ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 16
கண்ணா வந்து கதவை திறக்க வெளியே அகிலன் ஒரு நடுத்தர வயது பெண்மணியுடன் நின்றுகொண்டு இருந்தார்.
“உள்ள வாங்க அகிலன்…” என்று அழைக்கவும்,
“வணக்கம்ங்க அய்யா…” என அந்த பெண்மணி சொல்ல,
“ஸார் நீங்க கேட்டிருன்தீங்களே சமையலுக்கும், மத்த வேலைங்களுக்கும். அதான் கையோட கூட்டிட்டு வந்துட்டேன்…”
“இவங்க உங்களுக்கு தெரிஞ்சவங்களா அகிலன்?…”
“ஆமா ஸார். இவங்க நம்ம வீட்டுக்கு பக்கத்துல இருக்கறவங்க தான். அங்க அக்கம்பக்கத்துல வேலை பார்க்கறாங்க. இவங்களோட அக்கா தான் நம்ம வீட்டுல உதவியா இருக்குது. நம்பிக்கையானவங்களும் கூட…”
“சமையல் எல்லாம எப்படி பண்ணுவீங்கம்மா? டேஸ்ட்…”
“சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க அய்யா…” என்றார் அப்பெண்மணி.
“டேஸ்ட் மாதிரியே சுத்தமும் முக்கியம். பார்த்துக்கோங்க. உங்க பேர் என்ன?…”
“தனம்ங்க அய்யா…”
“ஓகேம்மா…” என்ற கண்ணன்,
“நீங்க இப்பவே சேர்ந்தாலும் சரி நாளையில இருந்துனாலும் சரி…” என்றவன் என்னென்ன வேலைகள் என்பதையும் சொல்லிவிட்டு,
“இப்போதைக்கு இதை செய்ங்க. என் வொய்ப் என்னென்ன செய்யனும்னு நாளைக்கு சொல்லுவாங்க. கேட்டுக்கோங்க…” என்றான்.
“சரிங்கையா, நாளையில இருந்தே ஆரம்பிக்கறேன். இன்னைக்கு அய்யா கூப்பிட்டதும் அப்படியே போட்டது போட்டபடி வந்துட்டேன்…” என்றார் தனம்.
“சரி நீங்க கிளம்புங்க…” என்று சொல்ல,
“ஸார் மேடம் எப்படி இருக்காங்க? இப்போ காய்ச்சல் பரவாயில்லையா?…” என அகிலன் கேட்கவும் தலையசைத்தான் கண்ணன்.
“சரிங்க ஸார். அப்போ நான் வரேன். நாளைக்கு காலையில நீங்க சொன்ன நேரத்துக்கு இந்தம்மா வந்துருவாங்க…” என்று சொல்லி விடைபெற்று அகிலன் கிளம்பிவிட கண்ணன் கிட்சனுக்கு வந்தான்.
சூடாக ப்ளாக் காபி கலந்தவன் இதயாவிற்கும் சேர்த்தே எடுத்து வர அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
“அதுக்குள்ளே தூங்கிட்டா…” என்றபடி கப்பை வைத்துவிட்டு தான் அமர்ந்திருந்த இடத்தில் மீண்டும் அந்த புத்தகத்துடன் அமர்ந்துகொண்டான்.
வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் அவனால் அதிலும் மனம் செலுத்த முடியவில்லை.
அவ்வப்போது பக்கத்துக்கு பக்கம் திருப்பும் பொழுதெல்லாம் அவளையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே இருந்தவன் ஒருகட்டத்தில் லேசாய் கண்ணயர்ந்துவிட்டான்.
உறங்காத உறக்கமெல்லாம் சேர்ந்து அவனை சாய்க்க கையில் இருந்த புத்தகத்துடன் நன்றாக சரிந்து அமர்ந்தவன் வசதி போதாது என்று எழுந்து வந்து கட்டிலில் படுத்துக்கொண்டான்.
