ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 4
எதிரே நின்றவனை பார்த்தவளின் அதிர்ச்சி எல்லாம் ஒரு நொடி தான். அவளின் முகத்தை பார்த்துக்கொண்டே திருமாங்கல்யத்தை தனது கையில் எடுக்கவுமே வேகமாய் இதயா அவனின் கையை தட்டி விட இன்னும் இரேண்டெட்டு முன்னால் வந்து அவளை நெருங்க,
“கிட்ட வந்தா என்ன செய்வேன்னே தெரியாது. இது உங்க ஆபீஸ் இல்லை. என் வீடு…” என்று அவள் எச்சரிக்கவும் முகம் மாறினான்.
“இங்க என்ன பன்றீங்க? ஏன் வந்தீங்க?…” என்றாள் இதயா.
“ப்ச், குட்மார்னிங்…” என்றவனை கோபமாக பார்த்தாள்.
இத்தனை நாளில் தன் வாழ்க்கையில் அப்படி ஒரு சலிப்புடன் யாரும் குட்மார்னிங் அவளுக்கு சொல்லியதே இல்லை. அவன் சொல்லவும்,
“பேட் மார்னிங். இப்படி நீங்க சொல்லனும்னு அவசியம் இல்லை…” என்றவள்,
“என்ன இது?…” என்றாள் தன் நெற்றியை காண்பித்து.
“இத்தனை நாள் நீ செய்யாதாது. செய்ய மறந்தது. அதான் வச்சுவிட்டேன்…”
“தெரியாம தான் செய்யாம இருந்தேனா? மறந்தும் இல்லை. மறக்க கூடியதும் இல்லை. எனக்கு வேண்டாம்னு தோணுச்சு…”
“இத்தனை நாள் எப்படியோ? இப்போ நீ என் வொய்ப். என்னோட வொய்ப்னு இங்க எல்லாருக்கும் தெரியனும்…”
“எல்லாருக்கும்ன்னா? மேரீட்ன்னு தெரியறது ஓகே. அதென்ன உங்க வொய்ப்ன்னு? இன்னைக்கு தான் நான் சொல்லாம விட்டது ஞாபகம் வந்துச்சோ?…” என்றவள்,
“எல்லாருக்கும் நான் உங்க பொண்டாட்டின்னு தெரியனுமா? இல்லை உங்களுக்கே நமக்கு கல்யாணம் ஆனதை ஞாபகப்படுத்திக்க இதை எல்லாம் செய்யறீங்களா?…”
“இதயா…” என்றான் பொறுமை இழந்து பல்லை கடித்தபடி.
“இதயாவா? உங்களுக்கு இதயம்ன்னு ஒன்னு இருக்கா?. இருந்திருந்தா இப்படி எல்லாம் பண்ணுவீங்களா?…”
தான் வந்ததற்கு சற்றும் சந்தோஷப்படாமல் இப்படி எடுத்தெறிந்து பேசுபவளை என்ன செய்யவென்றே புரியாமல் நின்றான் கண்ணன்.
“நான் வந்ததுல உனக்கு கொஞ்சமும் சந்தோஷம் இல்லையா இதயா?…”
“இப்போ நீங்க பண்ணீங்களே ஒரு ஸீன், அதுக்கு என் அம்மாப்பா வேணா சந்தோஷப்படுவாங்க. பூரிச்சு போவாங்க. நான் இல்லை…”
“எனக்கு தோணுச்சு. வச்சேன். உனக்கு வேண்டாம்னா அழிச், ப்ச் எடுத்துடு….” என்று அவள் செய்வாளா என்று பார்த்து நிற்க இன்னுமே கோபம் அவன் மேல் கனன்றது.
“அதையும் நீங்க சொல்லுவீங்களா? செய்ய மாட்டேன்னு நினைப்பு தானே உங்களை இவ்வளவோ அலட்சியமா என்னை நினைக்க வச்சது…”
“நான் உன்னை அலட்சியப்படுத்தலை….”
