“இதே கேள்வியை உங்ககிட்ட வேற மாதிரி கேட்க எனக்கு தெரியாதா என்ன? ஒரு மரியாதைக்காக அதுவும் என்னோட மரியாதைக்காக நான் பேசாம இருக்கேன். புரியுதா?…” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“எங்க பேசேன், யாரு வேண்டாம்னு சொன்னா? பார்த்தீங்களா இவளை?…” என்று இதயாவிடம் முறைத்துக்கொண்டு நின்ற உத்ரா,
“பிரச்சனைனா நின்னு அங்க என்னன்னு இருந்து பார்க்கனும். அதை விட்டுட்டு வாழமாட்டேன்னு வந்தா? இதெல்லாம் ஒரு நல்ல பொண்ணு செய்யற வேலையா? அதுவும் இத்தனை வருஷம் என் தம்பியோட வாழ்க்கையையும் பாழாக்கிட்ட. இதுக்கு பேசாம டைவர்ஸ் குடுத்துடு நீ…”
உத்ரா சொல்லவும் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்க கண்ணன் கோபமாய் எழுந்துவிட்டான்.
“அக்கா, இதோட பேச்சை நிறுத்திக்கோங்க. இது அவளுக்கும் எனக்குமானது…” என்றவன் கடுமையாக வேலவனை பார்க்க,
“எங்க உங்க தம்பியை டிவோர்ஸ் கேட்க சொல்லுங்களேன் பார்ப்போம்….” என்று இதயா அவளின் எந்த பேச்சிற்கும் அசராமல் பதில் கொடுக்க,
“அதானே? உனக்கு அந்த தைரியம் தான், இத்தனை வருஷம் அவனை பின்னால சுத்தல்ல விடற. அவன் தான் உன்கிட்ட மயங்கி கிடக்கானே நீதான் வேணும்னு…” என்றவளின் பேச்சில் சபையில் இருந்தவர்களை முகம் சுளிக்க செய்ய,
“இதென்ன வம்பா போச்சு? புருஷன்னா பொண்டாட்டியை தேடாம வேற என்ன செய்வாங்களாம்? அதுக்கு உங்களுக்கு ஏன் கோவம் வருது?…” என நக்கலாக கேட்க,
“என்ன பேச்சை மாத்தறியா? எனக்கு என்ன கோவம்? நீ இப்படி நடந்துக்கறது சரியில்லைன்னு சொன்னா என் மேலையே திருப்பற…” என்று உத்ரா மழுப்ப அவளையே அழுத்தமாய் பார்த்த இதயா,
“மாத்தி பேசறீங்களே? நீங்க நடந்துக்கறதை பத்தி பேசற ஆள் இல்லையே. நடத்தையை பத்தி பேசற ஆளாச்சே. இன்னைக்கு என்ன?…” என கேட்டதுமே அத்தனை பேரும் திகைப்பாய் பார்க்க ருக்மணிக்கு புரிந்து போனது.
“என்னது?…” என உத்ரா முழிக்க,
“அன்னைக்கு நான் அடிச்சேன்னு எல்லாரையும் கூட்டினேங்களே அன்னிக்கு சொன்னதை தான் சொல்றேன். நான் நடந்துக்கறது சரியில்லைன்னு இன்னைக்கு பேசறீங்க? அன்னைக்கு உங்கம்மாவும் இருக்கும் போது நடத்தை சரியில்லன்னு தான சொன்னீங்க?…”
“பூவிம்மா…” என மஞ்சு மகளை பார்க்க,
“ஆமாம்மா, நான் ரெண்டுதடவை கேட்டேன். கேட்டதுக்கு நடத்தையும், நடந்துக்கறதும் ஒண்ணுன்னு சொல்றாங்க. அதாவது அவங்க தம்பியை தேடி போனதால நான்…”
“பூவிக்கா…” என அவளை அதற்கு அடுத்த வார்த்தை பேச நவீன் அனுமதிக்கவில்லை.
“தயவு செஞ்சு எல்ல்லாரும் கிளம்பிருங்க…” என அவன் சொல்ல,
“நவீ உனக்கு புரியுதாடா…” என தம்பியின் கையை பிடித்துக்கொண்டாள்.
இதயா சொல்லவும் அத்தனைபேரும் எழுந்து நின்றுவிட்டனர். இது புதிது அவர்கள் அனைவருக்கும் கண்ணன் உட்பட.