ஆழ்ந்த உறக்கம் வெகு நேரம் செல்ல கண் விழிக்கும் பொழுது அருகே இதயா இல்லை.
தாளிக்கும் வாசனை நாசியை நிரப்ப எழுந்து நேராக சமையல் அறைக்கு செல்ல அங்கே இன்னும் தெளியாத முகத்துடன் சோர்வோடு சாய்ந்து நின்றபடி தாளித்தத்தை ரசத்தில் கொட்டினாள்.
“என்னை எழுப்பியிருக்கலாம்ல? ஏன் இங்க வந்த நீ?…”
“பசிச்சது. அதான் எதாச்சும் செய்யலாமேன்னு…” என்றவள் அவன் பக்கம் திரும்பவில்லை.
“ப்ச், அதான் கஞ்சி போட்டு வச்சிருந்தேனே? அதை குடிக்கிறதுக்கு என்ன?…”
“எனக்கு புடிக்கலை. உமட்டுச்சு. அதன சமைச்சேன். ஏன் கூடாதா?…” என்றாள் சற்று எரிச்சலுடன்.
அங்கு வரும் வரை இரண்டு நாட்களாக சரியாக உண்ணாதது வேறு அவளை அயர்ந்து போக செய்திருக்க கூடவே காய்ச்சலும். வாயெல்லாம் கசந்தது.
“சரி தள்ளு நான் பன்றேன்…” என்று அவளின் கோபத்தை கணக்கெடுக்காது அவன் நெருங்கி வர சற்று தள்ளி நின்றவள்,
“முடிச்சுட்டேன். குக்கர்ல சாதம் மட்டும் விசில் வந்தா போதும். ரசம் பண்ணி பருப்பு செஞ்சுட்டேன்…” என்றாள்.
“காய்ச்சல்ன்னா பச்சடி தானே சேர்த்துப்ப? ஏன் பருப்பு?…” என கண்ணன் பதிலின்றி அவள் நிற்க,
“கேட்கறேன்ல. உனக்கு காய்ச்சல் வந்தா அதானே செஞ்சு தர சொல்லி சாப்பிடுவேன்னு சொல்லியிருக்க. அப்பறம் ஏன் பருப்பு?…” என்றவன்,
“சரி நான் செய்யறேன். எப்படின்னு சொல்லு. தக்காளி எல்லாமே இருக்குது…” என்று தக்காளி பழங்களை எடுத்து மேடையில் வைக்க,
“இல்லை வேண்டாம்…”
“ப்ச், நான் செய்யறேன் இதயா. சொல்லித்தா…” அவனும் விடுவதாய் இல்லை.
“வேண்டாம், இதுவே போதும். இப்ப எனக்கு அதை செஞ்சு சாப்பிடனும்னு தோணலை…” என மறுக்க மறுக்க,
“இல்லை எனக்கு தோணுது. எனக்குமே கஞ்சி சாப்பிட முடியலை…” என அவளை அங்கிருந்து நகரவிடாமல் அவன் நிற்க,
“சரி செய்ங்க…” என்றவள் சுற்றிலும் பார்த்தால் அந்த அறையை.
வந்ததும் பருப்பு, ரசம் என ஒரு இடத்திலேயே அடுத்தடுத்து இருக்க செய்துவிட்டாள். இப்போது வெங்காயத்தை தேட,
“என்ன வேணும்னு சொல்லு நான் எடுத்து தரேன்…” என கண்ணன் கேட்க,
“சின்ன வெங்காயம் வேணும்…”
“ஓஹ், இது கீழ தான் இருக்குது. அம்மா வாங்கி போட்டாங்க…” என்று அறையின் மூலையில் ஓரிடத்தில் தனியே ட்ரே வைத்து விரித்துவிட பட்டிருக்க அதை கண்ணன் காண்பித்ததும் இதயா கை நிறைய அள்ளிக்கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.
