“அதானே நமக்கென்ன? சொல்லு…” எனவும் கண்ணனும் காரின் மேல் சாய்ந்து நின்று கேட்க,
“எதுக்காக என்னை கோர்த்துவிட்டீங்க?…” என்றாள்.
“இது கோர்த்து விடறதா? இந்த வீட்டுல நீ யாருன்னு மறந்து போச்சா உனக்கு?…” என்றதும் அவனை முறைத்தாள்.
“ஹ்ம்ம், ஞாபகம் வந்துச்சா? புருஷனா உனக்கு ஹெல்ப்க்கு ஆள் வைக்க வேண்டியது என் கடமை. பொண்டாட்டியா அவங்க என்ன செய்யனும்ன்றத சொல்ல வேண்டியது உன் கடமை. அதையும் தாண்டி வெளில இந்த நாட்டுக்கு சில கடமை இருக்குது. நான் கிளம்பறேன்…”
கண்ணன் சொல்லியதில் அப்படியே இதயா நின்றுவிட ஒரு நொடி சுற்றி பார்த்தவன் தவாலி கூட மறுபக்கமாக திரும்பி நிற்க இதயாவின் கன்னத்தில் லேசாய் தட்டியவன்,
“பை ஹார்ட்பீட்…” என்று புன்னகையுடன் சொல்லி காரில் ஏறிக்கொள்ள அவனை கத்த முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு நிற்க உள்ளிருந்து அவளை ஒரு சிரிப்போடு பார்த்தபடி கண்ணனும் சென்றான்.
பதவி ஏற்று இத்தனை நாளில் அன்று தான் ஒரு மனநிறைவுடன் அவன் ஆட்சியகம் செல்வது.
சண்டைக்கென பின் தொடர்ந்து வந்தாலும் அவள் வாசல் வரை வந்து நின்று தான் கிளம்பும் வரை பார்த்ததை எல்லாம் நினைக்கவே உள்ளுக்குள் ஒரு உற்சாக ஊற்று.
தாய் சொல்லிய அன்றும், இதயாவின் வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாய் அவளை கொண்டுவந்து விட்டு சென்ற அன்றும் அவன் நினைத்திருந்ததோ வேறு.
சேர்ந்து வாழ்கிறோமோ? இல்லையோ? ஆனால் அங்கு அவள் விருப்பத்திற்கு இருந்துகொள்ளட்டும், அவளின் மன அமைதிக்காக தள்ளியே இருப்போம் என்று நினைத்திருந்தவன் மனது இப்போது அதற்கு நேர்மாறாய் நினைக்க ஆரம்பித்திருந்தது.
விலகி இருப்பதை விட அவளின் மனதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் அதை விட வலுத்துக்கொண்டே வர அவளை நெருங்க முயன்றான்.
அலுவலகம் வந்தவன் உள்ளே நுழையும் பொழுதே அத்தனை பேரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே தான் வந்தான். அங்கே அகிலன் தன் வேலையே பார்த்திருந்தார்.
அத்தனை பேரும் அவனை ஆர்வமாகவும், ஆச்சர்யமாகவும் பார்க்க மிருணா அழுதுவிடுவதை போல பார்த்தாள்.
“இப்ப எதுக்கு மிருணா மூஞ்சியை இப்படி வச்சிருக்க?…” என்று நளினி சிரித்துக்கொண்டே கேட்க,
“வட போச்சே?…” என்று மிருணா பாவமாய் சொல்லவும் சத்தமாய் சிரிக்க முடியாமல் நளினி சிரிப்பை அடக்க தான் அத்தனை கஷ்டமாக போனது.
