ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 15
அவளின் அந்த கல்யாண கனவுகளில் அந்த மிச்சங்கள் கூட இருவரையும் எரித்தது.
“இதயா…” என்று அவன் அவளை இறைஞ்சுதலாக அழைக்க,
“இப்ப எதுவும் பேசற நிலைமைல நான் இல்லைங்க. ப்ளீஸ்…” என்றாள் அவள்.
“சரி, நான் பண்ணினது தப்பு தான். ஆனா ஏன்னு உனக்கு புரியாதா?…”
“என்ன புரியாதா? நீங்க எதுவும் சொல்லாம மனசுக்குள்ள வச்சுட்டு அதை நான் சொல்லாமலே புரிஞ்சுக்கனும்னு நினைப்பீங்க. நான் என்ன? ப்ச். வேண்டாம்…”
“சரி எதுவா இருந்தாலும் இங்க வந்து நாம பேசியிருக்கலாமே? நீ என்கிட்டே இப்போ சொல்லலாமே? அங்க வச்சு தனியா வான்னு சொன்னா அத்தனை பேரையும் வச்சுட்டு எப்படி வர? ஓகே, இப்போ சொல்லு. நீ காரணமில்லாம செஞ்சிருக்க மாட்ட. ஆனா ஏன்? என்ன ஆச்சு? சொல்லு….”
“என்ன சொல்லனும்?…” என்றாள் விட்டேற்றியாக.
“என்ன நடந்துச்சுன்னு சொல்லு இதயா?…”
“அதை சொல்லுற நேரமும் போச்சு, உங்க மேல நம்பிக்கையும் போச்சு…”
“இதயா…”
“ஆமா நான் சொல்லத்தானே கூப்பிட்டேன்? ஆனா உங்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறது மட்டும் தானே முக்கியமா பட்டுச்சு. ஒரு விஷயம் நடந்தா அதை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம மன்னிப்பு மட்டும் கேட்டா எல்லாம் முடிஞ்சதா? அப்போ பேசினவங்களுக்கு?…” என்றவள் பின் அமைதியாக,
“இப்போ உங்ககிட்டையும் சொல்லியும் நோ யூஸ். இனி சொல்லவும் மாட்டேன். வேணும்னா என்ன பேசினாங்கன்னு பேசினவங்கட்டையே கேட்டுக்கோங்க…”
“அப்போ அந்நேரமே எல்லாரையும் வச்சுட்டு சண்டை போட்டிருக்கனும்னு சொல்றியா?…”
“என்னை வச்சுட்டு சண்டை போடுங்கன்னு சொல்லலை. ஆனா எனக்கான மரியாதை சபையில போகும் போது அங்கேயே நின்னுட்டு இருந்தீங்க. ஒரு வார்த்தை கூட என் பேச்சுக்கு நீங்க காது குடுக்கலையே…”
“ப்ச், இதயா சூழ்நிலை…”
“நிஜமா ரொம்ப ரொம்ப மோசமா போய்டுச்சு என் நிலைமை. விரும்பினவனை தேடி வந்து அதுவும் வீட்டுல பேசி முடிச்சவங்களை தானே தேடி வந்தேன்? தப்பு உங்க வீட்டு பக்கம் இருந்ததை சுட்டி காட்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இது எப்படி பின் வாசல் வழியா வந்ததாகும்?…”
அவள் ஆதங்கமும், ஆக்ரோஷமுமாக பேச பேச தாளமாட்டாதவன் அவளை ஆறுதலுக்கு அணைக்க தொட,
“தள்ளி போங்க, நான் தான் பின்…”
“இதயா…” என்று அவளை அடிக்க அவன் கை ஓங்க,
“இதை தானே இத்தனை தடவை அத்தனை பேர் முன்னாடி உங்கக்கா சொன்னாங்க. அப்போ இத்தனை வேகமும் கோபமும் வரலையே. இப்போ நீங்களும் நானும் மட்டும் தானே தனியா இருக்கோம். அதென்னங்க இந்த ரோஷத்துக்கு மட்டும் பொண்டாட்டி வேற, அக்கா வேறன்னு தெரியுது…”
“உத்ராக்கா ஒரு தடவை சொன்னா நீ அதை ஒவ்வொருதடவையும் சொல்ற…” என ஓங்கிய கையை இறக்கியபடி எரிச்சலாய் சொல்ல,
“உங்கக்கா ஒரு தடவை தான் சொன்னாங்களா? இதான் இதான் எனக்கு வெறுத்து போச்சு. எனக்கு சாதகமா பேசுங்கன்னு நான் சொல்லலை. ஆனா அவங்க பேசினதை ஜஸ்டிபை பன்ற மாதிரி பேசாதீங்க…”
“ஹேய் நான் அப்படி பேசலை இதயா…”
“ஆனா பேசவே இல்லை. என்னை பேசவும் விடலை….” என்று மூக்கு விடைக்க சொல்லியவள்,
“நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்க போற நேரத்துல அதை நிறுத்த நினைச்சது யாருக்கும் தப்பா தெரியலை. ஆனா அதை தட்டி கேட்டு தாலி வாங்கினதுக்கு எனக்கு நல்ல பட்டம்…” என்றவள் பேச்சில் உள்ளுக்குள் உடைந்துகொண்டு இருந்தான் கண்ணன்.
