ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 13
கண்ணனின் முகத்தில் கிஞ்சித்தும் மகிழ்ச்சி என்பதே இல்லை. ஆற்றாமை, இயலாமை, கோபம், ஆவேசம் என்று பலதரப்பட்ட உணர்வுகள் பொங்கிக்கொண்டு இருந்தது.
அவனருகே இருந்த கட்டிலில் தன் வருங்கால மாமனார் மாமியாருக்கு பரிசளித்து ஆசிர்வாதம் வாங்கவென வாங்கி வைத்திருந்த உடைகள் இருக்க பார்க்க பார்க்க தாளவில்லை.
எத்தனை சந்தோஷத்துடன் தன்னுடைய கனவு நிஜமாகியது என்று வந்து சொல்லி நண்பர்களை பார்க்க சென்றான்.
சென்று வரும் முன்னே அவனின் வாழ்க்கையையே மாற்றி அமைக்க முடிவு செய்துவிட்டார்களே?
அத்தனை கலவரம். சடுதியில் நிதானமிழந்து கோபத்தின் வசம் சென்றவனின் நிலையை ஆளாளுக்கு தங்களின் நிலைக்கேற்ப மாற்ற முயன்றது இன்னுமே ஆத்திரத்தை கிளப்பியது.
கண்ணை மூடி அமர்ந்திருந்தவனுக்கு அன்று காலை சிதம்பரத்திற்கு கிளம்பும் நேரம் நடந்தவை எல்லாம் படமாய் விரிந்தது கண்களுக்குள்.
காலை கண்ணன் இனிப்புகளுடன் கிளம்பி அறையை விட்டு வெளியே வரும் பொழுதே உத்ராவும் அவளின் மாமியார் காஞ்சனாவும் சிவசுந்தரத்திடம் பேசிக்கொண்டிருக்க அவரின் முகம் அத்தனை யோசனையுடன் இருந்தது.
“வாங்க அத்தை…” என்று காஞ்சனாவை வரவேற்றவன் கையில் இருந்த இனிப்பை உத்ராவிடம் நீட்டி,
“அக்கா எல்லாருக்கும் எடுத்து குடுங்க…” என்று சொல்லியவன்,
“அப்பா இன்னைக்கு ஈவ்னிங் பெயிண்ட் பண்ண எல்லா திங்க்ஸும் வந்திரும். இதே கலரே அடிக்க சொல்லிட்டேன். பசங்க ரெண்டு பேர் கூடுதலாவே சொல்லியிருக்கேன். அதனால வேலை கம்மியா தான் இருக்கும். ஒரே நாள்ல அடிச்சு முடிக்கிற மாதிரி பார்த்துக்கலாம்…” என்றான்.
அவன் பேச பேச சிவசுந்தரம் அமைதியாகவே இருந்தார். ஆமோதிப்பாக ஒரு தலையசைப்பு கூட இல்லை.
“வெளில கிளம்பிட்டியா கண்ணா?…” என அவன் பேசியதை கணக்கிலெடுக்காமல் உத்ரா சொல்ல,
“ஹ்ம்ம், ஆமாக்கா, இப்ப கிளம்பனும்…” என்றான் கண்ணன்.
“சரி அதை அப்பறம் பார்த்துப்போம். இப்போ கொஞ்சம் இங்க உட்கார், அத்தை உன்கிட்ட தான் பேசலாம்ன்னு வந்திருக்காங்க…” என உத்ரா சொல்லவும் மறுக்காமல் அமர்ந்தவன் தாயையும், நிஷாவையும் தேட நிஷாவோ ‘கேட்காதே, வேண்டாம்’ என்பதை போல தலையசைத்தாள்.
“நிஷா, இந்த பேக்கை ரூம்ல வச்சிடு. கிளம்பும் போது எடுத்துக்கறேன்…” என்று நீட்டவும் அவள் வந்து வாங்கி செல்ல,
“சொல்லுங்க அத்தை…” என்று தங்கையில் இருந்து பார்வையை திருப்பினான்.
“சொல்லுப்பா கண்ணா, கலெக்ட்டர் ஆகிட்ட, ரொம்ப பெருமையா இருக்குது. அடுத்து என்ன செய்யனும்?…” என்று பேச என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை அவனுக்கு.