“இந்த பிள்ளை ஒரு வார்த்தை சொன்னாளா கல்யாணம் ஆனதை பத்தி?…” என்றதும்,
“உனக்கு ஏன் வயித்தெரிச்சல்? அதான் வொய்ப்ன்னு நம்ம சிசிட்ட சொல்லிருக்காரே?…”
“இந்த பூவி நம்மளை கூப்பிடவே இல்லையே? எனக்காச்சும் சொல்லியிருக்கலாம்ல?…”
“அச்சோ மிருணா விடேன். நானே இப்ப எப்படி இருக்கான்னு தெரியலையேன்னு இருக்கேன். போய் பார்த்துட்டு வருவோமா? பூவிக்கு கால் பண்ணேன் நீ?…”
“அதெல்லாம் பண்ண முடியாது. அவ எனக்கு எவ்வளவு பெரிய…”
“என்ன பெரிய? அங்க என்ன நடந்துச்சுன்னே தெரியாம பேச கூடாது நீ…” என்றாள் நளினி.
அங்கே அலுவலகத்தில் கண்ணனுக்கும், இதயாவிற்கும் திருமணம் ஆகிவிட்டது என்று மட்டுமே தெரிந்திருந்தது. ஆனால் எப்போது, எப்படி என்று யாருக்கும் தெரியாமல் போனது.
“இப்பவும் ஸ்டேட்டஸ் சிங்கிள்ன்னு தான் வச்சிருக்கார் இவர். நான் அதை பார்த்து நம்பிட்டேன். அட்லீஸ்ட் கமிட்டட்ன்னு வச்சிருந்தா…”
“அடடா, உன்னோட பெரிய இம்சையா போச்சு. நானே இதயாவுக்கு பேசறேன். இந்த வீக்கென்ட் போவோமா, இன்னைக்கே போவோமா?….” என நளினி யோசித்தபடி கேட்க,
“முதல்ல இந்த ஷாக்ல இருந்து நான் வெளில வந்துக்கறேன்…” என்ற புலம்பலில் இருந்து மிருணா வெளிவரவே இல்லை.
அலுவலகம் முழுவதும் திருமணம் ஆகிவிட்டதால் தான் இதயா வேலைக்கு வரவில்லை என்றே நினைத்துக்கொண்டு இருந்தனர்.
தன்னிருக்கையில் அமர்ந்ததும் பெல் அடித்து அகிலனை அழைத்தவன் அவர் வரும் வரை அன்றைய வேலைகள் பற்றிய யோசனையில் இருக்க கதவு தட்டப்படும் ஓசையில்,
“கமின் அகிலன்…” என்றான் கண்ணன்.
“குட்மார்னிங் ஸார்…” என்று உள்ளே வந்ததும் சொல்ல,
“குட்மார்னிங்…” என கண்ணனுமே இலகுவான குரலில் சொல்ல,
“மேடம் எப்படி இருக்காங்க ஸார்?…” என்றார் அகிலனும்.
“அதிருக்கட்டும். அப்பறம் எல்லார்ட்டயும் சொல்லியாச்சு போல?…” என கையில் இருந்த பைலிலை மேஜையில் மூடிவிட்டு சாய்ந்தமர்ந்து கொண்டு கேட்க,
“என்னது ஸார்? யார்க்கிட்ட ஸார்?…” என கேட்டவரை கடினமாய் பார்க்க சட்டென மாறிவிட்ட முகபாவனையுடன் கண்ணனை பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கிய அகிலன்,
“இல்லை ஸார். மிருணா, நளினிட்ட தான் அவங்களுக்கும் தெரியுமான்னு கேட்டேன்…” என்று சொல்ல,
“என்ன தெரியுமான்னு கேட்டீங்க?…”
“இல்லை உங்களுக்கும், பூவிக்கும் கல்யாணம் ஆனது…”
“என்ன?…”
“இல்ல மேடம்க்கும் உங்களுக்கும்…”
“ஓஹ்…” என்றவன் அடுத்து அவர் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் பட்டியலிட்டவன்,
“இதை எல்லாம் முடிச்சுட்டு அப்பறமா கதை பேசலாம். ஓகே…” என்று சொல்ல தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து ஓடிவிட்டார் அகிலன்.