உண்மை தானே? அவன் ஒன்று நினைத்து பேசாமல் இருக்க, அவளுக்கோ அது வேறு விதமாய் பதிந்து பாதித்துவிட்டதே என்று மனம் கலங்கினான்.
“இப்பவும் இங்க இருந்து கிளம்பி போய்டலாம்னு தோணுது. ஆனா முடியலையே. ஏன்?…” என்று அவள் முகத்தை மூடிக்கொண்டு பேச,
“ப்ளீஸ்டி முடியலை….” என்று அவளுக்கெதிரே கட்டிலில் அமர்ந்தான்.
“எனக்கு இங்க இருக்கவே முடியலை. ஒரு மாதிரி மூச்சு விடவே கஷ்டமா இருக்குது. ப்ளீஸ் என்னை நீங்களே வீட்டுக்கு கூட்டுட்டு போய்டுங்க. எங்க வீட்டுல விட்டுடுங்க…” என்று இதயா சொல்லவும் எழுந்து நின்றேவிட்டான் கண்ணன்.
“என்ன பேசற நீ? என்ன மீன் பன்ற?…”
“இப்போ எந்த மீனிங்கும் இல்லை. என்னால யோசிக்கமுடியலை. அவசர அவசரமா கோபத்துல முடிவெடுத்து எல்லாம் தப்பு தப்பா போய்டுச்சு. இனி அப்படி ஆக வேண்டாம். நீங்களும் கிளம்பிருவீங்க தானே?…” என்று சொல்ல,
“இதயா, எல்லாம் சரி. ஆனா இப்படி போகறதா?…” என்றான் அவளை தேற்ற முடியாத இயலாமையுடன்.
“வேற எப்படி போக? எனக்கு தெரியலை. நீங்க ஒரு ஐ கேண்டி. பார்க்க பழக ரொம்ப ஸ்வீட். அதான் பார்த்ததுமே எந்த யோசனையும் பண்ணாம உங்களை ஓகே சொன்னேன். அப்கோர்ஸ் நீங்க ரொம்ப அழகு. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது…”
“உங்க பேச்சு, பார்வை இப்படி ஒன்னொன்னையும் அத்தனை ரசிச்சேன். ஆனா இங்க நான் வாழ வரவும் இப்படியெல்லாம் ஆகும்னு நன் என்னைக்கும் நினைச்சதே இல்லை. கலெக்ட்டர், ஆனா பொண்டாட்டியை அத்தனை பேசவிட்டு வேடிக்கை பார்த்த கலெக்ட்டர்…”
“தயவு செஞ்சு உங்க வேலையிலையாச்சும் நடுநிலையா இருங்க. அது போதும். இப்போ என்னை வீட்டுல விட்டுடுங்க. பேசி பேசி இன்னும் பெருசாக்காம நிதானமா பார்த்துக்கலாம்….” என்று அவள் சோர்வுடன் சொல்லிமுடிக்க கண்ணன் அசைந்தானில்லை.
