ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 19
அன்று திங்கள் கிழமை. விடுமுறை எல்லாம் முடிந்து அன்றுதான் இதயா மீண்டும் அலுவலகம் செல்லவிருக்கிறாள்.
காலை கிளம்பியதில் இருந்து அவளிடம் ஒருவித படபடப்பு ஒட்டிக்கொள்ள அங்கிருப்பவர்களை எப்படி எதிர்கொள்வது, கேட்டால் என்ன பதில் சொல்வது என்ற யோசனைகளுடன் கூடுதலாக கண்ணனின் எண்ணமும்.
இதுவரை எப்படியோ? ஆனால் இனி அவள் சொல்லும் பதில்கள் கண்ணனையும் சேரும் அல்லவா? அவனை கொண்டே இனி தன்னை பார்ப்பார்கள். தன்னை கொண்டே இனி அவனை விமர்சிப்பார்கள்.
இப்போது கூடுதலாக இதையும் அவள் யோசிக்கவேண்டியதாக இருந்தது. இதுவரை இப்படி எதற்கும் யோசித்ததில்லை.
கிளம்பும் பொழுதே மாற்றி மாற்றி ஒவ்வொன்றாய் செய்துகொண்டிருக்க தனமும் காலை சமையலை முடித்துவிட்டு வெளியே அவசர வேலையாக சென்றிருந்தார்.
இதயாவின் கவனம் இங்கேயே இல்லை என்பதை ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு தான் கவனித்தான் கண்ணன். குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வந்தவன்,
“இதயா, ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸா இருக்க? உன் முகமே டல்லடிக்குது…” என்று கேட்டான்.
“ஹ்ம்ம், அப்படியா?…” என கண்ணாடியை பார்த்தவள் முகம் அவளுக்கே என்னவோ போலத்தான் இருந்தது.
“ப்ச், எனக்கு தெரியலை. எரிச்சலா இருக்குது…” என்று சொல்லி அங்கேயே நிற்க,
“என்ன எரிச்சல் உனக்கு? இல்லை முடியலைன்னா?…” என்று சொல்லவுமே அவனை முறைத்தாள் இதயா.
“இரு, இரு. இன்னும் சொல்லி முடிக்கலை. முடியலைன்னாலும் ஆபீஸ் வந்து தான் ஆகனும். சும்மாவே எதாச்சும் பேசுவாங்க. இப்போ நீ இத்தனை நாள் லீவ். கலெக்டர் பொண்டாட்டின்றதால உனக்கு நான் லீவ் குடுக்கேன்னு பேசினா?…”
“ஹ்ம்ம், போங்க, போங்க. எனக்கும் தெரியும்….” என்றவள் தானும் கிளம்ப,
“லஞ்ச் எனக்கு வரப்போ உனக்கும் கொண்டு வருவாங்க. அதனால எடுத்துக்க வேண்டாம்….” என்று சாப்பிடும் போது சொல்ல,
“இதை மட்டும் பேச மாட்டாங்களா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் எடுத்துட்டே போறேன்…”
“சொன்னா கேட்கமாட்டியா? தனம் வெளில போயிருக்காங்க. லஞ்ச் சமைக்கலை…”
“நோ இஷுஸ். இதுவே போதும்…” என்றவள் இட்லியை பேக் செய்து இன்னொரு டப்பாவில் இட்லி பொடியை வைத்து என்னை ஊற்றி எடுத்துக்கொண்டாள்.
“கேட்கவே மாட்ட இல்ல…” என்று கண்ணன் முறைத்த முறைப்பெல்லாம் அவளின் மூளையை எட்டவே இல்லை.
என்னவோ அன்று வேலைக்கு செல்லவே பிடிக்காமல் போனதை போல மனதில் தோன்ற அத்தனை பேசி தாளித்தால் கண்ணனை.