இதயாவின் உதடு நடுங்கி கொண்டிருக்க முகமெல்லாம் சிவந்து கண்கள் கலங்கி கண்ணீர் திரண்டிருந்தது. கண்ணை சிமிட்டி அதை உள்ளிழுத்து கொண்டவள்,
“என்னாச்சு? மறந்துடுச்சா? அச்சோ அதுக்கு முன்னாடி இன்னொன்னு சொன்னீங்களே? ஞாபகப்படுத்தினா ஞாபகம் வரும்ன்னு நினைக்கறேன்…” என்று இதயா சொல்லவுமே உத்ராவிற்கு வெடவெடத்து போனது.
அன்றே இதயா அதை சொல்லாமல் பதறி கலங்கி நிற்க இன்று வரை அதை சொல்லாமலும் மறைத்திருக்க இனியும் சொல்ல போவதில்லை என்றே நினைத்து இருந்தாள் உத்ரா.
சொன்னால் அது அவளுக்கும் தானே அசிங்கம் என அவள் அப்படி சொல்ல போவதில்லை என்று தைரியமாக இருக்க, இதயாவின் அழுத்தம் இனி எதையும் மறைக்க போவதில்லை என்பதை போல இருந்தது.
அவளை நெருக்க நெருக்க இனி மறைக்க என்ன இருக்கிறது என்று வாய் திறந்துவிட்டாள்.
இப்போது பார்வை வன்மையாக கண்ணனின் மேல் படிந்தது. ‘உன்னை நம்பி உன்னை தேடி வந்ததற்கு எனக்கு கிடைத்த பெயரை பார்’ என்பதை போல அவனை பார்க்க உள்ளுக்குள் நொறுங்கி போனான்.
“என்னம்மா சொல்ற? இவ அந்த வார்த்தையை சொன்னாளா?…” என்று வேகமாய் வேலவன் முன்னே வந்து கேட்க,
“அதான் உங்க பொண்டாட்டி உங்க கண்ணு முன்னாடி தான இருக்காங்க? நானும் தனியா மறைச்சு சொல்லலையே. அவங்களையும் வச்சு தான் சொல்றேன். நீங்களே கேளுங்களேன் இல்லயா என்னன்னு?…” என அவள் சொல்லிய நொடி,
“தெரியாம வாய் தவறி சொல்லிட்டேங்க…” என்ற உத்ராவின் வார்த்தை முடியும் போது அத்தனை பேரின் முன்னும் உத்ராவை இரு கன்னங்களிலும் விரல் பதிய அறைந்திருந்தான் வேலவன்.
“ஐயோ மாப்பிள்ளை…” என்று ருக்மணி தான் பதறிக்கொண்டு வந்தார்.
அத்தனை பேரின் முன்னும் உத்ராவிற்கு அவமானமாக போய்விட்டது அவளுக்கு. அதை விட அதற்கு மேலும் தான் உள்ளே வைத்து பேசியதை எல்லாம் சொல்லிவிட்டால்?
ஏற்கனவே ‘உன் தம்பியின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டாயே’ என்று கரித்து கொட்டுபவனுக்கு அது தெரிந்தால் என்னாகுமோ என்று கன்னத்தை பிடித்தபடி தாயின் பின்னே ஒளிந்து நின்றார்.
“அந்த பொண்ணு தான் சொல்லுதே, அதுவும் நீங்களும் இருந்தேங்கன்னு. அன்னைக்கு வாயே திறக்கலை நீங்க. இப்ப உங்க பொண்ணுக்குன்னதும் துடிச்சுட்டு வரீங்க…” என்று ருக்மணியை பேசியவன்,
“சொல்லு, இன்னும் என்னலாம் சொன்ன? இப்ப சொல்ல போறியா இல்லையா?…” என்று வேலவன் உத்ராவை கேட்க,
“அன்னைக்கு பிரச்சனை அன்னைக்கு நீங்களும் வீட்டுல தானே இருந்தீங்க?…” என்ற இதயாவின் கேள்வியில் இருந்த குறிப்பில் முகம் கன்றி நின்றான் வேலவன்.
“தப்பு தான்ம்மா, அன்னைக்கு எங்கம்மா, தம்பி தம்பி பொண்டாட்டின்னு இருந்ததால என்னால அவங்களையும் கண்டிக்க முடியலை. இவளையும் நிறுத்த முடியலை. அங்க வச்சு அதட்ட முடியாம நானும் உன்னோட இந்த நிலைமைக்கு காரணமாகிட்டேன்…”
வேலவன் கை கூப்பி அவளிடம் மன்னிப்பை கேட்க எந்த சலனமும் இல்லை இதயாவிடம்.
