ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 8
கண்ணன் வீட்டிற்கு வந்ததுமே வேலவன் உத்ராவை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான். கிளம்பும் முன்னர் கண்ணனிடம் வந்தவன்,
“இங்க பாரு கண்ணா, இத்தனை வருஷம் எப்படி இருந்தியோ? இனி உனக்கு ஒரு வாழ்க்கை இருக்குது. இனியும் நீ என்ன ஏதுன்னு விசாரிக்காம கண்ணை மூடிட்டு இருந்தா அது உனக்கு தான் நல்லதில்லை. அவ்வளோ தான் சொல்லுவேன்..”
“இப்ப எதுக்கு அவன்கிட்ட இப்படி பேசறீங்க?…” என்று உத்ரா வர,
“அடிச்சு பல்லை பேத்திருவேன் பார்த்துக்க…” என்று அவளை எச்சரித்த வேலவன்,
“நானும் தான் தப்பு பண்ணிருக்கேன். ஆனா எந்த இடத்துலையும், அம்மாவையும் பொண்டாட்டியையும் நான் வெளில விட்டு குடுக்கலை. தப்பு அவ மேல இருக்கா, கண்டிக்கத்தான் செஞ்சேன். பெத்த தாயும், கூட பொறந்த பொறப்பும் எவ்வளவு முக்கியமோ கட்டின பொண்டாட்டியும் முக்கியம்….” என்றவன்,
“இனியாச்சும் உன் வாழ்க்கையையும் கொஞ்சம் பாரு. இவளை வச்சுட்டு இங்க இருந்தா உன்னை வாழ விடமாட்டா. நாங்க கிளம்பறோம்…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
சிவசுந்தரமும், நிஷாவும் தடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்க ருக்மணி தான் அழுதபடி நின்றார்.
அவர்கள் கிளம்பியதும் தான் கண்ணனுக்கு தாயிடம் கேட்க வேண்டியது ஞாபகம் வந்தது.
நிஷா என்ன நடந்தது என ருக்மணியிடம் பேசிக்கொண்டு இருக்க அவர் எதுவும் பேசாமல் அழுதபடியே அமர்ந்திருந்தார்.
“நிஷா உள்ள போம்மா…” என்று வந்து நின்றான் கண்ணன்.
“அண்ணா அம்மா அழுதுட்டே இருக்காங்க…” அவள் சொல்ல,
“நீ உள்ள போம்மா. நான் பேசறேன்…” என்று சொல்லி தங்கையை அனுப்பியவன்,
“ம்மா, என்னை பாருங்க…” என்று அவரை அழைக்க ருக்மணிக்கு உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது.
“கண்ணா…” என்று அவர் எழுந்து நிற்க உள்ளே இன்னொரு அறையில் இருந்த சிவசுந்தரம் அந்த அறை வாசலிலேயே நின்று கவனித்தார்.
“எதுக்காக அன்னைக்கு அக்கா இதயாவை அப்படி ஒரு வார்த்தை சொன்னாங்க? இந்த பிரச்சனை எதுக்கு ஆரம்பிச்சது?…” என நேரடியாக அவ்விடத்திலேயே ஆரம்பிக்க ருக்மணி முகம் வெளிறியது.
“அது எதுக்குப்பா?…” என்று அவர் மறைக்க,
“ம்ஹூம், அன்னைக்கு நானுமே தப்பு பண்ணிட்டேன். இதயாகிட்ட என்ன நடந்ததுன்னு அந்த சூழ்நிலையில கேட்காம விட்டுட்டேன். அப்போ இதயா அக்காவை அடிச்சதுக்கு காரணம் அக்காவோட பேச்சு. இல்லையா?…” என கேட்க மௌனமாய் பார்த்தார் மகனை.