“உங்களை யார் இங்க வர சொன்னா? இப்ப என்னால கேஸ்வலா கூட ஆபீஸ் போக முடியலை. என்னைக்கு இங்க வந்தீங்களோ, அப்பா இருந்தே இப்படித்தான் இருக்குது…” என்று புலம்பிக்கொண்டே அவள் தனது பேக்கை தூக்க,
“எங்க கிளம்பிட்ட?…” என்றான் அவள் பேசியதை எல்லாம் கண்டுகொள்ளாமல்.
“ஆபீஸ்க்கு தான். பார்த்தா எப்படி தெரியுது?…”
“நீ இப்படியேவா ஆபீஸ் போவ?…” என்று சாப்பிட்ட கையை கொண்டு சிரிப்பை மறைத்தபடி அவன் கேட்க தன்னுடையை உடனே குனிந்து பார்த்தாள்.
குளித்து முடித்து நைட்டியில் இருந்தவள் தலையை மட்டும் வாரியிருக்க வழக்கம் போல சாப்பிட்டுவிட்டு புடவை மாற்ற நினைத்து இப்போதோ கண்ணனின் பேச்சில் மறந்து அப்படியே கிளம்பி இருந்தாள்.
கண்ணன் சொல்லவில்லை என்றால் அந்த யோசனையிலேயே வாசல் வரை சென்றிருந்திருப்பாள். தலையில் கை வைத்தபடி டையனிங் சேரில் அமர்ந்துவிட,
“இந்த தண்ணியை குடி…” என்று அவள் பக்கம் நகர்த்தினான்.
“ப்ச்…”
“இப்போ எதுக்கு இந்த சலிப்பு? கேட்கிறவங்க கேட்கத்தான் செய்வாங்க. அதை எல்லாம் பார்த்தா ஆச்சா? உன் வேலையை அங்க நீ பார்க்க போற. அவ்வளோ தானே? கேட்டா நேத்து நான் சொன்னதையே சொல்லிரு…”
“எது நேத்து நீங்க மிருணாக்கிட்ட சொன்ன மாதிரியா? எவ்வளோ பொய்…”
“அந்த பொய் கூட அழகா இருந்தது தானே?…” என்றவனை இதயா முறைக்க,
“ஓகே, ஆனாலும் அதுதான் சரி. இல்லைன்னா எதுவுமே சொல்லாம ஒரு ஸ்மைலோட இருந்திரு…”
“ப்ச்…”
“திரும்பவும் ப்ச்? ஒரு ஐடியா சொன்னா கேட்டுக்கனும். உனக்கு தான கேட்டுக்கற மனசே இல்லயே?…” என்றான் சற்று காட்டமாக.
“எங்க எப்படி எதை கேட்கனும்னு எனக்கும் தெரியும் கலெக்டர் ஸார். போதும் உங்க ஐடியா…” என்றவள் உடை மாற்ற செல்ல,
“நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ, அப்படியும் யாராச்சும் கேட்டா என்கிட்டே அனுப்பு…”
“சத்தியமா நீங்க கலெக்டர் தானா? அதென்ன ஸ்கூலா? உடனே ப்ரின்சிபல்ட்ட அனுப்ப?…” என்று திரும்பி நின்று இதயா சொல்லவும் அவளின் கோபத்தில் இன்னுமே சிரித்தான்.
“உங்களை வச்சுக்கிட்டு…”
“திருத்தம். கட்டிக்கிட்டு…” என்று சொல்லியவன் மேலே உள்ளிருந்த பில்லோவை எடுத்துவந்து வீசினாள்.
இருக்கும் களேபரத்தில் அவன் வேறு அவளை சீண்டிக்கொண்டே தான் இருந்தான். கொஞ்சமும் அவள் கோபப்படுவாளே என்ற எண்ணமெல்லாம் இல்லை.
அப்படியாவது சரளமாக சண்டை போடட்டும் என்று இன்னுமின்னும் அவளை தூண்டிவிட அவனின் நினைப்பு படிதான் மனையாளும் மாறிக்கொண்டு இருந்தாள்.
