ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 3
இதயா விடிய விடிய விழித்திருந்தவள் அதிகாலையிலேயே மஞ்சுவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி வந்தாள்.
வந்ததும் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்து வீட்டை சுத்தம் செய்து இடையில் எளிமையாக ஒரு சமையலையும் முடித்தவள் பேக்கிங் எல்லாம் செய்துவிட்டு குளிக்க சென்றாள்.
அலுவலகத்திற்கு கிளம்பியே வந்தவள் தனது வண்டியிலேயே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள்.
இரவெல்லாம் துளி உறக்கம் இன்றி இருந்தவளின் முகமும் லேசாய் வீங்கி கண்கள் சிவந்து இருக்க மஞ்சு கவலையுடன் பார்த்தார் அவளை.
“ம்மா, இதுல டிபன் இருக்குது. மதியத்துக்கு பருப்பு, மிளகு ரசம், பொரிச்ச கூட்டு இருக்குது. அப்பாவுக்கு துவையல் வச்சிருக்கேன். சாப்பிட்டுடுங்க. டாக்டர்ட்ட ஈவ்னிங் வந்து டிசார்ஜ் பண்ணிக்கறதா சொல்லிட்டேன்…”
“நீ சாப்பிட்டியா பூவிடா?…” என மஞ்சு கேட்க,
“இனிமே தான். பேக் பண்ணிட்டேன். ஆபீஸ் போய் சாப்பிடுப்பேன்…” என்றவள் தந்தையை பார்க்க அவரும் மகள் சொல்லியதை கேட்டபடி தான் இருந்தார்.
“டாக்டர் வந்துட்டு போனாங்களா? இந்நேரம் ஒரு ரவுண்ட்ஸ் வருவாங்களே? இனிமே தானா?…” என கேட்க,
“நீ வரதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் வந்தாங்க பூவி. நேத்தே நீ டாக்டர்ட்ட பேசினதா சொன்னாங்க. இப்போ அப்பா நல்லா இருக்காராம்…” என்று மஞ்சு சொல்லவும்,
“அப்பா, முடிஞ்சளவுக்கு சாப்பிடுங்க. இல்லையா பசிக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க. அப்போ தான் உடம்பு நல்லாகும். பார்த்துக்கோங்க. நான் ஈவ்னிங் வந்திடறேன்…” என்று சொல்லியவள் தனது பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப,
“ஏன் பூவி தம்பி தான் உன்னோட ஆபீஸ்க்கு வராருன்னு எங்கக்கிட்ட சொல்லலை?…” என்றார் அவளின் நடையை தடை செய்யும் விதமாக சாமி.
“சொல்லனும்னு தோணலைப்பா. வரத்து கலெக்ட்டர். அது யாரா இருந்தா என்ன? அவர் ஆபீசர். நான் ஒரு ஸ்டாஃப். அவ்வளோ தான். இதுக்கு முக்கியத்துவம் குடுக்கனும்னு தோணலை…” என்றாள் நின்ற இடத்திலேயே நின்று திரும்பி பார்த்தபடி.
“பூவி…”
“பதில் சொல்லிட்டேன் தானே? நான் கிளம்பறேன்…” என்றவள்,
“ம்மா, உன் அண்ணிட்ட கேட்டு சொல்லு. டிக்கட் புக் பண்ணனுமான்னு? பஸ்ஸா ட்ரெயின்னானும் கேட்டு சொல்லு…” என மஞ்சுவிடம் சொல்ல,
“ஏன் அதை நீ கேட்க மாட்டியா அவக்கிட்ட?…” என்றார் மஞ்சு.
“என்கிட்டே சொல்லியிருந்தா அப்பவே கேட்டிருப்பேன். நீ தான போன் பண்ணி கூப்பிட்டிருக்க. அப்போ உன்கிட்ட தான சொல்ல முடியும்?…” என்றவளை எந்த வகையில் அணுகுவது என்று புரியாமல் பார்த்தார் மஞ்சு.
“நீ கிளம்புப்பா. அம்மா போன் பண்ணி பேசிட்டு சொல்லுவா. இல்லனா உன் மாமனே உனக்கு கூப்பிடுவான். கிளம்பு…” என்று மகளை அனுப்பினார் சாமி.
