ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 6
இதயாவின் வீட்டில் நவீனை ‘கிளம்புகிறேன்’ என்றதற்கு சுதாகரன் விடவில்லை.
“நானும் லீவ் தான் போட்டு வந்திருக்கேன் நவீ. நீ இரு…” என்றார் இரவு உணவின் பொழுது.
“மாமா, இருக்கறதை பத்தி ஒண்ணுமில்லை. என்னன்னு சொல்லுங்க. சொல்லாம இருன்னா என்ன நினைக்க?…” என்றான் ஒரு எதிர்பார்ப்புடன்.
“இருன்னா இரு. ஒரு ஒன் வீக். இல்ல நாலு நாள் மட்டும்…” என்று சொல்ல இதயாவின் இதயம் திக் திக்.
தீப்தியும், நவீனும் ஒரே சேர அவளை திரும்பி பார்த்தனர். அவளும் தவிப்புடன் அவர்களை பார்த்தவள்,
“மாமா, என்னன்னு தெளிவா சொல்லுங்க…” என்றாள்.
“சொல்லுறோம். ஆனா நாங்க ஒரு முடிவுக்கு வந்துட்டு சொல்றோம்…”
“அப்போ இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கலையா? சும்மா சொல்லாதீங்க…” என்றாள் படபடவென.
“ஆமா, முடிவு எடுத்துட்டோம். இப்போ என்ன உனக்கு? உன்னை பேசவிட்டு பேசவிட்டு நாங்க பார்த்துட்டு தள்ளி நின்னது எல்லாம் போதும். பேசாம இரு நீ…” என்றார் யசோதா.
“ம்மா, என்னம்மா இது? ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க?…” என்று கேட்டாள் வேகமாய் மஞ்சுவிடம்.
“இங்க பாரு பூவி, எதுவானாலும் நீ உன் மாமா, அத்தைட்ட பேசிக்கோ. உன்கிட்ட நாங்க பேசி பேசி ஓஞ்சு போய்ட்டோம்…” என்று முகத்தை திருப்பிக்கொண்டார் மஞ்சு.
எங்கே மகளை பார்த்து அவளின் முகத்தை கண்டால் மனம் மாறிவிடுமோ என பயந்தே மகளிடம் பேச்சை குறைத்தார்.
அய்யாசாமி நெஞ்சை பிடித்தபடியே சாய்ந்து இருக்க அவரின் கையை பற்றிக்கொண்ட இதயா,
“ப்பா, ப்ளீஸ். நான் சொல்றதை கேளுங்க. தப்பு தான். அன்னைக்கே எதுவும் வேண்டாம்னு இருந்திருக்கனும். நான் போனதும், வாங்கினதும் போதும். என்னால அதை எல்லாம மறந்துட்டு ஒண்ணா வாழ முடியும்னு தோணலை. ப்ளீஸ்…” என்று அவரிடம் அழுகையை அடக்கிய குரலுடன் சொல்ல,
“அம்மாடி பூவி. இதுவரைக்கும் உன் விருப்பத்துக்கு நாங்க மறுப்பு சொல்லலை. ஆனா இந்ததடவை எங்க பேச்சை கேளுடா. நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்லுவோம். அது இப்ப உனக்கு தெரியாது…” என்று மகளின் தலையை வருட அப்படியே அவரின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்.
“நவீ நீ முதல்ல ஆபீஸ்க்கு சொல்லிரு. லீவ் போடலாம் தானே?…” என யசோ கேட்க,
“போடலாம் அத்தை. பிரச்சனை இல்லை…” என்றான் அமைதியாக.
அங்கே இளையவர்கள் குரலுக்கு யாரும் செவிசாய்க்க தயாராய் இல்லை. நவீன் இதயாவின் கையை பிடித்தபடி அமர்ந்திருக்க தீப்தி தன் தாயையும் தந்தையையும் கோபமாய் பார்த்தாள்.