“அவ அடிக்கிற அளவுக்கு பேசியிருக்காங்க. என்ன பேசினாங்க? நான் ஹால்ல நடந்த பிரச்சனையை வச்சு வேற எதையுமே யோசிக்காம விட்டுட்டேன். தனியா அதுவும் நீங்களும் இருக்கும் போதே அந்த வார்த்தையை அக்கா சொல்லியிருக்காங்க. அதோட இன்னும் பேசியிருக்காங்க…”
“கண்ணா இப்ப இதை பத்தி பேச வேண்டாம். பூவியை எப்படி சமாதானம் செய்யலாம்னு பார்ப்போம். நீ பேசு அவக்கிட்ட…”
“ம்மா, என் கோபத்தை தூண்டாதீங்க. சும்மா என்னையே சொல்றீங்களே? நீங்க என்ன பண்ணுனீங்க இதயாவுக்கு? சொல்லுங்க. எதுவும் பேசாம இருந்தாலும், நடந்ததை மறைக்கிறதும் பாவம் தான். இப்போ எனக்கு நீங்க உண்மையை சொல்லுங்க…” என்று சொல்ல ருக்மணி வாயை திறக்கவில்லை.
“அன்னைக்கு என்ன நடந்துச்சு? எனக்கு தெரியனும்மா…” இப்போது அவனின் குரலில் இறைஞ்சுதல் எல்லாம் குறைந்து பிடிவாதமும், கடுமையும் குடியேற,
“கண்ணா…” என்ற ருக்மணியின் உருக்கமான அழைப்பு அவனின் காதில் ஏறவே இல்லை.
“சொல்லுங்கம்மா. எனக்கு இப்போ நீங்க சொல்ல போறீங்களா இல்லையா?…” என்று இன்னும் குரல் உயர நிஷாவுமே உள்ளிருந்து எட்டி பார்த்தவள் அங்கேயே தான் நின்றாள்.
“அப்போ உங்களுக்கு உங்க பொண்ணு தான் முக்கியம் இல்லையா? நான், என் பொண்டாட்டி எப்படி போனா என்ன? மகன்னு வரும் போது மருமக எல்லாம் தூசு. என்ன அம்மா நீங்க?…” என்று கேட்க துடித்து போனார்.
“எனக்கு எல்லா பிள்ளைங்களுமே ஒன்னுதான்ப்பா. இப்படிலாம் பேசாத…”
“எல்லா பிள்ளைங்களும் ஒண்ணுன்னா அப்பவே நீங்க சொல்லியிருக்கலாமே? அட்லீஸ்ட் இதயா வீட்டை விட்டு போனப்போவாச்சும் என்கிட்டே இதுதான் காரணம்ன்னு சொல்லியிருக்கனும் தானே? நாங்க எப்படியும் போகட்டும், சேர்ந்தா சேரட்டும் இல்லைன்னா இப்படியே இருக்கட்டும்னு தானே நினைக்கறீங்க?…”
“சத்தியமா இல்ல கண்ணா. அம்மாவை இப்படி சொல்லாத. இதை பேசினா பிரச்சனை ஆகும்னு தான் நான் சொல்லலை. அக்காவும் பாவம் தானே? அதோட அன்னைக்கு என்னால அவ வாயை அடைக்க முடியலை. உனக்கு தெரியாதா உத்ராவை. கோபமா பேசுவா…”
“இந்த பேச்சு எல்லாம் நியாயமே இல்லை. அக்கா பாவம்ன்னா அப்போ நான்? இதயா?…” என தழுதழுத்த குரலில் கேட்க,
“அதான் பேசி சமாதானம் செய்யலாம்னு சொன்னேன். நீ தான் இத்தனை வருஷம் தள்ளி போட்ட?…”
“அதாவது காயத்துக்கு மருந்து போடாம தான ஆறட்டும்ன்னு அதுவரைக்கும் நாங்க அந்த வேதனையிலையே இருக்கட்டும்னு விட்டுருக்கீங்க? இல்லையா?…”
“இல்லப்பா, அப்படி இல்ல…”
“அப்போ உண்மையை சொல்லுங்க. சொல்லுங்கம்மா. இப்ப சொல்ல போறீங்களா? இல்லையா?…”
“அதை எப்படி உன்கிட்ட நான் சொல்லுவேன்?…” என்று அவர் தவிக்க அதை கூர்மையாய் கண்டுகொண்டவன்,
“அப்போ பெத்த மகன்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு என் பொண்டாட்டிட்ட அக்கா பேசிருக்காங்க. நீங்க கேட்டுட்டு இருந்திருக்கீங்க? இல்லயா?…” என அவன் கேட்டதும் கண்ணீருடன் தலை குனிந்து நின்றார்.