நடந்து முடிந்த பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என்று இன்னும் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அதை பேசி பேசி இன்னும் பெரிதாகி அந்த காயங்கள் மீண்டும் கீறிவிடப்படுமோ என்று பயந்து அதை அப்படியே விட்டுவிட்டான்.
இதோ இப்படி ஒரு வாழ்க்கை, இதயா அவனருகே. சண்டைகள் கூட ரசனையாய் இருந்தது அவனுக்கு. அது போதுமானதாக இருந்தது.
ஆனாலும் அவளையும் அதிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமே என்ற ஆதங்கம் மட்டும் அவனை அவளை விட்டு தள்ளி இருக்கவிடவில்லை.
இன்னும் அந்த யோசனையில் அமர்ந்திருக்க நேரமாவதை உணர்ந்து எழுந்து கையை கழுவிக்கொண்டவன் தானும் உடைமாற்றி வர இதயாவும் அந்த அறையில் இருந்து வெளியே வந்தாள்.
வந்தவள் தனது போனை தேடிக்கொண்டே அவனின் அலுவலக அறைக்கும் கூட சென்றுவர வாட்சை மாட்டியபடி அவளை பார்த்தவன்,
“இதயா உன் மொபைல் டேபிள்ல இருக்குது பாரு…” என்றான்.
“ஓஹ், ஆமா. மறந்துட்டேன்…” என்று அதையும் சென்று எடுத்து பேக்கில் வைத்தவள் வேறு என்ன மறந்தோம் என்று யோசிக்க யோசிக்க எதுவும் ஞாபகம் வரவில்லை.
அனைத்தும் சரியாக இருந்தது. ஆனாலும் எதுவோ இல்லை. இப்படி எல்லாம் அவள் இருந்ததில்லை.
காலில் வேறு சுற்றிக்கொண்டு இருந்த புடவையை எடுத்துவிட்டபடி இங்குமங்குமாய் அவள் நடக்க,
“இதயா நில்லு…” என்று நிறுத்தினான்.
“என்ன சொல்லுங்க? நேரமாகுது எனக்கு…”
“ப்ச், என்னோட தான வர போற? அப்பறம் என்ன?…” என்று ஈஸியாய் கேட்க,
“என்ன உங்களோடவா? என்ன விளையாடுறீங்களா? தேவையே இல்லை…” என்று முகம் திருப்பினாள்.
“இதுக்கு எல்லாம் யாரும் எதுவும் சொல்லமுடியாது. சொல்லபோனா நாம தனி தனியா போன அதான் கேலி பேசுவாங்க…”
“யாரும் எதுவும் பேசட்டும். எனக்கென்ன? அதுக்காக உங்களோட வரதா?…”
“அப்போ ஏன் இவ்வளோ டென்ஷன் ஆகற நீ?…”
“ப்ச், ப்ளீஸ் டென்ஷன் பண்ணாதீங்க. இது சரிவராது…”
“எல்லாம் சரியா வரும். என்னோட தான் வர நீ…” என்று அவன் அதட்டலாக சொல்ல பிடிவாதமாய் நின்றாள்.
அப்போதும் அதை கவனத்தில் எடுத்தாலும் புடவையையே நீவியபடி குனிந்து பார்த்துக்கொண்டு இருக்க,
“என்னாச்சு? ஏன் எதையோ தேடிட்டே இருக்க? அப்போ இருந்து பார்க்கறேன்…” என்றவனை ஒன்றும் சொல்லாது சோபாவில் சென்று அமர்ந்து புடவையை இன்னும் நீவிவிட்டாள்.
எத்தனை முறை செய்தும் எழுந்து நின்று பார்த்தும் மடிப்பு ஒன்றுபோல வராமல் போக முகம் திருப்தியின்மையை காட்டியது.
