“ஸார்…” என்று அவர் வந்து நிற்கவும் அகிலனையும் இதயாவையும் மாறி மாறி பார்த்தவனை ஒரு இகழ்ச்சி புன்னகையுடன் ஏறிட்டவள்,
“நீங்க கேட்ட பைல் அகிலன் ஸார்க்கு தான் தெரியும். அதனால அவர்கிட்டயே கேளுங்க ஸார். நான் அந்த டிபார்ட்மென்ட் இல்லை…” என்று சொல்லிவிட்டு அவள் வெளியேற கண்ணனுக்கு ஒரு நொடி தலைசுற்றியது.
கதவை திறந்து திரும்ப மூடும் பொழுது அவனை படு நக்கலாய் பார்த்துவிட்டே அவள் செல்ல கண்ணனும் முறைத்தான்.
அவனின் முகத்தில் இருந்த கோபத்தில் அகிலன் கால்கள் நடுங்க ஆரம்பிக்க அவரை திரும்பி பார்த்தவன்,
“அவுட்…” என்று கத்தவும் ஏன் எதற்க்கு என்று தெரியாமலே மீண்டும் கண்ணனிடம்,
“ஸார் என்னன்னு சொன்னீங்கன்னா?…” என நிற்க,
“போங்கன்னா போகமாட்டீங்களா?…”
“இல்ல ஸார், அந்த பைல்…” என்றதும் ஒரு நொடி யோசித்தவன்,
“எல்லாமே நானே சொல்லனுமா? அதான் சொல்லிட்டு போனாங்களே அவங்க. போய் கேளுங்க. என்ன பைல்ன்னு கேட்டு கொண்டுவாங்க…” என்று சொல்லி அனுப்பிவிட்டு,
“இதயா…” என நெஞ்சை நீவிகொண்டான்.
“உன்கிட்ட இது ஒன்னுதான்டி மாறலை. ஆனா மொத்தமா மாறிட்ட…” என புலம்பியபடி இருந்தான்.
“அம்மாடி பூவி…” என்று தான வந்து அமர்ந்த நிமிடம் அவரும் பின்னேயே வந்திருக்க,
“சொல்லுங்க ஸார்…” என்றாள்.
“என்ன பைல்ன்னு உன்கிட்ட கேட்டு கொண்டுவர சொன்னார். அது என்ன பைல்? எதுக்காம் அத்தனை கோவமா இருக்காரு?…” என்று அவளிடமே கேட்க மிருணாவும் இதயாவுடன் பேசும் முன்னே அகிலன் வந்துவிட்டதால் வேடிக்கை பார்த்தாள்.
‘கிராதகன், மாட்டிவிட்டுட்டான் பதிலுக்கு.’ என முனுமுனுக்கும் போதே அவளின் மொபைலில் மெசேஜ் வந்திருக்க உடனே எடுத்து பார்க்க கண்ணனே அவளுக்கு என்ன பைல் என்று அனுப்பியிருந்தான்.
அகிலனிடம் அதை பார்த்து சொல்லி அனுப்பியவள் தலையை பிடித்துக்கொள்ள மீண்டும் அதே போல மெசேஜ்.
“பர்மிஷன் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பு…” என கண்ணன் அனுப்பியிருக்க,
“உன் வேலையை பாரு. சும்மா சும்மா மெசேஜ் பண்ணா ப்ளாக் பண்ணிடுவேன். மைண்ட் இட்…” என்று அனுப்பியிருக்க அதற்கும் ஒரு சிரிக்கும் ஸ்மைலி பதிலுக்கு வந்து விழுந்தது.
“கொஞ்சமும் ரோஷமில்ல…” என்று அனுப்பிவிட்டு போனை வைத்துவிட,
“என்ன பூவி, உன்னை எதுக்கு வர சொன்னாங்களாம்?…” என மிருணா கேட்க,
“அப்பறமா சொல்றேன். இப்ப இந்த வேலையை முடிக்கனும்…” என்று குனிந்துகொண்டாள் இதயா.
மிருணாவை தெரியும் அவளுக்கு. படபடவென்று பேசுவாள் அவ்வளவே. மத்தபடி கண்ணனை க்ரஷ் என்று சொல்வதெல்லாம் ஒரு விளையாட்டாக என நினைத்தவள் அது கண்ணனுக்கு தெரியும் போது அவன் முகம் எப்படி போகும் என நினைத்துக்கொண்டாள்.