மதிய உணவும் அலுவலகத்திற்கே வந்துவிட வேலையை முடித்து மாலை கிளம்பும் போது தனது மொபைலை பார்த்தான்.
காலை அலுவலகம் வந்ததில் இருந்து அத்தனை முறை அவளுக்கு அழைத்தும், செய்தி அனுப்பியும் பார்த்துவிட்டான்.
குறுஞ்செய்திக்கு மட்டும் ஓரிரு வார்த்தை பதில் தான் வந்தது. ஒரு பெருமூச்சுடன் அவற்றை பார்த்தபடி இதயாவிற்கு கால் செய்தான். அதிசயமாக அவளும் எடுத்துவிட,
“வீட்டுக்கு தான் வந்திட்டு இருக்கேன்…” என்றான் அவளிடத்தில்.
“ஹ்ம்ம், டைம் வச்சு கேஸ் பண்ணேன். அதான் அட்டன் பண்ணேன். ஓகே, அப்போ வீட்டுக்கு வந்து பேசுங்க…” என்று அவளும் கட் செய்ய போக,
“உன்னோட இதே இம்சைடி…” என்றவன் மெல்லிய குரலில்,
“ஏதாவது வாங்கிட்டு வரனுமா?…” என கேட்டான் அவளிடத்தில்.
“முதல்ல வீட்டுக்கு வாங்க. அதுவும் இப்போ என்ன வாங்கிட்டு வருவீங்க நீங்க?…” என்று அவனின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவள் பேச,
“ப்ச், இதயா…” என்று போனை கட் செய்தவன்,
“வேணுமான்னு கேட்டா எதாச்சும் சொல்ல மாட்டியா நீ? ஏன் வாங்கி தரமாட்டேன்னு நினைப்பா?…” என்று மெசேஜ் அனுப்ப பார்த்தவள் ஒன்றும் பேசவில்லை.
வீடு வந்து சேர்ந்தவன் குளித்து உடை மாற்றி வர தனம் மாலை சிற்றுண்டியும், டீயும் தயாரித்து வைத்திருக்க அவருடன் பேசிக்கொண்டு இருந்தாள் இதயா.
“இதயா…” என வேகமாய் சத்தமிட்டு அவன் அழைக்க,
“அய்யா கூப்பிடறார். நீங்க போங்கம்மா…” என சொல்ல,
“ப்ச், இன்னைக்கு அத்தனைதடவை சொல்லிட்டேன் இந்த அம்மாவை விடுங்கன்னு…” என இதயா சலிக்க,
“உடனே வராதுங்கம்மா…” என்றார் தனம் அதற்கும்.
“இதயா…” என மீண்டும் அவன் அழைத்ததும்,
“சரி நீங்க பாருங்க. வரேன்…” என்று வெளியேறியவள் நேராக அவனிருக்கும் அறைக்கு செல்ல தயங்கி ஒரு நொடி நின்றவள் பின் கதவை திறக்க போக,
“நான் இங்க இருக்கேன்…” என்றான் அவளின் அறையில் இருந்து எட்டி பார்த்து. இதயாவும் அங்கே செல்ல,
“இங்க என்ன பன்றீங்க?…” என்றாள்.
“அங்க இப்போதைக்கு போக வேண்டாம். என்னைக்கு நீயா அங்க வரியோ வந்துக்கோ. அதுவரைக்கு நானும் இங்க தான்…” என்றவன் கையை நீட்டி அவளை உள்ளிழுத்து கதவை சாற்றினான்.
“என்ன வேணும்னு கேட்டா பதில் சொல்லமாட்டியா?…” என முறைக்க,
“ப்ச், என்ன வேணும்? எதுவும் வேண்டாம். ரெடி ஆகிட்டா வாங்க. டிபன் ரெடி. டீ ரெடி…”
“நான் ரெடி இல்லை. என்ன நினைக்கிற நீ?…” என்றான் சற்று ஆயாசத்துடன்.