“பேசுங்கம்மா, அதான் இவ்வளவு வெளில வந்திருச்சே? இன்னும் என்ன இருக்குன்னு மொத்தமா சொல்லிருங்க. இப்ப சொல்ல முடியுமா முடியாதா?…” என்று உச்சஸ்தானியில் கத்த அரண்டு போனார் ருக்மணி.
வேறு வழியின்றி மகனை ஏறிட்டு பார்க்காமல் அன்று நடந்ததை மெல்லிய விசும்பலுடன் ருக்மணி சொல்ல சொல்ல கேட்டவன் நிலைகுலைந்து போனான்.
“ம்மா…” என்று நெஞ்சை பிடித்தபடி நின்றவன்,
“ச்சீ…” என ஒற்றை வார்த்தையில், முகத்திருப்பலில் தன் உணர்வை கொட்டிவிட துடிதுடித்து போனார்.
“நான் பேசாதன்னு உத்ராவை சொன்னேன் கண்ணா. அவ என்னைக்கு என் பேச்சை மதிச்சிருக்கா? கேட்கவே இல்லை…” என சொல்ல,
“எதுவும் இருக்கட்டும், அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடியும் இதயா தவிச்சு போய் நின்னாளே? அப்போவாச்சும் சொல்லியிருக்கலாமே? வீட்டை விட்டு என்னை விட்டு மொத்தமா போனாளே? இத்தனை வருஷம் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தோமே? அப்போதாச்சும் என்கிட்டே சொல்லியிருக்கலாமே?…”
“இல்லை கண்ணா…”
“ஐயோ…” என்று தலையை பிடித்தபடி மடிந்து தரையில் அமர்ந்தான் கண்ணன்.
“கண்ணா…” என ஓடி வந்து மகனை தாங்கிக்கொண்டார் சிவசுந்தரம்.
“நீங்கல்லாம் பொம்பளைங்களா? வீட்டுக்கு வாழ வந்த பொண்ணுக்கிட்ட பேசற பேச்சா பேசிருக்கா உன் மக? அவ வாயை அங்கயே கிழிக்காம?…” என்ற சிவசுந்தரத்திற்கு தாளவேமுடியவில்லை.
“என்கிட்டே அப்பவே இதான்னு சொல்லியிருந்தா அவ பல்லை தட்டி கைல குடுத்திருப்பேனே? நானும் சேர்ந்து மக அடிவாங்கினதுல மருமக பக்கம் என்ன நியாயம்ன்னு பார்க்காம விட்டுட்டேனே?…”
சிவசுந்தரமும் கலங்கி போய் நிற்க நிஷா அங்கே வருவதா வேண்டாமா என்ற யோசனையிலே இருந்தவள் மனமோ நடந்ததை கேட்டு கொதித்து போனது.
