நவீன் சொல்லவும் அதை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்தவள் அவனின் கையை பிடித்து தட்டிக்கொடுத்தபடி,
“எல்லாரும் சேர்ந்து இப்படி நெருக்கினா யாரா இருந்தாலும் இப்படித்தான் உடைஞ்சு போவாங்க நவீத்தான். ஆனா பாரு, அவங்களை சொல்லியும் தப்பில்லை தானே?…”
“தப்புன்னு சொல்ல முடியாது தான். ஆனா அக்கான்னு வரும் போது அவ எடுக்கற முடிவு தான்…”
“சரி சரி. இப்போ நடந்ததை சரி பண்ண நினைச்சு வந்தா நல்லது தானே? பூவி என்ன நினைக்கிறான்னு நமக்கு தெரியாதா நவீத்தான். பார்ப்போம் என்ன சொல்லி வந்திருக்காங்கன்னு. இது கண்ணன் அண்ணா மட்டும் எடுக்க கூடிய முடிவில்லையே…”
“இது தான்டா எனக்கும் கோவம். பேசினவங்க எதுவும் வந்து பேசலை. இவங்க வந்து நிக்கறாங்க. நம்ம வீட்டுலையும் இதுதான் நேரம்ன்னு பூவிக்காவை அனுப்பி வைக்க இருக்காங்க…” என்றான் கோபத்துடன்.
“நவீத்தான், பேசாம இருக்க மாட்ட. புலம்பாம வா. ஹாலுக்கு போவோம்…” என்று அழைத்துக்கொண்டு செல்ல கண்ணனின் பார்வை நவீனை துளைத்தது.
வெளிப்படையாகவே நவீன் முறைக்க அவனை ஒரு சிரிப்போடே எதிர்கொண்டான் கண்ணபிரான்.
அங்கே அனைவரையுமே பார்த்துக்கொண்டு வந்த நிஷாந்தி நவீனையும் அவன் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் அவனின் தோளில் கை வைத்தபடி அமர்ந்திருந்த தீப்தியையும் பார்த்தது.
‘ரொம்ப சகஜமா உட்கார்ந்திருக்காங்களே இவங்க ரெண்டுபேரும். வீட்டுலையும் ஒன்னும் சொல்லலை’ என்ற நினைப்போடு உள்ளுக்கு ஆச்சர்யம் பொங்க பார்த்தாள் அவள்.
“நவீ அந்த நிஷா பொண்ணு உன்னையும், என்னையும் தான் பார்க்கறா…” என்று தீப்தி முணுமுணுக்க,
“ஷட் அப் தீப்…” என்றான் பல்லை கடித்து.
“அண்ணனும், தங்கச்சியும் உன்னை பார்க்காங்கன்னு சொன்னா பக்குன்னு பத்திக்கற…” என்று தீப்தி கிண்டல் பேச அவளின் தோளில் ஒரு அடி போட்டான் நவீன்.
“என்ன அங்க சண்டை? சும்மாவே இருக்க மாட்டீங்களா? இப்படித்தான் நடந்துக்கறதா?…” என யசோதா சத்தம் போட,
“ம்மா, நவீத்தான் தான்…” என்று தீப்தி சொல்ல,
“எந்திச்சு உள்ள போங்க. என்ன பேசிட்டு இருக்கோம்னு தெரியாம. சின்ன பிள்ளைங்கன்றது சரியா தான் இருக்குது…” என்று கடிந்தார் இருவரையும்.
“விடுங்கம்மா, சின்ன பிள்ளைங்க தானே?…” என்றார் ருக்மணி.
“தீப்தி, போய் பூவியை வர சொல்லு…” என்றதும் தீப்தி எழுந்து செல்ல அங்கே இதயா கிட்சனுக்குள் நுழைந்தாள்.
“இங்க என்ன பன்ற பூவி? உன்னை தேடறாங்க அங்க. அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க…” என சொல்ல,
“சமைக்க வேண்டாமா? போய் சொல்லு…” என சொல்லும் பொழுதே யசோதா வந்துவிட்டார்.
“அதெல்லாம் வேண்டாம். நீ குளிக்க போக்கவுமே பொங்கல், சாம்பார் வச்சு சட்னி அரைச்சுட்டேன். இட்லி ஊத்தியாச்சு. மனசு ஆடாம ஓடாம ஒரு இடத்துல இருக்கனும். அப்போ தான் எதிர்க்க என்ன இருக்குன்னு நமக்கு கண்ணுக்கு தெரியும்…” என்று சொல்ல,
“ஏன்த்த இப்படி பன்றீங்க? என்னால முடியலை…” என்றாள் ஆற்றமாட்டாமல் யசோதாவின் தோளில் சாய்ந்து.
