ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 15
இதயாவை பார்த்தபடியே இருந்தவன் அவளின் பிதற்றல்கள் எல்லாம் முற்றுபெற்று சற்று உறங்கவும் தானுமே கண்ணயர்ந்தான்.
நடுஜாமத்தில் அவளின் முணங்கல் சத்தத்தில் விழித்து பார்த்தவன் இதயவைன் அருகே சென்று பார்க்க குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்தாள் அவள்.
“இதயா…” என்று கன்னம் தட்ட சுத்தமாக நினைவே இல்லை.
காய்ச்சல் வேறு கொதித்துக்கொண்டிருக்க அவளின் உடலெல்லாம் உதறியது. பயந்து போனவன் உடனே பி.ஏ அகிலனுக்கு அழைத்தான்.
“ஸார் சொல்லுங்க ஸார்…” என்று அகிலனும் என்னவோ இந்த நேரத்தில் போன் என்று எடுத்து கேட்க,
“அகிலன் கொஞ்சம் அர்ஜன்ட். யாராவது தெரிஞ்ச லேடி டாக்டர் இருந்தாங்கன்னா கொஞ்சம் வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியுமா?…”
“என்னாச்சு ஸார்?…” என்ற அகிலன்,
“ஓகே ஸார். இப்பவே கூட்டிட்டு வரேன்…” என கட் செய்ய போக,
“அகிலன், அகிலன். எதுக்கும் செலைன் போடற மாதிரி இருக்கும்….” என்றதும்,
“ஸார் நான் பார்த்துக்கறேன் ஸார், இன்னும் கால்மணி நேரத்துல வீட்டுல இருப்பேன்…” என்று போனை வைத்த அகிலனுக்கு அத்தனை யோசனை.
அவருக்கு கண்ணனின் பெற்றோர் வந்திருப்பது தெரியும். அவர்களில் யாருக்காவதாக இருக்கும் என்று நினைத்திருந்தார்.
உடனே தங்களுக்கு தெரிந்த ஒரு லேடி டாக்டரை அழைத்துக்கொண்டு சொல்லியதை போல வந்து சேர,
“வாங்க டாக்டர். வாங்க அகிலன்…” என்று உள்ளே அழைத்து சென்றான்.
“யாருக்கு ஸார்…” என வந்த பெண் கேட்க,
“என்னோட வொய்ப்க்கு தான் சிவியர் பீவர்…” என்று சொல்லவுமே,
‘இவருக்கு கல்யாணமும் ஆகிடுச்சா?’ என்று தான் அகிலன் பார்த்தார்.
“அந்த ரூம்ல இருக்காங்க. பாருங்க…” என அழைத்து செல்ல அகிலனும் பின்னோடே சென்றார்.
அதை கண்ணன் இருக்கும் அவசரத்தில் கவனிக்கவில்லை. உள்ளே இதயா துவண்டு போய் படுத்திருக்க அவளின் தலைமாட்டில் நின்றவன்,
“தண்ணில ரொம்ப நேரமா நின்னுட்டாங்க…” என்றதும்,
“இப்ப ட்ரிப்ஸ் போட்டுடறேன் ஸார்…” என்றார் அந்த டாக்டர்.
“இவங்க கையை கொஞ்சம் பிடிங்க ஸார்…” என்றதும் நகர்ந்து அவளின் கையை பிடித்தபடி தாழ்ந்து அவன் அமர அந்த அறை வாயிலில் நின்ற அகிலனுக்கு அத்தனை அதிர்ச்சி அங்கே பூவிதயாவை பார்த்து.
“பூவி பொண்ணா இவர் சம்சாரம்?…” என்று வாய்விட்டே சொல்லவும் தான் அகிலன் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் கண்ணன்.
அவன் பார்த்ததுமே உடனே நகர்ந்து வாசல் பக்கம் சென்று நின்றுகொண்டார் அகிலன். பார்த்ததுக்கு எதுவும் திட்டுவானோ என்று பயத்துடன் இருக்க இங்கே இதயாவிற்கு ட்ரிப்ஸ் போடப்பட்டு ட்ராப்ஸ் லெவலை சரிபார்த்துவிட்டே நகர்ந்தார்.
