“கல்யாணம் அவங்களுக்கு. அதோட வர போற பொண்டாட்டிக்கு என்ன சேலை எடுப்பா இருக்கும்ன்னு கட்டிக்க போறவருக்கு தெரிஞ்சிருக்கும் தானே? பூவிக்கு புடவை பத்தி நல்லாவே தெரியும்…” என்றவர்,
“தீப்தி…” என மகளை அழைக்க தீப்தியுடன் நவீனும் வர,
“பார்த்துட்டே நிக்கறீங்க? தம்பியை பூவிக்கிட்ட கூட்டிட்டு போங்க. நல்ல நேரம் முடியறதுக்குள்ள புடவை எடுத்து முடிக்கனும்ல…” என்று சொல்லி கண்ணனின் பின்னால் போக இருந்த உத்ராவை,
“நீ வாம்மா, நம்ம போய் மத்த ட்ரெஸ் எல்லாம் பார்ப்போம்…” என்று கூட்டிக்கொள்ள,
“அப்பா…” என்று சிவசுந்தரத்தை பார்த்தாள் உத்ரா.
“நீங்க வாங்க சம்பந்தி நாம அந்த பக்கம் போவோம்…” என சுதாகரன் வந்து சிவசுந்தரத்தை அழைத்துக்கொண்டார்.
“நீங்க என்ன என்னை கூடவே கூட்டிட்டு வந்துட்டீங்க? அவங்களுக்கு என்ன தெரியும் முகூர்த்த புடவை பத்தி? நாமதான் பெரியவங்களா இருந்து…”
“அட என்னம்மா நீ? கட்டிக்க போறவளுக்கு பிடிக்க வேண்டாமா? இது கல்யாண புடவை…” என்று யசோதா வாயே திறக்கவிடவில்லை அவளை.
இதை எல்லாம் கவனிக்காமல் தங்களுக்கென்ற ஒரு உலகில் இருந்தனர் இதயாவும், கண்ணனும்.
ஒவ்வொரு புடவையையும் எடுத்து தோளில் வைத்து காண்பித்து அவன் வாய்வார்த்தையை கூட எதிர்பாராமல் முகபாவனையை கொண்டு அவனின் பிடித்தத்தை கவனித்தாள்.
“உனக்கு பிடிச்சா எடு இதயா, ஏன் என் முகத்தையே பார்த்துட்டு இருக்க?…” என்று கூட அவன் கேட்க,
“ரெண்டுபேருக்குமே பிடிக்கனுமே? அதான். இதெல்லாம் பேச கூடாது. சொல்லுங்க. புடவை நீங்க தான் செலெக்ட் பன்றீங்க…” என்று முடிவாய் சொல்ல கண்ணனும் புன்னகையோடே ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து கடைசியில் ஒரு நீல நிற விவாஹா பட்டுப்புடவையை எடுத்து அவளின் மேல் வைத்து பார்த்தான்.
“ரொம்ப அழகா இருக்குடி…” என அத்தனை காதலுடன் அவன் சொல்லியவிதமே இதயாவை கொள்ளைகொண்டது.
“ஒன்ஸ்மோர் ஆபீசர்…” என்று புருவம் சுருக்கி புன்னகையுடன் கேட்க,
“உதை…” என்று அவளின் கையில் லேசாய் அடித்தவன்,
“இது உனக்கு புடிச்சிருக்கா?…” என்று கேட்க வேகமாய் தலை ஆட்டினாள்.
“ப்ச், எனக்காக சொல்லாத. உனக்கு புடிச்சிருக்கா பாரு…” என்று கேட்க,
“நிஜமாவே ரொம்ப ரொம்ப அழகா இருக்குது…” என்று மனமுவந்து சொல்லியவள்,
“அப்படியே இன்னும் கொஞ்சம் சேரீஸ் செலெக்ட் பண்ணனும். இப்பவே பண்ணிடலாம்…” என்று சொல்லி அவள் எடுத்து வைத்த புடவையை கொண்டு வந்து தன் தாயிடம் தந்துவிட்டு அவனுடன் மற்ற புடவைகளை பார்க்க சென்றாள்.