“ம்மா, நீங்க செய்யறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. அண்ணா வந்துட்டார் தான். கூப்பிடறார் தான். ஆனா இவ்வளோ நாள் இல்லாம திடீர்ன்னு வந்து வந்த சூட்டுல கூட்டிட்டு போறேன்னு நின்னா இது சரியில்லை…”
“தீப்தி…” என யசோதா அதட்ட,
“இவங்க என்ன அண்ணா வெளிநாட்டுல வேலையில இருந்துட்டு வந்து வொய்ப்பை அழைச்சுட்டு போற மாதிரியானதா? இப்படி அவசரப்படறீங்க? என்னவோ இதான் சாக்குன்னு தள்ளிவிடற மாதிரி…” என்று சொல்லவும்,
“தீப்தி…” என கையை ஓங்கிவிட்டார் சுதாகரன்.
தீப்தி தந்தை கை ஓங்கியதில் அரண்டு போனாள். கண்களில் கண்ணீர் இறங்கிவிட்டது அவரின் கடுமையில்.
எங்கே அடித்துவிடுவாரோ என்று பயந்துபோன நவீன் சட்டென தீப்தியின் கையை இழுத்து தன்பக்கம் நகர்த்திக்கொண்டான்.
“நீ என்கிட்டே வாடா. இங்க யாருக்கும் மனசாட்சி இல்லை…” என்று நவீன் சொல்ல,
“நீங்க எல்லாம் அவ்வளோ பெரிய மனுஷங்க ஆகிட்டீங்களா? முதல்ல வீட்டுல இருக்கற பெரியவங்க என்ன சொல்றாங்க, எதுக்கு சொல்றாங்கன்றதை கேளுங்க…” என்று யசோதாவும் மகளை கடிந்துவிட்டார்.
“அதான் நீங்க எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க இல்ல. பண்ணிக்கங்க. ஆனா நாங்க எதுவுமே கேட்க கூடாதா?…” என்று தீப்தியின் கண்ணீரை துடைத்தவன்,
“நீ ஏன் வாயை திறக்கற? இங்க நாம எதுவும் சொல்லி கூடாது. அதுக்கு தான் இத்தனை நாள் இல்லாம கோவத்துல பொங்குறாங்க. விடு. வா நாம உள்ள போலாம்…” என்றவன் அவளை கை கொடுத்து எழுப்பி இதயாவையும் கூட்டிக்கொண்டு அவளறைக்குள் சென்றுவிட்டான்.
“பூவிக்கா, இப்படியே இருந்தா எல்லாம் மாறிடுமா? விடு. என்னதான் செய்யறாங்கன்னு பார்ப்போம்…” என்று அக்காவை தேற்ற,
“என்ன செய்வாங்க? அங்க கொண்டு போய் விடுவாங்க…” என்றவள் முகத்தை துடைத்துவிட்டு படுத்துக்கொள்ள அவளுக்கே தீப்தியும் படுத்துவிட்டாள்.
நவீன் தனது பேக்கையும் லேப்டாப்பையும் தூக்கிக்கொண்டு வந்தவன் அங்கே ஒரு சேரை போட்டு அமர்ந்துவிட்டான்.
“நவீத்தான் நீ தூங்கல?…” என்ற தீப்தியிடம்,
“இல்லடா, கொஞ்சம் வேலை இருக்குது. லீவ் வேற போடனும். ப்ச், நீ தூங்கு. நான் முடிச்சுட்டு வந்து படுக்கறேன்…” என்றவன் உறங்க நள்ளிரவு ஆனது.
அங்கேயே ஒரு பாயை விரித்து கீழே படுத்துவிட்டான். வெளியே செல்லவே பிடித்தம் இல்லாமல் போனது. அவனுக்கு தெரியும் இதயாவை அங்கேயே அனுபிவிடுவார்கள் என்று.
மறுநாள் வழக்கம் போல இதயா அலுவலகம் கிளம்பி செல்ல அய்யாசாமி, மஞ்சு, சுதாகரன், யசோதா என நால்வரும் கூடி கூடி பேச சுதாகரன் போனில் இருக்க என்று என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
“நவீத்தான், உன்னை எதுக்கு இருக்க சொன்னாங்கன்னு கேளேன். என்னையும் பிடிச்சு வச்சுட்டு நானும் காலேஜ் போகனும்ல…” என்றாள் தீப்தி.