“கண்ணா, அப்பாவை பாருப்பா. இங்க பாரு. அந்த பொண்ணு மிரட்டலா வந்து கல்யாணம் நடக்கனும்னு பேசினதால நானும் கோவமா இருந்தேன் தான். ஆனா அதெல்லாம் அப்போ. என் மருமகளை தப்பா எடை போட்டுட்டேன். ஆனா இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா நான் சும்மா விட்டிருந்திருக்கமாட்டேன்…”
“வேண்டாம்ப்பா. எதுவும் வேண்டாம்…” என்ற கண்ணன் எழுந்து நிற்க,
“அப்பா போய் பேசறேன்ப்பா. இதுங்க பண்ணின பாவத்துக்கு நான் மன்னிப்பு கேட்கறேன். அந்த பொண்ணு இத்தனை வருஷம் இப்படி இருந்ததுல தப்பே இல்லை. எந்த ஒரு பொண்ணுக்கும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தா பூவியை விட இன்னும் கோபமா தான் நடந்திருந்திருப்பாங்க…”
“இல்லப்பா, போக வேண்டாம். இனி நானும் அவளை கூப்பிடமாட்டேன். குடும்பம்ன்னா இப்படி சில வாக்குவாதம், பிரச்சனைகள் வரும், அதை புரியாம இளகாம பிடிவாதமா இருக்காளேன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்….” என்றவன் இப்போது ருக்மணியை பார்த்துக்கொண்டே,
“ஆனா அந்த பிரச்சனை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவளை அங்க கொண்டு போய் விட்டதே உத்ரான்னு தெரிஞ்சி அதுவும் உத்ரா பேசினதும் தெரிஞ்சு இனி எந்த முகத்தை வச்சு நான் வாழ வான்னு கூப்பிட?…” என்று அவன் கேட்க,
“உத்ரா உன் அக்கா கண்ணா. அவ பண்ணினது தப்பு தான். அதுக்குன்னு இப்படி மரியாதை இல்லாம பேர் சொல்லி…” என்று ருக்மணி பேச,
“வாய மூடு. இல்ல செவுலக்கட்டி விட்டேன் பார்த்துக்க…” என்று ருக்மணியை அதட்டிய சிவசுந்தரம்,
“மனசு விடாதப்பா? அப்பா பேசறேன். நீ…” என்று மகனை சமாதானம் செய்ய பார்த்தார்.
“வேண்டாம், வேண்டாம். நீங்க போய் சொல்லி அவ வாழனும்னு வந்தா கூட நித்தமும் இப்படி பேசின குடும்பம் தானேன்னு நினைச்சு நினைச்சு மனசுக்குள்ள வருந்திட்டு இருப்பா. நிம்மதி இல்லாம போய்டுவா. அங்கையாச்சும் அவ சந்தோஷமா இருக்கட்டும்…” என்றவன்,
“ஒரு மனைவியா அவ என்னையும் புரிஞ்சுக்கனும்னு மட்டும் நினைச்சுட்டு இருந்தேன். அந்த நேரத்துல நானும் துணையா இல்லாம அவ எத்ததனை துடிச்சிருப்பா? வேண்டாம், விடுங்க…”
கண்ணன் பேசிவிட்டு தளர்ந்த நடையுடன் தன் அறைக்கு சென்றுவிட்டான். மனது இதயாவிற்காக அழுதது.
மனைவியானவள் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் கணவனை தான் தேடுவாள். அடைக்கலம் புகுவாள். அது சந்தோஷமோ, சங்கடமோ அவன் ஒன்றே அவளின் ஆறுதல்.
அப்படி இருக்க இங்கே தன் மனைவியை இப்படி ஒரு நிலைக்கு ஆட்படுத்திவிட்டோமே என்று உள்ளம் வெதும்ப மனதார அவளிடம் மன்னிப்பை யாசித்தான் கண்ணன்.
“நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்களேன்…” என்றவளின் பரிதவிப்பான அன்றைய குரல் இன்னும் காதில் ஒலிக்க இன்னும் இன்னும் காயம்கொண்டான் கண்ணன்.
மகன் உள்ளே சென்ற சிறிது நேரம் அப்படியே நின்றவர் தானும் இனி மௌனமாக இருக்க கூடாதென்று முடிவெடுத்தார்.
“நிஷா…” என்று மகளை அழைத்தவர் அவள் வந்து நின்றதும்,
“அண்ணனை பார்த்துக்க. வெளில கிளம்பினா ஒரு போன் போடு. நாங்க இப்ப வந்திடறோம்…” என்ற சிவசுந்தரம் உடனே ஒரு காருக்கு புக் செய்து ருக்மணியுடன் கிளம்பிவிட்டார் இதயாவின் வீட்டிற்கு.