“புடவை ரொம்ப அழகா இருக்கே?…” என்று ருக்மணி, நிஷா என்று ஒவ்வொருவரும் மெச்சிக்கொள்ள அதை வாங்கிய உத்ரா வேகமாய் பில்லை பார்த்துவிட்டு தாயை பார்த்தாள்.
“உத்ரா, உனக்கும் நிஷாவுக்கும் எடுப்போம். இதே மாதிரி எடுக்கனும்ல…” என்று மகளின் பார்வையை கொண்டே அவர் சொல்ல,
“ஆமா, உங்க ரெண்டுபேருக்கும் புடிச்ச புடவையா பாருங்க…” என்று மஞ்சுவும் சொல்ல,
“இவ்வளோ நேரம் அதான் பார்த்துட்டு இருந்தாங்க மஞ்சு. இதோ மூணு புடவை செலெக்ட் பண்ணியும் வச்சிருக்காங்க…” என்று யசோதா எடுத்து காண்பிக்க,
“அப்போ புடவை எடுக்கற வேலை முடிஞ்சதா?…” என்றார் மஞ்சு.
“இல்லைங்க நாத்தனார் புடவைங்க எடுக்கனும். இது சும்மா எடுக்கற புடவை தான்…” என உத்ரா சொல்ல யசோதாவும், மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“சரி எடுக்கலாம்…” என்று சொல்ல உத்ராவிற்கு இதயா எடுத்ததை போன்ற புடவை கிடைக்கவில்லை.
“ம்மா…” என கோபமாக பார்க்க,
“அதே விலையில வேற எடுத்துக்கோ உத்ரா. அந்த டிஸைன் இல்லைன்னு சொல்றாங்களே?…” என்று ருக்மணி சமாதானம் செய்ய சிவசுந்தரம் வந்துவிட்டார்.
“எடுத்தாச்சா?…” என்று கேட்டதும் உத்ரா அங்கே வைத்தும் ஒன்றும் பேசமுடியவில்லை. காரணம் அவருடன் வேலவன் நின்றிருந்தான்.
“என்ன இன்னுமா நீ எடுக்கலை?…” என கேட்க அதன் பின்னே எங்கே பேச? இல்லை என்றால் ஒரு ஆட்டம் ஆடியிருப்பாள்.
“இதோங்க…” என வேக வேகமாய் எடுத்து முடிக்க அவளின் பிள்ளைக்கு அழகிய உடைகள் சிலவற்றை இதயா தேர்ந்தெடுத்து கொண்டு வந்தாள்.
“எங்க வீட்டுல எந்த சின்ன குழந்தையும் இல்லை. எல்லாம் என் ஏஜ். இல்லைன்னா எங்க தீப்தி ஏஜ் தான். அதான் பாப்பாவை பார்த்ததும் ட்ரெஸ் எடுக்க ஆசையா இருந்தது. இதெல்லாம் என்னோட கிப்ட்…” என்று சொல்ல வேலவனுக்கு மனம் நிறைந்தது.
“ரொம்ப நல்லா இருக்கும்மா…” என சொல்லி வாங்கிகொண்டான்.
அன்றோடு அந்த நிகழ்வு சுமூகமாகவே நடைபெற்று முடிய அங்கேயே ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டனர் கண்ணனின் குடும்பத்தினர்.
அடுத்து வீட்டிற்கு வெள்ளையடிக்கும் வேலை இருக்க யசோதா இங்கேயே வந்துவிட்டார் மஞ்சுவுக்கு துணையாக இருக்க.
நவீன் பொறியியல் படிப்பு கடைசி வருடமும், தீப்தி பன்னிரெண்டாம் வகுப்பிலும் இருக்க அங்கேயே தங்கிக்கொண்டார்கள்.
திருமணம் வேறு நெருங்கிவிட பத்திரிக்கை வைக்க சென்றால் வீட்டில் பெரியவர்கள் இருக்கவேண்டுமே என துணைக்கு இருந்துவிட மஞ்சுவிற்கும் பலம் கூடியதை போல இருந்தது.
