி அழுதுட்டு இருக்கேன் இவனால? கொஞ்சமும் கண்டுக்கறானா? அவளை நான் பேச கூடாதாமே? எனக்கு அந்த உரிமை இல்லையா? நீங்க சொல்லுங்கப்பா இப்பவே இனி வாயை திறக்காம என் புருஷன் வீட்டுக்கு போயிடறேன்….”
“உத்ராம்மா, என்னம்மா இது? கண்ணை துடை…” என்று மகளை தேற்றினார் அவர்.
“இப்ப கூட நீங்க அவன் பேசினதுக்கு என்னன்னு கூப்பிட்டு கேட்கலைன்னா அப்போ என்ன அர்த்தம்? நான் இங்க எதுலையும் தலையிட கூடாதுன்னு தானே? அந்த பொண்ணு வரதுக்கு முன்னாடியே இப்படி பிரிக்க பார்க்கறாளே? வந்தா?…” என்று சிவசுந்தரம் நெஞ்சில் ஊசியால் குத்த அவர் பாவமாய் பார்த்தார்.
“அப்படியெல்லாம் இல்லைடாம்மா…” என மகளை ஆதுரமாய் வருட,
“எதுக்கு அந்த எம்.எல்.ஏ வீட்டு சம்பந்தம் வேண்டாம்ன்னு சொன்னீங்க? அவங்க நம்மளை மதிக்கமாட்டாங்க, நம்ம கண்ணன் அவங்க பக்கம் போய்டுவான்னு தானே? ஆனா இப்பவும் அதான நடக்குது?…”
இப்படி உத்ரா புலம்பி புலம்பி பேச சிவசுந்தரத்திற்கே வருத்தமாக போய்விட்டது.
“அப்படியெல்லாம் நினைக்காதம்மா, அவன் ஏதோ ஒரு நினைப்புல பேசியிருப்பான். விட்டு தள்ளு. என்னைக்கும் நம்ம வீட்டுக்கு நீ தான்டா முக்கியம்…” என்று மகளின் மனதை குளிர வைத்தார்.
ஒருவழியாய் உத்ரா சமாதானம் ஆகி அங்கிருந்து கிளம்பினாலும் அதன் பின்னால் கண்ணனின் பொறுமையை நிரம்பவே சோதிக்கத்தான் செய்தாள்.
ஆனாலும் தான் என்ன பேசினாலும் தேவையில்லாமல் பிரச்சனையை சுற்றி வளைத்து இதயாவிடம் தான் கொண்டுவந்து நிறுத்துவாள் என்று அறிந்திருந்தவன் வாயை திறக்கவில்லை.
எந்த பிரச்சனையும் வராமல் திருமணம் முதலில் நல்லபடியாக முடியவேண்டும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டான்.
இதோ அதொவென்று இன்னும் ஒருமாதத்தில் திருமணம் என்று முகூர்த்த புடவை எடுக்க சென்றுகொண்டு இருந்தனர்.
அதையும் சும்மா விடவில்லை உத்ரா. புடவை அங்கே தான் எடுக்கவேண்டுமா? வேறு கடையே இல்லையா? என வளவளத்துக்கொண்டே இருக்க வழக்கம் போல ருக்மணி வாயே திறக்கவில்லை. சிவசுந்தரம் தான் பேசிக்கொண்டே வந்தார்.
“என் பொண்ணுக்கு நல்லா உசந்த பட்டா தான் எடுக்கனும், எனக்கும் நிஷாவுக்கும் எடுக்கற அதே டிசைன்ல தான் பட்டுப்பாவாடை சட்டை எடுக்கனும்…” என அப்போதே சொல்லியிருந்தாள்.
“கல்யாணப்பொண்ணுக்கு முகூர்த்தப்புடவை, அதை ஒட்டியே உங்க ரெண்டுபேருக்கு சரி. சின்ன பிள்ளைக்கு எதுக்கு அம்புட்டு விலையில? அதுக்கு கூட ரெண்டு ட்ரெஸ் எடுத்துக்கலாம்ல…” என ருக்மணி முதல்நாளே சொல்லியிருக்க அதற்கே ஒருபாட்டம் பேசி தீர்த்துவிட்டாள்.
“எனக்கும் ஒத்த உடுப்பு வேண்டாம், நீங்க எடுத்து குடுக்கறத தான் நான் கட்டனும்னு இல்ல. எனக்கு புடிச்சா மாதிரி எடுங்க. இல்லன்னா யார்க்கும் வேண்டாம்…” என்று சொல்லிவிட்டிருக்க அதன் பின்னே எங்கே ருக்மணி சொல்ல?