“இப்ப கூட நான் போறதை வச்சு உங்களை யாரும் எதுவும் பேசிட கூடாதென்னும் ஒருபக்கம் தோணிட்டே இருக்குது. ச்சே, என்ன ஆளு நான்…” என்று தன்னை தானே அவள் நிந்தித்துகொள்ள மௌனமாக இருப்பதை தவிர அங்கே அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.
அமர்ந்தவாக்கிலேயே இருவரும் உறங்கி போக விடியற்காலை குளித்து கிளம்பி வெளியே கண்ணன் சென்றதும் ருக்மணி உள்ளே வந்தார்.
“பூவிம்மா…” என வேகமாய் வந்து மருமகளின் கையை பிடித்துக்கொண்டவர்,
“என்னை மன்னிச்சிடும்மா. என்னால எதுவும் சொல்லமுடியலை. ஏற்கனவே கண்ணன் உத்ரா மேல கோவமா இருக்கான். இப்படி பேசினான்னு தெரிஞ்சா உறவே வேண்டாம்னு சொன்னாலும் சொல்லிருவான். அதோட அவ மாமியார் வீட்டாளுங்களும் புருஷனும் இருந்தாங்க….”
“அப்போ அவங்க முன்னாடி என்னை பேசினாங்களே? அது தப்பில்லையா?…” என்று அவள் கேட்க,
“தப்புதான்ம்மா. தப்பு தான். ஆனா எனக்கு என் பொண்ணும், பையனும் ரெண்டு பேருமே முக்கியமாச்சே. என்னால வேற என்ன செய்ய முடியும்? அவ பேசினதை கேட்டு மாப்பிள்ளை இங்கயே விட்டுட்டு போய்ட்டா? அவ எதிர்காலம்? அதான்ம்மா நான் சொல்லலை…”
“இப்போ ஏன் இதெல்லாம் என்கிட்டே சொல்றீங்க? எனக்கு புரியலை. ஆனா உங்களுக்கு இருக்கறது மட்டும் பொண்ணுனா? அப்போ நான் என்ன ஜென்மன்னு நினைச்சீங்க?…” என்றாள் சற்று சூடாக.
“பூவி..”
“நேத்து என்னால தான் எதுவும் சொல்லமுடியலை. ஆனா நீங்க ஒரு வார்த்தை பேசியிருந்திருக்கலாமே? அட்லீஸ்ட் உங்க மகன் என்னை மன்னிப்பு கேட்க சொன்னாரே? மன்னிப்பு கேட்கிறளவுக்கு நான் என்ன பண்ணேன்? அப்போ சொல்லியிருக்கலாமே?…”
“என்னன்னு பேசம்மா? அங்க என்ன பேசினாலும்…” என்றவரை இடை மறித்தாள் இதயா.
அவரிடம் இனி எந்த விதத்தில் கேட்டாலும் இதை தான் பேசுவார் என்று புரிந்து போனது.
“இப்போ இதை சொல்ல தான் வந்தீங்களா?…”
“இல்லம்மா, வந்து. இது கண்ணனுக்கு தெரியாம. அவன்கிட்ட நீ எதுவும் சொல்லிடலையே?…” என்று கேட்கவும் இதயாவின் விழிகளில் கண்ணீர் படர்ந்தது.
‘இல்லை’ என்பதை போல தலையசைத்தபடி அவரையே சற்று அழுத்தமாய் பார்த்தவள் ‘அப்போ இங்கே நான் யார்?’ என்ற எண்ணம் தோன்ற பேசாமல் இருக்க,
“அது போதும்மா, எல்லாம் சரியாகிடும். சரி வந்து சாப்பிடு. நைட்டும் சாப்பிடலை…” என்று சொல்லிவிட்டு வந்த வேலை முடிந்தது என்பதை போல செல்ல அவரை பின்தொடர்ந்து சென்றவள் தீப்தியை தேடினாள்.
வீட்டின் வெளியே இருந்த இடத்தில் போனுடன் நின்றிருந்தவள் இதயாவை பார்த்ததும் வந்து கட்டிக்கொண்டாள்.