“என்னங்க நீங்களும்…” என்ற மஞ்சுவிடம்,
“அவ கிளம்பட்டும்னு சொல்றேன்ல…” என்றவரின் அழுத்தமான குரலில் மஞ்சு வாயை மூடிக்கொள்ள இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு இதயா கிளம்பி செல்லவும் சாமியின் பக்கம் திரும்பினார் மஞ்சு.
“என்னங்க நீங்க எதுவும் பேசவேண்டாம்னு சொல்றீங்க?…” என்றார் ஆதங்கத்துடன்.
“அதுக்குன்னு அவளை போட்டு இப்படியா தொனதொனத்துவ? யோசிக்க கூட முடியாத படி பண்ணிட்டு இருக்க மஞ்சு….”
“நான் சொல்ல வரத்து உங்களுக்கு புரியுதா? நான் என்ன இன்னைக்கேவா சொல்றேன்? இத்தனை வருஷமா பாட்டா படிச்சுட்டு இருக்கேன். இந்த பொண்ணு காதுலையே வாங்கலை. ஏதோ கோவத்துல இருக்கான்னு பேசாம இருந்தா இப்பவும் இவ இப்படியே பன்றா…”
“எல்லாத்துக்கும் ஒரு நேரகாலம் வரனும்ல. அது இப்போ வந்திருக்குது. இந்த வாரம் விடு. சுதாகரனும், நவீனும் வரட்டும். பேசிட்டு என்ன செய்யலாம்னு பார்ப்போம்…” என்று சாமி சொல்ல,
“என்னத்த விட? எதையும் காதுல வாங்கலை. நம்ம எதுக்கு சொல்றோம்னும் புரியலை. எல்லாத்துலையும் விவரமா இருக்கரவ எங்க விவரமா இருக்கனுமோ அதை கோட்டை விட்டுட்டா…” என்றார் கண்ணீருடன்.
“என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சும் இப்படி பேசலாமா மஞ்சு? நம்ம பொண்ணுக்கு நாமலே பக்கத்துல நிக்க வேண்டாமா?…”
“அதுக்குன்னு இப்படி எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு அவளை தனிமரமா நிக்க சொல்லுறதா?…”
“இதத்தான் சொல்றேன், எடுத்தோம், கவிழ்த்தோம்னு பேச வேண்டாம்னு. அவளுக்கு என்ன கோவம்னு தெரியும் தானே?…”
“அப்போ வாழ்க்கை முழுக்க அந்த கோவத்தை தூக்கிட்டு நின்னா நஷ்டம் நமக்குதான். நம்ம பொண்ணுக்கு தான். ஏறக்கட்ட வேண்டியத தூர எறிஞ்சுட்டு வாழ்க்கைக்கு என்ன உதவுமோ அதை மட்டும் எடுத்துக்கனும். ஆனா இந்த பொண்ணு…”
“மஞ்சு…”
“அட சும்மா இருங்கங்க, எனக்கு மேலையா அன்னைக்கு அவ கோவமா இருந்துட்டா? என் பொண்ணோட ஒத்த ஒத்த சொட்டு கண்ணீரும் என் மனசுல ரத்தமா வடிஞ்சுச்சு. அவ வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு அழாத நாள் இல்ல. எவளோ என்னவோ சொல்லிட்டா இவ அப்படி ஆகிடுவாளா?…”
“சொன்னது யாரோ இல்லை, அதே மாதிரி பூவி கோவத்துல நியாயம் இருக்குது…” சாமி மீண்டும் அதையே சொல்ல,
“அப்ப மகளை கைக்குள்ளயே வச்சுக்க வேண்டியது தான். ஒரு பொம்பளையா அவளுக்கு அது வேதனை தான். எனக்கே அந்த நிமிஷம் போதும்னு எல்லாத்தையும் நிப்பாட்டிட்டு கூட்டிட்டு வரத்தான் ஆத்திரமா இருந்துச்சு. ஆனா அவ மனசு அங்க இல்ல இருந்துச்சு?…”