“ருக்கு, அவ விருப்பப்படி எடுக்கட்டும். விடு…” என்று சிவசுந்தரம் சொல்லிவிட மீண்டும் மறுக்க முடியுமா?
சிதம்பரத்தில் அந்த ஜவுளி கடை வாசலில் வந்து இறங்க அவர்கள் வரும் முன்னரே இதயா குடும்பத்தினர் வந்துவிட்டிருந்தார்கள்.
சுதாகரன், யசோதா, தீப்தி என்று அவர்களுமே வந்திருக்க அவர்களையும் உத்ரா பார்த்துவிட்டு,
“இவங்கலாம் வந்திருக்காங்கன்னு தெரிஞ்சிருந்தா என் மாமியாரையும் கூட்டிட்டு வந்திருப்பேன்ல…” என ருக்மணியிடம் முணுமுணுக்க,
“உள்ள போகலாம்மா….” என்றார் அவர்.
“இருக்கட்டும், இதெல்லாம் ஒருநாள் பேசிக்கறேன்…” என்று அனைவரையுமே ஒரு பார்வை பார்த்துவிட்டே உள்ளே செல்ல வந்தவர்களை மரியாதையுடன் அழைத்து சென்றார்கள்.
“எங்கடா இதயா?…” என கண்ணன் மெதுவாய் நவீனிடம் கேட்க,
“மாடில பட்டு செக்ஷன்ல இருக்கா அத்தான். நீங்க எல்லாரும் வரவும் அங்க போகலாம்னு நாங்க இங்க வெய்ட்டிங்…” என்று அவனுடன் சேர்ந்தே நடந்தான் நவீன்.
“அண்ணா உங்களை அப்பா கூப்பிடறாங்க…” என்று நிஷா வந்து சொல்லிவிட்டு நவீனை பார்த்து புன்னகைக்க பதிலுக்கு சிரித்தவன்,
“ஓகே அத்தான், நீங்க பார்த்துட்டு வாங்க. நான் வெய்ட் பன்றேன்…” என்ற சற்று தள்ளி நின்றுகொண்டான்.
அதற்குள் உத்ரா சிவசுந்தரம் தவிர மற்றவர்கள் எல்லாம் மேலே சென்றுவிட்டார்கள்.
“சொல்லுங்கப்பா…” என கண்ணன் கேட்க,
“ரொக்க பணத்துல தான் புடவை எடுக்கனும் கண்ணா. உனக்கு வேஷ்டி எல்லாம் அவங்க பொறுப்பு. அதனால பார்த்து எடுக்கனும். எவ்வளவுக்கு எடுத்தா சரி வரும்ன்றதை எல்லாம் அக்கா பார்த்துப்பா. நீ மருமகனோட கூட போய் உனக்கு ட்ரெஸ் செலெக்ட் பண்ணிடு…” என்று சொல்லவும்,
“ஆமா, ஆம்பளைங்க அவங்க வேலையை பாருங்க. நாங்க போய் புடவையை செலெக்ட் பன்றோம்…” என்று உத்ரா சொல்லவும் கண்ணனுக்கு திக்கென்றானது.
“புடவை எடுக்க இதயாவும் வந்திருக்கா தானே? அவளுக்கு பிடிச்சதை தானே எடுக்கனும்? அக்கா செலெக்ட் பன்றேன்னு சொல்றாங்க?…” என்று கண்ணன் இப்போது சொல்லிவிட உத்ராவின் முகம் மாறிவிட்டது.
“நாம எடுத்து குடுக்கறது தான் முகூர்த்த புடவை. குறைச்சா எடுத்துட போறோம்? அவ வந்தா?…” என்று இன்னும் என்ன பேசியிருப்பாளோ யசோதா வந்துவிட்டார்.
“என்ன உத்ரா இன்னும் இங்க நின்னுட்டு இருக்கம்மா? உன்னை மேல தேடிட்டு இல்லைன்னதும் இங்க வந்தேன். வா வா நாத்தி சேலை பாக்கனும்ல….” என்று அழைத்தவர்,
“அப்பறம் தம்பி…” என்று கண்ணனின் பக்கம் திரும்பியவர்,
“நீங்களும் பூவியும் சேர்ந்து புடவையை பாருங்க. உங்க ரெண்டு பேருக்கு புடிச்சதா எடுங்க…” என்று சொல்ல,
“கண்ணனுக்கு பட்டுசேலை பத்தி என்ன தெரியும்? அவனை…” என்ற உத்ராவை பேசவே விடவில்லை யசோதா.