ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 14
எப்படி நடந்திருக்க வேண்டிய திருமணம். இப்படி நடக்குமென்று இருவருமே நினைத்து பார்க்கவில்லை.
தாலி கழுத்தில் ஏறும் வரை கூட பிடிவாதமாய் அந்த திருமணம் நடக்கவேண்டும் என்று இருந்த இதயாவின் மனது அப்போதிருந்தே தவறு செய்துவிட்டோமோ? என்னும் எண்ணம் லேசாய் பரவ துவங்கியது.
அந்த அலைகழிப்பு முகத்திலும் அப்பட்டமாய் தெரிய யசோதாவும், மஞ்சுவும் தான் அவளை அழைத்துக்கொண்டு தனியே வந்தார்கள்.
“என்ன பூவி? ஏன்டா இப்படி இருக்க?…” என மஞ்சு கேட்க,
“ம்மா…” என்று தாயின் முகத்தை பார்த்தவள் அப்படியே தோளில் சாய்ந்துகொண்டாள்.
சுத்தமாக பிடிக்கவில்லை. அந்த நிகழ்வு, அப்படி நிகழ்ந்தது, அதில் தன் பிடிவாதம். இப்படி எதுவும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏதோ மனதிற்குள் இடறியது.
நின்ற இடத்தில் இருந்தே கண்ணனை திரும்பி பார்த்தாள். அங்கிருந்து அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
பார்வையில் அத்தனை இறைஞ்சுதல். திருமணம் முடிந்துவிட்டதே என்னும் சந்தோஷம் துளியும் இல்லாத ஒரு இறைஞ்சுதல்.
தன் பார்வையை அவனிடத்தில் இருந்து மீட்டுக்கொண்டாள். வேண்டாம், பார்க்க வேண்டாம். என மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
“பூவி, இங்க பாரு? என்ன நினைக்கிற நீ?…” என யசோதா கேட்க,
“தெரியலை அத்தை…” என்றாள் உண்மையாக.
“நாங்க வேண்டாம்னு சொன்னோம். நீ தான் கேட்கலை…” என்று கோபமாக சொல்லியவர்,
“சரி விடு, இங்க பாரு. அந்த உத்ரா என்னவோ சரியில்லை. அந்த வீட்டுல எதுவும் சரியில்லைன்னு தோணுது. நீ இப்படி முகத்தை தூக்கி வச்சுட்டு இருக்காத. எதுவா இருந்தாலும் தைரியமா பேசனும். இப்போ அது உன்னோட வீடு…” என யசோதா சொல்ல,
“யசோண்ணி நீங்க வேற…” என்ற மஞ்சு,
“இங்க பாரு பூவி, இதுவரைக்கு என்னவோ திருஷ்டி மாதிரி நடந்துருச்சு. ஆனா நீ விரும்பின வாழ்க்கை. அதை நல்லபடியா சந்தோஷமா வாழ ஆரம்பிடா. நடந்ததை நினைக்காம பொறுமையா இரு…” என்று சொல்ல,
“மஞ்சு, முதல்ல அங்க பொண்ணுக்கு தைரியம் தான் வேணும். நீ என்னன்னா?…” என்று சொல்லிய யசோதா,
“பூவி, நீ சந்தோஷமா இருக்கனும் தான். கண்ணனை பத்தி பிரச்சனை இல்லை. ஆனா அந்த உத்ரா கண்டிப்பா பிரச்சனை பண்ண பார்ப்பா. அதுக்கு இடம் குடுக்காத. இப்பவும் சொல்றேன் அவளை கட்டிக்குடுத்தாச்சு. உன் வீட்டுல வந்து அவ நாட்டாமை பண்ண கூடாது….” என்றார்.
“என்ன அண்ணி நீங்க? நான் அவளை பொறுமையா அனுசரிச்சு போக சொல்லி சொல்றேன். நீங்க தூண்டி விடறீங்க? எதுவும் வேண்டாம். யாரும் எப்படியும் இருந்துட்டு போகட்டும். என் பொண்ணு அதை கண்டுக்காம போகட்டும். அது போதும்….” என்றார் மஞ்சு.