“கௌரவப்படுத்தாம இருக்கறதுக்கு பேர் அலட்சியம் இல்லாம என்ன?…”
“திரும்ப திரும்ப அதையே சொல்லாத. உன்னை தேடி வர உன்னை தொட்டு பொட்டு வைக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்குது. இப்போவும் சொல்றேன் எங்க அதை நீ தட்டி விடு பார்க்கலாம்…” என்றான் திமிராய்.
“இது தான், இது தான் எனக்கு வேண்டாம்ன்னு விலகி போறேன். அதென்ன அத்தனை திமிர் உங்களுக்கெல்லாம்? இந்த வீரத்தை, அகம்பாவத்தை பொண்டாட்டின்றவட்ட தான் காமிப்பீங்க. வெளில எல்லாம் பெட்டிப்பாம்பு தான் இல்ல?…”
“இதயா…”
“சும்மா சுள்ளுன்னு இதயான்னுட்டு விரைப்பா நிக்காதீங்க. நான் சொல்றதுல என்ன தப்பு? இந்த ஆம்பிளைங்களுக்கு ஒரு திமிர், தாலி கட்டிட்டா பொண்டாட்டின்றவளை பொம்மையா ஆட்டி வைக்கலாம். அதுக்கு நீங்களும் விதிவிலக்கு இல்ல…”
“நீ ரொம்ப பேசற. நான் உன் மேல…”
“எதுவும் இல்லைன்னு சொல்றேன். நீங்க பன்றதுக்கு பேர் உரிமையும், அன்பும் கிடையாது. எனக்கு தெரியும், என் மாமாவை, அம்மாப்பாவைன்னு எல்லாரையும் நீங்க தான் பேசி இப்படி மாத்தி இருக்கீங்க…” என்று சொல்லவும் தோளை குலுக்கிக்கொண்டான் மறுக்காமல்.
“என்னை கார்னர் பன்றீங்க…” என்றாள் உதடு துடிக்க அவனை பார்த்தபடி.
அவளின் அந்த முகம் அவனை வருத்தினாலும் அசராமல் நின்றான். கொஞ்சமும் இளக்கமற்ற பார்வை பார்த்தவன்,
“எப்படி வேணா வச்சுக்கோ…” என சொல்ல,
“என்ன எப்படி வேணா வச்சுக்கோ? அப்படித்தான். இல்லைன்னு சொல்ல முடியாதுல…” என்றதுமே தன் இரு கைகளை தூக்கி சரண்டர் ஆனவன்,
“ஓகே, கார்னர் தான் பன்றேன். பண்ணுவேன். என்ன செய்ய போற?…” என்றான் கண்ணன்.
“இப்படி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்லை?…” என்று அவள் சீற,
“பொண்டாட்டிக்கிட்ட வெக்கம் பார்த்தா வாழ முடியாதுங்க மேடம்…” என்றான் அசால்ட்டாய் ஒரு கேலி சிரிப்புடன்.
“நீங்க எல்லாம் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீசர்…” என கை நீட்டி அவனை சாட,
“அது ஊருக்குடி. உனக்கு நான் யாருன்றது தான் முக்கியம். எனக்கும் அதுதான் முக்கியம். உன்கிட்ட நான் இப்படித்தான்…”
“நீங்க எனக்கு யாருமில்லை. அதை மறந்துட்டேன் நான்…” என்றாள் ஆவேசத்துடன்.
அப்படி என்ன திமிர் இவனுக்கு என்று ஆத்திரமாய் வந்தது. வீட்டினர் அனுமதி இன்றி அவன் பூஜை அறை வரை வந்திருக்க வாய்ப்பில்லை. வந்தவனும் பேச்சு ஏற்கும் படி இல்லை.
மனது ஊமையாய் அழுதது, ‘இப்படிலாம் கண்ணனுக்கு பேச தெரியுமா?’ என்று மனதிற்குள் அவனிடம் கேட்டுக்கொண்டவள் கண்கள் கலங்கிவிடாதபடி தைரியமாய் நின்றாள்.
“நீ யாருமில்லைன்னு சொன்னா ஆச்சா? வாய்ப்பே இல்லை. அப்படி நீ நினைக்கவும் முடியாது. கிளம்பு…”
“எங்க?…”
“என்னோட, நம்ம வீட்டுக்கு?…”
“அப்படி ஒன்னு இருக்கா?…” என கேட்க கண்ணன் மௌனமானான்.