“என்ன என்ன? என்ன செய்யனும் அத்தை? புரியலையே…” என்று பார்த்தான்.
“அத்தைக்கு ரொம்ப சந்தோஷம் நீ கலெக்டர் ஆனதுல. அதத்தான் சொல்றாங்க…” என உத்ரா எடுத்துக்கொடுக்க,
“ஓஹ், சந்தோஷம் அத்தை…” என்றான் தன் நெஞ்சில் கை வைத்து ஒரு புன்னகையோடு.
“நினைச்சதும் கலெக்ட்டர் ஆக அதென்ன கடல மிட்டாயா? உள்ள வேலைய பாக்க சொல்லு…” என்று காதுபடவே பேசியவர் தானே இந்த காஞ்சனா? இப்போதும் அவை மறந்துவிடுமா அவனுக்கு?
ஆனாலும் வாயை மூடிக்கொண்டு தான இருந்தான். தான் கிண்டலாக ஏதேனும் பேசிவிட்டால் காஞ்சனா பிரச்சனை செய்வாரோ இல்லையோ? இங்கே உத்ராவே பிரச்சனையை உண்டுபண்ணிவிடுவாள் என்பதால் வழக்கம் போல மௌனமாக இருந்தான்.
“அப்பறம் அடுத்து என்ன பண்ணறதா இருக்க?…” என காஞ்சனா கேட்க,
“கல்யாணம் முடிஞ்சு நாலு நாள்ல ட்ரெயினிங் கிளம்பனும் அத்தை. ட்ரெயினிங் பீரியட் முடியவும் அடுத்து போஸ்ட்டிங் அவங்களே அலார்ட் பண்ணுவாங்க…”
“ஓஹ், ட்ரெயினிங் போகனும்னா வேலையை விட்டுட்டு தானே போகனும்? சம்பளம் இருக்காதே? எதாச்சும் உதவின்னா தயங்காம கேளுப்பா. தாராளமா செய்யறேன். நம்ம பிள்ளைக்கு நாம செய்யாம எப்படி?…” என்று சொல்ல கண்ணனுக்கு சுறுசுறுவென்று ஏறியது.
“பொண்ணை பெத்தா சொன்ன நகை இதெல்லாம் செஞ்சு தான ஆகனும்? பின்னாடி போடறேன்ற கதையே வேண்டாம். எல்லா நகையும் போட்டுத்தான் ஆகனும்…” என்று கட் அன்ட் ரைட்டாக காஞ்சனா உத்ராவின் திருமணத்தின் போது பேசியவை எல்லாம் அச்சுபிசகாமல் ஞாபகத்தில் இருந்தது.
கண்ணன் சிவசுந்தரத்தை சற்று கண்டனத்துடன் பார்த்துவிட்டு உத்ராவையும் முறைத்தான்.
“அத்தை உன் நல்லதுக்கு தான் கேட்காங்க கண்ணா. சொல்லு…” என உத்ராவும் பேச,
“ஏன் அக்கா இங்க நம்ம வீடு உதவி வாங்கற நிலமையிலையா இருக்குது? ஏன் உங்களுக்கு தெரியாதா? இல்ல நீங்களும் அப்படித்தான் நினைக்கறீங்களா?…” என்று கேட்டதும் எழுந்து நின்றுவிட,
“இப்ப என்ன கேட்டுட்டாங்கன்னு இவ்வளவு கோவம் வருது கண்ணா? ட்ரெயினிங் போனும்ல. அதை தான அத்தை கேட்கறாங்க, நீ ஏன் தப்பா புரிஞ்சுக்கற….” என்று உத்ராவும் கோபத்துடன் ஆரம்பிக்க,
“கண்ணா விடுப்பா. இதென்ன சம்பந்தியம்மா முன்னாடி சண்டை போடற மாதிரி பேசிட்டு?…” என்று சிவசுந்தரம் தடுக்க,
“அப்பா, இதை நீங்க பேசிக்கோங்க. நான் கிளம்பறேன்…” என்று கண்ணன் சொல்லவும் உத்ரா,
“எங்க கிளம்பற? ஏதோ புது ட்ரெஸ் எல்லாம் வாங்கிருக்க போல? யாருக்கு?…”
“யாருக்கா இருந்தா என்ன உங்களுக்கு?…” என்றவன்,
“என் மாமனார், மாமியாருக்கு இன்னைக்கு கல்யாண நாள். அதான் பார்த்துட்டு வரலாம்னு இருக்கேன்…” என்று சொல்ல உத்ராவும் காஞ்சனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“ஓஓஹோ கதை அப்படி போகுதா? அதானே பார்த்தேன். எங்க அம்மா, அப்பாவுக்கு எடுத்துட்டியோன்னு நினைச்சுட்டேன்…” என நக்கலாக உத்ரா பேச,
“ஏன் இதுவரைக்கும் அவங்களுக்கு நான் எடுத்து குடுத்ததே இல்லையா என்ன? ஒவ்வொரு விசேஷத்துக்கும் நான் தானே எடுக்கறேன்….” என கண்ணனும் பதிலுக்கு பேசினான்.