எல்லாம் நன்றாகவே போய்க்கொண்டிருக்க கண்ணனின் ரிசல்ட் வந்தது. அவனின் கனவின் பயணம் ஆரம்பித்தது.
முதலில் அதை பார்த்ததும் உடனே அழைப்பு விடுத்தது என்னவோ இதயாவிற்கு தான்.
“ஹாய் கலெக்ட்டரம்மா…” என்று அவள் எடுத்ததுமே ஹலோ சொல்லும் முன்னர் இவன் பேசியிருக்க குரலில் அப்படி ஒரு துள்ளல்.
“ஹேய் நிஜமாவா?…” என்று அவனின் குரலை வைத்தே அவளும் கண்டுகொள்ள உற்சாகம் தாளமுடியவில்லை.
இருவருக்குமே நெஞ்சை அடைத்தது சந்தோஷத்தில். வார்த்தை எதுவும் வரவில்லை. பின் இதயாவே,
“வீட்டுக்கு சொன்னீங்களா?…” என்று கேட்க,
“இல்லை இனிமே தான்…”
“முதல்ல சொல்லுங்க. நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னு. சொல்லுங்க…” என்று சொல்லியதும் கண்ணனுக்கு அப்போதே அவளை பார்க்கவேண்டும் போல் இருந்தது.
“ஓகே, அத்தை, மாமாட்ட சொல்லிடு…” என்றான் அவன்.
“ம்ஹூம், நான் இதை சொல்ல போறதில்லை. நீங்களே சொல்லுங்க. ஆனா இன்னைக்கு இல்லை, நாளைக்கு. முடிஞ்சா நேர்ல கூட சொல்லலாம்…” என்றாள் ஒரு சிரிப்புடன்.
“ஏன் நாளைக்கு? நாளைக்கு என்ன விசேஷமா?…”
“ஆமா, அப்பாம்மா வெடிங் அனிவேர்சரி….”
“வாவ், அப்போ கண்டிப்பா நேர்ல தான் சொல்லுவேன்…”
“ஓகே, வெய்ட்டிங்…”
“சரி என்ன புடிக்கும்னு சொல்லு. அத்தைக்கும், மாமாவுக்கும்…”
“என்னை தான் புடிக்கும். இப்போ உங்களையும்…”
“ஹேய், இதானே வேணாங்கறது. நீ என்ன கிப்ட் பன்ற?…”
“கிப்ட் வாங்கிட்டேன். நாளைக்கு தான் குடுக்கனும். அதான் வரீங்க தானே? வரவும் காண்பிக்கறேன்…” என்று சொல்லமுடியாதென மறுத்தவள்,
“இன்னும் கொஞ்சம் நேரம் பேசினா நானே உளறிடுவேன். அதனால போனை வைக்கறேன்…” என்று சொல்லி கட் செய்துவிட்டாள்.
அப்படி ஒரு சந்தோஷம் மனதினுள். அவனின் ஆசை நிறைவேறிவிட்டதில் அகமகிழ்ந்து போனாள்.
முதலில் தானே நவீனிடமாவது சொல்லிவிடலாம் என்று நினைத்திருக்க பின் அதையும் ஒத்திவைத்தாள். கண்ணனே நேரில் வந்து பேசிக்கொள்ளட்டும் என்றுவிட்டாள்.
மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு கிளம்ப கிளம்பும் பொழுதே நவீனுக்கும் கால் செய்துவிட அவனும் வந்துவிட்டான் விரைவிலேயே.
“என்னம்மா பெய்ண்டிங் எல்லாம் முடிஞ்சதா?…” என்று உள்ளே வந்ததும் கேட்க,
“இன்னும் கதவுக்கு வார்னிஷ் மட்டும் அடிக்கனும்டா பூவி. மத்த எல்லாம் முடிஞ்சது…” என்று அயர்வுடன் அமர்ந்தார் மஞ்சு.