“பதில் சொல்ல முடியலை இல்லையா? ஆமா எந்த தைரியத்துல என்னை கூப்பிட வந்தீங்க?…”
“என்னோட மனைவி என்னோட இருக்கனும்னு. இதுக்கு எதுக்கு தைரியம்?…”
“ஓஹ், அந்த மனைவி இன்னைக்கு தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரிஞ்சாளா?…”
“நான் நார்த் சைட் போஸ்ட்டிங் வாங்கவுமே உன்னை கூப்பிட்டேன் தானே?…”
“எப்படி? வேலையை விட்டுட்டு வான்றது. அதுவும் யாருக்கும் எதுவும் சொல்லாம, எதையுமே சால்வ் பண்ணாம. இப்பவும் உங்கக்கா சொன்னதை இப்போ நிரூபிக்கற மாதிரி தானே வந்திருக்கீங்க?…” என்றதுமே கண்ணனின் முகம் மாறிவிட,
“நான் இப்போ அக்கா கூட பேசறது கூட இல்லை இதயா. புரிஞ்சுக்கோ. இங்க ஜாயின் பண்ணும் போது கூட நேரா இங்க திருச்சி தான் வந்தேன். வீட்டுக்கு கூட போகலை. அப்பாவோடையும் பேசி ரொம்ப மாசம் ஆச்சு. அவங்களா பேசினா மட்டும் தான்…”
“இப்போ கூட நீங்க என்னை புரிஞ்சுக்கலை. இல்லையா?…” என்றவளின் முகத்தில் இருப்பதை உணர முயற்று தோற்றான் கண்ணன்.
“உங்க குடும்பத்தோட, உங்கப்பா, அக்கா கூட பேசாம இருந்தா தான் நான் சமாதானம் ஆவேன்னு நான் எப்போ சொன்னேன் உங்ககிட்ட? அப்படி இருந்தா எல்லாம் சரியா போச்சா? இதுக்கும் என்னை தான் ப்ளேம் பன்றீங்க நீங்க….”
“இல்லை, எனக்கு தோணலை. அதான் பேசலை. அது உன்னை ப்ளேம் பன்றதா எப்படி ஆகும்?…”
“ஆமா இப்போ நீங்க சொன்னது அப்படி தானே?…”
“இப்படி ஒன்னொண்ணுக்கும் அர்த்தம் எடுக்காத இதயா. லைஃப் ஸ்பாயில் ஆகிடும்…” என்றான் தலையை அழுத்தமாய் கோதியபடி.
“ஓகே, ஓகே. எல்லாத்தையும் சரி பண்ணலாம். நீ முதல்ல கொஞ்சம் யோசி. இதனால யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?…”
“வாழ்க்கை லாப, நஷ்ட கணக்குன்னா நினைக்கறீங்க நீங்க?…” என்றவளிடம்,
“பதிலுக்கு பதில் பேசிட்டே இருந்தா என்னைக்கு சேர்ந்து வாழ? இதுக்குத்தான் கட்டினாலே ஆச்சுன்னு வந்தியா நீ?…” என்று வார்த்தையை விட அதுவரை திடமாய் இருந்தவளின் கண்களில் மழுக்கென்று நீர் நிறைந்துவிட,
“சத்தியமா வந்திருக்கமாட்டேன். இப்படி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா லைஃப் லாங் தனியாவே இருந்திருக்கலாமேன்னு நினைச்சிருந்திருப்பேன். இல்லைன்னா எங்க வீட்டுல பார்க்கிற யாரையாச்சும்…”
அவள் சொல்லி முடிக்கும் முன் அவளின் கை பற்றி இழுத்து வாயை தன் வலக்கரத்தால் மூடியவன்,
“அடிச்சுடுவேன் இதயா. அத்தனை கோபம் தருது இந்த வார்த்தை. உன்னை வேண்டாம்னு நான் என்னைக்கும் நினைச்சதில்லை. அதே மாதிரி நீ வராம இருந்திருந்தாலும் நம்ம கல்யாணம் நடந்திருக்கும். நான் நடத்தி இருப்பேன்…” என்றவனின் பேச்சில் நக்கலாய் அவள் சிரிக்க,
“நம்பமாட்ட. போடி…” என்று அவன் சொல்லவும் அவனை விட்டு விலகி நிற்க அவன் வைத்த குங்குமம் எல்லாம் அவனின் சட்டையில் இடம்பெயர்ந்திருந்தது.