“பூவி…” என்று வந்து அவளை கட்டிக்கொள்ள,
“என்னடா?…” என அவளை அணைத்துக்கொள்ள,
“நாம போலாம் பூவி…” என்று சிணுங்கிக்கொண்டு இருக்கும் பொழுதே சுதாகரனும், யசோதாவும் காரில் வந்து இறங்குவது தெரிய,
“தீப்தி என்ன பண்ண?…” என்றாள் அவளிடம்.
“நான் அம்மாவுக்கு கால் பண்ணிட்டேன் நைட்ல. என்னால முடியலை. இங்க வேண்டாம். உன்னை பேசினாங்க தானே?…” என்று அவள் விசும்ப,
“பூவிடா…” என்று யசோதாவும், சுதாகரனும் வந்து பிள்ளைகள் இருவரையும் அணைத்துக்கொண்டனர்.
“என்னங்கடா என்ன நடந்துச்சு?…” என்று யசோதா அங்கேயே சத்தம் போட,
“அத்தை முதல்ல இங்க வச்சு இப்படி பேசாதீங்க…” என்றவள் கையை பிடித்து விறுவிறுவென்று உள்ளே அழைத்து வர,
“வாங்க வாங்க…” என்று ருக்மணி வந்து வரவேற்க,
“என்ன வாங்க வாங்க? பொண்ணா வளர்த்திருக்கீங்க? எங்க பொண்ணை அவ்வளவு பேசவிட்டு நீங்க எல்லாரும் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்தீங்களா?…” என எடுத்ததும் யசோதா கேட்க,
“இல்லைங்க…” என்ற ருக்மணி முதலில் இதயாவை பார்க்க,
“என் பொண்ணு தான் சொன்னா? ஏன் பூவியே சொன்னா என்ன தப்பு? வீட்டுக்கு வந்த மருமகளை முதல் நாளே இவ்வளவு பேசற குடும்பத்தை இங்க தான் பார்க்கறோம்…” என்று யசோதா பேச,
“உங்க வீட்டு பொண்ணு மட்டும் ரொம்ப நல்லவளா? என் பொண்ணை என் முன்னாடியே அவமானப்படுத்தி வெளில போக சொல்றா….” என சிவசுந்தரமும் வர,
“நல்லவளா தான் வளர்த்திருக்கோம். இருக்க போய் தான் தப்புன்னு தெரிஞ்சதும் கண்டிச்சிருக்கா. இதே உங்க பொண்ணு பேசவுமே நீங்க இப்ப இவ எங்க வீட்டு மருமக, பேசாம இருன்னு சொன்னீங்களா? தப்புன்னு கண்டிச்சீங்களா?…” என்று கேட்க வாயடைத்து போனார் சிவசுந்தரம்.
“என்னவோ நாங்க தேடி வந்து உங்க பையனை கேட்டோமா? நீங்களா தானே வந்து பொண்ணை குடுங்கன்னு நின்னீங்க? இப்போ என்னவோ விடாப்பிடியா நாங்க கேட்ட மாதிரி பேசிருக்கா உங்க பொண்ணு. ஏன் இத்தனை பேர் முன்னாடியும் தலைவாசல் வழியா தானே வந்தா எங்க பூவி? ஒருத்தருக்கும் தெரியலையா என்ன?…”
“நீங்க யாரும் பேசலைன்னா அவ தான் பேசுவா. எந்த தப்பும் பண்ணலை. இப்போ வரைக்கும் எங்க சொந்தங்களுக்கு நீங்க பண்ணின குழறுபடி எதுவும் தெரியாது. அதனால தான் யாருக்கும் தெரியாமையே போகட்டும், அதுதான் மரியாதைன்னு என் பொண்ணை சின்னவளா இருந்தாலும் அனுப்பி வச்சேன்….”
“இதுவே எங்க சொந்தக்காரங்க வந்திருந்தா நேத்து நடந்ததுக்கு உண்டில்லைன்னு ஆக்கிருப்பாங்க உங்க எல்லாரையும்…” என்று சொல்லி முடிக்க,
“சித்தி நேத்து நடந்ததுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்….” என்று கண்ணன் பேசவும் தான் அமைதியானார் யசோதா.