இதயாவின் வீட்டில் அவர்கள் எல்லாம் வந்து சென்ற பின்னர் யாரும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அமர்ந்திருந்த இடத்தில் அவரவர்கள் அப்படியே இருக்க அடுத்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் திணறி போய் இருந்தார்கள்.
பெரியவர்களுக்கு அதில் ஒரு நிம்மதி இனி உத்ராவின் தலையீடு இதயா வாழ்க்கையில் இல்லை என்பது தான். அதற்காகவே அடுத்தகட்டத்திற்கு அவர்கள் தாண்டி வந்தனர்.
உத்ராவின் பேச்சு ஜீரணிக்க முடியாதது தான். ஆனால் இதயாவின் வாழ்க்கை கண்ணனுடன் தானே பிணைக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் இனி உத்ரா அத்தனை இலகுவில் இதயாவை பேசிவிட முடியாது என்பதில் நிம்மதியாகினர்.
அடுத்து தாங்களே கண்ணனின் பெற்றோரிடம் பேசுவதா வேண்டாமா என யோசித்துக்கொண்டிருக்க அதை யசோதா மஞ்சுவிடமும், சுதாகரனிடமும் சொல்லிக்கொண்டிருக்க சிவசுந்தரமும், ருக்மணியும் வீட்டினுள் நுழைந்தனர்.
“அண்ணி, திரும்பி அவங்க வராங்க…” என்று மஞ்சு சொல்லவுமே அத்தனை பேரும் எழுந்து நிற்க,
“நான் என் மருமகளை பார்க்கனும்…” என்றார் வந்ததுமே சிவசுந்தரம்.
உள்ளிருந்து இதயாவும், நவீன், தீப்தியும் வெளியே வந்தனர். அவர்களை பார்த்தபடி இதயா நிற்க வேகமாய் வந்து அவளின் கையை பிடித்துக்கொண்டார் சிவசுந்தரம்.
“பெரியமனுஷன்னு நினைச்சு நான் பண்ணினதெல்லாம் எத்தனை முட்டாள்த்தனம்ன்னு நான் ஏற்கனவே உணர்ந்துட்டேன்ம்மா. ஆனா இன்னைக்கு…” என்று ருக்மணியை திரும்பி அவர் பார்க்கவுமே இதயாவிற்கு புரிந்து போனது வீட்டில் இதை பற்றிய பேச்சு எழும்பியிருக்கிறது என்று.
முகமே கன்றி சிவந்து போக தொண்டையடைத்தது. அவரிடமிருந்து தன் கைகளை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“என்னை மன்னிச்சிடும்மா. அன்னைக்கு நான் உன் பக்க நியாயத்தை கேட்கலை. அதுக்கு எனக்கு மன்னிப்பே இல்லை. இன்னைக்கு என் மகன் சரிஞ்சுட்டான். மொத்தமா ஒடிஞ்சுட்டான். என்னால அவனை பார்க்க முடியலைம்மா. தயவு செஞ்சு வந்திரு. அவன் கூட நீ இருந்தா போதும்…”
“என்னையும் மன்னிச்சிரு பூவிம்மா…” என்று ருக்மணி வந்து கேட்க என்ன நடக்கிறதென்றே அங்கிருப்பவர்களுக்கு புரியவில்லை.
புரிந்தவளோ வெறிக்கும் பார்வையுடனே நின்றிருந்தாள். இன்றும் அன்றைய நாள் அனுபவித்ததன் சுவடு மாறாமல் அதே வேதனை தான்.
“சம்பந்தி, முதல்ல உட்காருங்க. என்ன இது? கையை எல்லாம் புடிச்சு மன்னிப்பு கேட்டுட்டு…” என்று சுதாகரன் அழைக்க,
“இல்லைங்க. நாங்க கிளம்பறோம். ஊருக்கு கிளம்பறோம். போறதுக்கு முன்னாடி என் மருமகட்ட மன்னிப்பு கேட்கனும்னு தோணுச்சு. வந்துட்டேன்…” என்று சொல்ல,
“பூவி, என்ன நீயும் நின்னுட்டே இருக்க? அவங்களை முதல்ல உட்கார சொல்லும்மா…” என்றார் யசோதா.