“உன்னை எப்படி அழைச்சுட்டு போகனும்னு எனக்கு தெரியும். புறப்பட தயாரா இருந்துக்கோ…” என சொல்லியவன் அங்கிருந்து நகர,
“சட்டையில இருக்கறதை தட்டிட்டு போங்க…” என்றாள்.
“எதுக்கு? என்ன இருக்கு?…” என்றவாறே குனிந்து பார்த்தவனின் முகம் இறுக்கம் தளர்ந்து மெல்லிய புன்னகை நெளிய அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“குங்குமம் தானே? இருந்துட்டு போகட்டும். உனக்கென்ன? வழி விடு…” என்று சொல்ல அவன் வேண்டுமென்றே செய்கிறான் என புரிந்துகொண்டவள்,
“இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். ஹால்ல போய் எல்லார் முன்னாடியும் இப்படியே நிக்கறதுக்கா? ஒழுங்கா தட்டிட்டு போங்க…” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“கல்யாணம் ஆகியும் இத்தனை வருஷமா பொண்டாட்டியை தட்டிட்டு போக முடியலை. குங்குமம் எல்லாம் ஒரு விஷயமா?…” என்றான் விஷமத்துடன்.
“சகிக்கலை. இந்த பேச்சு ஜாலம் எல்லாம் என்கிட்டே வேண்டாம் கலெக்டர் ஸார். எனக்கு செம்ம கடுப்பாகுது. ஒழுங்கா துடைச்சு விடுங்க…”
“இவ்வளவு பேசற நீ அதை தட்டி விடறது…” என்று முன்னால் வந்து காண்பிக்க,
“பண்ணிட்டா போச்சு…” என்றவள் ஒரு கையில் விபூதியை அள்ளி அவ்விடத்தில் லேசாய் விசிற,
“தொட மாட்டியோ?…” என்றான்.
பேச்சை அவன் திசை மாற்றுவதை கண்டுகொண்ட கோபத்துடன் அவ்விடம் விட்டு வேகமாக வெளியேறி ஹாலுக்கு வர அங்கே ருக்மணி அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார் அய்யாசாமி, சுதாகரனிடம். அவருடன் நிஷாந்தியும் வந்திருந்தாள்.
அவர் வந்திருப்பதை பார்த்ததுமே இன்னுமே மனம் அதிர்ந்தது. மேலும் முன்னேறி செல்லாமல் அவள் அங்கேயே நிற்க,
“வா பூவி, அங்கயே நின்னுட்ட?…” என்றார் யசோதா.
அவர் சொல்லவும் ருக்மணியும் திரும்பி பார்த்தவர் அவளை கண்டதுமே புன்னகையுடன் எழுந்து வந்துவிட்டார்.
“எப்படிமா இருக்க?…” என கேட்க,
“அண்ணி, நல்லா இருக்கீங்களா?…” என நிஷாந்தியும் அவளின் கையை பிடித்துக்கொள்ள அவர்களின் அன்பில் ஒரு நொடி தடுமாறி நின்றாள்.
“நல்லா இருக்கேன். நீங்க எப்போ வந்தீங்க?…” என முகமன் கேட்க,
“நேத்தே வந்துட்டோம். இன்னைக்கு எல்லாரும் வரவும் வருவோம்னு கண்ணன் சொன்னான். அதான் கிளம்பி வந்தோம்…” என்று சொல்லவுமே பார்வை திரும்பி கண்ணனை பார்த்தது.
“நான் தான் வர சொன்னேன்…” என்றான் அவன்.