“எதுவும் பேயை பார்த்தாங்களா ஸார்?…” என்று டாகடர் கேட்க,
“என்ன?…” என்றான் கண்ணன் புரியாமல்.
“ஏதோ நிழலை பார்த்து பயந்திருக்காங்க போல. டெவில் டெவில்ன்னு புலம்பறாங்க. தைரியம் சொல்லுங்க. அதனால கூட காய்ச்சல் வந்திருக்கும்…” என்றதும் கண்ணன் திருதிருவென்று முழித்தான்.
‘இவ ஊரெல்லாம் உளறி வைப்பா போல?’ என்று இதயாவை பார்க்க,
“கவலைப்படாதீங்க ஸார். நாளைக்கு க்யூர் ஆகிடுவாங்க. ட்ரிப்ஸ் முடிஞ்சதும் நான் சொன்ன மாதிரி பண்ணிடுங்க. போதும்…”
“ஹ்ம்ம், ஐ னோ டாக்டர்…” என்றான் புன்னகையுடன்.
“ஓஹ், ஆமா உங்களுக்கு எமெர்ஜென்சி எல்லாம் இம்பார்ட்டன்ட் இல்ல. ஓகே ஓகே….” என சிரித்த அந்த பெண்,
“இது என்னோட கார்ட். திரும்ப பீவர் அதிகமானாலோ அவசரம்னாலோ கூப்பிடுங்க ஸார். இங்க பக்கத்துல தான் கிளினிக். அதை ஒட்டி வீடு. பத்து நிமஷத்துல வந்துருவேன்…” என்று சொல்லவும்,
“ஓகே, தேங்க் யூ டாக்டர்…”
“வித் ப்ளஷர் ஸார். நான் வரேன்…” என்று சொல்லி கிளம்பிவிட வாசலுக்கு வந்தான் கண்ணன்.
“தேங்க்ஸ் அகிலன்…” என்று அகிலனுக்கு நன்றி சொல்ல,
“சரிங்க ஸார்…” என அவர் பார்க்க,
“பூவிதயா என்னோட வொய்ப். இப்போ உங்களுக்கு குழப்பம் இல்லையே?…” என அவனே கேட்க,
“ஹாங்…” என்று தான் பார்க்கவேண்டி இருந்தது.
வந்ததில் இருந்து அவனின் காய்ச்சல்களை எல்லாம் கவனித்து கொண்டு தானே இருக்கிறார். அதிலும் அகிலனுக்கு ஏகத்திற்கும் திட்டு கிடைக்குமே.
அத்தனை கண்டிப்பை காட்டியவனிடம் இந்த மென்மையான பேச்சை எதிர்பார்க்கவில்லை.
அகிலனுக்கு தெரியாதது இன்றளவும் கண்ணனின் மனதில் இதயா சொல்லிய ‘நடுநிலை செய்யும் வேலையிலாவது இருக்கட்டும்’ என்ற வார்த்தை ஊசியாய் குத்திக்கொண்டே இருப்பதை அறிந்திருக்கவில்லையே.
அதற்காகவே எந்தவிதத்திலும், எந்த இடத்திலும் சறுக்கிவிட கூடாதென்பதில் அவனின் கவனம் அதிகமாகியதையும் தெரிந்திருக்கவில்லை.
“அகிலன்…” என கண்ணன் அழைத்ததும்,
“ஓகே, ஸார். கிளம்பறேன். குட்நைட் ஸார்…” என்று சொல்ல,
“இந்த டைம்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன். இங்க இப்போ எனக்கு வேற யாரையும் தெரிஞ்சிருக்கலை தானே?…” என்றதுமே குளிர்ந்து போனது அகிலனுக்கு.