“என்ன?…” என பார்க்க,
“இதை முதல்ல உரிச்சு முடிங்க. அதுக்கடுத்து தான் மத்தது…” என்று அங்கிருந்த டையனிங்கில் சென்று அமர்ந்தவள் தலையை சாய்த்துக்கொள்ள கண்ணனின் முகம் பேயறைந்ததை போல் இருந்தது.
‘வாய விட்டு வம்பை வாங்கிட்டியேடா கண்ணா? தேவையா உனக்கு?’ என்றவனுக்கு அப்பொழுதே கண்ணீர் வந்துவிடும் போல இருக்க,
“இவ்வளவுமா உரிக்கனும்?…” என அழுதுவிடுபவன் போல இருந்தாலும் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு அவன் கேட்க,
“ரெண்டு பேருக்கு வேணும்னா இவ்வளவு உரிக்கனும். இல்லைன்னா விட்டுடுங்க. என்னால முடியலை. அதான் செய்யலை…” என்று இதயா சொன்னாலும் அவனால் அதற்கு மேலும் பின்வாங்க முடியாதே.
‘வேணா வேணான்னு சொல்லும் போதே தலையை ஆட்டாம இப்ப இப்படி வீனா போய்ட்டியேடா’ என உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே கத்தி கட்டர்-பேட் சகிதம் இதயாவின் எதிரே வந்து அமர்ந்தான்.
“உரிச்சு தோல் போட ஒரு கிண்ணம் வச்சுக்கோங்க. இல்லைன்னா எல்லாம் பறக்கும்…” என்று இதயா சொல்ல கண்ணன் அவளை உற்று பார்த்தான்.
“என்ன?…” என இதயா கேட்க,
“ம்ஹூம்…” என தலை அசைத்துவிட்டு எழுந்து ஒரு கிண்ணத்தை எடுத்து வந்து அமர்ந்தான்.
‘நல்லவேளை இந்நேரம் எவனும் இல்லை’ என்றுவேறு நினைப்பு அவனுக்கு வர லேசாய் கண்கள் கசிய கசிய வெங்காயத்தை உரித்தபடி இருந்தான்.
“கண்ணு எரியுதா?…”
“ஹ்ம்ம், என்ன கேட்ட?…” என ஒரு கண்ணை மூடி இன்னொரு கண்ணை பாதியாக திறந்தபடி அவன் கேட்க,
“கண்ணு எரியுதான்னு கேட்டேன்…” என்றாள் திருத்தமாக இப்போது.
‘இவ பேச்சுல எதோ சூட்சமம் தெரியுதே?’ என கண்ணை தனது டிஷர்ட்டில் துடைத்தவன் நன்றாக பார்த்தான் இப்போது.
“வெங்காயம் உரிச்சா கண்ணு எரியாதா?…” என்று கடுப்புடன் கேட்க,
“ஓஹ், ஓகே…” என்றுவிட்டாள் ஒன்றும் பேசாமல்.
“வச்சு செய்யறா…” என அவன் முணுமுணுக்க,
“நானா உங்ககிட்ட பச்சடி கேட்டேன்? நீங்களே செஞ்சு தரேன்னு சொல்லிட்டு இப்ப வந்து வச்சேன், செஞ்சேன்னு பேசறீங்க? எப்பவுமே இதான் உங்க பேச்சை நம்ப கூடாது…” என்ற இதயா சொல்லவும்,
‘எங்கைக்கும் எங்கைக்கும் போறா. மலையேற பார்க்கறாளே?’ என நொந்தவன்,
“வச்சு செய்யுது இந்த வெங்காயம்னு சொல்ல வந்தேன். கம்ப்ளீட் பன்றதுக்கு நீ காண்டாகிட்ட. என் மேல பால்ட் இல்ல…” என்று அப்படியே மாற்றி பேச அவனை முறைத்தவள் எழுந்து சென்று ரசத்தை ஒரு தம்ளரில் ஊற்றி கொண்டுவந்து குடிக்க ஆரம்பிக்க,
“பசிக்குதா இதயா?…” என்றான் மென்மையாக.