“மாப்பிள்ளை வந்து உட்காருங்க…” என்று சாமி சொல்லவும் இதயாவை கடந்து சென்று நவீன் அருகே அமர்ந்துகொண்டான். அவனுக்கு பக்கத்தில் அமர பிடிக்காமல் நவீன் எழுந்துகொள்ள,
“உட்காருடா. எங்க போற?…” என்று அவனின் கையை பிடித்து அமர வைக்க,
“எனக்கு வேலை இருக்குது. நீங்க பெரியவங்க பேசிட்டு இருங்க…” என்று சொல்லிவிட்டு எழுந்து இதயா அருகே வந்து நின்றுகொண்டான்.
“பூவி, உன் மாமியாரை உட்கார சொல்லு. நிக்க வச்சு பேசிட்டு இருக்க?…” என்றார் யசோதா.
“உட்காருங்க நீங்க. இப்போ வந்திடறேன்…” என சொல்லிவிட்டு இதயா தன்னறைக்கு செல்ல அவளின் பின்னே சென்றான் நவீன்.
“என்னக்கா, இவர் வருவாருன்னு உனக்கு தெரியுமா?…” என நவீன் கேட்க கட்டிலில் அமர்ந்தவள் இல்லை என்று தலையாட்டினாள்.
“என்ன பன்றாங்க எல்லாரும்? திடீர்ன்னு வந்து நின்னதும் எனக்கு ஷாக்காகிடுச்சு. வந்தவர் வந்ததுமே நீ எங்கன்னு கேட்டு நிக்கிறார். ஒருத்தரும் ஏன்னு கேட்கலை. பூஜை முடிச்சுட்டு வருவான்னு அவர்க்கிட்ட சொல்லி, அதை உன்கிட்ட சொல்ல வந்தா என்னை கையை பிடிச்சுக்கிட்டார்…”
“நான் போய் பார்த்துக்கறேன். நீ உட்காருன்னு சொல்லிட்டு வந்துட்டார். அம்மாவுக்கு அதுல அவ்வளோ சந்தோஷம்…” என்று நவீன் சொல்ல,
“என்னடா பண்ண போறாங்க?…” என்றாள் பரிதவிப்புடன்.
“க்கா, நான் இருக்கேன்ல. என்னன்னு பார்ப்போம்…” என்றவனின் இடையை கட்டிக்கொண்டவள்,
“ஏன் கல்யாணம் செஞ்சேன்னு இப்போ தோணுதுடா நவீ. என்னால முடியலை. ரொம்ப அழுத்தமா இருக்குது. எங்கயாச்சும் போனா என்னன்னு தோணுது. வேண்டாம். யாரும் வேண்டாம். எதுவும் வேண்டாம். ஆனா அப்படி போனா பயந்து ஓடிட்ட மாதிரி…”
“ப்ச், என்னக்கா உளறிட்டு இருக்க? நான் இல்லையா?…” என்று அவன் அக்காவின் தலையை வருடிக்கொடுக்க உள்ளே வந்தாள் தீப்தி.
“நினைச்சேன் இதான் செய்வீங்கன்னு. பூவி, சும்மா இதுக்கு போய் கலங்கலாமா? இங்க பாரு அண்ணி. முதல்ல முகத்தை கழுவிட்டு தலையை காயவச்சுடு வெளில வா. நீயே இங்க இருந்தா அங்க யார் பேசுவா? உனக்கு நாங்க பேக்போர்னா இருப்போம். சியரப் கேர்ள்…”
“என்னடா அத்தான், இந்த சென்டி எல்லாம் தள்ளி வச்சுட்டு வீட்டுக்கு பையனா நீயும் உன்னோட பாயின்ட்சை எடுத்து வை. நீ ஒன்னும் சின்ன பிள்ளை இல்லை. புரியுதா?…” என்று நவீனின் தலையில் குட்டு ஒன்று வைக்க,
“ப்ச், போடா தீப். அக்கா என்னலாம் பேசிட்டா தெரியுமா?…” என்று ஆரம்பிக்க,
“முதல்ல பேசாம இரு. அவ போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துரட்டும்…” என்றவள் இதயாவை எழுப்பி பாத்ரூமினுள் தள்ளியவள்,
“இப்ப சொல்லு…” என்றாள் அவனின் முன்னால் வந்து நின்று.