எந்தளவிற்கு தன்னை முக்கியமாக நினைத்திருந்தால் இந்த நேரத்தில் அவன் அழைத்திருப்பான் என்று மகிழ்ந்து போனவர்,
“ஸார், இது என்னோட கடமை ஸார். மேடம் காய்ச்சல் சரியானா போதும்…” என்று உடனே இதயாவை மேடமாக்கி கண்ணனிடம் நல்லபெயர் எடுக்க,
“அப்பறம் இன்னொரு ஹெல்ப். நல்லா சமைக்கிற ஒரு லேடி வேண்டும். அப்படியே வீட்டு வேலைக்கும்…” என சொல்லவும்,
“ஏற்கனவே இருக்காங்களே ஸார் கிளீன் பன்றதுக்கு…”
“இல்லை இது கிட்சனுக்கு…”
“ஓகே ஸார்…”
“நாளைக்கே கிடைச்சா கொஞ்சம் நல்லா இருக்கு…”
“கண்டிப்பா ஸார். நானே நாளைக்கு கூட்டிட்டு வரேன்…” என சொல்லவும்,
“ஓகே, கிளம்புங்க. நாளைக்கு லீவ் தானே?…”
“ஆமா ஸார்…” என்றவர் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் இதயாவின் அருகே அமர்ந்துகொண்டான்.
“கொஞ்ச நேரத்துல ஆட்டம் காமிச்சுட்டியே?…” என்று அவளின் தலையை வருட மீண்டும் அரைத்தூக்கத்தில் பாதி மென்றும், பாதி துப்பியும் என பிதற்றல்கள் வரிசையாய் வர ஒரு பெருமூச்சுடன் அவளருகே சாய்ந்துகொண்டான்.
ஆனால் உறங்கவில்லை. டிரிப்ஸ் முடிந்ததும் அதை கழற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து என மீண்டும் எழுந்து சாய்ந்து அமர்ந்துகொண்டான் கட்டிலில்.
விடியற்காலையில் ட்ரிப்ஸ் முடிந்து போக போக உடனே அதை நிறுத்தி அவளின் கையில் இருந்து லாவகமாக கழற்றி அதனை சுற்றி இருந்த இரண்டு மூடிகளை வைத்து அடைத்துவிட்டு நன்றாக படுக்க வைத்தான்.
தானும் வந்து மறுபக்கம் படுத்தவன் எழுந்து தன்னை திட்டினால்? என்ற ஒரு எண்ணம் பிறக்க தயங்கியது ஒரு நிமிடம் தான். பார்த்துக்கொள்ளலாம் என்று படுத்துவிட்டான்.
இரவெல்லாம் விழித்திருந்தது கண் எரிந்தது. மனதின் அலைகழிப்பு வேறு உறக்கம் தான் அண்டவில்லை அவனை.
அவள் எழும்பும் வரை லேசாய் உறங்குவதும், பின் கண்விழித்து இதயாவை பார்க்கவும் என்றே அந்த நாள் அவனுக்கு தொடங்கியது.
எட்டு மணி போல கண்ணை திறந்தவளுக்கு அத்தனை பாரமாய் இருக்க மெல்ல நகர்ந்து படுக்கவும் முடியாமல் உடலில் அசதியும் அனலும் அவளை படுத்தியது. வாயெல்லாம் கசக்க உமட்டுவதை போல இருக்க மெல்ல எழுந்து அமர்ந்தாள்.
“இதயா இப்போ ஓகே தானே?…” என்று சுவாதீனமாய் அவளின் நெற்றியில் கைவைத்து பார்த்தான் கண்ணன்.
தான் இருப்பது அவனின் வீடு என்பதை அவளின் மனது மறக்கவில்லை. மறக்கும் படியாகவா அங்கே வந்து சேர்ந்தாள்?
மெல்ல குனிந்து தன் உடையை பார்த்தவள் அங்கே அறையை சுற்றிலும் பார்க்க தனது பெட்டி திறக்கப்பட்டு உடைகள் கலைக்கப்பட்டு இருந்தது.
‘தேடியிருப்பான் போல நைட்டியை’ என்று நினைத்துக்கொண்டவள் அமைதியாக தன் மனதை சமன் செய்தாள்.
“ட்ரெஸ் எல்லாம் ஈரமா இருந்தது. அதான் மாத்திவிட்டேன்…” என்று கண்ணனே ஒப்புதல் போல சொல்ல,
“நான் கேட்கவே இல்லையே?…” என்றாள் அவள்.