ஒரு ஒருமணி நேரம் முழுதாய் கடந்திருக்காது. அதற்குள் மீண்டும் அவளுக்கு போன் வர எடுத்து பார்க்க சுதாகரன் என்றிருந்தது.
“சொல்லுங்க மாமா…” என்றாள் மெல்லிய குரலில்.
“உன் ஆபீஸ்க்கு வெளில தான் நிக்கறேன். கிளம்பி வா…” என்று சொல்ல திடுக்கிட்டு போனாள்.
“என்ன சொல்றீங்க? இங்க எதுக்கு?…” என கேட்டுக்கொண்டே சுற்றிலும் பார்த்தவள்,
“நீங்க ஏன் வந்தீங்க மாமா?…” என்றாள்.
“உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்…”
“ஆபீஸ் டைம் இன்னும் முடியலை…” என்றாள் அழாதகுறையாக.
“பூவிம்மா, கிளம்பி வா. பர்மிஷன் சொல்லியாச்சு. நான் வெளில வெய்ட் பன்றேன்…” என்று அவர் வைத்துவிட தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“இதயா…” என்ற குரலில் தூக்கிவாரி போட நிமிர்ந்து பார்க்க கண்ணன் நின்றுகொண்டிருந்தான்.
சட்டென பார்வை தன்னை சுற்றி இருந்தவர்கள் பக்கம் தான் தாவியது. மிருணாவும், நளினியும் என்னவோ என்று பார்க்க மற்றவர்களும் இங்கே தான் பார்வையை பதித்திருந்தனர்.
“கிளம்பு…” என்றான் அவளிடம்.
“அராஜகம் பன்றீங்க இல்ல. இத நான் சும்மா விடமாட்டேன்…” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“எல்லாரும் பார்த்துட்டு இருக்காங்க, இப்ப நீ கிளம்பி வீட்டுக்கு போ. அங்க வச்சு பேசிக்கலாம்…” என்று அவனும் சொல்ல சுற்றி இருந்தவர்களை கருத்தில் கொண்டு,
“வீட்டுக்கு வந்தீங்க நான் மனுஷியா இருக்கமாட்டேன்….” என்று பல்லை கடித்தபடி சொல்லிவிட்டு தனது பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றவன் மற்றவர்களை சுற்றி ஒரு பார்வை பார்க்க உடனே அத்தனை பேரும் அமர்ந்து வேலையில் ஆழந்து போயினர்.
தலையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு ஊப் என்று மூச்சை இழுத்தவன் உள்ளே சென்றான் மீண்டும்.
அவன் சென்ற பின்னர் முணுமுணுவென்று பேச்சுக்கள் கிளம்ப ஆளாளுக்கு இதெல்லாம் என்னெவென்று பேசினார்கள். மிருணாவும், நளினியும் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
இதயாவின் இருக்கை வரை வந்து அவன் பேசியது அதற்கு கட்டுக்கடங்கா கோபத்துடன் இதயாவின் பதிலும், அதில் தெரிந்த சீற்றமும் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது.
தள்ளி இருந்தவர்களுக்கு என்னெவென்று தெரியாதென்றாலும் அருகில் இருந்த மிருணா அதிர்ச்சியுடன் நளினியிடம் என்ன பேசினார்கள் என்று சொல்ல நளினிக்குமே குழப்பம்.
“லவ் மேட்டரா இருக்குமோ க்கா?…” என மிருணா கேட்க,
“உன் கூட தான நானும் இருக்கேன். எனக்கு மட்டும் என்ன தெரியும்?
“ஒருவேளை இங்கே வந்த பின்னால பூவி மேல ஒரு கண்ணு நம்ம க்ரஷ்க்கு…”
“இன்னும் என்னடி க்ரஷ். இப்படி பேசறதை நிறுத்து. அதுவும் என்னையும் கூட்டு சேர்த்துட்டு…” என்று நளினி திட்டவும் மிருணா வாயை கப்பென்று மூடினாள்.
அலுவலக கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த இதயா தனது ஸ்கூட்டி பக்கத்தில் சுதாகரன் நிற்பதை பார்த்ததும் அவரை நெருங்கி செல்ல அவருக்கே யாருடனோ நின்று பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது.
“மாமா…” என இதயா வந்ததும் அழைக்க முதலில் திரும்பியது சிவசுந்தரம்.