“ஹ்ம்ம்…”
“இப்ப பண்ணிடறேன்…” என சொல்லி வேக வேகமாய் அவன் உரித்து அதை கழுவி கொண்டுவந்து நறுக்க,
“இந்த சைஸ் இல்லை. இன்னும் குட்டியா. ஓஹ், இன்னும் கொஞ்சம் பெருசா. ப்ச். இவ்வளோ பெருசுன்னா வதங்க வேண்டாமா? ரொம்ப பொடுசா போட்டா சட்டுன்னு தீஞ்சிரும். சுருண்டுரும். வாய்க்கு கிடைக்கவே செய்யாது…”
இப்படி அவனுக்கு சொல்லி சொல்லி பாடம் எடுத்து இப்போது தான் உண்மையில் வைத்து செய்துகொண்டு இருந்தாள் அவனை.
“பச்சைமிளகாய் இன்னும் ரெண்டு போடுங்க. காரம் இல்லைன்னா இனிப்பா இருக்கும். டேஸ்ட் இருக்காது…” என்று அதையும் விளக்கி,
“இத்தனை தக்காளி தேவை இல்லை. இந்த வெங்காயத்துக்கு அளவுக்கு மூணு தக்காளி போதும்….” என்று அவனை ஒரு வழியாக்கி இருந்தாள்.
“நிஜமாவே இத்தனை மெனக்கெடனுமா ஒரு தக்காளி பச்சடிக்கு? முதல்லையே ரசம் சாதம் வேணும்னு என்னை எழுப்பியிருந்தா மெஸ்ல சொல்லி வரவழைச்சிருப்பேன்…” என்று பேசிக்கொண்டே அடுப்பில் சட்டியை வைத்தவன் ஆயிலை ஊற்ற,
“நல்லெண்ணெய் ஊத்தனும். இது என்ன எண்ணெய்?…” என்றாள்.
“நீ சொல்லவே இல்லை…”
“நான் சொல்லியா நீங்க சமைச்சு தரேன்னு சொன்னீங்க? இல்லைல…”
“ஆமா, நானா தான் சமைக்கிறேன்னு சொன்னேன். சரி சொல்லு…”
“இப்போ தானே சொன்னேன்?…”
“அடடா, எனக்கு நல்லெண்ணெய் எதுன்னு தெரியாது. இங்க நாலு ஆயில் கேன் இருக்கே?…” என்று அவற்றில் எது இதயா சொன்ன எண்ணெய் என்று தலையை பிய்த்துக்கொள்ள இதயாவிற்கு லேசாய் சிரிப்பு வந்தது.
கைலியை மடித்துக்கட்டி தோளில் சின்ன ஹேன்ட் டவலுடன் இடுப்பில் ஒரு கையும் தலையில் ஒரு கையுமாக அவன் முழிபிதுங்கி நின்ற கோலத்தில் இதழோரம் லேசாய் புன்னகை நெளிய,
“அனுபவி கலெக்டர். நல்லா அனுபவி. வா வான்னு சொன்ன தானே?…” என முனுமுனுத்துக்கொள்ள,
“என்ன சொன்ன?…” என்று திரும்பினான்.
“எதுவும் சொல்லலை…” என முகத்தை இன்னும் உர்ர்ர்ரென வைத்துக்கொண்டு அவள் பதில் கூற,
“ஓஹ்…” என்று அவளை நம்பமாட்டாமல் பார்த்துவிட்டு மீண்டும் எண்ணையை பார்த்தவன்,
“நீயே பார்த்து சொல்லு. எனக்கு தெரியலை…” என நீட்டினான்.
“கலெக்ட்டாராம்…” என்று நக்கலுடன் சொல்லியபடி எண்ணையை பார்க்க,
“ஆமா, இதெல்லாம் சொல்லி குடுத்தாங்க ட்ரெயினிங்ல…” என்று கடுகடுவென அவன் சொல்ல மௌனமாக அவனுக்கு அந்த எண்ணையை எடுத்து நீட்டினாள்.