“பார்த்தீங்களாப்பா? உங்க முன்னாடியே இப்படி பேசறானே? நாளைபின்ன கல்யாணம் ஆகிட்டா?…”
“ப்ச், இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு? நான் அங்க போய் பார்த்துட்டு வரதால என்ன?…” கண்ணன் நேராய் பார்த்து கேட்க,
“கல்யாணமே வேண்டாம்னு பேசிட்டு இருக்கும் போது நீ கிளம்பி உறவு வளர்க்க போறேன்னு சொன்னா எப்படி இருக்கும்?…” என்று உத்ரா வேகமாய் சொல்லிவிட கண்ணனின் தலையில் இடி இறங்கியதை போல ஆனது.
“என்ன சொல்றீங்க? உளறாதீங்க…” என்றான் கோபத்துடன்.
“என்னப்பா பேசறாங்க அக்கா? எனக்கு ஒன்னும் புரியலை. கல்யாணத்தை நிறுத்தனும்னா?…” என்று சிவசுந்தரத்தை பார்க்க அவர் வாயே திறக்கவில்லை.
“அங்க என்ன பேசற? இங்க நானும் அத்தையும் தான் பேசிட்டு இருந்தோம். அப்பாவுக்கும் சம்மதம் தான். உன்கிட்ட சொல்ல தயங்கிட்டு இருக்கார்…” என்று உத்ரா வேகமாய் பேச,
“என்ன பேச்சு இதெல்லாம்? முதல்ல இப்படி அபத்தமா பேசறதை நிப்பாட்டுங்க…” என்றவனின் கோபமோ, பேச்சோ அங்கே எடுபடவே இல்லை.
“நேத்து தான் எம்.எல்.ஏ வீட்டுல இருந்து ஒரு தகவல் அத்தைக்கு வந்துச்சு. எம்.எல்.ஏ சம்சாரமே பேசினாங்க அத்தைட்ட. அவங்க பொண்ணை கட்டி வைக்க இப்ப சம்மதமாம். வீட்டோட மாப்பிள்ளையா எல்லாம் வேண்டாமாம். பொண்ணை சீர்வரிசையோட அனுப்பறேன்னு சொல்றாங்க…”
“அதுக்கு?…” என்றான் பார்வையில் கூர்மையை கூட்டி.
“அதான் காலுக்கு உதவாதத கழட்டி வீசிட்டு…”
“உத்ராக்கா…” என்று கண்ணன் கத்த,
“என்ன கண்ணா என் முன்னாடியே அவளை எதிர்த்துட்டு நிக்கிற?…” என காஞ்சனாவும் வந்து நிற்க,
“என் அக்கா, நான் பேசறேன். உங்களுக்கு என்ன?…” என அவரிடமும் அவன் பேச,
“கண்ணா பொறுமையா பேசுப்பா…” என்று மகனின் அருகே வந்தார் ருக்மணி.