அவரை பார்த்ததுமே பார்வை சுதாகரனை தொட்டு மீண்டும் தன் மாமனாரை சமீபிக்க உடனே தனது அதிர்ச்சி எல்லாம் ஓரங்கட்டி,
“சொல்லுங்க மாமா வர சொன்னேங்க?…” என்றாள் சிவசுந்தரத்தை தவிர்த்து.
“எப்படிம்மா இருக்க பூவி?…” என்று மருமகளிடம் பேசினார் அவர். அதற்கு பதில் சொல்லாமல்,
“மாமா, கிளம்பனும்னு சொன்னீங்க? போகலாம்…” என்றாள் இறுக்கமான பாவனையுடன்.
‘என் பொண்ணு பேசினான்னா அதுக்குன்னு வரிஞ்சுகட்டிக்கிட்டு பதிலுக்கு பேசுவியா நீ? வந்தன்னைக்கே என் பொண்ணை கை நீட்டியிருக்க? அப்போ உன்னை என்ன செய்யலாம்?’ என்ற சிவசுந்தரத்தின் அந்த குரல் இன்னுமே அவளுக்கு கேட்பதை போலவே இருந்தது.
அந்த கோபத்திலும், வேதனையிலும் அவரிடம் பேசுவதையே அவள் தவிர்க்க சுதாகரன் விடவில்லை.
“என்ன பூவி இதெல்லாம்? அவர் உன்கிட்ட தான் பேசறார். பதில் சொல்லு…” என கண்டிக்க,
“நான் நல்லா இருக்கேன். இதுவரைக்கும் ரொம்ப நல்லா இருந்தேன்…” என்றாள் அவள்.
“பூவி…” என்ற சுதாகரனிடம்,
“இதுக்கு தான் வர சொன்னீங்களா மாமா?…”
“சரிங்க சுதாகரன், நீங்க கிளம்புங்க…” என்று சொல்லி சிவசுந்தரம்,
“கண்ணா வரவும் நாங்க கிளம்பி வரோம்…” என்று சொல்லவும் வெடுக்கென்று திரும்பினாள்.
‘ஆக மொத்த குடும்பமும் வந்திருக்கறாங்களா? அதான் கிளம்பு கிளம்புன்னு விரட்டினானா? பொண்ணா பார்க்க வரீங்க?’ என்று உள்ளம் கொதிக்க நினைத்தவள் ஸ்கூட்டியை கிளப்பி வந்து நிற்க சுதாகரன் பின்னே ஏறிக்கொண்டார்.
“வீட்டுல பார்ப்போம்…” என்று சிவசுந்தரம் சொல்லியதற்கு இதயாவிடம் எந்த பதிலும் இல்லை.
“நீங்க வாங்க, பேசிக்கலாம்…” என்று சுதாகரன் சொல்லவுமே ஸ்கூட்டியை கிளப்பிவிட்டாள் வேகமாக.
வழியில் வைத்து ஒன்றும் பேசாமல் இருந்தவர் வீட்டிற்கு வந்ததுமே இதயாவை முறைத்துவிட்டு,
“யசோ இங்க இருக்கனுமா வேண்டாமான்னு முடிவு பண்ணனும் போல?…” என்று சத்தமாக சொல்ல அனைவருமே கூடிவிட்டனர் ஹாலுக்கு.
“என்னாச்சு? எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்?…” என்று அய்யாசாமி கேட்க,
“கோபமில்லாம, அங்க இவ மாமனார் வந்திருந்தார். இவக்கிட்ட எப்படி இருக்கன்னு கேட்டா கொஞ்சமும் மதிக்காம இருக்கறா. எனக்கு தான் அவமானமா போச்சு…” என்று சொல்லவும்,
“ஏன் பூவி இப்படி பன்ற? எல்லாரும் இளகி வர்ற நேரம் பார்த்து நீ ஏன் இப்படி இருக்கற? அவங்களே இறங்கி வராங்க. இப்படி உன் தலையில நீயே மண்ணை போட்டுக்கறியே…” என்று மஞ்சு விசும்பலுடன் கேட்க,
“ம்மா, புரிஞ்சு தான் பேசறியா நீ? அவங்களே இறங்கி வராங்கன்னா என்ன அர்த்தம்? என்னவோ நான் தப்பு பண்ணிட்டு வாழ மாட்டேன்னு வந்த மாதிரியும், அவங்க போனா போகுதுன்னு என்னை ஏத்துக்கற மாதிரியும் இருக்குது நீங்க எல்லாரும் பேசறது…”
“பூவி…” என யசோ அருகே வர,
“சும்மா இருங்க அத்தை, அப்போ நான் பண்ணினது தான் தப்புன்னு சொல்லி காண்பிக்கிற மாதிரியே என் மேல கோவிக்கறீங்க. நான் நினைக்கிறது தப்பா என்ன? ஏன் இப்படி பன்றீங்க?…” என்று அவள் தொப்பென தரையில் அமர மஞ்சு அவளருகே செல்ல போக யசோதா அவரின் கையை பிடித்துக்கொண்டார்.