ஏன் உடை மாற்றினாய் என்று குறைந்தபட்சம் சண்டை போடுவாள், இல்லை தன்னை தவிர்ப்பாள் என்று அவன் நினைத்திருக்க இது ஒரு விஷயமே இல்லை என்பதை போல இதயா இருந்தது இன்னுமே வருத்தமானது.
“நான் மாத்தினதால உனக்கு ஒன்னும் கோபம் இல்லையே?…” என்று கேட்க,
“ஏன் நீங்க என் ஹஸ்பண்ட் அப்படின்றது உங்களுக்கு இத்தனை வருஷத்துல மறந்திருச்சா என்ன?…” என்றாள் பதிலுக்கு.
“ஓஹ் இதயா, அதெப்படி மறக்கும்? நீ ஏன்?…” என்று கேட்டுக்கொண்டே பேச்சுவாக்கில் ஊசி குத்தியிருக்கும் கையின் மேல் தன் கையை வைத்துவிட,
“ஸ்ஸ்ஸ்ஸ் அவுச்ச்…” என்று கையை உருவி உதறினாள்.
“அச்சோ ஸாரி ஸாரி…” என அவளின் கையை பிடித்து மெல்ல காற்றை இழுத்து ஊதிவிட மறுக்காமல் காட்டியபடி அவள் இருக்க இன்னுமே உள்ளுக்குள் துணுக்குற்றது அவனுக்கு.
“ஏன்டி இப்படி இருக்க?…” என்று கேட்டு வெறுத்த முகத்துடன் எழுந்துகொண்டான்.
ஒன்றும் பேசாமல் இதயா அங்கிருந்து மெல்ல இறங்கி பாத்ரூம் செல்ல அவளை ஒருபக்கம் பிடித்தபடி கண்ணனும் வர,
“மேனேஜ் பண்ணிப்பேன்…” என்று சொல்லவும் விட்டுவிட்டான்.
ஆனாலும் மனது அவளின் இயல்பான பேச்சிற்காக கிடையாய் கிடந்து தவித்தது. பாத்ரூம் சென்றுவிட்டு முகம் கழுவி வந்தவள் ப்ரெஷ், பேஸ்ட்டை தேட,
“அங்கயே வச்சிருந்தேன். கவனிக்கலையா நீ? நைட்டே எடுத்து வச்சிட்டேன்…” என்றதும் தலையசைத்து மீண்டும் உள்ளே சென்றாள்.
பிரஷ் செய்துவிட்டு வரும் பொழுதே கஞ்சியும், ஊறுகாயும் இருந்தது ஒரு குட்டி ஸ்டூலில்.
“எனக்கு இது தான் தெரியும். ரொம்ப எல்லாம் எக்ஸ்பர்ட் கிடையாது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு சமைக்க வந்துருவாங்க…” என்று சொல்ல தலையை அசைத்துவிட்டு வந்து அமர்ந்துகொண்டாள்.
“முதல்ல கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோ…” என்று தர வாங்கி குடித்தவள் ஸ்பூனால் மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.
சாப்பிடனுமே? உயிரை வாழவேனும் உண்ணவேண்டுமே என்னும் எண்ணமே பிரதானம் அவளுக்கு.
இனி என்ன ஆனால் என்ன? எல்லாம் முடிந்தது. வாழ்க்கை போகிற விதத்தில் போக வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.
பட காயம் இன்னும் ரணமாய் எரிவதை போல இருந்தது. அதிலும் அவனுடன் அந்த அருகாமை இன்னும் மிளகாயாய் காந்தியது.
சொன்ன சொல் சொல்லியது தானே? மீண்டும் மீண்டும் மனது அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அதை கடக்கத்தான் நினைத்தாள்.
“இதயா இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோ…”
“இல்லை, வாமிட் வர மாதிரி இருக்குது…”
“ஓகே, வச்சிட்டு தண்ணி குடி. ஒரு பைவ் மினிட்ஸ் போகட்டும் டேப்லட் போட்டுப்ப…” என்றதும் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.
ஆனால் அவனை பார்வையால் தொடர்ந்துகொண்டே தான் இருந்தாள். கண்ணனுமே அதை உணர்ந்தான்.