“என்ன நினைக்கனும்? நீங்க என்ன கேட்கறீங்க? ஆபீஸ்ல இருக்கும் போதும் மெசேஜ் பண்ணுனீங்க. அப்போ வேலையா இருப்பீங்க நான் பேசலை. ஆனாலும் பதில் சொன்னேன்ல…”
“அப்போ வீட்டுக்கு வரும் போது?…”
“ஆபீஸ் கார்ல வரீங்க? அதோட என்ன வாங்குவீங்க? அதுவும் இங்க வாங்க என்ன தேவை இருக்குது? எனக்கு புரியலை…” என இதயா சொல்ல கண்ணனுக்கு தான் இன்னும் இன்னும் வேறு எதுவோ அவளிடம் தேவைப்பட்டது.
கேட்டால் பதில், கிண்டலோ, கோபமோ, சாதாரணமோ எதுவோ ஒன்று இதயாவிடம் இருந்து வருகிறது தான்.
ஆனாலும் அவன் இன்னுமே இலகுத்தன்மையையும், சகஜமான நெருக்கத்தையும் உடனடியாக எதிர்பார்க்க ஆரம்பித்தான்.
ஒரு நாளில் தன்னிடம் இத்தனை வன்மையா என்று தன்னை குறித்தே மிரண்டு நின்றான். ஒருவித படபடப்பு அவனிடத்தில் ஒட்டியே இருந்தது.
“என்னாச்சு?…” என இதயா கேட்க,
“ப்ச்…” என்று கட்டிலில் சென்று அமர்ந்தான்.
அவன் அப்படி சோர்ந்து அமர்ந்ததும் மனது கேட்காமல் அருகே சென்றவள் அப்போதும் அவனுக்காகவே நெருங்கினாள்.
“ஆபீஸ்ல எதுவும் பிரச்சனையா?…” என்று கேட்க இல்லை என்று தலையசைத்தான்.
“அப்போ இங்க தான் பிரச்சனையா?…” என்று கேட்க,
“இதுதான், இதுதான் பிரச்சனை. தள்ளி இருக்கும் போது கூட எனக்கு இத்தனை அவஸ்தை இல்லை. கூட இல்லையேன்னு கோபம் தான் அதிகமா இருந்தது. வந்தா என்ன? பிரச்சனைன்னு எந்த வீட்டுலையும் நடக்காததா? அதை எல்லாம் பார்த்துட்டே இருந்தா சரியா போச்சா? இப்படித்தான் நினைச்சு கோபமா இருந்தேன்….” என்றவன் அவளின் கை பிடித்து அருகே அமர்த்திக்கொண்டவன்,
“ஆனா இப்போ இந்த ரெண்டு நாள். நேத்து கூட ஓகே. பக்கத்துல இருந்தேன். ஆனா இன்னைக்கு…” என சொல்லி அவளின் கன்னம் பற்றியவன்,
“கொஞ்சம் நல்லா தான் பார்த்து பேசேன். என்னை இத்தனை பேச வைக்கிற நீ. கெஞ்ச வைக்கிற நீ. எனக்கு இது ஒரு விஷயமில்லை. ஆனா அதுக்கு உன்கிட்ட கிடைக்கிற இந்த ரியாக்ஷன்…” என சொல்லி மௌனமாக பார்த்தவன்,
“உன்னை திரும்பவும் ரொம்ப ஹர்ட் பண்ணிடுவேனோன்னு இருக்கு இதயா. சட்டுன்னு என்னை நீ ஏத்துக்கனும்னு மனசு அடிச்சுக்குது. உனக்கு டைம் வேணும்னு ஒரு மனசு சொன்னாலும் உடனே என்னை நீ முன்ன போல பார்க்கனும்னு துடிக்குது….”