“பொறுமையா எப்போ போகனும்னு நம்ம பொண்ணுக்கு நாம சொல்லவேண்டியதே இல்லை. அதே நேரம் எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிட்டு இருந்தா அங்க நிம்மதின்றதே இல்லாம பயந்து தான் வாழனும்…”
இப்படி இருவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருக்க பெண்ணை அழைத்துக்கொண்டு கடலூருக்கு கிளம்பி வேண்டும் என்றார்கள்.
பெண் வீட்டின் சார்பாக யாராவது செல்லவேண்டும். யசோதா யோசிக்காமல் தீப்தியை சொல்ல,
“அதென்ன படிக்கிற பொண்ணை அனுப்பறது?…” என்று காஞ்சனா கேட்க,
“யாரை அனுப்பனும்னு நாங்க தானே முடிவு பண்ணனும்? என் பொண்ணு தான் வருவா…” என்று சொல்லிவிட்டார் யசோதா.
அதை யாரும் மறுக்காமல் போக காஞ்சனாவும் முறைத்துக்கொண்டு நகரவும் தன் மகளை அழைத்த யசோதா,
“தீப்தி அங்க நீ தான் பூவியை பார்த்துக்கனும்டா. என்ன நடந்தாலும் சரி மேனேஜ் பண்ணனும். புரியுதா?…” என்று மகளுக்கு சொல்லியே அனுப்பினார் யசோதா.
“நான் பார்த்துக்கறேன் சித்தி. என் கூடவே இருக்கட்டும்…” என நிஷா வரவும்,
“நீயும் உங்கண்ணனும் தான் தப்பி பிறந்தீங்களோ?…” என்று கேட்டேவிட்டார் யசோதா.
“ம்மா…” என்று தீப்தி அதட்டிய பின்னர் தான்,
“ஏதோ மனசுல இருந்துச்சு, கேட்டுட்டேன்…” என்றவர் நிஷாவை பார்க்க அவளோ புன்னகைத்தார்.
“புரியுது சித்தி. நாங்களும் அங்க தான இருக்கோம்…” என்று சொல்லவும் அனைவருமாக கிளம்பினார்கள்.
மறுநாள் தாங்கள் வந்து பார்ப்பதாக சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்கள் இதயா குடும்பத்தினர்.
கடலூர் வந்து சேர மாலை ஆகிவிட்டது. வாசலில் வைத்து வேண்டா வெறுப்பாக ஆரத்தி எடுக்க உடன் எடுத்த நிஷா இதயாவின் நெற்றியில் திலகமிட்டு,
“உள்ள வாங்க அண்ணி…” என்று அழைக்க கண்ணா அவளின் கையை பற்றினான்.
மெல்ல யாரின் கவனத்தையும் கவராமல் தன் கரத்தை உருவிக்கொண்டவளின் மனதில் தன் எண்ணத்தின் சுவடுகள் எல்லாம் பெரிதாய் வியாப்பிக்க ஆரம்பித்தது.
தான் முதன்முதலில் அவனின் வீட்டிற்கு எப்படி வந்தோம் என்ற ஞாபகத்தில் முகம் கசங்க கண்கள் சிவந்தது.
இயந்திரம் போல விளக்கேற்றி வந்து அமர்ந்தவளை அக்கம்பக்கத்தினர் எல்லாம் வந்து வேடிக்கை பாக்க வர அவளின் உடமைகள் எல்லாம் கண்ணனின் அறையில் கொண்டு வைக்கப்பட்டது.
தீப்தி அங்குமிங்கும் நகராமல் இதயாவுடனே தான் இருந்தாள். நிஷாவை தவிர வேறு யாரும் அவளை நெருங்கவில்லை. ருக்மணி கூட காஞ்சனாவுடனே இருந்தார். காஞ்சனா விடவில்லை அவரை.
சிவசுந்தரம் ஏதோ கடமை முடிந்தது என்பதை போல தோளில் கிடந்த துண்டை உதறிவிட்டு யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்திருந்தார்.
அவருக்கு இதயா வந்து சண்டையிட்டு, மிரட்டி சென்றதில் இருந்தே அவள் மீதான நல்லெண்ணம் எல்லாம் மழுங்கி போனது.