“நீங்க மன்னிப்பு கேட்கனும்னு இதை பேசலை தம்பி. நாங்க முதல்லையே இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னோம். பூவிக்கு பிடிச்சதால சம்பந்தம் நிச்சயம் முடிஞ்சு கல்யாணம் வரை வந்துச்சு. அதுக்கப்பறம் இந்த வீடு மனுஷங்க ஆடிய ஆட்டத்துக்கு வேண்டவே வேண்டாம்னு சொன்னோம். அப்போவும் கேட்டாளா இந்த பொண்ணு?…”
யசோதாவை நிறுத்தமுடியவில்லை யாராலும். சுதாகரன் அங்கே தான் பேசினால் பிரச்சனை வேறு விதமாய் மாறிவிடுமோ என்று அமைதியாய் இருக்க தீப்தி தந்தையிடமும் மெதுவாய் சொல்லிக்கொண்டு இருக்க அவரின் முகம் அத்தனை கோபத்தை காட்டியது.
“முதல்ல உட்காருங்க. நடந்தது நடந்து போச்சு. இதை பேசி பேசி இன்னும் பெருசா வளர்க்க வேண்டாமே?…” என ருக்மணி சொல்ல,
“அதை நீங்க உங்க பொண்ணுக்கு சொல்லியிருக்கனும் நேத்தே? அப்போ அமைதியா தானே இருந்தீங்க? கேட்க யாருமில்லைன்னு நினைச்சுடாதீங்க….” என்று அவர் படபடக்க,
“அத்தை ப்ளீஸ். முடிஞ்சு போச்சு. விடுங்க.,.” என்று அமைதி படுத்தினாள் இதயா.
“அட போடி, அருமை பெருமையா ஒத்தை பொண்ணை வளர்த்து கட்டிக்குடுத்து, சீராட்டி இங்க அனுப்பினது இந்த பேச்சு வாங்கறதுக்கா?….” என பேசியவருக்கு மனது ஆறவே இல்லை.
தங்கள் வீட்டில் எப்படி இருந்த பெண், ஒரு சொல் தாங்கியதுமில்லை, வாங்கியதுமில்லை. இப்படி பேச்சை எல்லாம் எதற்கு சகிக்க வேண்டும் என்ற கோபம் ஆத்திரமாய் பொங்கியது.
உத்ரா இருந்திருந்தால் கட்டி தொங்கவிட்டிருந்திருப்பார். வேலவன் அனுப்பவே இல்லை உத்ராவை. அங்கே போக கூடாது என்று ஒற்றை வார்த்தையில் நிறுத்தி இருந்தான்.
உத்ராவிற்கு அங்கே இருப்பும் கொள்ளவில்லை. இங்கே யசோதா வந்திருப்பது தெரிந்து சிவசுந்தரத்திற்கு போன் செய்ய அவரோ யசோதாவின் பேச்சில் அதை எடுக்கவே இல்லை.
வந்தவர்கள் அமரவும் இல்லை, தண்ணீரும் எடுத்துக்கொள்ளவில்லை. சமாதானம் ஆகவே மறுத்ததை போல இருக்க,
“தண்ணியாச்சும் எடுத்துக்கோங்க சித்தி…” என்ற நிஷாவை அவர்களால் தள்ள முடியவில்லை.
அதன் பின்னர் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு தீப்தியுடன் புறப்பட இதயா கண்ணனுடன் வருகிறேன் என்றுவிட்டாள். அதுவும் அவனுக்காக. அதில் சற்று ஆறுதல் தான் அவனுக்கு.
இன்னும் இரண்டு நாளில் அங்கே ட்ரெயினிங்கில் சேர வேண்டும். மறுநாள் கிளம்புவதாக முன்பே பயணத்திற்கு முன்பதிவு எல்லாம் செய்திருக்க,
“எப்படியும் இன்னைக்கு அழைக்க வரதா தானே இருந்தது? வந்துட்டோம் தானே? கிளம்புங்க…” என சுதாகரன் யோசனை சொல்ல கண்ணன் மறுக்கவில்லை.