அடுத்து அவள் சொல்லிய ஒவ்வொன்றையும் சிரத்தையாக கேட்டுக்கொண்டாலும் அவன் கேட்டாள் மட்டுமே அடுத்து பதில் சொல்லுவாள். அவன் பேச பேச ஓரிரு வார்த்தை பதில், இல்லையென்றால் தலையசைப்பு.
“கல்யாணம் மட்டும் ஆகட்டும், உங்களுக்கு எப்படி சமைச்சு போட்டு அசத்தறேன் பாருங்க ஆபீசர்…” என்று ஆர்வத்துடன் ஆசையாக சொல்லிய இதயா எங்கே என அவன் மனம் தேடியது.
அவன் ஒருபக்கம் பழையவற்றை அவர்கள் பலகியவற்றை எல்லாம் அசைபோட இதயாவோ காலையில் அறையில் வைத்து அவன் உணர்ச்சி போங்க பேசியவற்றை எல்லாம் அசைபோட்டபடி இருந்தாள்.
லேசாய் அடிபிடிக்கும் வாசனை மூக்கை நெருட இதயா தான முதலில் சுதாரித்து அடுப்பை அணைத்தவள்,
“கிண்டிறாதீங்க. மேல இருக்கறதை மட்டும் அப்படியே எடுங்க. இல்லைன்னா மிக்ஸ் ஆகிட்டா மொத்தமா வேஸ்ட்டா போய்டும்…” என்று சொல்லவும் அவள் சொல்லியபடி செய்தவன் அந்த கடாயை தூக்கி சின்கிள் போட்டு கையை கழுவிவிட்டு வந்தான்.
“ஜீனியஸ். ஒரு நிமிஷம் அசந்தாலும் அத்தனையும் போயிருக்கும்…” என்று சொல்லியபடி எடுத்து டைனிங் டேபிளில் வைத்து வர இதயாவும் சாதத்தை தூக்கி வந்தாள்.
“ட்ரிப்ஸ் ஏத்தின கை. அதோட தூக்கிட்டு வருவியா நீ?…” என வாங்கிக்கொள்ள ஒன்றும் பேசாமல் வந்து சாப்பிட அமர்ந்தவள் மெல்ல உண்டுகொண்டு இருக்க கண்ணனுக்கோ அத்தனை பசி.
இதயா சாப்பிட்டும் என பார்த்துக்கொண்டே இருந்தவன் அவள் முடித்ததும் மீதம் இருந்த சாதத்தை எல்லாம் போட்டுக்கொண்டான்.
அவளுக்கு தெரியுமே அவனின் சாப்பாட்டி அளவு. அதனாலேயே அதிகமாகவே வைத்திருந்தாள். ஒரு நொடி, ஒரே ஒரு நொடிதான் அவனை கனிவுடன் பார்த்தது.
பின் மீண்டும் கூட்டுக்குள் அடங்கும் பறவையென ஒரு பெருமூச்சுடன் சோபாவில் சென்று அமர்ந்துகொண்டாள்.
எத்தனை நாள் சேர்ந்து வெளியே உண்டிருப்பார்கள். அவனின் ரசனைகள் அவளுக்கு அத்துபடி என்றால் அவளின் முக்கியமானவை எல்லாம் அவன் அறிந்து வைத்திருந்தான்.
பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம், ஆனால் நடந்த விதம். நடந்துவிட்டது ஆனால் பிரிந்த தருணம் கணம். இதோ சேர்ந்துவிட்டனர். ஆனால் இழந்தவற்றின் ரணம் இப்படி அத்தனையையும் கடந்த காலம் இன்னுமே அவர்களை ஆட்டிப்படைத்தது.
“இதயா…” என்று அழைக்கவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் முன்னால மாத்திரைகளை நீட்ட வாங்கி போட்டுக்கொண்டவள் நவீனுக்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தாள்.