தான் அதிகமாக நெருங்கி அவள் மீண்டும் முறுக்கிக்கொண்டால்? அந்த பயம் மனதளவில் இருந்துகொண்டே தான் இருந்தது. அதனால் அடக்கிவாசித்தான் அவளிடத்தில்.
“இந்த டேப்லெட்…” என்று நீட்ட அதையும் வாங்கி போட்டவள்,
“இது வேண்டாம். எனக்கு அன் ஈஸியா இருக்குது…” என சொல்ல,
“கொஞ்சம் நேரத்துல டாக்டர் வந்திருவாங்க. அவங்களே ரிமூவ் பண்ணுவாங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணலாம். காய்ச்சல் திரும்ப வந்தா என்ன செய்ய?…”
“ப்ச்…” என்று சலிப்பாய் கண்ணை மூட,
“படுக்காம உட்கார்ந்திரு. இல்லைன்னா போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ. நைட் ஒண்ணுமில்லை. இப்போ…” என்றவனை பார்த்தவள்,
“எந்நேரம் வந்தாங்க நைட்?….” என்றாள்.
“மிட்நைட்ல. அகிலன் தான் கூட்டிட்டு வந்தார். எனக்கு இங்க யாரையுமே தெரியாதே? அதனால…” என்று அவன் சொல்லவும் ஒரு நிமிடம் திகைத்து பின் எப்படியும் தெரியவரும் தானே என்று ஆயாசத்துடன் கண்ணை மூடினாள் மீண்டும்.
“இதயா…” என்று அவன் அழைக்கவும்,
“இல்லை டயர்டா இருக்குது. பேச முடியலை…” என்று சொல்ல கண்ணனும் அங்கேயே ஒரு புக்குடன் கையில் கப்புடன் அமர்ந்தான்.
அதிலும் கஞ்சியே இருக்க இதயா பார்த்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. மனதினுள் அடக்கிவைத்த உணர்வுகள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தது.
நிஜமாவே இவன் பொய்த்துவிட்டானா? என எண்ணியவளுக்கு எப்போதும் போல வேதனை இதயத்தை தைத்தது.
இவனின் நேசமும், அன்பும் பொய்யில்லையே. ஆனாலும் எவ்விடம் தவறி போனோம்? என்று அவனை ஆராயும் பார்வை பார்க்க இங்கே கண்ணனுக்கு முதுகுத்தண்டு சில்லிட்டது.
நிமிர்ந்து பார்த்தால் பார்வையை திருப்பிக்கொள்வாளோ என்று அமைதியாக புத்தகத்திலேயே தான் பார்வையை பதித்திருந்தான்.
ஆனாலும் அவனின் விழிகள் சொல்பேச்சு கேட்கமாட்டேன் என்பதை போல அவளை பார்க்க ஆவலாய் தவித்தது.
‘இதயா பாக்காம தூங்கேன்’ என மனதிற்குள் சொல்லிக்கொண்டவன் இன்னும் அடுத்த பக்கத்தை திருப்பாமலே இருக்க இதயாவிற்கு அவனும் தன்னை உணர்கிறானோ என்று இருந்தது.
பல்லை கடித்தபடி கண்ணை மூடி சாய்ந்துகொன்டாலும் மனதிற்குள் பேரலை அவளை துரும்பென தூக்கி அங்குமிங்கும் வீசியது.
இன்னுமே அவளுக்கு கண்ணன் அவனின் வீட்டில் பேசியது எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதை பற்றி யாரும் சொல்லியிருக்கவும் இல்லை அவளுக்கு.
அவனின் மேல் வைத்த அளவுகடந்த நேசம் அவனும் தன்னிடம் அப்படி இருக்கவில்லையோ என்ற ஒரு எண்ணத்தை அந்த கொடிய சூழ்நிலை உருவாக்கியது.
ஒருவேளை திருமணத்தை நிறுத்துவதை பற்றி பேசியிருந்தால் அல்லது தான் பேசும் போது நானிருக்கிறேன் என்று சொல்லியிருந்தால் இத்தனை தூரம் இது சென்றிருக்காதோ என்ற எண்ணம் வலுவாய் இருந்தது அவளுக்கு.