“பின்ன என்னம்மா? பொண்ணை பார்த்து நிச்சயம் பண்ணி கல்யாணம் வரை வந்துட்டு இப்போ இப்படி பேசறாங்க. அசிங்கமா இல்லையா?…”
“என்ன கண்ணா வார்த்தை நீளுது?…” என உத்ரா கேட்க,
“நீங்க பேசினது மட்டும் நல்ல வார்த்தையோ? ஒரு அளவுக்கு தான் பொறுமை எல்லாம்…” என்றவன் சிவசுந்தரத்தை பார்த்து,
“ஏம்ப்பா நான் கல்யாணம் வேண்டாம்னு தான இருந்தேன்? பாஸ் பண்ணிட்டு பண்ணிக்கறேன்னு தான சொன்னேன்? நீங்க தானே பேசி முடிச்சு வச்சீங்க? இப்போ வந்து இப்படி பேசறாங்க, பார்த்துட்டு இருக்கீங்க?…”
“அதான நானும் சொல்றேன். நாங்க தானே பார்த்து வச்சோம். இப்போ நாங்களே வேண்டாம்னு சொல்றோம். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வரும் போது இதை எல்லாம் பெருசா நினைக்க கூடாது…” என்றவள்,
“சொல்லுங்கப்பா, இப்ப உங்க மகன் கலெக்டர். அப்போ அந்த அந்தஸ்துல தான பொண்ணை பார்க்கனும். நல்ல சம்பந்தம் தேடி வந்திருக்குது. தேடி வந்த ஸ்ரீதேவியை நாமலே தட்டி விடற மாதிரி ஆக கூடாதுல. நாளைக்கு ஊரே சொல்லும், கலெக்டர் மகன், எம்.எல்.ஏ சம்பந்தின்னு…”
உத்ரா சிவசுந்தரத்தை யோசிக்கவே விடவில்லை. தன் வழியிலேயே திருப்பிக்கொண்டு இருந்தாள். அவரும் இருதலைக்கொள்ளி எறும்பென தான் இருந்தார். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதை போல.
“இவ்வளவு பேசறீங்க? ஏன் இதுவே இந்த ரிசல்ட் கல்யாணம் ஆனா பின்னாடி வந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க?…” என்ற கண்ணனிடம்,
“அதான் கல்யாணம் ஆகலையே. எந்த சாமி புண்ணியமோ நீ தப்பிச்ச. விட்டது தொல்லைன்னு…” என்று உத்ரா பேச பேச தன் வீட்டினரை சுற்றி பார்த்தான்.
சிவசுந்தரம், ருக்மணி, நிஷா என ஒருவருமே அவனுக்கு ஆதரவாக பேசவில்லை. அத்தனை பேரும் காஞ்சனாவையும், உத்ராவையுமே பார்த்தபடி இருந்தார்கள்.
“மனசாட்சின்னு ஒரு இருக்கா உங்களுக்கு? கல்யாணம்னு பத்திரிக்கை அடிச்சு ஊரெல்லாம் குடுத்து, அவங்க வீட்டுல பெயிண்ட் பண்ணி முடிச்சு, அடுத்த வாரம் பந்தக்கால் நட இருக்கும் போது இப்படி பேசறீங்களே?…” என்று ஆற்றாமையுடன் கேட்க,
“இப்ப ஊர் உலகத்துல நடக்காததா இங்க நடக்குது? பொண்ணை புடிக்கலைன்னு எத்தனை மாப்பிள்ளைங்க மேடையை விட்டு எந்திச்சு வராங்க. நீ என்ன சும்மாவா?…” என்றாள் இரக்கமற்று.
கண்ணன் இதற்கு மேலும் வாதாடி பிரயோஜனமில்லை என்று நினைத்தவன் முடிவாய் அவர்களை பார்த்தான்.