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குது. நீ ரெஸ்ட் எடு. அவசரம்ன்னா என்னை கூப்பிடு. அந்த ரூம்ல தான இருப்பேன். அதுதன ஆபீஸ் ரூம். புரியுதா?…” என கேட்க,
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்துக்கொண்டாள்.
அவளை கடந்து கண்ணன் அந்த அறைக்குள் நுழைந்து வழக்கம் போல கதவை மூடியவன் பின் மீண்டும் நன்றாக திறந்துவைத்துகொண்டான்.
அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு நேராக அவள் சாய்ந்து மறந்திருக்க மெல்லிய குரலில் நவீனுடன் உரையாடுவது தெரிந்தது.
ஒரு பெருமூச்சுடன் தனது டெக்ஸ்டாப்பை ஆன் செய்தவன் வேலையில் ஆழ்ந்துபோனான்.
தனது மொபைல் அழைப்பில் தான் நடப்பு தெரிய தன்னை போல பார்வை இதயாவை பார்க்க அங்கே அவள் இல்லை.
சிவசுந்தரம் தான் அழைத்திருந்தார். மொபைலை கையில் எடுத்துக்கொண்டவன் இதயாவை தேட அவள் உள்ளே கட்டிலில் படுத்திருந்தாள். ஆனால் இன்னும் உறங்காமல் இருக்க,
“தூங்கலையா நீ?…” என்று கேட்கதும் திரும்பி பார்த்தவள்,
“இல்ல கால் வலிச்சது. அதான் சும்மா படுத்திருக்கேன்…” என்று சொல்லவும்,
“ஓகே, ரெஸ்ட் எடு. சோபால காணுமேன்னு தான் வந்தேன்…” என்று சொல்லிவிட்டு கதவை ஒருக்களித்து சாய்த்துவிட்டு வெளியே வந்தான்.
மீண்டும் தன்னிருக்கைக்கு வந்து சிவசுந்தரத்திற்கு அழைத்தவன் ருக்மணி எடுக்கவும் ஒரு நொடி மௌனமாக இருந்துவிட்டு,
“அப்பா கூப்பிட்டிருந்தாங்க. குடுங்கம்மா…” என்றான் அமைதியாக.
“கண்ணா அம்மாட்ட பேசுய்யா. சாப்பிட்டியா நீ? பூவி எப்படி இருக்கா?…” என கேட்க,
“ஹ்ம்ம், இருக்கா. நீங்க அப்பாட்ட குடுங்க. இல்லைன்னா அப்பறமா பேசறேன்னு சொல்லுங்க…” என்றான்.
“இல்ல இல்ல. இப்ப குடுக்கேன்…” என்று லேசாய் விசும்பியபடி சொல்ல கண்ணனுக்குமே வருத்தமாக தான் இருந்தது.
திருச்சி வரும் வரை அவனின் எண்ணமோ வேறு. தன் அறைக்குள்ளே வைத்தே இதயாவுக்கும், உத்ராவுக்கும் வாக்குவாதம் ஆகி அது கை நீட்டல் வரை சென்று அத்தனை பேரின் முன்னாள் ரசாபாசம் ஆகியது என தான் நினைத்து இருந்தது.
என்ன நடந்தது என அப்போது இதயா சொல்லாத கோபத்தில் அதை தானும் இதயாவே சொல்லாமல் அதை யாரிடமும் கேட்கமுடியாது என்று இருந்துவிட்டான்.
ருக்மணி நினைத்திருந்தால் அந்த இடத்தில் கண்டித்திருக்கலாமே? தாயாய் என்பதை விட பெண்ணாய் அவர் அதை செய்திருக்க வேண்டுமே. இன்னும் அத்தனை கோபம் ருக்மணி மேல் அவருக்கு.