“மாப்பிள்ளை, நாங்க…” என்று ருக்மணி பேச,
“போதுங்க அத்தை. கூடவே இருந்துட்டு இப்படின்னு ஒரு வார்த்தை யாருக்கும், ஏன் உங்க மகனுக்கே கூட சொல்லலையே. மாமியார்ன்னா எல்லாம் அப்படித்தான் இல்ல? இனியாச்சும் அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்…” என்று ருக்மணியை சொல்லியவன்,
“கிளம்பு…” என்றான் உத்ராவை.
“என்ன? நானா? எதுக்கு? இங்க பாருங்க அன்னைக்கு ஏதோ கோவத்துல…”
“இங்காரு, கொலவெறில இருக்கேன். அன்னைக்கு நான் பண்ணின தப்புக்கு இப்பயாச்சும் பிராயச்சித்தம் செய்ய பார்க்கறேன். என் தம்பி, தம்பி பொண்டாட்டி முன்னாடி உன்னையும், அம்மாவையும் பேச வேண்டாமேன்னு தான் அன்னைக்கு நான் கம்முன்னு இருந்தேன். அது எம்புட்டு தப்புன்னு இன்னைக்கு செருப்பால அடிச்ச மாதிரி புரிஞ்சு போச்சு…”
“என்ன மாப்பிளை இது?…” என ருக்மணி அழ,
“உங்கம்மாவை அங்கிட்டு போவ சொல்லு உத்ரா. இந்த பொண்ணு இங்க நிக்கறத பாக்க பாக்க எம்மேலையே கோவமா வருது…” என்ற வேலவன்,
“அன்னைக்கு நீங்க நினைச்சிருந்தா வாய திறந்து பேசியிருந்தா இல்ல இன்னைக்கு நான் செஞ்ச மாதிரி உங்க மவளை ஒரு அறை விட்டிருந்த இன்னைக்கு இந்த இடத்துல நீங்களும் நின்னிருக்கமாட்டீங்க. நானும் இருந்திருக்கமாட்டேன்…”
வேலவன் சொல்ல சொல்ல கண்ணன் குடும்பத்தினர் அத்தனை பேரும் கூனி குறுகி நின்றனர்.
“போதுமா உனக்கு? எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைய கொண்டு வந்துட்ட இல்ல…” என்று அழுதபடி உத்ரா பேச,
“இந்தா இன்னொருவார்த்தை தங்கச்சியை பேசின அவ்வளோ தான். உன்னை அப்படி கேட்டா உனக்கு சுருக்குன்னு இருக்காதா?…” என்று அவள் வாயை திறக்கவும் மீண்டும் கையை ஓங்கிக்கொண்டு அடிக்க பாய,
“உண்மையை பேசினா தப்பா? இதுக்கு தான் நான் எதுவும் வேண்டாம்ன்னு சொல்றேன். இது மாதிரி நீங்க நிறைய பேசுவீங்க. பதிலுக்கு நான் நியாயம் பேசினா கலெக்ட்டர் வீட்டுல அது அநியாயமா தான் போகும். திரும்ப எனக்கு நானேன்னு தான் நிக்கனும்…”
இதயா சொல்லியதும் அது கண்ணனின் தலையில் சம்மட்டியால் அடித்ததை போல இருந்தது. அவனால் அவளை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை. ஆனாலும் பார்த்தான் அவளின் உணர்வுகளை உள்வாங்கியபடி.
“இல்லம்மா, இனி அப்படி ஒரு சூழ்நிலை உனக்கு வராது. அதுக்கு நான் முழு உத்திரவாதம் குடுக்கறேன்…” என்று வேலவன் மீண்டும் அவளிடம் மன்னிப்பை கேட்டவன்,
“ஏய் கிளம்பு. உன்னையும் எங்கம்மாவையும் எப்படி வசக்கினா வழிக்கு வருவீங்கன்னு எனக்கு தெரியும். போனா போகுதுன்னு விட்டா ரொம்ப ஆடிட்டு இருக்கல. இனி என் ஆட்டத்தை பாரு. உன்னை இப்படியே விட்டா என்னை இன்னும் எத்தனை இடத்துல இப்படி நிறுத்துவியோ?…” என்றவன்,
“நல்லா வளர்த்துருக்காங்க உங்க வீட்டுல…” என்று காறி உமிழாத குறையாக வேலவன் சொல்லிவிட்டு உத்ராவை கையை பிடித்து அழைத்து செல்ல,
“மாப்பிள்ளை கொஞ்சம் பொறுமையா…” என்று ருக்மணி அழைக்க,
“இங்க பாருங்கத்தை, இப்ப நாங்க இப்படியே கிளம்பி போனா ஏதாவது நல்லது கெட்டதுக்குன்னு அவளை அனுப்பி வைப்பேன் மூத்த மகளா. இல்லன்னா அவ சென்மத்துக்கும் உங்க கூடயே வச்சுக்கோங்க…” என்றவன் மீண்டும் இதயாவிடம் வந்தான்.