“பூவி…” என இப்போது அதட்டி மஞ்சு சொல்லவும் தன்னுணர்வு வந்தவள்,
“உட்காருங்க…” என்று சொல்ல,
“வாங்க, வந்து உட்காருங்க…” என்று சுதாகரன் சிவசுந்தரத்தை தோள் தொட்டு அழைத்து வந்து அமர வைத்தார்.
அன்றே ஊருக்கு கிளம்புகிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தவரிடம் மெல்லிய குரலில் யசோதாவும் சுதாகாரனும் பேச அய்யாசாமி மஞ்சு பார்வையாளராக மாறினார்கள்.
“நவீத்தான் உனக்கு எதாச்சும் கேட்குதா?…” என்று தீப்தி கேட்க,
“தெரியலை. இவங்க ஏன் போன வேகத்துல திரும்பி வந்தாங்க? என்ன சொல்றாங்க?…” என்றவன் இதயாவை பார்க்க அவள் அமைதியாக அவர்களை பார்த்துக்கொண்டே நின்றாள்.
“சரி விடு, சொல்லும் போது தெரிஞ்சுப்போம்…” தீப்தி சொல்ல,
“இதை தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டிருக்கோம்…” என எரிச்சல் பட்டான் நவீன்.
சிறிது நேரத்தில் அவர்கள் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட அதன் பின்னரே இரவு உணவு முடியவும் மீண்டும் மஞ்சு பேச்சை தொடங்கினார்.
“என்ன முடிவு பண்ணிருக்க பூவி?…” என கேட்க,
“என்னம்மா?…” என்று மலங்க மலங்க விழித்தாள் அவள்.
‘என்னை விடமாட்டீங்களா?’ என்னும் இறைஞ்சுதல் அவளின் முகத்தில் அப்பட்டமாய் தெரிய அவளை அரவணைத்துக்கொள்ள பொங்கி வந்த மனதை கடுமையாக்கிக்கொண்டார் மஞ்சு.
“என்ன என்னம்மா? இங்க என்ன நடக்குதுன்னு தெரியும் தானே பூவி? என்னம்மான்னு கேட்கற? இப்போ பாரு உன் மாமனார், மாமியார் திரும்பவும் வந்து மன்னிப்பு கேட்டுட்டு போறாங்க. இப்போவாச்சும் யோசிக்கமாட்டியா நீ?…” என கேட்க,
“ம்மா, அவங்க என்ன பேசினாங்கன்றதை சொல்லியுமா என்னை அங்க போக சொல்றீங்க?…”
“அது தெரிஞ்சு உத்ராவோட வீட்டுக்காரர் கண்டிச்சுட்டார் தானே? மாப்பிள்ளை முகத்தை பார்த்தியா? அவர் எத்தனை வேதனையோட போறார்?…”
“அப்போ நான்? நான் சந்தோஷமாவா இருக்கேன்? ஏன்ம்மா?…”
“நீ சந்தோஷமா இருக்கனும்னு தான் நாங்களும் சொல்றோம் பூவி. எங்க பேச்சை கேட்கனும்னு நினைக்கிறயா இல்லையா?…” என்று சுதாகரனும் பேச அங்கே பெரியவர்களின் பேச்சுக்களுக்கு மத்தியில் இதயாவின் கதறல் எதுவும் எடுபடவில்லை.
“அப்போ இப்பவும் உன் முடிவு தான் இல்லையா? யாரும் என்ன சொன்னாலும் உனக்கு உன் சுயநலம் தான் பெருசு. உன் நிம்மதி தான் முக்கியம். சரிம்மா இருந்துக்கோ…” என்று யசோதா சொல்ல இதயா பேச்சற்று போனாள்.