“சரி இப்போ என்ன செய்யனும்னு சொல்ற? அவங்க வரேன்னு சொல்லிருக்காங்க. அதுக்குள்ளே உன் முடிவ சொல்லு…” என்று யசோதா கேட்க அவர்களை எல்லாம் நிமிர்ந்து பார்த்தாள்.
நலுங்கிய உடலுடன் தளர்ந்து போய் இருந்த தந்தையை, தாயை தான் அவளின் பார்வை வருடியது.
தன்னிடம் இறைஞ்சுதலுடன், விழியெல்லாம் கண்ணீருடன் அவர்கள் பரிதாபமாக நிற்க அரை நொடிக்கும் மேல் அதை பார்க்க முடியாமல் முகத்தை மூடி சுவற்றில் சாய்ந்துகொண்டாள்.
“தெரியலை, எனக்கு தெரியலை. இப்ப நான் என்ன முடிவு பண்ண? என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சும் என்னை ஏன் இப்படி பார்க்கறீங்க? பார்க்காதீங்க. நானும் யாரையும் பார்க்கலை. வேண்டாம்…” என்று தலையை அசைத்துக்கொண்டு அவள் கத்த,
“பூவிம்மா…” என அவளின் தலையை தொட்டார் அய்யாசாமி.
“அப்பா, ப்ளீஸ் எதுவுமே பேசாதீங்க. என்னால தாங்க முடியலை. நெஞ்சு வெடிச்சுரும் போல இருக்கு. உங்களோட இந்த குரல் என்னவோ செய்யுதே. வேண்டாம். நான் போயிடறேன். அவங்களோடவே போயிடறேன். போதுமா?…” என அவரின் காலில் சரிந்துகொண்டு விசும்பினாள்.
“பூவிடா…” என்று யசோதாவும், மஞ்சுவும் அவளோ எழுப்பி தங்கள் மேல் தாங்கிக்கொள்ள,
“உன்னோட எதிர்காலத்துக்கு தான்டா. புரிஞ்சுக்கோம்மா….” என்று அவர்கள் அடுத்து சொன்ன எதுவும் அவளின் காதில் ஏறவே இல்லை. சிறிது நேரம் அமைதியாய் இருந்தவளின் கண்ணில் நீர் வற்றி போக,
“நான் போறேன். அவங்களோட போறேன். ஆனா வீட்டுக்கு வரவங்கட்ட நான் பேசனும். அப்படினா மட்டும் தான் நான் போவேன். இன்னொரு தடவை அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் நான் வர கூடாது பாருங்க…” என்று அவள் சொல்ல இப்போது மற்றவர்களுக்கு திக்கென்று ஆனது.
“பூவி…”
“நீங்க சொன்னதுக்கு நான் கேட்டேன்ல. எல்லார் முன்னாடியும் தான் பேசுவேன். ஆனா பேசுவேன்…” என்றவள் எழுந்து உள்ளே சென்றுவிட நவீனும் தீப்தியும் அவர்களை கண்டன பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றனர்.
அடுத்த அரைமணி நேரத்தில் கண்ணனின் குடும்பத்தினர் மொத்தமும் வந்திறங்கினார்கள்.
வந்தவர்களில் உத்ராவும் ஒருத்தி. உள்ளே வரும் போதே முகத்தில் முள்ளை கட்டியதை போல கடுகடுவென்று அவள் வர,
‘உனக்கு ஒரு அறை பத்தாது’ என்பதை போலவே இதயா அவளை முறைத்து பார்த்தாள். அந்த பார்வையே உத்ராவை வெகுண்டெழ செய்தது. ஆனாலும் வாயை திறக்கமுடியாதே.
வரும் பொழுதே வேலவன் கண்ணில் அரிவாளை வைத்ததை போல உத்ராவையே நோட்டம் விட்டுக்கொண்டு இருக்க வெளிப்படையாய் முறைக்க கூட முடியவில்லை உத்ராவால்.