“இங்க பாரும்மா, நிசமா அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது. நீ என் பொண்டாட்டியை அடிச்சன்றதனாலயும், என் குடும்பத்துல இருக்கறவங்க இருந்தாகங்றதாலையும் தான் அன்னைக்கு கம்முன்னு இருந்துட்டேன். இல்லைன்னா அன்னைக்கு நடந்திருக்கறதே வேற…” என்றவன்,
“தப்பு என் மேலையும் இருக்கும்மா. மன்னிச்சுக்கோ. இத்தனை வருஷம் நீ எம்புட்டு கஷ்டப்பட்டிருப்பன்னு நினைக்கும் போது வேதனையா இருக்குது. ஆனா அதுக்காக உன் வாழ்க்கையை இப்படியே விட்டுடாத…” என அத்தனை இறங்கி பேச,
“இல்லை, நீங்க மன்னிப்பு கேட்கனும்ன்றதுக்காக இதை நான் சொல்லலை இப்போ. எனக்கு, என்னால…” என்றவள் தன் குடும்பத்தினரை பார்த்துவிட்டு கண்ணனையும் பார்க்க,
“புரியுதும்மா. இதை வெளில பேச கூடிய விஷயம் இல்லை தான். ஆனா யாரோ எவரோ சொன்னா அது உண்மை ஆகிடாது. அதுக்காக நீ உன்னை உன் வாழ்க்கையை பழிச்சுக்காத. நவீன் அளவுக்கு இல்லைன்னாலும் உன் மேல நானும் பாசம் வச்சிருக்கேன். மரியாதையும் வச்சிருக்கேன்…” என்றவன்,
“இவ்வளவு நாள் எங்கடா போனான்னு கேட்கலாம். ஆனா உரியப்பட்டவனே பேசாம தள்ளி நிக்கும் போது, நான் என்னத்த ஊடாலன்னு தான் பேசாம இருந்தேன். மத்தபடி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…” என்று சொல்லியவன்,
“இந்த பொண்ணுக்கிட்ட நீங்க எத்தனை மன்னிப்பு கேட்டாலும் உங்களுக்கெல்லாம்…” என்று ருக்மணி, சிவசுந்தரத்தை பார்த்து சொல்லியவன்,
“என்ன வர மாதிரி நினைப்பிருக்கா?…” என்று சொல்லிவிட்டு வேகமாய் வாசலுக்கு நடந்தான்.
“இப்ப சந்தோஷமா? நிம்மதியா நீ இரு…” என்று இதயாவை பார்த்து கோபத்துடன் உத்ரா சொல்லி நகர,
“அக்கா நில்லுங்க…” என்றான் கண்ணன்.
“இன்னும் என்ன? அதான் இங்க வச்சு என் மானத்தை வாங்கிட்டீங்களே?…” என்று அவள் அழ,
“இதயாக்கிட்ட நீ பேசினதுக்கு மன்னிப்பு கேளுங்க…” என்று சொல்ல,
“என்ன? மன்னிப்பா நானா?…” என்று குதித்தாள்.
“ஏன் மகாராணி பேசின பேச்சுக்கு மன்னிப்பு கேட்டா என்ன? இருந்திருந்து உன் தம்பிக்கு இப்பத்தான் கண்ணுல கட்டியிருந்த கட்டு அவுந்திருக்குது….” என்று வாசலுக்கு சென்ற வேலவன் மீண்டும் உள்ளே வர,
“கேளுங்கக்கா. அன்னைக்கு பேசினதுக்கு மன்னிப்பு கேளுங்க…” என்றான் இன்னும் அழுத்தமாய் கண்ணன்.
“கண்ணா…” என உத்ரா இழுக்க,
“அன்னைக்கு நீங்க இன்னும் என்னென்ன பேசினீங்ளோ? ஆனா இப்ப நீங்க இதயாக்கிட்ட மன்னிப்பு கேட்டா தம்பின்ற உறவு நாளைக்கு உங்க பொண்ணுக்கு தாய்மாமணா நிக்கும். இல்லையா இப்பவே இதுக்கு ஒரு முடிவுக்கு வந்திருவோம்…” என்று சொல்லிவிட,
“கண்ணா, என்ன பேச்சு இது? அவ உன் கூட பொறந்த அக்கா….” என்றார் ருக்மணி.