சிவசுந்தரமும், ருக்மணியும் பயத்துடன் பார்த்தனர். திருமணம் நடக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்று மகன் சொன்னானோ அது இப்போது நடந்துகொண்டு இருந்தது.
முன்பே இதயாவுக்கு மாற்றுதல் கிடைக்கும் வரை அங்கே இருந்து வேலைக்கு செல்லலாம் என்று பேசியிருந்தார்கள். இப்போது மாற்றுதல் கிடைக்காதது கூட நல்லதாகவே தோன்ற கிளம்பிவிட்டான் கண்ணன்.
“இதுக்கு எந்த அலப்பறையும் பண்ணாம கல்யாணத்தை நடத்தியிருக்கலாம். மரியாதையாச்சும் மிஞ்சிருக்கும்…” என்று ருக்மணி மகன் கிளம்பிய பின்னர் நிஷாவிடம் அங்கலாய்த்தபடி இருந்தார்.
எந்த சொந்தங்களும் இன்றி ஒரு மறுவீடு விசேஷம். மௌனமாகவே நடந்தது. இதயாவின் வீட்டில் ஒரு இறுக்கத்துடனே தான் அனைவரும் கண்ணனை வரவேற்றனர்.
ஆனால் அவனுக்கான மரியாதையை கொஞ்சமும் குறைக்கவில்லை. நவீன் அவனிடம் ஏதோ ஓரிரு வார்த்தையுடன் நிறுத்திக்கொண்டான். அன்று முழுவதும் அங்கேயே இருந்தவன் மறுநாள் காலை இதயாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினான்.
“பெஸ்ட் ஆஃப் லக்…” என்ற வாழ்த்து மட்டுமே அவளிடத்தில்.
அதன் பின் எந்தவித பேச்சுவார்த்தைகளுக்கும் இன்றி இலகு சூழ்நிலைக்கே அத்தனை பஞ்சமாகி போனது.
தன் வீட்டிற்கு வந்து கிளம்பியவன் தான். பேச்சுக்கள் அங்கேயும் குறைவு தான். ட்ரெயினிங்கில் முழு ஈடுபாட்டுடன் சிரத்தையாக கற்றுக்கொண்டான்.
“உங்க பதிவியிலையாச்சும் நடுநிலமையோட நடந்துக்கோங்க…” என்ற மனைவியின் வார்த்தைகள் அவ்வப்போது குத்திக்கொண்டே தான் இருந்தது.
இடையே வர முடிந்தும் வரவில்லை. காரணம் அவள். அதன் பின்னர் போஸ்ட்டிங் நார்த்தில் கிடைக்க அங்கே சென்று செட்டில் ஆன ஒரு மாதத்தில் அழைத்தான் கண்ணன்.
“வேலையை விட்டு வா இதயா. இங்க சேர்ந்து இருக்கலாம். இனி அந்த வேலை எதுக்கு?…” அவன் பேசிய விதம் தவறாகி போனது.
“வேலையை விட்டுட்டு எங்க வர? அங்கயும் உங்க வீட்டுல வந்து பேசுவாங்க, நான் கேட்டுட்டு இருக்கனும் இல்ல?…” என்று அதற்கும் சீறினாள்.
அவன் தன்மையாகவோ வேறு விதமாகவே பேசியிருந்தால் கூட யோசித்து இருப்பாளோ என்னவோ?
அவன் எடுத்ததும் இனி அந்த வேலை வேண்டாம் என்பதை போல பேசியது அடங்கி இருந்த கோபத்திற்கு தூபம் போட்டதை போல ஆனது. அதில் கண்ணனுக்கும் எரிச்சல் வர,
“இப்படி தனி தனியா இருக்கவா என்னை அடம்பிடிச்சு கல்யாணம் செஞ்ச?…” என்றுவிட்டான் கோபமாக.
“ஆமா, தப்பு தான். செஞ்சுட்டேன். வேற என்ன பண்ணனும்?…” என்று இதயாவும் மல்லுக்கு நின்றாள்.