“விடு விடு. கத்தரிக்கா முத்தினா கடைத்தெருவுக்கு வரத்தான் செய்யும்…” என்று நவீனும் கண்டுகொள்ளாததை போலவே இருந்துகொண்டான்.
அதற்கு மறுநாளே அதற்கடுத்தநாள் இரவு உணவிற்காக வீட்டில் விருந்து ஏற்பாடு செய்வதை போல பரபரவென்று இருந்தார்கள் யசோதாவும், மஞ்சுவும். நவீனை அதை வாங்கி வா, இதை வாங்கி வா என்று அவனை படுத்த ஆரம்பிக்க,
“என்கிட்டே சொல்லு, நானே வாங்கிட்டு வரேன். அவனை ஏன் தொந்தரவு செய்யற?…” என்றார் சுதாகரன்.
நவீன் வீட்டில் இருந்தே வேலை செய்துகொண்டு இருக்க அவனை படுத்த வேண்டாம் என்று அவள் சொல்லி தானே செய்தார்.
காலை கிளம்பும் பொழுதே இதயாவை விடுப்பு எடுக்க சொல்லலாம் என்று சுதாகரன் சொல்ல யசோதா தான் வேண்டாம் என்றார்.
“அவ இருந்தா முகத்தை தூக்கி வச்சுட்டே இருப்பா. உங்க தங்கச்சியும் ஐயோ என் பொண்ணு பாவம்ன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. போய்ட்டு வரட்டும். அங்க போன பின்னால கூட லீவ் எடுக்கனும்னா எடுக்கட்டும்…” என்றுவிட்டார்.
அலுவலகம் வந்த இதயாவிற்கு மனதே இருப்புக்கொள்ளவில்லை. இன்னும் அங்கிருந்த யாருக்கும் இதயா திருமணம் ஆனவள் என்று தெரிந்திருக்கவில்லை.
அனைத்திலும் பூவிதயா அய்யாசாமி என்றே இருக்க யாரும் கேட்கவும் இல்லை. அவளும் சொல்லிக்கொள்ளவும் இல்லை. அப்படியே இருந்துகொண்டாள்.
“இன்னைக்கு என்ன பூவி இத்தனை டென்ஷன்?…” என்று மதிய உணவு நேரம் மிருணா கேட்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. சும்மா தான்…” என்று இதயா சமாளிக்க,
“வீட்டுல கெஸ்ட் இன்னும் இருக்காங்க. அப்போ அவ நினைப்பு எல்லாம் அங்க தானே இருக்கும்?…” என்றாள் நளினி.
“அப்படியா பூவி?…” என மிருணாவும் பார்க்க,
“ம்மா, பூவி…” என்று வந்து நின்றார் அகிலன்.
“சொல்லுங்க சிசி…” என வாய்தவறி சொல்லிவிட்டவள் நாக்கை கடித்துவிட்டு,
“சொல்லுங்க ஸார். நாங்க வேற பேசிட்டு இருந்தோம். அதான்…” என சமாளிக்க,
“ஓஓஹோ, நான் கூட என்னவோன்னு நினைச்சேன்…” என்றார் ஒரு கண்டிப்பான முகத்துடன்.
“சொல்லுங்க சொல்லுங்க. என்னன்னு சொல்லுங்க…” என அவரை யோசிக்கவே விடவில்லை இதயா. சிரித்தபடி அவள் கேட்க,
“அய்யா உன்னை வர சொன்னாரும்மா…”
“எந்த அய்யா?…” என கேட்கும் போதே முகம் மாறிவிட்டது.