“எந்த சாமி புண்ணியமோ வேண்டாம்னு விலகி போனதை வேணும்னு புடிச்சுட்டு நின்னது இவ தான். அப்ப அத எதிர்த்து நிக்கனும்ல. அதுவும் அப்ப சாத்தியமில்ல. ஆனா எப்பவுமே வேண்டாம்னு சொல்லறது எந்த வகையில நியாயம்?…”
“சரி, சரி. புரியுது மஞ்சு. ஆனா இப்போ விட்டு பிடிப்போம். யசோ வந்து பேசட்டும்…”
“அவ வந்தா மட்டும், இவ வாயடைக்கிற மாதிரி எதாச்சும் சொல்லுவா. எனக்கு நம்பிக்கையே போச்சு…”
“எனக்கு இப்போ தான் வந்திருக்குது. அதுவும் அவரே தேடி வந்து நம்மளை பார்த்துட்டு போனதும் இன்னும் நிறைவா இருக்குது. இது போதுமே?…” என்று சாமி சொல்ல,
“அவர் வந்தா மட்டும். இந்த பொண்ணுக்கு எம்புட்டு அழுத்தம்? அவர் தான் ஆபீசர்ன்னு ஒத்த வார்த்தை சொல்லிருப்பாளா?. இன்னும் என்னலாம் பண்ண போறாளோ?…” என பேசியவரை மௌனமாக பார்த்தபடி அமர்ந்திருந்தார் சாமி.
எவன் ஒருவனை இத்தனை நாள் ‘இப்படி செய்துவிட்டானே?’ என்று குறைபட்டபடி மகளின் வாழ்க்கையை எண்ணி கவலை கொண்டார்களோ அது அப்படியே திரும்பி ‘அவனே வந்துவிட்டான். இப்பெண் முறுக்கிக்கொள்கிறாளே?’ என்று கண்ணோட்டம் மாறியது.
மகளின் வாழ்க்கை சரியானால் போதும். ஆனால் அது எங்கிருந்து ஆரம்பித்தது, அதன் முடிவு என்ன என்பதெல்லாம் அவர்களுக்கு இப்போது பெரிதல்ல. மகள் தனித்துவிட கூடாது என்பதிலேயே முனைப்புடன் இருந்தனர்.
முதல் நாள் போலல்லாது சற்று முன்னரே அலுவலகம் வந்தடைந்தாள் இதயா. இன்னும் நளினியும், மிருணாவும் வராமல் இருக்க வேக வேகமாய் தனது டிபன் பாக்ஸை திறந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
காலைக்கு ரசமும் பருப்பும் போட்டு பிசைந்தே எடுத்து வந்திருக்க மதியத்திற்கு தயிர் தாளித்து கொண்டுவந்துவிட்டாள்.
வீட்டில் இருந்து கிளம்புவதாக இருந்தால் டிபனே சாப்பிட்டு வந்திருப்பாள். இங்கே சாதமே போதுமானதாக இருங்க அவள் உண்டு முடிக்கும் நேரம் அவளை கடந்து உள்ளே சென்றான் கண்ணபிரான்.
செல்லும் பொழுதே அவள் மீது ஒரு பார்வையுடனே தான் கடந்து சென்றான். இத்தனை விரைவில் அவன் வருவான் என்று நினைக்காதவள் அவன் பார்வையை கவனிக்காததை போல இருந்தாலும் அதை உணர்ந்தாள்.
தன் அறைக்குள் நுழையும் வேகமாய் பொழுதே முகம் கடுகடுவென்றானது கண்ணனுக்கு. ஆனாலும் மனது அடித்துக்கொள்ள தனது மொபைலை எடுத்து குறுஞ்செய்தியை தட்டிவிட்டான் வெகு மாதங்களுக்கு பிறகு.
“டிவைன்…” என்று செய்தி வந்திருக்க எடுத்து பார்த்தவளுக்கு புரிந்து போனது.
பதில் ஒன்றும் அனுப்பாமல் சில நிமிடம் அப்படியே இருந்தவள் அதிலேயே பார்வையை பதித்திருக்க கண்ணனும் ஆன்லைனிலேயே இருப்பது அவனின் பெயருக்கு கீழ் தெரிந்தது.