அதன் பின்னர் எப்போது பேசினாலும் இருவருக்கிடையே காரணமின்றி வாக்குவாதங்கள். தனிமையின் தாக்கம் தகிக்க சில நேரம் அவன் வெடிப்பான். சில நேரம் இவள் வெடிப்பாள்.
“எத்தனை நாள் இப்படியே இருக்கன்னு நானும் பார்க்கறேன்? வருவேன். நான் வரப்போ நீ என்னோட தான் இருப்ப? நானும் பொறுமையா சொல்லிட்டே இருக்கேன். நான் பண்ணின தப்புக்கு என்னை இவ்வளவு நாள் தண்டிச்ச வரை போதும். நேர்ல வரேன், வந்து பேசிக்கறேன்…” என்று கோபத்துடன் பேசியவன் தான்.
அடுத்த நான்கு மாதத்தில் திருச்சிக்கு மாற்றுதலாகி வந்து இதோ இப்போது இதயா அவனின் முன்னால், அவனின் வீட்டில், அவனெதிரே, அவன் மனைவியாக.
இதற்கிடையில் சமாதானம் என்ற ஒன்று கண்ணின் குடும்பத்தில் இருந்து வரவே இல்லை. முதல் இரண்டு வருடம் தானாக வரட்டும் என்று இருந்தவர்கள் மகனின் ஒதுக்கத்தில் இனி அவனாவது சமாதானம் செய்யட்டும் என்று விட்டனர்.
உண்மையில் இதயாவின் வீட்டிற்கு சென்று அழைக்க கௌரவம் இடமளிக்கவில்லை என்பது ஒன்று. இன்னொன்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு அழைக்க செல்வது என்று ஒன்று.
முதலில் கேட்டவர்களிடம் எல்லாம் மருமகள் வேலை அது இது என்று சொல்லி தட்டிக்கழித்து, பின் வெளியூர் மாற்றலை சொல்லி காரணம் கனபித்து தப்பித்து வருடம் மூன்றாகியும் வராததில் சுற்றியிருப்போரும், சொந்தங்களும் பின்னால் பேசவும், முன்னால் கேலி செய்யவுமாக இருக்க பெற்றவர்களுக்கு ஏக வருத்தம்.
இப்படி தங்களும் அவசரப்பட்டு அவனின் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமே என்று சிவசுந்தரமே ருக்மணியிடம் சொல்லி மகனை பேச சொல்லினார்.
தாங்கள் போய் அழைத்து வரட்டுமா என்று உண்மையில் வருந்தி கேட்க அவனோ செய்தவரை போதும், தான் பார்த்துக்கொள்கிறேன் என்றுவிட்டான் ஒரேடியாக.
ஆனால் இதயா குடும்பத்திலோ அவன் ட்ரெயினிங்கில் இருந்தவரை கூட அவளை நெருக்கவில்லை. கண்ணன் வரட்டும் என்றே இருந்தார்கள்.
அவனும் தான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லியிருக்க ஒரு நம்பிக்கை. அதற்குள் இதயா திருச்சிக்கு மாற்றலாகி வந்துவிட அவர்களுமே அங்கே அவளுடன் வந்துவிட்டனர்.
அதிலிருந்து அடிக்கடி அவளின் எதிர்காலம் குறித்த பேச்சு இல்லாமல் இல்லை. ஆனால் அவள் அதை கண்டுகொள்ளவில்லை.
இதோ இப்போது அத்தனைபேரும் சேர்ந்து கொண்டு வந்து உரியவனிடம் சேர்ப்பித்துவிட அவனின் வீட்டிலோ உன் பாடு, உன் மனைவி பாடு என்று கிளம்பி சென்றுவிட்டனர்.
இரு குடும்பங்களும் அவர்களின் கடமையை நிறைவேற்றிவிட்ட நிம்மதியில் சென்றுவிட இரு மனங்களின் நிம்மதி என்பது இனி அவரவர் கையில்.
“இனி உன்னை என்னன்னு சமாதானப்படுத்த போறேன் இதயா? இப்போ எழுந்து என்ன பேச்சு பேசுவியோ?…” என்று லேசான புன்னகையுடன் அவளையே பார்த்து அமர்ந்திருந்தான் கண்ணன்.