அப்போது இவனுக்கு நான் யார்? என்னிடம் சொல்லவும், என் கஷ்டங்களுக்கு தோள் கொடுக்கவும் அவனுக்கு நேரமில்லையா? மனதில்லையா? அத்தனை இலகுவாக போய்விட்டேனா நான் என்னும் பிடிவாதம் திருமணம் வரையிலும் இருக்க அதன் பின்னான நிகழ்வுகளோ பெரும் துயரம் அவளுக்கு.
அவளுக்கு தெரியாத ஒன்றிற்கு அவன் பொறுப்பில்லை. தெரிந்துகொள்ள அவன் அந்த நேரம் முயலவும் இல்லை. அவன் நினைத்த நேரம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை. இப்படி ஒருவரும் தனி தனி கோணத்தில் ஒரே சூழ்நிலையை எதிர்கொள்ள தனியாகி நின்றனர்.
ஆனால் அவனின் முன்னாள் பேசிய பேச்சிற்கு அவனின் பதில் என்னெவென்று பார்த்தாளே? அவனை பொறுத்தவரை அதன் நியாயம் வேறு. ஆனால் அவனை மட்டுமே நம்பி வந்தவளுக்கு நியாயம் செய்யவேண்டாமா என்ற நினைவுகள் இன்றளவும் வாட்டிக்கொண்டு இருந்தது அவளை.
அதையும்விட பெரிய கோபம் வேலையை விட்டு வா என்றது. நடந்தவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போலவும் வேலையும் வேண்டாம் நீ மட்டும் வா என்று அழைத்ததை ஏற்கவும் முடியவில்லை.
வேலையில் இருக்கும் பொழுதே கலெக்டர் பதவி என்று வரவும் அவனுக்கு நான் சமமில்லை என்று மறுத்த இடத்தில் வேலையும் இல்லாது தான் இருப்பதா? மறுத்துவிட்டாள்.
அதிலும் அவன் சொல்லிய வார்த்தை. ‘இதுக்கா என்னை கல்யாணம் செய்த?’ என்னும் வார்த்தை.
அத்தனை பேர் சொல்லட்டும், யாரும் சொல்லட்டும். இவன் ஏன் சொல்லவேண்டும்? சொல்லிவிட்டனே? ஏற்கனவே உளைச்சலில் இருந்தவளுக்கு இன்னும் பாரத்தை ஏற்றியதை போல ஆனது அவன் சொல்லியது.
எத்தனை எத்தனை மறுத்தும் இதோ வந்துவிட்டேனே? லேசாய் முகம் கசங்கி விசும்ப,
“இதயா…” என்று புக்கை வைத்துவிட்டு அவளருகே வந்தான்.
“என்னாச்சு? என்ன பண்ணுது?…” என்று பதறி கேட்க ஒன்றும் பேசாமல் படுத்துவிட்டாள்.
“ப்ச், இங்க பாரு? இப்ப ஏன் அழற? என்ன நடந்துச்சுன்னு இந்த அழுகை?…” என்று அவளை தன் பக்கம் திருப்ப,
“ஒண்ணுமில்லை. என்னவோ தோணிச்சு. அழுதுட்டேன். உங்க முன்னாடி அழ கூடாதுன்னு தோணுது. ஆனா சில விஷயங்களை நினைக்காம இருக்க முடியலை. இந்த முகத்தை பார்த்தா எல்லாமே ஞாபகம் வருது…” என சொல்ல,
“இதுக்கு நான் என்ன சமாதானம் சொல்லன்னு எனக்கு தெரியலை இதயா. உண்மையா நீ எவ்வளவு கஷ்டபட்டிருப்பன்னு புரியுது. ஆனா மன்னிப்புன்ற என்னோட ஒரு வார்த்தை அதை சரி பண்ணிறாது தானே? பார்ப்போம். இந்த காலம் இதை எல்லாம் மாத்தலைன்னாலும் மறக்க வைக்குதான்னு…”
“மறக்க முடியும்னு தோணலை…” என்றவள் மீண்டும் திரும்பி படுத்துக்கொண்டாள்.
அதற்குள் டாக்டர் வருகிறேன் என்று போன் செய்யவும் இதயாவை எழுப்பி உடை மாற்ற சொல்லியவன் தானும் குளித்துவிட்டு உடை மாற்றி வந்தான்.