“உனக்கு தான்டி புரியல. உன்னை பெத்தவங்களை கொஞ்சமாச்சும் யோசிச்சியா? அப்பவே நான் வேண்டாம்னு தான சொன்னேன்? கேட்டியாடி. இப்ப மாட்டேன்னு நின்னா எல்லாத்துக்கும் தலையாட்டனுமோ?…” என்றார் அவளை கட்டிக்கொண்டு.
“இப்பவும் அவங்க அவங்க மட்டும் தான் வந்திருக்காங்க. என்ன வேணா சொல்லுங்க. என்னால முடியாது. தனியா இருந்தா கூட இவ்வளவு தோணாது. சேர்ந்து இருந்தா பைத்தியம் பிடிச்சுடும் த்த. புரிஞ்சுக்கோ. ப்ளீஸ். ப்ளீஸ். ப்ளீஸ்…” என்று யசோதாவிடம் கெஞ்சிக்கொண்டு இருக்க,
“நான் பேசலாமா?…” என்ற கண்ணனின் குரலில் அனைவருமே திரும்பி பார்க்க அங்கே நின்றுகொண்டு இருந்தான்.
“நீங்க போங்க, நான் பேசறேன்…” என்று சொல்லவும் யசோதாவும், தீப்தியும் அங்கிருந்து செல்ல இதயா திரும்பிக்கொண்டாள்.
“உன்னை அழைச்சுட்டு போக தான் வந்திருக்கேன். ஆனா இன்னைக்கேன்னு இல்லையே. எதுக்கு இத்தனை பன்ற நீ? இவ்வளவு தவிக்கிற அளவுக்கு உனக்கு பிடிக்காத வாழ்க்கை இல்லையே இது…” என்றான்.
அவன் அவன் பக்கமே இன்னும் நின்று பேசிக்கொண்டு இருந்தான். அவளை புரிந்தது ஒரு புறம், ஆனாலும் இப்போது அதற்கு செவிசாய்த்தால் நிச்சயம் இன்னுமே அவள் முரண்டுபிடிப்பாள் என்று வலிந்து வன்மையாக அவளை அணுகினான்.
“இப்போ எதுவும் பிடிக்கலை. நான் இப்படி இருக்கறது மட்டும் தான் பிடிச்சிருக்குது….”
“இது பிடிவாதம் இதயா. வந்து வாழ்ந்து பாருடி, உனக்கும் தண்டனை குடுத்துட்டு என்னையும் தண்டிச்சுட்டு இருக்க…” என்றான் கரகரப்பான குரலில்.
“இப்படி எல்லாம் பேசி நீங்க என்னை பலவீனமாக்கறதா நினைக்கறீங்க. அப்படி நினைச்சு நீங்க பன்ற ஒண்ணொண்ணும் என்னை பலமாக்கிட்டே தான் போகுதுன்னு உங்களுக்கு தான் புரியலை…”
“அப்பறம் எதுக்கு உன் கண்ணு கலங்கி இருக்குது. ஏன் இப்படி நிக்கிற?…” என்றான் அவளின் தாடையை பற்றி.
“விதி, என் விதி. அன்னைக்கு நீங்க மட்டும் தான் முக்கியம்ன்னு நினைச்சு நான் வந்தேன்ல. அந்த நிமிஷம் மாறிட கூடாதான்னு தோணுச்சு….” என்றதுமே கண்ணனின் கோபம் இன்னும் வலுபெற,
“என்னை சோதிக்கிறடி நீ? ஆனா நான் இனி பின் வாங்கறதா இல்லை. உன்னை தேடி வந்துட்டே தான் இருப்பேன்…”
“தாராளமா, ஏனா பொண்ணு நான் வந்தா தானே தப்பா தோணும். வேண்டாம்னு சொன்ன ஆம்பிளையை தேடி பொண்ணு வந்திருக்கிறாளே எப்படிப்பட்டவளா இருப்பான்னு சபையில பேசுவாங்க. ஆனா நீங்க தேடி வந்தா பாரு அவ எத்தனை வேண்டாம்னு போனாலும் என் தம்பி விட்டுட கூடாதுன்னு விட்டு குடுத்து போறான்னு பெருமையா தான் சொல்லுவாங்க…”
“இதயா…”
“இல்லையா? உண்மை தானே? நீங்க செஞ்சா பரிதாபமும், பெருமையும் உங்களுக்கு. நான் செஞ்சா அது பெரும்பாவம், பொண்ணா இதுன்ற பேரு எனக்கு. ஆனா உங்களுக்கு அதை பத்தி எல்லாம் எந்த கவலையும் இல்லை. பொண்டாட்டியா நான் அலங்கார பொம்மையா கூட இருக்கனும். அவ்வளவே தான். இல்லை?…”
“நீ ரொம்ப பேசறடி. இப்படி உன்னை பார்ப்பேன்னு நான் நினைக்கலை…”