“சொல்லுப்பா…” என்று சிவசுந்தரம் குரல் கேட்க,
“போன் பண்ணியிருந்தீங்கப்பா. எந்நேரம் ஊருக்கு போனீங்க? பத்திரமா போயாச்சு தானே?…” என கேட்க,
“ஆமாப்பா, காலையில போன் பண்ணலாம்ன்னு நினச்சேன். சரி வேலையா இருந்தா? அதான் இப்ப போட்டேன். சும்மா தான் இருக்கியாப்பா?…” என கேட்க,
“ஹ்ம்ம், சொல்லுங்கப்பா, ப்ரீ தான்….”
“இல்லப்பா, அக்கா போன் பண்ணாலா?…” என கேட்க,
“இல்லையே. ஏன்?…”
“மருமகன் வீட்டை காலி பண்ணிட்டு இருக்காரு போல. திரும்ப ஒண்ணா இருக்கலாம்னு போறதா சொன்னாராம். காலையில வந்து பாப்பாவை விட்டுட்டு ஒரே அழுகை….”
“ஓஹ்…”
“இனி அங்க மாமியார் வீட்டுல தான் இருக்க போறா போல…”
“சரிங்கப்பா…” என வேறு எந்த கேள்வியும் கேட்காமல் அவன் பேச,
“சரிங்கப்பா வச்சிடறேன்…” என்று சிவசுந்தரம் வைத்துவிட்டார்.
“என்னங்க என்ன சொன்னான்?…” என ருக்மணி கேட்க,
“என்ன சொல்லுவான்? வச்சிட்டான். என்ன பேசுவான் நீயும் உன் பொண்ணு பண்ணினதுக்கு?…”
“இல்லைங்க நான் ஒன்னும் பண்ணலை. நான்…”
“வாய மூடு நீ. ஒன்னும் பண்ணலையாம் ஒன்னும். அங்க வச்சு அவ பேசும் போதே அம்மாவா லட்சணமா அவளை அறைஞ்சிருந்தா பொம்பளை. ஆனா நீ என்ன பண்ணின? இத்தனை நாள் யாருக்கும் மூச்சு கூட விடலைன்னா என்ன நினைப்பு உன்னிது?…”
சிவசுந்தரத்திற்கு இன்னும் ஆத்திரம். ஆசைக்காரர் தான். தானுமே திருமணத்தை நிறுத்தவில்லை என்றால் பெண்ணை பற்றி பேசவேண்டியது வரும் என்று வெறுமனே உத்ராவின் வற்புறுத்தலால் சொல்லியது தான்.
அதற்கே அத்தனை யோசித்தார் இதை செய்ய கூடாதே என்று. மகள் மீது எத்தனை தான் பாசம் இருந்தாலும் மகளின் இந்த பேச்சை அறவே வெறுத்தார்.
காலை தாங்கள் வந்துவிட்ட செய்தி அறிந்ததும் வீடு வந்த உத்ரா அப்போதும் அடங்காமல் பேசியது இன்னும் கோபமாகவே தான் இருந்தது.
“அதென்ன அவ வீட்டுக்கு வந்துட்டான்னு என்கிட்டே யாருமே சொல்லலை? ஏன்? ஏன்? நான் இந்த வீட்டு ஆளு இல்லையா? என் புருஷன் என்னன்னா வீட்டை காலி பண்ணிட்டிருக்காரு. என்னை யாராச்சும் மதிக்கிறீங்களா?…” என்ற குதிக்க,
“வாய மூடு, இன்னொரு வார்த்த பேசின அறைஞ்சு பல்லை பேத்துருவேன். பெத்த மகன்னு கூட பார்க்கமாட்டேன்…”
“அப்பா…”
“உன் வாயால அப்படி சொல்லாத? இதான் நீ பேசற லட்சணமா? தம்பி பொண்டாட்டின்னு பார்க்காம மானாங்கனியமா பேசியிருக்கியே, அப்பா யாரும் ஒன்னும் கேக்கமாட்டாங்கன்னு தான நினைப்பு உனக்கு?…” என்று சொல்லவும்,
“நான் என்னப்பா பண்ணேன்?…”
“என்ன பண்ணலை நீ? உன் லட்சணம் தான் வெட்டவெளிச்சம் ஆகிருச்சே….” என்று சொல்லவும் அதிர்ச்சியுடன் வேகமாய் ருக்ணியை பார்த்தவள் சட்டென முறைக்க,
“அங்க என்ன முறைப்பு? இங்க என்னை பார்த்து பேசு. உன்னால நாங்க தலைகுனிஞ்சு மன்னிப்பு கேட்டு வந்திருக்கோம்…” என சொல்ல,
“என்ன மன்னிப்பா? எதுக்கு கேட்டீங்க? நீங்க ஏன் கேட்டீங்க? அப்படி மன்னிப்பு கேட்டு அவ வரனுமா?…” என சொல்லவும்,
“பின்ன நீ பண்ணிவச்சதுக்கு காலுல விழாதது ஒன்னு தான் குறை…” என்று கத்தியவர்,
“இப்ப எதுக்கு வந்த சொல்லு?…” என்றார் எரிச்சலுடன்.