டாக்டரும் வந்துவிட இதயாவை செக் செய்தவர் மீண்டும் லேசாய் காய்ச்சல் இருப்பதாகவும் மாலை வருகிறேன் என்றும், ட்ரிப்ஸ் போதுமென்று சொல்லி சென்றார்.
“இவங்க தான் உனக்கு வந்து பார்த்தவங்க…” என கண்ணன் சொல்ல,
“ஹ்ம்ம்…” என்றாள்.
“எதாச்சும் பேசு இதயா, இந்த வீட்டுல நாம ரெண்டு பேர் தான். இனி பேசாம எதையும் கடக்க முடியாது…” என அவன் சொல்ல,
“எல்லாமே ஈஸி தான் இல்ல?…” என்றவள் வேறு எதுவும் பேசிவிடுவோமோ என்று படுத்துவிட்டாள்.
அந்த நேரம் நவீன் அழைக்க அவனிடமும், மஞ்சுவிடமும் பேசியவள் குரலை கண்டு,
“பூவிக்கா என்னாச்சு வாய்ஸ் சரியில்லையே?…” என்றான் நவீன்.
“லேசா பீவர் நவீ. இப்போ தான் டாக்டர் வந்து பார்த்துட்டு போனாங்க…” என சொல்ல,
“லேசா பீவர்ந்னு இத்தனை ஈசியா சொல்ற? சாப்பிட்டியா? வாமிட் பண்ணுவியே நீ? இப்போ எப்படி இருக்குது? மாத்திரை போட்டியா?…” என வரிசையாக கேட்க,
“எல்லாம் பண்ணிட்டேன்டா. ஒன்னும் பிரச்சனை இல்லை. இப்போ நார்மல் தான். நீங்க ஊருக்கு போயாச்சா?…”
“ஹ்ம்ம், இப்போ தான். நேரா அந்த ப்ளாட்டுக்கே வந்துட்டோம்….” என சொல்ல,
“ஓகே டா பார்த்துக்கோ. நான் அப்பறமா பேசறேன்…”
“ஹ்ம்ம் ஓகே பூவிக்கா…” என்றவன்,
“அவர் இருந்தா குடேன்…” என்றான்.
“எதுக்கு?…”
“ஹ்ம்ம், நல்லா இருக்காரா? நீ இருந்த கோவத்துல அவரை என்ன பண்ணினன்னு கேட்கறதுக்கு தான்…”
“ஆமா, பண்ணிட்டாங்க. போடா…”
“ப்ச், குடு பூவிக்கா…” என்றதும் கண்ணனை நோக்கி போனை நீட்ட,
“எனக்கா?…” என்று வாங்கி காதில் வைத்தான்.
“எங்கக்காவுக்கு காய்ச்சல்ன்னா எங்கக்கிட்ட சொல்லமாட்டீங்களா?…” என எடுத்ததுமே நவீன் கேட்க,
“சொன்னா உடனே வந்துருவீங்களா? என்ன பண்ணுவீங்க?…” என துடுக்காக இதயா எதிர்க்கவே பேசி அவளின் பிபியை ஏற்றினான்.
“ஏன் இப்ப கூட கிளம்பி வருவேன். முடியாதுன்னு சொல்றீங்களா? சென்னைல இருந்து ப்ளைட் ஏறினா போதாதா? இல்லை நாங்க செய்ய மாட்டோம்னு நினைக்கறீங்களா?…” என்று கேட்கவும் கண்ணனுக்கு முழி பிதுங்கியது.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோவப்படற? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் பார்த்துப்பேன் இதயாவை. அவசரப்பட்டு கிளம்பிறாத…” என மிதப்பாகவே சொல்ல மறைமுகமாய் ‘வந்துராதடா’ என்னும் வேண்டுதேலே இருக்க,
‘தேவையா உனக்கு?’ என நினைத்துக்கொண்டே தான் அவனின் முகத்தை பார்த்தபடி இருந்தாள் இதயா.