“உங்கக்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இங்க பாருங்க. எனக்கு இதயாவை தான் பிடிச்சிருக்குது. அவளை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன். இதை மாத்த யாரும் நினைக்க கூடாது….” என்று விரல் நீட்டி சொல்ல,
“என்ன என்ன பேசற நீ? உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கனும்னு முடிவு பண்ணினது அப்பாவும், நம்ம குடும்பமும் தான். அவளை விட நல்ல பொண்ணா இப்போ பார்த்திருக்கோம்னு சொல்றோம். அதை மதிக்கமாட்டியா நீ?…” என்று குதித்த உத்ரா,
“என் மாமியார் உன்னோட எதிர்காலத்துக்காக எத்தனை இறங்கி வந்து பேசினா உனக்கு இளக்காரமா போச்சா?…” என சொல்லிவிட்டு,
“பார்த்தீங்களாப்பா? இன்னும் அவ இந்த வீட்டுக்குள்ளயே வரலை. அதுக்கு முன்னாடியே அவளை விடமுடியாதுன்னு இப்படி பேசறானே? நினைச்ச நேரம் எல்லாம் போய் பார்க்க வேற செய்யறான். அப்ப எந்தளவுக்கு மயக்கி வச்சிருக்கா?…”
“உத்ராக்கா ரொம்ப பேசறீங்க…” என்று கண்ணன் எச்சரிக்க,
“அப்படித்தான் பேசுவேன். இப்பவே அவளுக்காக நம்ம வீட்டை, என்னை, என் மாமியாரை எதிர்த்து நிக்கிறியே? கல்யாணம் ஆகிட்ட ஏல்லாரையும் அம்போன்னு விட்டுட்டு அவ பின்னாடி போகமாட்டன்னு என்ன நிச்சயம்?…”
“அப்போ இப்போ நீங்க பார்த்த பொண்ணு வீடு மட்டும் ரொம்ப நல்லவங்களோ? கல்யாணத்துக்கு முன்னாடியே வீட்டோட மாப்பிள்ளையா என்னை பிரிக்க நினைச்சாங்க தானே?…” என கேட்கவும் ஒரு நொடிதான் திகைப்பு எல்லாம் உத்ராவிற்கு.
“அத்தனை பெரிய இடம், அவங்க பொண்ணு நல்லா வாழனும்னு அப்படி பேசறாங்க. ஆனா இப்ப பார்த்திருக்கறது எல்லாம் ஒரு இடமா? வேண்டாம்னு சொன்னா வாயை மூடிட்டு கேட்டுட்டு போய்த்தான ஆகனும்….” என்றவள்,
“என்ன நீ இத்தனை சொல்லியும் இப்படி பேசற? என்ன அந்தளவுக்கு அவ உனக்கு முக்கியமா போய்ட்டாளா?…” என்று பேச பேச அவளை அடக்குவார் ஒருவரும் இல்லை.
“கண்ணா நீ உள்ள போப்பா. இப்பவே இவ்வளவு பேச்சு வேண்டாம். பொறுமையா பேசுவோம்…” என ருக்மணி கண்ணனைத்தான் அமைதிப்படுத்தினார்.
“என்னம்மா நீங்களும்? இவங்க வாய்க்கு வந்தபடி இதயாவை பேசுவாங்க. நான் கேட்டுட்டு இருக்கனுமா? அவங்களை பேசாம இருக்க சொல்லுங்க முதல்ல. இல்லைன்னா…”
“இல்லைன்னா? இல்லைன்னா என்ன பண்ணுவ? இப்ப உனக்காக என் மாமியார் பேசி முடிச்சு இந்த சம்பந்தத்தை நடத்தி வைக்கனும்னு தானா முன்வந்து நிக்கறாங்க. உனக்கு அவ்வளவு இளப்பமா போச்சா கண்ணா?…”
“எது? நடக்க இருக்கற கல்யாணத்தை நிறுத்திட்டு இன்னொருத்தரை உங்க ஆதாயத்துக்காக கட்டிவைக்க நினைக்கிறது முன்வந்து நடத்தறதா?…” என்றான் கண்ணன்.
“என்ன ஆதாயம்? இல்ல எங்களுக்கு என்ன ஆதாயம்ன்றேன்? நீ நல்லா இருந்தா பெருமைக்கு சொல்லிக்கலாம். வேற என்ன இருக்குது எங்களுக்கு? நீ நல்லா இருக்கனும்னு நினைச்சதுக்கு…” என காஞ்சனாவும் எகிற,
“ஏன் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? அந்த பொண்ணோட அப்பா இடத்துல தானே நீங்க உங்க கடையை வச்சிருக்கீங்க?…” என்று கண்ணன் பேசவும் காஞ்சனா திருதிருவென முழித்தார்.