“உன்னோட இதே ரோதனைம்மா. கலெக்டர் அய்யா…” என அவர் திருத்த,
“என்னை எதுக்காம்? ஏதாவது பைல் கேட்டாங்களா?…” என்று இதயா கேட்கும் பொழுதே,
“அதென்ன பூவியை வர சொல்லி சொல்லிருக்கறார்? எதாச்சும் கம்ப்ளைன்ட்டா?…” என்றாள் மிருணா.
கண்ணன் வந்த இந்த சில நாட்களிலேயே அவனின் கண்டிப்பும், கோபமும், வேகமும் அந்த அலுவலகம் மொத்தமும் அறிந்திருந்தனர்.
அங்கே வேலை செய்பவர்களில் சிலர் அவனின் கணிப்பிலும், கண்டிப்பிலும் துவண்டு போய் இருந்தனர்.
வேலையில் அத்தனை கறாராகவும், நேர்மையுடனும் அவன் இருக்க இப்போது இவளை எதற்கு அழைக்க என்று நளினியும், மிருணாவும் இதயாவை பாவமாய் பார்த்தனர்.
‘இவங்க வேற என்னை என்னவோ கடிச்சு குதற கூப்பிட்ட மாதிரியே லுக் விடறது?’ என இதயா நொந்துகொண்டாள்.
அவன் இன்று அழைப்பதற்கான காரணம் ஓரளவு யூகித்ததே. அவனின் வீட்டில் இருந்து மீண்டும் இன்று யாராகினும் வர கூடும் என்று நினைத்தாள்.
ஏனென்றால் அத்தனை பரபரப்பு தன் வீட்டில் நிகழ்ந்ததே. முதல்நாளே என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து தாயும், அத்தையும் எழுதிக்கொண்டு இருந்தார்களே.
“இப்ப வரேன் ஸார். நீங்க போங்க…” என்று அகிலனிடம் சொல்ல,
“பூவி, இரு உன் கூட நானும் வரேன்…” என்று எழுந்தாள் மிருணா.
“எதுக்கு அங்க நீ போய் என்ன பண்ண போற? பேசாம இரு. அவ போய்ட்டு வரட்டும்…” என்றாள் நளினி.
“அச்சோ அக்கா, கூட ஒரு சப்போர்ட்டிவா நிக்க வேண்டாமா? வீர் ஆர் ப்ரெண்ட்ஸ்…”
“இந்த கதை எல்லாம் வேண்டாம். உனக்கு அவர்கிட்ட போய் பார்த்து பேசனும். அதானே?…” என்று நளினி சொல்ல அசடு வழிந்தாள் மிருணா.
“தூரத்து பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி தான்…” என்றாள் இதயா.
“இந்த புள்ள என் க்ரஷ் வந்த நாள்ல இருந்து அப்பப்ப சம்பந்தம் இல்லாம பேசுது. என்னன்னு கேளுங்க நளினிக்கா…” என மிருணா சொல்ல,
“இவ பேசிட்டே தான் இருப்பா. நீ போய் என்னன்னு பாரு. நாங்க கை கழுவிட்டு வரோம்…” என்று அனுப்பிவைத்தாள் நளினி.
“ஓகே, வரும் போது எனக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிட்டு வாங்க. சாப்பிட்ட மாதிரியே இல்லை…” என சொல்லிவிட்டு சென்றாள் அவள்.
“இப்பத்தான் சாப்பிட்டா, அதுக்குள்ளே சாப்பிட்ட மாதிரி இல்லையாம்…” என மிருணா சொல்ல,
“அவ இன்னைக்கு சரியாவே சாப்பிடலை. பாதில இப்ப எழுந்துட்டா. திரும்ப வந்து சாப்பிடும் போது நல்லாவா இருக்கும். அதான் பிஸ்கட் வாங்கி வைக்க சொல்லிருக்கா. நீ வாங்கிட்டு வா. நான் இதை எல்லாம் எடுத்து வைக்கறேன்…” என்றாள் நளினி.
இங்கே கண்ணபிரானின் அறை கதவை தட்டிவிட்டு அவள் உள்ளே வர ஜன்னலின் பக்கம் நின்று வெளியே பார்த்தபடி இருந்தவன் திரும்பி பார்த்தான்.