அவனுக்கு புரிந்து போனது. அவளாக ஒன்றும் தன்னிடம் சொல்ல போவதில்லை என்று பார்த்தவனின் முகத்தில் மென்னகை படர்ந்தது.
“என்ன சேரி இப்படி கட்டி இருக்க?…” என்று அருகே வர தன்னை மீண்டும் குனிந்து பார்த்துக்கொண்டாள்.
எப்போதும் கீழே மடிப்பை ஒன்றுபோல எடுத்து விடுவதென்னவோ மஞ்சு தான் இதுவரை.
இப்போது இந்த கலம்கரி காட்டன் புடவை நிற்பேனா என்று அவளிடம் சண்டித்தனம் செய்து அங்குமிங்குமாய் பிரிந்து நிற்க எத்தனை தான் குனிந்து தானே எடுத்து விட்டாலும் திருப்தி இல்லாததை போல இருந்தது.
மனது தாயை தேடியது. லேசாய் கண்கள் கலங்கிவிட அவனின் முன்னே அதை காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.
“இல்ல கீழே மடிப்பு சரியா வரலை. இதுக்கு மேல எடுத்துவிட முடியலை…” என மெதுவாய் அவள் சொல்ல,
“அவ்வளோ தானே. இதுக்கு டல்லாவாங்களா? என்னை கூப்பிட வேண்டியதானே?…” என்று சொல்லவும் மறுப்பாய் அவனை பார்த்தாள்.
“இல்லை வேண்டாம்…”
“ப்ச், பேசாம நில்லு…” என்றவன் ஒற்றை காலை கீழே ஊன்றி அமர்ந்துகொண்டவன் ஒன்று போல மதிப்பை எடுத்துவிட்டான்.
“இதெல்லாம் வேண்டாம், விடுங்க…” என்று பின்னே நகர்ந்தவளை அப்படியே இடையோடு ஒரு கை கொண்டு பிடித்து நிறுத்தியவன்,
“சொல்லிட்டிருக்கேன்ல. நிக்கமாட்ட…” என்று நிமிர்ந்து பார்த்து அதட்டியவன் பின் ஒன்றுபோல அனைத்து மடிப்பையும் எடுத்துவிட்டு நிமிர்ந்தவன்,
“இப்போ ஓகே வா பாரேன்…” என்று எட்டி நின்று பார்த்து,
“பர்பெக்ட். இப்போ வா போகலாம்…” என்று அவளின் கையை பிடித்து நடக்க ஆரம்பித்தான்.
ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று யோசிக்கும் முன்னர் கொஞ்சமும் யோசிக்காது அவன் செய்த செயல் இதயாவிற்கு மனதில் இதத்தை தந்ததென்னவோ நிஜம்.
“காட்டன் சேரிக்கு அம்மா தான் எப்பவும் மடிப்பு எடுத்து விடுவாங்க…”
“ஹ்ம்ம்…”
“மத்தபடி நான் எப்பவும் நானே பார்த்துப்பேன். இன்னைக்கு இது கொஞ்சம் மடிப்பு நிக்கும்ன்னு தான் இதை எடுத்து கட்டினேன்…”
“அதனால என்ன? அழகா இருக்கு…” என்றான் கிடைத்த கேப்பில் லேசாய் அவளின் தோள் அணைத்தபடி.
“ப்ச், கையை எடுங்க….” என்று சொல்லவும்,
“ஓகே…” என பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல் அவன் நகர காரின் முன் நிற்கவும் இதயாவிற்கு அதில் செல்லவே விருப்பமில்லாததை கட்டியது அவள் முகம்.
“வேண்டாம்ன்னா சொல்லு. எப்படியும் கார் ஒன்னு நமக்கு எடுக்கனும். போய் எடுத்துட்டு வந்திருவோம்…” என்றான்.