“பார்த்தும் பதில் வருதா?…” என்று முணுமுணுக்க அதற்குள் ஆஃப்லைன் போய்விட்டாள் இதயா.
“என்னடி இவ்வளவு சீக்கிரமே?…” என்று மிருணா வந்துவிட,
“ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்திருப்பா….” என்ற நளினி,
“அப்பா எப்படி இருக்காங்க பூவி?…” என கேட்க,
“நல்லா இருக்காங்கக்கா. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம்…”
“ஓஹ், இப்போ தான் மிருணா சொன்னா. நேத்து பார்த்திட்டு வந்ததா? நானும் வரனும்னு தான் இருந்தேன். மாமியாருக்கு முடியலை. என்ன செய்ய?…” என்று அலுப்புடன் சொல்ல,
“அதனால என்ன அக்கா? ஒன்னும் பிரச்சனை இல்லை. இன்னொருநாள் பாப்பாவை கூட்டிட்டே வாங்க. நானும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…” என்று சொல்ல,
“கண்டிப்பா ஒரு வீக்கென்ட் மீட்டிங் போடுவோம்…” என்று மிருணா வேகமாய் திட்டம் சொல்ல,
“கண்டிப்பா. ஆனா பூவி அப்பா சரியாகட்டும். என் மாமியாரும் நல்லா ஆகட்டும். இல்லன்னா எங்கயும் நகர விடமாட்டாங்க…” என்று நளினி பேச,
“எப்போன்னு சொல்லுங்க, எங்க வீட்டுலையே லஞ்ச் அரேஞ்ச் பண்ணிடலாம்…” என்றாள் இதயா.
“கேட்காமலே லஞ்ச் குடுக்கறேன்னு சொல்லுது பாரு அந்த மனசுதான் பூவி கடவுள். குடுக்கற லஞ்ச் நல்லா டெரரா இருக்கனும்…” என்று மிருணா தன் ஆசையை சொல்ல,
“இவ நான்-வெஜ்க்கு அடி போடறா. சேட்டை தான?…” என்று நளினி அவளின் தலையில் குட்ட,
“ஆபீஸ் வந்தா அவங்கவங்க ப்ளேஸ்ல உட்கார்றது இல்ல. அங்கங்க கூடி நின்னு பேச வீட்டுல இருக்க வேண்டியதான?…” என்ற அகிலனின் குரலில்,
“வந்தாருப்பா சிசி. சிரிச்சு பேசிற கூடாதே? தனியா வந்து பூவின்னு நிக்கட்டும். அப்படியே ஒரு போட்டோ எடுத்து அவர் பொண்டாட்டிக்கு அனுப்பிவிடறேன்…” என்றவளின் பேச்சில்,
“அனுப்பும் போது சொல்லு, நானும் ரெண்டு மூணு போட்டோ தரேன். எக்கச்சக்க பிட்டை போடுவோம். வீட்டுல நாலு குடுப்பு குடுத்தாலாச்சும் மனுஷன் அடங்கறாரான்னு பார்ப்போம்…” என்றாள் மிருணா இதயாவிற்கு சப்போர்ட்டாக.
“ரெண்டு பேரும் ஆரம்பிச்சாச்சா? அவர் எண்ணமும் செய்யட்டும். நம்ம வேலையை நாம பார்ப்போம்…” என்று அவர்களை அதட்டிவிட்டு நகர்ந்தார் நளினி.
“உன் ஸ்கூட்டியை பார்த்ததுமே நீ சீக்கிரம் வந்துட்டன்னு நினைச்சேன்…” என்று மிருணா அவளின் பக்கத்தில் இருக்கும் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.