‘என்ன பெண் இவள்? கொஞ்சமும் கூச்சமின்றி இந்த திருமணம் நடக்கவேண்டும் என்று நினைக்கிறாளே?’ என்னும் பார்வை தான் அவருக்கும்.
இதயா பக்கம் இருந்த நியாயமும், தார்மீக கோபமும் அவரின் கண்களுக்கு அகப்படவில்லை.
அருகில் இருந்தவர்கள் எல்லாம் வந்து பார்த்துவிட்டு பேசி செல்ல ஓரிரு வார்த்தைகளில் மரியாதைக்கு பேசினாள் இதயா.
தானும் அருகே நெருங்காமல் தள்ளி இருந்தே நடப்பவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க,
“உத்ரா பால், பழம் சாப்பிடனும்…” என்று ருக்மணி சொல்ல,
“ம்க்கும், இது ஒண்ணுதான் குறை. ரெண்டு பழத்தை தூக்கி வீசுங்க. புடிச்சுக்கட்டும்…” என ஏளனமாக பேசினாள்.
வேலவன் வந்ததும் நடந்த பிரச்சனையை அறிந்து உத்ராவை திட்டி இருந்தான். தன் அம்மாவை அத்தனை பேச முடியவில்லை. ஆனால் உத்ராவை பேசியிருந்தான்.
எங்கேயும் அவளை நுழைய விடாமல் சொல்லியிருக்க அந்த கோபமும் இதயாவின் மேல் தான் திரும்பியது இவளால் தானே, இவளுக்காக தானே என்று.
அந்த வீடு பார்க்கத்தான் திருமண வீடு. ஆனால் கொஞ்சமும் யாரின் முகத்திலும் சந்தோஷம் என்பதே இல்லை.
இரவு உணவுவேளை வரவும் ஆட்களும் வருவது குறைந்து வீட்டினர் மட்டுமே இருந்தனர்.
அதாவது கண்ணபிரான் குடும்பத்தினருடன் காஞ்சனா குடும்பத்தினரும், கூடுதலாக அன்றைய புது வரவு இதயா, தீப்தி மட்டுமே.
காஞ்சனாவின் தம்பி, அவரின் மனைவி, காஞ்சனாவின் இளையமகன், அவனின் மனைவி என்று அவர்களும் அங்கேயே அன்று இருக்க அனைவருமே சாப்பிட அமர்ந்தனர்,
“நிஷா அண்ணியை கூட்டிட்டு வாம்மா…” என்று ருக்மணி சொல்ல,
“நான் அப்பவே கூப்பிட்டேன்ம்மா. அவங்க பசிக்கலைன்னு சொன்னாங்க…” என நிஷா சொல்லவும்,
“சரி நீங்க எல்லாரும் சாப்பிடுங்க…” என சிவசுந்தரம் சொல்லவும் அதன் பின்னர் அங்கே எந்த பேச்சும் இல்லை.
அடுத்த சடங்கு ஆரம்பிக்கவேண்டுமே? நல்லநேரம் எல்லாம் பார்த்தாகிற்று. அறையை தயார் செய்யவேண்டும் என்று உத்ராவிடம் சொல்லவேண்டுமே என உதறல் எடுத்தது ருக்மணிக்கு.
எல்லோரும் சாப்பிட்டு முடித்ததும் உத்ராவை தனியே கண்ணனின் அறைக்கு அழைத்து சென்றார் ருக்மணி.
“இங்க எதுக்கும்மா கூட்டிட்டு வந்த? எனக்கு வெளில வேலை இல்லையா?…” என்று என்ன ஏதென்று தெரிந்தும் வேண்டும் என்றே உத்ரா பேச,
“என்ன இது உத்ரா? எத்தனை தான் பிரச்சனை, மனத்தாங்கல் இருந்தாலும் இந்த சம்பிரதாயம் எல்லாம் நீ தானே பண்ணனும்?…” என்றார் இறைஞ்சுதலாக.