“பின்ன நீங்க பேசினது அப்படித்தானே இருந்துச்சு. என்னவோ நாங்க பார்த்துக்கமாட்டோம்னு சொன்னமாதிரி…”
“சரி சொல்லலை. அதுமாதிரி தானே நீ பேசினதும் இருந்துச்சு. சின்ன காய்ச்சலுக்கு கூடவா உங்களுக்கு உடனே போன் அடிக்கனும்? அப்போ நான் பார்த்துக்கமாட்டேன்னு சொல்ற மாதிரி இல்லையா?…” என்றவன் நவீனின் மௌனத்தில்,
“புரிஞ்சுக்கோங்கடா, இனி நான் பார்த்துப்பேன். நான் தான் பார்த்துப்பேன். புரியுதா? அங்க உன் வேலையை நிம்மதியா பாரு. எல்லாத்துக்கும் இன்னொரு அர்த்தம் எடுத்துக்காம…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் இதயாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு போனை கொடுத்தவன்,
“இங்க பாரு இதயா, இதுவரை வேணா நான் வேற மாதிரி இருந்திருக்கலாம். இனி எப்பவும் ஒரே மாதிரி. அதுல எந்த மாற்றமும் இல்லை. புரியுதா?…” என்றவன் தலையை அழுத்தமாய் கோதிக்கொண்டு,
“உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை. அதானே? எதுவுமே பண்ணாம , கூட இருந்து பேஸ் பண்ணாம நம்பலை, மாட்டேன், முடியாதுன்னே சொல்லிட்டிருந்தா? நம்பி பாரேன்…” என்றதற்கும் அதே பார்வை தான் அவளிடத்தில்.
“நீ நம்ப மாட்ட, நம்பவும் வேண்டாம். ஆனா இதுதான் நிஜம். இதுதான் நம்ம வாழ்க்கை. ஆமா பிரச்சனை ஆகிருச்சு. தப்புத்தான. என் மேல பெரிய தப்பு தான், அதை திருத்திக்க எந்த வாய்ப்பும் தரமாட்டேன்னு இப்ப நீயும் தானே அதே தப்பை பண்ணிட்டு இருக்க?…” என்றவன்,
“போதும் நம்ம வாழ்க்கையை மத்தவங்க கையில் எடுத்தவரைக்கும் போதும். என்னை என்ன வேணா பேசிக்கோ. ஆனா கூட இருந்து, என்னோட இருந்து. அவ்வளவு தான். ஒருதடவை பட்டுட்டேன். திரும்பவும் அதை செய்வேன்னு நினைக்காத. அதை செய்யாதடான்னு வேணா சொல்லிகுடு…”
“எப்படி வாழனும், என்னல்லாம் செய்யனும் எத்தனை விதமா பேசின, இப்போ ஒண்ணொண்ணா சொல்லிக்குடு. மண்டையில உரைக்கிற மாதிரி கத்துக்குடு. திருத்திக்கறேன். ஆனா இந்த பார்வை இருக்கு பாரு. அது வேண்டாம். என்னை கோபமா கூட பார்த்துக்கோ. இப்படி வெறுமனே பார்க்காதடி. இதயா ரொம்ப ரொம்ப அனுபவிச்சுட்டேன்…”
“அதோட தாக்கம் திரும்ப திரும்ப உன்னை நான் காயப்படுத்திட்டே இருந்துட்டேன். அது உனக்கு புரியலை. இல்லை எனக்கு புரியவைக்க தெரியலை. தப்பு செய்யாதவன் மனுஷனே இல்லை. செஞ்சுட்டேன். இப்ப ஒரு வாய்ப்பு குடு. இந்த வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு குடுக்கட்டும்…”
“புருஞ்சுக்கோம்மா…” என்று இப்போது அவளை நெருங்கி அவளின் கன்னம் தாங்கி சொல்ல பேச்சையும் அவனின் கண்ணீரையும் பார்க்க முடியாமல் கண்ணை மூடிக்கொண்டாள்.
வெளியே காலிங் பெல் அடிக்கும் சத்தத்தில் இருவருமே கலைய தன் கண்ணை துடைத்துவிட்டு இதயாவின் தலையை சரி செய்தவன்,
“யாருன்னு பார்த்துட்டு வரேன்…” என்று எழுந்து சென்றான்.