கண்ணனிடம் இன்னுமின்னும் அத்தனை புலம்பல்கள். பேசிக்கொண்டே இருந்தான். இதயாவிற்கு தான் அவனை சமாளிக்கவும், சமாதானம் செய்யவும் முடியவில்லை.
ஒற்றை நாள், இந்த ஒற்றை நாளில் இப்படி அவன் துவண்டு விடுவான் என்று சற்றும் நினைக்கவில்லை.
காலையில் கிளம்பும் பொழுது கூட சிரிப்போடு சென்றவன் இப்பொழுது இப்படி கிடந்து பிதற்றுவதை மனது ஏற்கவில்லை.
இத்தனைக்கு பிறகும் மீண்டும் ஆரம்பித்த இடத்தில் நின்று அதற்கு மேலும் சண்டையிட்டு, அவனை நோகடித்து தன்னையும் நோகடித்துக்கொள்ள அவளுக்கும் திராணியில்லை.
“என்னை என்ன செய்ய சொல்றீங்க?…” என்றாள் மெதுவாய்.
அவளின் அந்த குரலில் சற்று நிதானத்திற்கு வந்தவன் அதிகமாக பேசிவிட்டதை உணர்ந்து மௌனமானான்.
“ஓகே, லீவ் இட். இப்போ வாங்க. அவங்க டின்னர் செஞ்சுட்டு கிளம்பட்டும். பேசலாம்…” என்று சொல்ல,
“ஹ்ம்ம், நீ முன்னாடி போ. வரேன்…” என்று சொல்லவும் இதயாவும் எழுந்து செல்ல பத்து நிமிடம் கழித்து கண்ணன் எழுந்து வந்தான்.
அன்றைய பொழுது அதன் பின் அவனும் ஒன்றும் பேசவில்லை. எதிர்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் அன்று செய்யவேண்டிய ஏற்பாடுகள் குறித்த வேலையும் திட்டமிடலும் இன்னும் முற்றுபெறாமல் இருந்தது.
அதன் செயலாக்கத்தில் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு இடத்தில் மாறுதல் வந்து கொண்டே இருக்க அதில் கவனம் செலுத்தவேண்டிய அவசியத்தில் அன்று வெகுநேரம் விழித்திருந்தவன் உறங்க வரும் பொழுது இதயா நல்ல உறக்கத்தில் இருந்தாள்.
அவளருகே வந்து படுத்தவன் மனது ஒரு நிலையில்லாமல் தவித்தது. மெல்ல திரும்பி பார்த்தவள் இதயா அசையாமல் படுத்திருப்பதை கண்டு லேசாய் புன்னகையுடன் ஒருக்களித்து படுத்தவன் மெல்ல அவளின் முகத்தை வருடி மெல்ல கன்னத்தில் இதழொற்ற படக்கென்று கண்ணை திறந்தாள் அவள்.
இப்படி லேசான உரசலுக்கே கண்ணை திறந்துவிடுவாள் என்று எதிர்பாராதவன் திகைத்து பின்,
“இன்னும், இன்னும் நீ தூங்கலை?…” என்று கேட்க,
“நீங்க முதல்ல தூங்குங்க…” என சொல்லிவிட்டு மீண்டும் கண்ணை மூடிவிட அப்போது தான்,
“அப்பாடா…” என்றபடி மூச்சுவிட்டான்.
‘அடங்குடா கண்ணா. ஜஸ்ட் மிஸ். இல்லன்னா உன் மிசஸ் மிஸ் பண்ணாம காலு, மிஸ்ட் கை தான்’ என்றபடி கண்ணை மூடிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஒரு குதூகலம்.
மறுநாளும் இதயா அலுவலக விடுப்பில் இருந்ததால் நளினியும், மிருணாவும் அவளை பார்க்க வருவதாய் சொல்லி மாலை கிளம்பி வந்தார்கள்.
அதிலும் வரமாட்டேன் என்ற மிருணாவை வம்படியாக கூட்டிக்கொண்டு வந்தாள் நளினி இதயாவை பார்க்க.