“உங்களை பார்க்கனும்னு கூட நானும் நினைக்கலை…”
“இதயா லிசன், நடந்தது தப்பு தான். நான் மறுக்கலை. ஆனா அதுக்காக அதையே நினைச்சுட்டு இருந்தா எப்படி? நமக்காகன்னு ஒரு லைஃப் இருக்குது. அதை நாம எப்போ வாழ?…”
“முதல்ல நான் எனக்காக வாழனும். நான் முதல்லையே சொன்ன மாதிரி தான். அட்லீஸ்ட் என்னோட பீலிங்க்ஸ்க்கு நான் மதிப்பு கொடுக்கனும். அச்சோ போனா போகுது, புருஷன், அவன் அக்கா தானேன்னு நான் விட்டுட்டா திரும்ப அவங்க எப்போ வேணா என்ன வேணா பேசுவாங்க…” என்றவள்,
“நீங்க அப்பவும் என்னை தானே சமாதானம் செய்வீங்க? ஒவ்வொரு நாளும் உணர்வை கொன்னுட்டு இன்னொருத்தர் எப்போ, என்ன சொல்லுவாங்களோன்னு பார்த்துட்டு வாழற வாழ்க்கை எனக்கு வேண்டாம். ஏனா எனக்கு நான் மட்டும் தான்னு உங்க வீட்டுக்கு வந்தன்னைக்கே புரிஞ்சுக்கிட்டேன்…”
“ஹேய் என்னம்மா இதெல்லாம்? நான் அப்படி விடுட்ட மாட்டேன்…”
“அன்னைக்கு என்ன பண்ணுனீங்க? நீங்க பார்த்துட்டு தானே இருந்தீங்க? நீங்க மட்டுமா உங்கக்காவோட வீட்டுக்காரர், அவரோட அம்மாப்பா, தம்பி. உங்க சொந்தங்கள் இப்படி எத்தனை பேர் பார்த்துட்டு மட்டும் தானே நின்னாங்க?…” என்று சொல்ல,
“அன்னைக்கு சூழ்நிலை வேற இதயா…”
“எந்த சூழ்நிலையிலையும் என்னோட கௌரவம் காக்கறது உங்களை சேர்ந்தது இல்லையா அப்போ? எல்லா இடத்திலையும் என்னை நானே காப்பாத்திக்கனும், எனக்கு நானே பேசனும்னா எனக்கு எதுக்கு உறவுகள்? புருஷன்னு நீங்க எதுக்குன்றேன்?…”
“சத்தியமா அன்னைக்கு நீங்க அப்படி இருப்பீங்கன்னு நான் நினைக்கலை. உங்களை நம்பி, உங்களை மட்டுமே நினைச்சு நான் உங்க வீட்டுக்கு வந்தேன். அதுக்கு பதில் நீங்க என்ன பண்ணுனீங்க?…” என்று கேட்க பேச்சற்று நின்றான்.
“இதை பேச பேச இன்னுமே பெருசாகும். ஓஞ்சு போய்ட்டேன். என்னை விட்டுடுங்க. சுருக்கமா சொல்லனும்னா எனக்கு உங்க மேல நம்பிக்கை இல்லை…” என்று சொல்ல பெரிதாய் அடிவாங்கிய பாவம் கண்ணனிடத்தில்.
“எனக்கு புரியுது நீ ரொம்ப ஹர்ட் ஆகி இருக்கன்னு. ஆனா…”
“ப்ளீஸ், விடுங்க. எனக்கு இப்போ பேச சுத்தமா மனசில்லை. தெம்பும் இல்லை. திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கீங்க. இப்போ நீங்க வந்தது உங்கக்காவுக்கும், உங்கப்பாவுக்கும் தெரியாது தானே?…” என்று அவள் கேட்டதே அத்தனை தலையிறக்கமாக இருந்தது கண்ணனுக்கு.
“எனக்கு தெரியும், இப்போ நீங்க வந்திருக்கறது எப்படி இருக்குது தெரியுமா? உங்கக்கா அன்னைக்கு சொன்னதை உண்மையாக்க வந்த மாதிரி தோணுது. உங்களை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இங்க நீங்க வந்த ஒரு வாரத்துலையே இப்படி நான் தான் வரவழைச்சேன்னு என்னைத்தான் கூசாம பேசுவாங்க…”
இதயாவினது அமைதியான பேச்சுக்கள் என்றாலும் ஈட்டியென அவனை துளைத்துக்கொண்டு இருந்தது.
சேர்ந்து இருந்து சமாதானம் செய்ய அவன் நினைக்க அருகில் கூட நெருங்கவிடமாட்டேன் என்று அவள் இருந்தாள்.