“ம்மா, விட்டா இதையும் அவளே ஏற்பாடு பண்ணிப்பாம்மா. அவளுக்கு இது போதும். என்னவும் பண்ணட்டும், நான் எதுவும் செய்ய மாட்டேன்…” என உத்ரா சொல்ல அதை கேட்டுவிட்டாள் இதயா.
அப்போதுதான் நகையை எல்லாம் கழற்றி வைக்கலாம் என்று அந்த அறையை திறந்து உள்ளே வந்த இதயா தான் வந்ததை அவர்கள் கவனியாமல் பேசவும் வந்த வேலையை பார்க்கலாம் என உள்ளே அடுத்த அடியை எடுத்து வைக்க உத்ராவின் இந்த பேச்சு காதில் விழுந்தது.
“தப்பா பேசாதம்மா. அவ உன் தம்பி பொண்டாட்டி….” என்று ருக்மணி சொல்ல,
“ம்மா, வேண்டாம்னு சொல்லியும் தேடி வந்து கல்யாணம் பண்ணனும்னு நிக்கிறான்னா அவ எப்படியாக்கந்தவளா இருப்பா? ச்சீச்சீ , இவளை எல்லாம் குடும்பத்துல…”
“உத்ரா…” என்று ருக்மணி அதட்ட,
“ஷட் அப்…” என்று சீற்றத்துடன் வந்து நின்றாள் இதயா.
அவல் வந்த வேகத்தை பார்த்து உள்ளுக்குள் உதறினாலும் வெளியே முகத்தை மிதப்பாக வைத்துக்கொண்டாள் உத்ரா.
“என்ன ஷட் அப்? உள்ளதை சொன்னா எரியுதோ? ஆமா, என்னை இந்த ஏற்பாட்டை பண்ண சொன்னாங்க? ஏன் உனக்கு பண்ண தெரியாதா என்ன?…” என்று அவள் கேட்டவிதமே அருவருக்கத்தக்க இருக்க,
“போதும் இன்னொரு வார்த்தை பேசாதீங்க. இப்படி தரமில்லாம இன்னொரு வார்த்தை என்னை பத்தி வர கூடாது…” என்று இதயா எச்சரிக்க,
“என்ன தரமில்லாம? ஏன் இதெல்லாம் இல்லாம் இருந்திருவியா நீ? அதான் கல்யாணம் செஞ்சிட்டியே. இன்னும் என்ன சும்மா ஒன்னும் தெரியாத மாதிரி பேசிட்டு?…”
“உத்ரா…” என்று இதயா கோபப்பட,
“ஏய் என்ன பேர் சொல்லி பேசற? அப்படித்தான் பேசுவேன். இதுக்கு மேலையும் பேசுவேன். நீ ஏன் என் தம்பியை விடாம பிடிச்சிருக்கன்னு தெரியாதா என்ன? உனக்கு எல்லாம்…” என்ற வார்த்தையை முடிக்கும் முன்னர் பளாரென்று அறைந்திருந்தாள் இதயா.
“நீங்க எல்லாம் ஒரு பொண்ணா?…” என்று மீண்டும் கையை ஓங்க,
“அம்மாடி, அம்மாடி அவ ஏதோ தெரியாம பேசிட்டாம்மா. பெருசு பண்ணாம விட்டுடும்மா….” என்று இதயாவின் கையை ருக்மணி பிடித்துக்கொண்டு கண்ணீர் வடிக்க,
“பார்த்துட்டு தானே இருந்தீங்க. எவ்வளோ அசிங்கமா பேசறாங்க இவங்க. சும்மா விட சொல்றீங்களா?…”
“உன் நடத்தையை தானே சொன்னே? ரொம்ப ஆடற நீ? உன்னை சும்மா விடமாட்டேன்…”
“இன்னொரு அறை வேணுமா? என் கோபத்தை கிளறாதீங்க….”
“பூவி, அம்மாடி…” என ருக்கு அப்போதும் மகளை அடக்கமுடியாமல் மருமகளிடம் நிற்க,
“ம்மா இவ நடத்தை சரியில்லை. வந்தன்னைக்கே என்ன பன்றான்னு பார்த்த தானே?…”
“என்ன சொன்னீங்க?…” என்று மனம் அதிர பார்த்தாள் இதயா மீண்டும்.