“வர சொல்லியிருந்தீங்க ஸார்…” என்று அவள் வந்து நிற்க அவனின் எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் துள்ளியது.
“ஹ்ம்ம்…” என்று தொண்டையை செருமிக்கொண்டு வந்து அந்த இருக்கையில் அமர்ந்தவன்,
“உட்காரு இதயா…” என சொல்ல,
“இருக்கட்டும் ஸார். வேலை இருக்குது. எதுக்கு வர சொன்னீங்கனு சொல்லுங்க…” என்றாள் பட்டுக்கொள்ளாமல்.
அவனின் பார்வையை வைத்தும் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளின் ஆராயும் பார்வையில் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டவனும் உரியவனாய் பார்த்தான்.
உயிர் உருகும் அவனின் தேடலை தன் பார்வையாலேயே அவளுக்கு உணர்த்த முயல அவளோ கடுப்புடன்,
‘இந்த லுக்குக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. அந்த இதயா எப்பவோ தொலைஞ்சுட்டா’ என நினைத்தவள்,
“ஸார் நீங்க என்னை பார்க்கிற விதமே சரியில்லை. மாத்திக்கோங்க…” என்று நேரடியாக சொல்லி ‘இதற்கெல்லாம் நான் அசரமாட்டேன்’ என்பதை போல அவனை கண்டுக்கும் விதமாய் அவள் சொல்ல கண்ணனின் முகம் மென்மையானது.
“சில பார்வைகள் சிலருக்கு மட்டுமே உரித்தானது இதயா. அது மாதிரி தான் இதுவும். என்னோட இந்த பார்வை உனக்கு மட்டும்…” என்றவனை கை நீட்டி இடை மறித்தவள்,
“கிவ் ரெஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்பெக்ட் ஸார். என்னோட பேர் பூவிதயா. அது மாதிரி நீங்க ஒருமையில கூப்பிட நான் உங்களுக்கு சொந்தமில்லை. இந்த ஆபீஸ் ஸ்டாஃப். அதுக்கான மரியாதையை நீங்க குடுக்கனும். இல்லைன்னா?…”
“இல்லைன்னா?…” என்று எழுந்தவன் அவளை நோக்கி வர பின்னே செல்லாமல் அசையாது நின்றாள்.
“இன்னைக்கு நீ ஆஃப்டே இல்லையா?…” என்று கேட்டவன் அவளருகே வந்து நிற்க,
“எதுக்கு ஆஃப்டே?…”
“ஏன் உனக்கு தெரியாதா?…”
“ப்ச் இதுக்கு தான் வர சொன்னீங்களா? ஆபீஸ்ல பர்சனல் பேசறது ரூல்ஸ்ல இல்லையே…”
“அப்போ பர்சனலா எங்க பேசலாம்? நீயே சொல்லேன்…” என்று நிற்க,
“டெவில்…” என்று பல்லை கடித்து அவனை திட்ட இன்னுமே ஒரு விரிந்த புன்னகை கண்ணனின் முகத்தில்.
“முன்னலாம் இதையே வேற மாதிரி சொல்லுவ இல்லையா?…” என்று அவன் சிரிக்க சிரிக்க இதயாவின் முகம் செம்மையுற்றது கோவத்தில்.
“எப்ப இருந்துடி இத்தனை திமிரா மாறின நீ?…” என இன்னுமே இடைவெளியை குறைத்து அவன் நிற்க,
“எப்போ இருந்து உங்ககிட்ட அலட்சியம் ஆரம்பிச்சதோ அங்க தொடங்குச்சு என் திமிர்….”
“ஆனா இதுவும் உனக்கு அழகா இருக்கே…” என்று சொல்லவுமே அவனின் டேபிளில் இருந்த பெல்லை பிடித்து உள்ளங்கையை வைத்து அழுத்தினாள் வேகமாய்.
“இதயா என்ன பன்ற?…” என கேட்கவுமே கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தார் அகிலன்.