“என்னப்பா இப்படி சொல்றீங்க? உங்க மருமகன் என்னை அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறாரு. அது உங்களுக்கு கவலை இல்லையா?…” என கேட்க,
“இதுல கவலைப்பட என்ன இருக்குது? நல்லது தானே? நீ அங்க தான் இருக்கனும்? ஏன் என் மருமவளை கூடத்தான் நீ சொன்ன மாமியார் வீட்டோட அனுசரிச்சு இருக்கனும்னு. உன் மாமியாரோட நீ நல்ல தோது தானே? அப்பறம் எதுக்கு இம்புட்டு தயங்கற? போ போ…”
சிவசுந்தரம் அப்படி பேசவும் அதிர்ச்சியுடன் அவரை பார்த்தவள் ருக்மணி நிஷாவை பார்க்க அவர்கள் பேசவே இல்லை அவளிடம்.
“அப்பா, அப்ப நான் போகனும்னு சொல்றீங்களா?…”
“நிஷாக்குட்டி, இவளை கிளம்ப சொல்லு. இத்தனை வருஷம் உங்கம்மாவும், உங்கக்காவும் எந்த உறுத்தலும் இல்லாம இருக்காங்களே? இப்பவும் வந்துட்டு எப்படி பேசறா பாரு…” என்றவர்,
“இப்பவாச்சும் என் மகன் வாழ்க்கையில ஒரு விடிவு கிடைச்சிருக்குதுன்னு நான் நினைச்சுட்டு இருக்கேன். கிளம்ப சொல்லு. அங்க போய் ஒழுங்கா இருக்க சொல்லு…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
தந்தையும் ஒன்றும் சொல்லாமல் போக வேறு வழி இன்றி மகளை அங்கே விட்டுவிட்டு கிளம்பினாள் உத்ரா.
அவளுக்கு தெரியும் மாமியார் வீட்டிற்கு சென்றால் தனக்கும் காஞ்சனாவுக்கும் சுத்தமாக ஒத்துவராது என்று. தள்ளி இருக்கப்போய் இருவரும் நன்றாக பழகி வருகின்றனர்.
மனதிற்குள் பொருமியபடி உண்மையில் பயந்துகொண்டே தான் அங்கே சென்றாள்.
திருச்சி சென்று வந்ததில் இருந்து வேலவன் வேறு அவளை வாட்டி எடுத்திருந்தான். அதனாலேயே இப்போதைக்கு எதுவும் பேசவேண்டாம் என முடிவு செய்துகொண்டாள்.
இங்கே உத்ராவின் நிலை இப்படி என்றால் இதயாவின் குடும்பத்தினரோ மகள் எப்படி இருப்பாளோ என்ற கவலையிலேயே இருக்க அதை பற்றிய எந்த நினைப்பும் இன்றி இங்கே இருவரும் அடுத்த வேலைக்கு ஆயத்தமாகினர்.