“ரொம்ப டயர்டா இருக்காம்மா? நீ இரு, மத்ததை நான் பார்க்கறேன்…” என்று மகள் உடை மாற்றி வர,
“இப்பத்தான உன் அத்தை கிளம்பினாங்க. தனியா ஒன்னும் பார்க்கலைம்மா. லேசா அசதியா இருக்குது, அவ்வளோ தான்…” என்று சொல்லியவர்,
“அப்பாவுக்கு ஒரு போன் போடு பூவி. கடையை சாத்திட்டு இன்னைக்கு வெரசா வர சொல்லு. உன் கல்யாணம் முடியற வரைக்கும் எட்டரைக்கே கடையை சாத்துங்கன்னா கேட்கறதே இல்ல…” என்று அங்கலாய்த்துக்கொண்டே டீ போட சென்றார்.
அய்யாசாமி சிதம்பர நடராஜர் கோவில் அருகே ஒரு டிபன் கடை வைத்திருந்தார். கீழே தனது கடையும், மாடியில் இரண்டு பகுதிகளாக இருக்கும் இரண்டு கடையை வாடகைக்கும் விட்டிருந்தார்.
“ம்மா, அதான் நான் வரேன்னு சொன்னேன்ல. உட்காருங்க…” என்றவள் அங்கேயே மஞ்சுவை அமர வைத்துவிட்டு மூவருக்குமாக டீயை போட,
“நவீன் அடுத்த வாரத்துல லீவ் போடுப்பா. அப்பாவுக்கு ஒத்தையில முடியாது…”
“ம்மா, இதை நீ சொல்லனுமா? அதெல்லாம் போட்டுடலாம்…” என்று அங்கேயே அமர்ந்து டீயை குடிக்க ஆரம்பித்தனர்.
“இன்னும் ரொம்ப எல்லாம் வேலை இல்லை தானேம்மா? உள்ளூர்ல, பக்கத்து ஊர்கள்ல தான பத்திரிக்கை வைக்கனும். நான் என் ஆபீஸ்ல நெக்ஸ்ட் வீக் வைக்கலாம்ன்னு இருக்கேன்…” என்று இதயா சொல்ல,
“பூவிக்கா என் ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் ட்ரீட் வைக்கனும். அதுக்கு தனியா எனக்கு அமௌண்ட் கட் பண்ணிடு…” என நவீன் கேட்டதும் சிரித்தவள்,
“அதெல்லாம் பண்ணிடலாம்டா. ஆனா என்ன பார்ட்டின்னு பார்த்துட்டு தான் குடுப்பேன்…” என்றதும்,
“பூவிக்கா, உனக்கு தெரியாதா? பசங்க கேட்கறாங்க. ஒருத்தன்கிட்ட பொறுப்பை விட்டா அவனே மேனேஜ் பண்ணிப்பான். இல்லனா விடமாட்டானுங்க பூவிக்கா…”
“உங்களை எல்லாம் அடிச்சு வளக்காம தான அம்மாவையும் வச்சுக்கிட்டு இந்த பேச்சு பேசற?…” என்று மஞ்சு நவீனின் தொடையில் கிள்ளி வைக்க,
“ம்மா…” என்ற அலறலுடன் குதித்துக்கொண்டு எழுந்தான் நவீன்.
“ம்மா, அவன் ஒழுங்கா இருக்கான்ல. விடேன்…” என்று தம்பியை காப்பாற்றியவள் அவனுக்கு கண்சிமிட்டி ஆதரவு தெரிவிக்க இதயாவை கட்டிக்கொண்டான் நவீன்.
“பூவிக்கா நீ ரொம்ப ஸ்வீட்…”
“பார்த்துடா எறும்பு மொச்சிடும்…” என்று கலகலக்க இரு பிள்ளைகளில் நிறைந்த புன்னகையை மனதார ரசித்தார் மஞ்சு.
அதன் பின்னர் இரவு உணவு யசோதா வீட்டில் இருந்தே வந்துவிட இரு குடும்பங்களுமாக அன்றிரவு கேக் வெட்டி அய்யாசாமி, மஞ்சு இவர்களின் திருமண நாளை கொண்டாடினார்கள்.