“ப்ச், என்னை விட்டுட்டு போக தெரிஞ்சவங்களுக்கு ஸ்கூட்டியையும் விட்டுட்டு போக தெரியாதா?…” என எரிச்சலுடன் காரில் ஏறி அமர மறுபக்கம் வந்தமர்ந்தவன் முகமே சட்டென மாற்றம் பெற்றது.
“பார்ரா…” என்று இதயா லேசாய் சொல்ல,
“ஷ்ஷ்ஷ்…” என்றான் தோரணையாக.
“அப்படி ஒன்னும் நான் இப்படி வரவேண்டாம்…” என அவனின் பக்கம் சாய்ந்து இதயா மெல்லிய குரலில் சொல்ல,
“வீட்டுக்குள்ள மட்டும் உன்னை எந்த பேய் பிடிச்சுக்குது? இப்படிலாம் பக்கத்துல வரவே மாட்டேங்கற?…” என்றன அவனும் அவளை போலவே.
சட்டென நகர்ந்து ஜன்னலை ஒட்டி அவள் அமர ஒரு இதழ்விரியா புன்னகை கண்ணனின் முகத்தில்.
இதயா வரும் வழியெல்லாம் எதையோ முணுமுணுத்தபடி வர கண்ணனுக்கு சிரிப்பும் வந்தது. அதே நேரம் அவனாலும் எதுவும் பேச முடியாதே? ட்ரைவர், டவாலி என்று இருக்க மௌனமாகவே வந்தான்.
அலுவலகம் வந்ததும் இதயா வேகமாய் இறங்கி முன்னே செல்ல கண்ணன் நிதானமாகவே இறங்கி அலுவலகம் நுழைந்தான்.
அதற்குள் இதயா தன்னுடைய சீட்டிற்கு வந்துவிட அத்தனை பேரின் பார்வையும் அவளைத்தான் சுற்றியது.
நளினி, மிருணாவும் இதயாவை முகம் கொள்ளா புன்னகையுடன் பார்த்ததுமே கை கொடுத்து அணைத்து விடுக்க,
“இனி உன்னை எப்போ வேணாலும் பார்க்க வரலாம். கேட்டா கலெக்டர் வொய்ப் வர சொன்னாங்கன்னு சொல்லிட்டு வந்திருவேன். என் மாமியார் வாயை திறக்க முடியாது இனி…” என்று நளினி சொல்ல,
“உங்களுக்கு உங்க கவலை…” என்ற மிருணா அப்போது உள்ளே வந்துகொண்டிருந்த கண்ணனை பார்த்து எப்போதும் போல பார்த்தபடி இருக்க வந்தவனோ ஒரு நொடி இதயாவை கண்டுவிட்டு வழக்கம் போல நேராக சென்றுவிட்டான்.
மிருணா என்றைக்கும் செய்வதை போல அவன் செல்லும் வரை பார்த்துக்கொண்டே இருக்க அவளின் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தாள் நளினி.
“நீயெல்லாம் திருந்தவே மாட்ட…” என சொல்ல,
“அச்சோ, இப்பவும் பார்த்துட்டேன்….” என்றவள் இதயா பக்கம் திரும்பி அசடு வழிந்தாள்.
“சத்தியமா இது தானா நடந்தது பூவி. நீ நம்பனும். நான் ஒன்னும் வேணும்னு பண்ணலை…” என்று பாவம் போல சொல்லியவள் உடனே,
“எல்லாம் உன்னால தான். உன் வீட்டுக்காரர் வந்தன்னைக்கே நீ என்கிட்டே சொல்லியிருந்தா திரும்பியாச்சும் பார்த்திருப்பேனா?…” என சண்டைக்கு கிளம்ப,
“அதான் சொல்லாம விட்டுட்டேன். தப்பு தான்…” என்று இதயா சொல்ல அவளை இன்னுமே முறைத்தாள் மிருணா.
“அட போதுமப்பா. மிருணா நீ தான் முடிஞ்சதை விடேன்…”