“பஸ்ல வர கொஞ்சம் கஷ்டமா இருக்குடா. அதான் ஸ்கூட்டில வந்துட்டேன். வீட்டுல இருந்து ஹாஸ்பிட்டல் அங்க இருந்து ஆபீஸ், திரும்ப போகும் போது ஹாஸ்பிட்டல். ப்ச்…” என்று சொல்லியவளின் முகம் சோர்வுடன் இருக்க,
“நைட் தூங்கலையா பூவி. ரொம்ப டல்லா இருக்க? அப்பாவுக்கு ஓகே தானே?…” என்றவளின் அக்கறையில் புன்னகைத்தவள்,
“ஓகே டா. கொஞ்சம் கேர்ஃபுல்லா பார்த்துக்க சொல்லிருக்காங்க…”
“ஓகே, வேலையை பார்ப்போம். இல்லனா சிசி வந்து வம்பு பேசும்…” என்றவள் வேலையில் ஆழந்து போக இதயாவும் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அன்றைக்கு விவசாய கடன்களை பற்றிய தொகுப்புகள் அடங்கிய கோப்புகளை எல்லாம் திரட்டிக்கொண்டு அதன் சம்பந்தமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
“இன்னைக்கே கலெக்டர் ட்ரில் வாங்கறார் போல. மீட்டிங்க்கு போய்ட்டு வந்த ஒரு மூஞ்சியும் தெளிவில்லை. என்ன நடந்துச்சுன்னு தெரியலையே? நளினிக்கா வரட்டும். கேட்ப்போம்…” என்று மிருணா சொல்ல,
“எதாச்சும் நல்லது நடக்கட்டும். பார்ப்போம்…” என்றாள் இதயா பட்டும் படாமலும்.
“நீ ஏன்டி இப்படி இருக்க?…” என்று மதிய உணவு நேரத்தில் மிருணா ஆரம்பித்தாள்.
“ப்ச், அவங்கப்பாவுக்கு முடியலை. இந்நேரம் கலகலப்பாவா இருப்பா? லூஸா நீ?…” என்று நளினி தான் மிருணாவை அதட்டி வைத்தார்.
அந்த நேரம் பார்த்து சுதாகரன் அழைத்துவிட்டார் இதயாவிற்கு. இதை எதிர்பார்த்திருந்தாலும் அந்த நேரம் எடுத்து பேச தோன்றவில்லை.
“பூவி, உன் போன் தான் ரிங் ஆகுது…” என்று நளினி சொல்ல,
“ஹ்ம்ம், மாமா தான் கூப்பிடறாங்க க்கா…”
“ஓஹ், சூப்பர். அப்போ ஊருக்கு வராங்களா? லாஸ் டைம் உன் மாமா பொண்ணு தீப்தியோட மலைக்கோவிலுக்கு போனோமே. இந்த தடவையும் வராங்களா என்ன?…” என்று நளினி கேட்க,
“ஆமாமா, இந்த தடவை நானும் வருவேன். நான் ஊருக்கு போயிருந்த நேரம் பார்த்து எல்லாரும் போயிருக்கீங்க…” மிருணா கோபம் போல சொல்ல,
“இன்னும் போனே அட்டன் பண்ணலை. பேசிட்டு சொல்றேன்…” என்று எழுந்து வெளியே வந்தாள்.
“பூவி உன் பாக்ஸை நாங்க எடுத்துட்டு போறோம். பேசிட்டு வா…” என்று சொல்லிவிட்டு கேண்டினில் இருந்து கிளம்பினார்கள் இருவரும். தலையாட்டிவிட்டு போனை எடுத்து மாமாவுக்கு அழைத்தாள்.
“என்னடாம்மா வேலையா இருந்தியா?…” என எடுத்ததும் சுதாகரன் கேட்க,
“இப்போ தான் சாப்பிட்டு முடிச்சோம் மாமா. சொல்லுங்க, நீங்க, அத்தை, தீப்தி எல்லாரும் எப்படி இருக்கீங்க?…” என்று கேட்க,
“நாங்க இங்க நல்லா இருக்கோம்டா. உன் அத்தைக்கு தான் வருத்தம்…”
“மாமா நான் வேணும்னு சொல்ல கூடாதுன்னு இல்லை. அப்பாவுக்கு என்னன்னு தெரிஞ்சுட்டு சொல்லலாம்னு தான்…”
“அது புரியுதுடா. நாங்க அதை கேட்கலை…” என்றதுமே இதயாவிற்கு புரிந்து போனது.
“மாமா…” என்றவள் அமைதியாகி போக,
“சரி விடு. உன் கல்யாண பேச்சுல இருந்தே நீ எடுக்கற முடிவு தானே. இதுல நாங்க என்ன சொல்ல?…” என்று அவர் பேசவும் இதயாவிற்கு வலித்தது.