“என்னை பிடிச்சிருக்கா இதயா?…” என்று பெண் பார்க்கும் அன்று அவன் அவளிடம் கேட்க,
“ஹ்ம்ம், பிடிச்சிருக்கே…” என்றாள் மலர்ந்த பூவினது புன்னகையுடன்.
“என்கிட்டே கேட்கலையே. எனக்கு உன்னை பிடிச்சிருக்கான்னு?…” என்றவனை பார்த்துக்கொண்டே,
“உங்களுக்கு என்னை பிடிக்கும்னு எனக்கு தெரியுமே. பிடிக்க போய் தானே இப்படி பார்க்கறீங்க?…” என்று சொல்லி அவள் சிரிக்க அந்த சிரிப்பு அவனை சுருட்டி சென்றதே.
இன்றும் பசுமையாக அவனின் மனதில் ஆழ பதிந்திருந்ததே? திருமண நாட்களை எண்ணி கடக்கும் ஒவ்வொரு தினத்தையுமே அத்தனை மதிப்பிற்குரியதாய் அவர்கள் பொத்தி வைத்து எதிர்நோக்கி இருக்க இப்படி மாறி போகும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
இதயாவை பார்த்தபடியே அன்றைய நினைவுகளில் அவன் இருக்க இப்போதைக்கு நகர மாட்டானோ என நினைத்தவள்,
“வெளில எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க. கிளம்புங்க…” என்றாள் அழுத்தமாக.
“இதயா…”
“இப்ப கூட என்னோட மொத்த கோபமும் உங்க மேல தான். அவங்க யாராவும் இருக்கட்டும். மூணாவது மனுஷங்க சொல்றது என்னவும் சொல்லிட்டு போகட்டும். ஆனா நீங்க ஏன் அப்படி இருந்தீங்க? அதை இந்த ஜென்மத்துல என்னால மறக்க முடியாது…”
“ஹ்ம்ம், தப்பு தான். தப்புக்கு தண்டனையா கூட இருந்து தண்டிச்சுக்கோ. ஆனா, இப்பவும் சொல்றேன், உன்னை என் கூட கூட்டிட்டு போகாம விடமாட்டேன். ரெடியா இரு…” என்று சொல்லிவிட்டு அவன் அகன்று செல்ல அங்கேயே சமையல் மேடையை பிடித்தபடி நின்றாள் இதயா.
ஐந்து நிமிடம் பொருத்து வெளியே வர அங்கே தீவிரமாய் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். ருக்மணி வீட்டில் பேசி குடும்பத்துடன் வந்து இதயாவை அழைத்து செல்வதை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார்.
தந்தை வந்து பேசிவிட்டால் கண்டிப்பாக இதயா மறுக்க முடியாது என்று நினைத்தான் கண்ணன்.
அதன் பின்னர் அவளை சமாதானம் செய்துகொள்ளலாம் என்று. ஒரு வீட்டில் இருக்கும் போது நாளடைவில் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணம் அவனுக்கு.
அப்போதும் அவன் உணரவில்லை அவளுள் தீயாய் தகிக்கும் ஜுவாலையின் மணத்தை.
அக்னி காடென பற்றி எரிபவளின் எண்ணங்களை சருகென எண்ணி அக்கனலில் சாம்பலாக எரித்துக்கொண்டு இருந்தார்கள்.
ஆளாளுக்கு ஒரு பேச்சு. நொடிக்கு ஒரு யோசனை. ஆனால் எதிலும் பெண்ணவளை கருத்தில் கொள்ளாமல் அவளின் வாழ்க்கையை கையிலெடுத்துக்கொண்டார்கள் பெரியவர்கள்.
பெற்றுவிட்டோம் என்று பெற்றோரும், வளர்த்தோம் என்று உற்றசுற்றமும், காலெடுத்து வைத்து வந்துவிட்டாள் என புகுந்த வீட்டு மனிதர்களும் தங்கள் முடிவை அவளின் வாழ்க்கைக்குள் நுழைத்தனர்.
கண்ணனின் பார்வை இதயாவை தீவிரமாய் தீண்ட அந்த ஸ்பரிசம் கூட அனலாய் தகித்தது.
எதனோடும் சேராத ஓரிடத்தில் தேங்கிய நீரென அவள் இருக்க, வாழ்க்கையோட்டத்தில் பாய்ந்து அடித்துச்செல்லும் போது அள்ளி செல்லும் ஆற்றின் வேகமாய் அவன் மாறி நின்றான்.
தன்னை, தன் நுட்பமான உணர்வுகளை அவன் உணரவில்லை என்று இதயா விலக, தன்னை உணர்த்திவிட்டு அவள் மனதின் காயங்களை களையவேண்டும் என்று நினைத்தான் கண்ணபிரான்.