அப்போதும் தான் சொல்லியதன் அர்த்தம் புரிந்தும் திருத்த நினைக்காத உத்ரா இதயாவை வன்மத்துடன் பார்த்தாள் தன்னை இவளால் என்ன செய்துவிட முடியும் என்ற பார்வையுடன்.
“ஆமா, உன் நடத்தை சரியில்லைன்னு சொன்னேன்…” என இதயாவிற்கு வலிக்கவேண்டும் என்றே மீண்டும் சொல்ல,
“உத்ரா என்ன பேச்சு இது?…” என்று ருக்மணியால் கெஞ்ச மட்டும் தான் முடிந்தது.
“திரும்ப சொல்லாதீங்க. சொல்லாதீங்க…” என்று கோபம் மேலும் கிளற கையை மீண்டும் ஓங்கும் போது கதவை திறந்துகொண்டு வெளியே ஓடினாள் உத்ரா.
இதை ருக்மணி எதிர்பார்க்கவே இல்லை. பயந்துகொண்டே அவரும் வெளியே செல்ல அதற்குள் அத்தனைபேரையும் நடுக்கூடத்தில் கூட்டியிருந்தாள்.
“வந்தன்னைக்கே என்னை அடிச்சுட்டாப்பா. இதுக்குத்தான் இவ வேண்டாம்ன்னு சொன்னேன்…” என்று உத்ரா ஒப்பாரி வைக்க அவளின் புகுந்தவீடு சேர்ந்துகொண்டது.
நிஷாவும், தீப்தியும் கூட வந்து நின்று என்னவென்று பார்க்க தீப்தி ஓடி வந்து இதயாவின் பக்கம் நின்றுகொண்டாள்.
“இவ நடந்துக்கறது சரியில்லைன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு என்னை அடிச்சிட்டா. அதை கூட நான் சொல்ல கூடாதா?…” என்று சொல்ல,
“அடிச்சியா இதயா?…” என்றான் அதிர்ச்சியுடன் கண்ணன்.
ஏற்கனவே இப்படி மாற்றி பேசும் உத்ராவின் செய்கையில் அதிர்ந்து போய் நின்றிருந்தவள்,
“என்னங்க நீங்களும்?…” என்று இதயா வாய் திறக்கும் முன்,
“பார்த்தீங்களா இவளை. அவனை கேட்க கூட விடமாட்டேன்றா. எனக்கு தெரிஞ்சு போச்சு…” என்று உத்ரா மேலும் கத்தி கூப்பாடு போட,
“என்னம்மா இதெல்லாம்?…” என்றான் வேலவன்.
மனைவியின் வாய்ப்பேச்சு தெரியும். ஆனால் அதை தங்களிடம் அல்லவா சொல்லியிருக்கவேண்டும். இப்படி அடித்துவிட்டதே இந்த பெண் என்னும் கோபம் அவனுக்கு. அதிலும் தன் வீட்டினரும் இருக்கும் பொழுதே என நினைத்தான்.
“என்னை பேச விடுங்க முதல்ல…” என்று இதயா பேச ஆரம்பிக்க,
“என்ன பேச போற? உன்னை பத்தி சொல்லவும் அவ்வளவு ரோஷமா? வேண்டாம்னு நாங்க தூக்கி போட்டும் பின்கட்டு வழியா வந்தது மாதிரி தானே வந்திருக்க?…” என்றதும்,
“அக்கா, என்ன பேச்சு இது? தப்பா பேசாதீங்க…” என்றான் கண்ணன்.
“என்னடா கோவம் வருது? தாலி கட்டின அன்னைக்கே இத்தனை பேச்சு பேசற? அப்போ நாங்கலாம் உனக்கு ரெண்டாம் பட்சம் ஆகிட்டோம் தானே?…” என்று உத்ரா அழுது புலம்ப,
“இதயா நீ உள்ள போ…” என்றான் பேச்சு திசை மாறுவதை புரிந்துகொண்டு.
இதயாவிற்கு இது இடியாய் இருந்தது. தன்னை உள்ளேயும் அத்தனை அசிங்கமாக பேசி, இங்கே இத்தனைபேர் முன்னிலையும் அவமானம் செய்து பேச அதை எல்லாம் கேட்காமல் உள்ளே போ என்று சொல்கிறானே என்னும் கோபம் மீண்டும் கூடியது.