“கண்ணா, இதென்ன பேச்சு? நாம எல்லாம் ஒரே ஊர். நாளைப்பின்ன எதுவும்னா நின்னு கேட்போம்ல…”
“யார் நீங்க எல்லாம்? இப்போ பேசற மாதிரியா?…” என கண்ணன் விடாப்பிடியாக நிற்க,
“ப்ச், அப்பா, நீங்க சொல்லுங்க. இவன்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. பார்த்தீங்களா? இத்தனை நாள்ல ஒருநாளாச்சும் இப்படி இத்தனை நேரம் பேசியிருப்பானா? இன்னைக்கு என்னன்னா எவ்வளவு பேச்சு? இருக்கற இடம் தெரியுமா? அவ்வளவு அமைதியா இருப்பான். இப்ப எத்தனை கத்து?…”
“உத்ராக்கா, என்கிட்டே பேசுங்க, இது என்னோட வாழ்க்கை. என் எதிர்காலம். நான் ஒன்னும் தெரியாத பொண்ணை லவ்ன்னு சொல்லி பேசிட்டு நிக்கலை. நீங்க எல்லாரும் சேர்ந்து காமிச்ச பொண்ணை தானே விரும்பியிருக்கேன். ஊரறிய நிச்சயம் முடிஞ்சு அவ இப்போ எனக்கு எத்தனை முக்கியம்…”
அதற்கு மேலும் பேச அவனின் நாகரீகம் இடமளிக்கவில்லை. அதே நேரம் சாத்வீகமாகவும் பேசமுடியவில்லை. முடிந்தளவு பொறுமையை கையாள நினைக்க,
“ஊரறிய நிச்சயம் தானே முடிஞ்சது? என்னவோ கல்யாணம் முடிஞ்சு வந்தவ கழுத்துல கிடந்த தாலியை…” என்று உத்ரா சொல்லவுமே,
“உத்ராக்கா…” என்று கையை ஓங்கிவிட்டான் கண்ணன்.
அவன் கை ஓங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி என்றால் எங்கே அடித்துவிடுவானோ என்னும் பயத்தில் பின்னே சாய்ந்த உத்ரா அவளுக்கு பின்னால் இருந்த கனத்த கண்ணாடி டீப்பாயின் கூர்மையில் நச்சென்று விழுந்தது அனைவரையும் ஸ்தம்பிக்க செய்தது.
விழுந்த வேகத்தில் கண்ணாடியும் உடைய தலை கிழிந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது.
“ஐயோ என் மருமகளை அடிச்சு கொல்ல பார்க்கானே??…” என்று காஞ்சனா ஊரை கூட்ட பார்க்க அதற்குள் சிவசுந்தரம் ஓடி சென்று ஒரு ஆட்டோவை எடுத்து வர கண்ணன் உத்ராவை தூக்க சென்றான்.
“என் மருமகளை தொட்ட, உன்ன சும்மா விடமாட்டேன். என் மகன் ஊர்ல இல்லாத நேரத்துல இப்படி பண்ணிட்டியே? நல்லா இருப்பியா?…” என்று அழுது கரைந்தவரிடம் இருந்து உத்ராவை கை தாங்களாக தூக்கிக்கொண்டு சிவசுந்தரம் செல்ல அவரின் பின்னே ஓடினார்கள் காஞ்சனாவும் நிஷாவும்.
“என்ன கண்ணா இப்படி பண்ணிட்ட? பொறுமையா இருன்னு சொன்னேனே? கேட்டியா?…” என அப்போதும் மகனை சொல்லிவிட்டு ருக்மணி செல்ல கண்ணன் அப்படி நின்றது ஒரு நொடிதான்.
உடனே தனது பைக்கை எடுத்துக்கொண்டு அவர்கள் பின்னோடு செல்ல மருத்துவமனையில் இவன் சென்ற சில நிமிடத்தில் காஞ்சனாவின் சொந்தங்கள் கூடிவிட்டார்கள்.