“அதான் நீங்களும் என்கிட்டே மறைச்சுட்டீங்க இல்லையா? ஆனா என்னை கேட்ட கேள்வி மட்டும் ரொம்ப நல்லா இருந்துச்சே…” என சொல்லவும்,
“இல்லைப்பா, என்னை என்ன செய்ய சொல்ற? அந்த சூழ்நிலை அப்படி…” என்று ருக்மணி சொல்லிவிட்டு,
“என்னங்க இது?…” என சிவசுந்தரத்தை பார்க்க உடனே உத்ரா,
“இதெல்லாம் இங்க இவங்க வீட்டுல வச்சு பேசற பேச்சாடா? இது நம்ம குடும்ப விஷயம். இவ வீட்டாளுங்க முன்னாடி என்னையே பேசற?…” என உத்ரா சொல்ல,
“ஏன் நம்ம வீட்டுல வச்சு நீங்க இதயாவை பேசாததையா நான் இங்க பேசிட்டேன்?…” என்றான் கண்ணன்.
“அப்பா பாருங்கப்பா?…” என்று சிவசுந்தரத்திடம் செல்ல,
“உன் தம்பி சொன்னதுல எதுவும் தப்பில்லையேம்மா. மன்னிப்பு கேளு…” என்று அவரும் இறுக்கத்துடன் சொல்லிவிட,
“போதும், யார் மன்னிப்பும் எனக்கு தேவை இல்லை. மன்னிப்பு கேட்டா மட்டும் எல்லாம் மாறிட போறதும் இல்லை. திரும்பிட போறதும் இல்லை. அதே மாதிரி மன்னிப்பு கேட்கற மாதிரியா இவங்க நடந்துக்கிட்டாங்க? கண்டிப்பா மன்னிக்கவும் மாட்டேன்…” என்றாள் இதயா.
“பார்த்தீங்களா?…” என உத்ரா வாயை திறக்க,
“அவ்வளோ தான். இனி உங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்லை. மன்னிப்பு கூட மனசறிஞ்சு கேட்கனும். நீங்க கேட்க மாட்டீங்க. அது எனக்கு தேவையும் இல்லை. கிளம்புங்க…” என்று இதயா சொல்லவும் வேலவன் உத்ராவுடன் கிளம்பிவிட்டான்.
அதன் பின்னே அங்கே என்ன பேசவென்றே தெரியவில்லை. எத்தனை பெரிய வார்த்தையை மகளை பார்த்து சொல்லியிருக்கிறாளே என்று இதயாவின் குடும்பத்தினர் குமைந்துகொண்டு இருக்க சிவசுந்தரமும், ருக்மணியும் எப்படி இதை கையாள்வது என்று நின்றனர்.
“அப்பா, கிளம்புவோம்…” என்றான் கண்ணன்.
“கண்ணா, பூவி…” என ருக்மணி அவனருகே வர,
“இதுக்கு மேல எந்த முகத்தை வச்சு இதயாவை நான் கூப்பிடுவேன்ம்மா? என்னால முடியலை. எந்த நம்பிக்கையை நான் கொடுக்க?…” என அவளை பார்த்துக்கொண்டே சொல்லியவன் இதயாவிடம் வந்தான்.
“இன்னும் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியலை. அதை தெரியப்படுத்தற சூழ்நிலை அன்னைக்கு இல்லைன்னாலும் அதுக்கப்பறமாவது என்கிட்டே நீ சொல்லியிருந்திருக்கலாம்…” என்றவனை அவள் நிமிர்ந்து பார்க்க,
“புரியுது இதயா. என்மேல உன்னோட நம்பிக்கை அன்னைக்கே சிதைஞ்சு போச்சு. அதை எப்படி மீட்டெடுக்க போறேன்னு எனக்கு தெரியலை. இனி உன் விருப்பம். உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன்…” என சொல்லியவன் குரல் கரகரத்து போக,
“உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு இப்ப தான் எனக்கு பயமா இருக்குது இதயா. மனசு அடிச்சுக்குதுடி. எல்லாத்துக்கும் வெறும் மன்னிப்பு ஈடாகாது. ஆனா என்கிட்டே அதை தவிர வேற இல்லை. ஆனா ஒன்னு, உனக்காக நான் வெய்ட் பண்ணிட்டே தான் இருப்பேன்…”
கண்ணன் அவளிடம் பேசிவிட்டு வெளியேற அவனை தொடர்ந்து அவனின் குடும்பத்தாரும் கிளம்பி செல்ல அங்கே அடுத்து என்ன முடிவெடுக்க என்று திகைத்து நின்றனர் அவளின் குடும்பத்தினர்.