“நாம வேண்டாம்னு சொல்லியும் கொஞ்சமும் அச்சமில்லாம வீடு தேடி வந்து மிரட்டித்தான கல்யாணம் பண்ணிட்டு வந்தா. அப்ப அதுக்கு பேர் என்னவாம்?…”
“உத்ரா போதும்…” என்று வேலவனும் சொல்ல,
“நீங்க சும்மா இருங்க… உள்ளத சொன்னா இவளுக்கு கோவம் வேற வருதோ? ஏன் சுருக்குங்குது? இவ இங்க வந்து பிரச்சனை பண்ணின அதானே? எம்புட்டு பேச்சு. அப்பவே அப்படி இருந்தவ, இவ எப்படி குடும்பத்துக்கு அடங்கி…”
“உத்ராக்கா, வாயை மூடுங்க…” என்று கண்ணன் சத்தம் போட்டவன்,
“இதயா நீ உள்ள போ…” என்று அதட்டினான்.
இதயாவின் உள்ளம் ஏகத்துக்கும் இந்த திருமணத்தினால் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருக்க இப்போது வெறுத்தே போனாள்.
அங்கே இருந்தவர்களில் அத்தனை பேரும் உத்ராவை பேசவிட்டு வேடிக்கை பார்க்க நொந்து போய் நின்றாள்.
வேலவன் கூட மனைவியை அடித்திருக்கிறாளே என்னும் கோபத்தில் அதிகமாய் பேச முடியாமலும், தன் வீட்டினரும் இருந்ததால் மௌனமாக இருந்தான்.
ஆனால் சிவசுந்தரம், ருக்மணியும் ஏன் மௌனமாக இருந்தனர் என்னும் கோபமும் அவனுக்கு இருந்தது. அவர்கள் பேசவேண்டியது தானே என்று.
“அப்போ நான் என் பக்கத்தை இங்க சொல்ல கூடாதா?…” என்றாள் கோபமாக,
“ஆமா இப்போ சொல்ல வேண்டாம். சொல்ல கூடாது. இப்போ நாம மட்டும் இல்லை. என் அக்காவோட அவங்க புகுந்த வீட்டு மனுஷங்களும் இருக்காங்க. அதனால பிரச்சனை வேண்டாம். இதை விடு. உள்ளே போ…”
“நீங்களும் இப்படி பேசுவீங்கன்னு நான் நினைக்கலை…” என்று நெஞ்சில் கை வைத்து அவள் சொல்ல வேதனையுடன் பார்த்தான் கண்ணன்.
“அக்கா தங்கச்சியோட பிறந்த எவனும் இதைத்தான் இதயா செய்ய முடியும். நீயாவது புரிஞ்சுக்கோ. உள்ளே போ. அப்படியே ஒரு ஸாரி கேட்டுட்டு போ…” என்றான் கடினமான முகத்தோடு.
கண்ணீருடன் விழியோரம் தன் ஆவி தேங்கி நிற்க அவனை இறைஞ்சுதளாக பார்த்தாள்.
“நான் தப்பு பண்ணலைங்க. ஒரு நிமிஷம் ஏன் அடிச்சேன்னு தெரிஞ்சிக்கிட்டு பேசுங்க. ஆனா இங்க வச்சு சொல்லமுடியாது…” என்று உடல் கூச அவள் அவனிடம் கேட்க,
“இதயா உனக்கு புரியாதா?…” என்றவனுக்கு ஆற்றாமையாய் இருந்தது.
தனியே அழைத்து பேசிவிடலாம் தான். கண்டிப்பாக இதயா அடித்திருந்தால் ஒரு காரணம் இருக்கும். ஆனால் இப்போது சூழ்நிலை அப்படி அல்லவே?
தனியாக சென்று பேசி அதையும் இதயா சொல்லிக்கொடுத்து தான் மீண்டும் பேசினால் அதையும் இதயாவிய வைத்தே பேசுவார்களே இன்னும் என்று நினைத்து அதை தவிர்க்க நினைத்தான்.