இருவருக்குமே புது மொபைலை நவீனும், இதயாவும், தீப்தியும் சேர்ந்து பரிசளிக்க உடனே பழைய போனில் இருக்கும் சிம் மாற்றப்பட்டு உடனே கணவன், மனைவி இருவருக்கும் மாற்றி அழைப்பு விடுத்து பேச சொல்லி அத்தனை கலாட்டா செய்தார்கள் பிள்ளைகள்.
“இதுல ஸ்பெஷல் என்ன தெரியுமா நவீ? பர்ஸ்ட் கால் ரெண்டு பேர் மொபைல்லையும் ரெக்கார்ட் ஆகிடும். மெமெரி தானே?…” என்று இதயா சொல்ல,
“பூவி நீ வர வேற லெஜென்ட் ஆகிட்டு வர இந்த லவ் டாப்பிக்ல. ஓவர் ஸ்பீட் போகாத அண்ணி…” என தீப்தி கிண்டல் பேச அன்று அவர்கள் உறங்கவே விடியற்காலை ஆனது.
அந்த நிம்மதியான உறக்கம் அன்று மட்டுமே அவர்களுக்கு வாய்த்தது. அதன் பின்னான நிகழ்வுகள் மொத்த வாழ்க்கையையும் புரட்டிபோட்டது.
மறுநாள் கண்ணனுக்கு எப்போது வருகிறாய் என்று கேட்டு அழைப்பு விடுக்க அவன் எடுக்கவே இல்லை.
அவளின் எந்த அழைப்பையும் எடுக்கவில்லை. அனுப்பும் மெசேஜ் எல்லாம் பார்க்கப்பட்டு இருக்க என்னேவென்றே புரியவில்லை.
நிஷாவிற்கு அழைக்க அவளோ இதயா தான் பேசுகிறாள் என்றதுமே கண்ணன் வீட்டில் இல்லை என்று சொல்லி போனை கட் செய்துவிட்டாள்.
எதுவோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. மனது ஒரு நிலையில் இல்லை. யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு ஒரு நிம்மதியின்மை இதயாவை ஆட்டிப்படைக்க அதற்கு மறுநாள் இடியென அந்த செய்தி.
அலுவலகத்தில் இருந்தவளுக்கு நவீனிடம் இருந்து அழைப்பு, மஞ்சு மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக.
அதுவரையிலும் கூட என்ன நடந்தது என்று தெரியாமல் அவள் தவிக்க ஹாஸ்பிட்டலில் தாய் நலம் என்று சொல்லிய பின்னர் தான் அவளிடம் அந்த செய்தியே பகிரப்பட்டது. உடல் இறுகி போனாள்.
உடனே கண்ணனுக்கு அழைக்க அப்போதும் அவனை தொடர்புகொள்ள முடியவில்லை.
அத்தனை குறுஞ்செய்திகள் வேகவேகமாய் அடித்து அனுப்ப அதற்கும் பதிலில்லை. அழுகை பொங்க பதட்டமான பரிதவிப்பான குரலுடன்,
“என்னாச்சு கண்ணன்? ஏன் பேசமாட்டேன்றீங்க? என்ன நடக்குது? இங்க எங்கம்மாவுக்கு அதிர்ச்சில உடம்புக்கு முடியலை. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். ப்ளீஸ் எதாது பேசுங்க. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க…” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்தாள்.
எதற்கும் பதிலில்லை அவனிடத்தில். இப்படி தன்னுடைய பதட்டத்தை கூட அவன் என்னவென்று கேட்கவில்லை என்ற கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாக துவங்கியது.
அன்று மட்டுமல்ல, அதற்கடுத்த இரண்டு நாட்களும் அவன் அழைக்கவில்லை. என்ன ஏதென்று கேட்கவில்லை. திசையறியாத திக்கில் தடுமாறி நிற்கும் நிலையில் உடைந்து போனாள் பூவிதயா.