“தப்பு உன் மேல இல்லைன்னாலும் நீ அடிச்ச தானே? மன்னிப்பு கேட்டுடு ப்ளீஸ் எனக்கான…” என்று அவன் பிடிவாதமாய் நிற்க,
“முடியாது…” என்றாள் முகம் இறுகி.
“இப்ப மன்னிப்பு கேட்கிறதால என்ன குறைஞ்சிரும் இதயா?…”
“என்னோட மரியாதை குறைஞ்சிரும். அவங்க சொன்னது பேசினது தப்பில்லைன்னு ஆகிடும். அதை நான் பண்ண மாட்டேன்…” என்று அவள் இப்போது நிமிர்ந்து நின்று சொல்ல,
“இதயா எனக்காக…”
“யாருக்காகவும் சொல்லமாட்டேன். சொல்ல முடியாது…” என்றாள் அவள்.
இனி இங்கே தான் யார் என்று இதயாவிற்கு புரிந்துவிட்டது. இவனுக்காக இவனுக்காக என்று பார்த்து என்னையே இழந்து நிற்பதை கூட இவன் கண்டிகொள்ளவில்லை என்றால் மொத்தமாக என்னை தொலைத்துவிடுவேன் என்ற எண்ணம் ஸ்திரம் பெற்றது அவளுள்.
“பார்த்தீங்களா? இவளை போய் பாவம்ன்னு நினைச்சியா நீ? இவளாம்…” என்று உத்ரா ஆரம்பிக்கவும் அவளை நோக்கி சொடக்கிட்ட இதயா,
“வெளில போங்க….” என்றாள் கதவின் புறம் கை நீட்டி.
இதை ஒருவருமே சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அனைவருமே அரண்டு தான் நின்றார்கள்.
“இதயா…” என்று தன் பக்கம் கண்ணன் அவளை திருப்ப அவனின் கையை விளக்கிவிட்டவள்,
“முதல்ல உங்கக்காவை வெளில போக சொல்லுங்க…” என்றாள் அவனிடமும்.
“இந்தாம்மா இதென்ன வரைமுறை இல்லாத பேச்சு?…” என்று சிவசுந்தரம் பொங்கிக்கொண்டு வர,
“இவ்வளவு நேரமும் உங்க பொண்ணு பேசின வரைமுறை பேச்சை எல்லாம் கேட்டுட்டு தானே இருந்தீங்க? அப்படி பேசனும்னா எனக்கும் நோ அப்ஜெக்ஷன். பேசட்டுமா?…” என்றாள் இதயா பொட்டிலடித்தார் போன்று.
“என்ன?…” என்று அவர் அப்படியே நின்றுவிட,
“பூவிம்மா, இதென்ன பேச்சு? அவ இந்த வீட்டு மூத்த மக…” என்று ருக்மணி வர,
“ஓஹ் உங்க பொண்ணை எதுவும் சொல்ல கூடாதுன்னா அப்போ என்னை ஏன் மருமகளா எடுத்தீங்க? என்னை ஏன் இப்படி இத்தனை பேர் முன்னாடியும் பேசவிட்டு வேடிக்கை பார்க்கறீங்க?…” என்றவள்,
“என்ன சொல்லுங்க, இப்ப நீங்க கிளம்பளைன்னா நான் கிளம்பிருவேன். இப்பவே இந்த குடும்பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கிளம்பிருவேன். கிளம்பவா?…” என்று கண்ணனையும் பார்த்தே கேட்க அவன் இப்படி இதயா பேசுவாள் என்று நினைக்கவே இல்லை.
“இதயா…”
“மூச், நீங்க பேச கூடாதுன்னு சொன்னீங்க. அவங்க என்ன சொன்னாங்கன்னும் கேட்க தயாரா இல்லை. அதனால இவ்வளவு நேரம் என்னை சொன்ன மாதிரி இனியும் சொன்னா நான் கேட்கிறதா இல்லை…” என்றவள்,
“எந்த பொன்னும் கல்யாணம் பண்ணிட்டு வரும் போது புருஷனை தான் முதல்ல நம்பி வருவா. நம்ம கல்யாணம் அப்படியும் நடக்கலை. நானே நடத்திக்கிட்டேன். உண்மை தான். அதுக்காக அதை வரவ போறவலாம் பேச நான் அனுமதிக்க முடியாது…” என்று சொல்ல,
“நான் என்ன வரவ போறவளா?…” என்று உத்ரா அவளருகே வர,
“ஆமா, இது இப்போ என் வீடு. உங்க வீடு இல்லை. அப்போ நீங்க வர போறவங்க தானே?…” என்ற இதயா,
“நீங்க போகலைன்னா நோ ப்ராப்ளம். நான் கிளம்பறேன். இந்த நேரம் கல்யாணம் ஆகிவந்த பொண்ணு வீட்டை விட்டு கிளம்பினா யார் என்ன சொல்லுவாங்கன்னு நல்லா யோசிச்சுக்கோங்க…” என்றவள்,
“தீப்தி, அந்த ரூம்ல தான் லக்கேஜ் இருக்குது. ஒரே ஒரு ட்ராலி தான். போய் எடுத்துட்டு வா…” என்று சொல்ல,
“இந்தாம்மா, இதுக்கு மேலையும் இங்க நாங்க இருக்க முடியாது. கிளம்பறோம்…” என்ற வேலவன்,
“இன்னொரு வார்த்தை நீ பேசின பேச வாய் இருக்காது பார்த்துக்கோ. இவ்வளவு நேரம் நான் வாயை திறக்காம இருந்தது என் மரியாதைக்காக தான். இங்க அந்த பொண்ணு முன்னாடி என்கிட்டே அடி வாங்காம கிளம்பி வா…” என்றவன் வேகமாய் வீட்டை விட்டு வெளியேற,
“மாப்பிள்ளை, உத்ரா, சம்பந்தி…” என்று அவர்கள் பின்னாலேயே சென்றனர் சிவசுந்தரமும், ருக்மணியும். கண்ணன் அசையாமல் இதயாவை பார்த்தபடி நிற்க,
“உங்களை நம்பினது எத்தனை முட்டாள்த்தனம்னு இன்னைக்கு செருப்பால அடிச்ச மாதிரி புரியவச்சுட்டீங்க. ஆனா உங்களுக்கு நானும் புரிய வைக்கனுமே?…” என்றவள்,
“தீப்தி நீ போய் படு. நாளைக்கு ஊருக்கு கிளம்புவோம்…” என சொல்லிவிட்டு கண்ணனின் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
அழுகை ஆறாய் போன்கினளும், ‘அழாத இதயா. இனி இந்த வீட்டுல உன் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்த கூடாது’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
அவள் தன்னை தவறாக புறிந்துகொண்டுவிட்டாளே என்றது இன்னும் முழுமையாய் விளங்க தலையில் கைவைத்து நின்றவன் பின் உள்ளே வந்தான்.
கதவை சாற்றிவிட்டு அவன் வர அங்கிருந்த மாற சேரில் இரு கால்களையும் தூக்கி வைத்து தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள் இதயா.
“நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட இதயா. நான்னு இல்லை என் இடத்துல நாளைக்கு நவீன் இருந்தாலும்…” என்றவனை பார்வையாலேயே நிறுத்தினாள்.
“என் தம்பியை உங்களோட சேர்க்காதீங்க. நான் உங்கக்கா மாதிரியும் இல்லை. என் தம்பி உங்களை மாதிரியும் இல்லை…” என்று வெடுக்கென்று அவள் சொல்ல உள்ளுக்குள் அபாய பந்து சுழன்றது.
அவளை அறிந்த நாட்களில் இருந்து தன்னை அவனின் மனைவியாய் சரிபாதியாய் உணர வைத்துக்கொண்டே இருந்தாள் இதயா அதுவும் அவளறியாமல்.
ஆனால் தன்னை அவளிடத்தில் அப்படி ஒரு ஷனத்தில் கூட உணர வைக்க முடியாமல் தவறிவிட்டான் கண்ணன்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் கணவனாக ஆகியிருந்தும் அவளின் மரியாதையை காக்க தவறி நின்றான்.