“பூவிம்மா, அப்பா சொல்றதை கேளுடா…” என்றவருக்கு சட்டென இருமல் வர,
“மஞ்சு, ரொம்ப குளிருது. உள்ள கூட்டிட்டு போ…” என்று சொல்லவும் அவரை உள்ளே அழைத்து சென்று அய்யாசாமிக்கு ஒரு போர்வையை போர்த்திவிட்டு படுக்க வைக்க அங்கேயே அத்தனை பேரும் பரபரப்புடன் இருந்தனர்.
அவருக்கு மருந்து கொடுக்க பிடிவாதமாய் அதை மறுத்தார். கைகளை தேய்த்துவிட்டு என்று பார்த்துக்கொண்டு இருக்க இதயாவை மஞ்சுவும், யசோதாவும் சாமியின் அருகிலேயே விடவில்லை.
“ம்மா ஹாஸ்பிட்டல் போய்டலாமா?…” என இதயா கேட்க,
“உன் வேலையை பாரு…” என்றுவிட்டார் மஞ்சு.
“மஞ்சு, நான் இப்படியே போய்டுவேனோ? நிம்மதியில்லாம போக போறேனா? என் பொண்ணை இப்படியே விட்டுட்டா?…” என்று அவரின் அனத்தல்கள் அதிகமாகியது.
குளிர் அதிகமாகி மீண்டும் அய்யாசாமிக்கு நள்ளிரவில் காய்ச்சல் கண்டுவிட பயந்து போனாள் இதயா. அதிலும் அவரின் புலம்பல்கள் எல்லாம் அவளை ஸ்தம்பிக்க செய்ய மஞ்சுவும் அமர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்.
“இந்த நேரத்துல மனுஷங்களுக்கு நிம்மதி முக்கியம். பெத்த பொண்ணே வறட்டு பிடிவாதத்துல நிம்மதியை தராம இருக்கும் போது நாம என்ன செய்ய முடியும்?…” என்று மஞ்சு சொல்ல யசோதா அவரை தேற்றினார்.
மஞ்சுவும் அய்யாசாமியும் பேச பேச இதயாவிற்கு எல்லாம பின்னே சென்று பெற்றோரின் கண்ணீரும், தவிப்புமே முன்னால நின்று வதைக்க தேற்றுவார் இன்றி சிறுபிள்ளையாய் தத்தளித்தாள்.
“என்னாலையா நவீ? என்னை வேணா இப்பவே அங்க கொண்டு போய் விடேன். அப்பாவுக்கு சரியாகிடும் தானே?…” என தம்பியை பிடித்து அரற்ற ஆரம்பித்துவிட்டாள்.
“என்ன பூவிக்கா? அப்பாவுக்கு சாதாரண பீவர். சரியாகிடும். அவங்க தான் பதட்டத்துல பயந்து பேசறாங்கன்னா நீயும்?…” என்று அவன் அவளை அதட்ட எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை அவள்.
ஒருகட்டத்தில் அய்யாசாமியின் காய்ச்சல் இன்னும் அதிகமாக சுதாகரன் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லலாம் என்று சொல்ல மறுத்துவிட்டார் அவர். மாத்திரையும் போட முடியதென பிடிவாதம் பிடித்தவர்,
“இப்படியே பார்த்து கஷ்டத்தோட கவலைப்பட்டு வாழறதுக்கு போய்டலாம். என்னை விடுங்க…” என்று அவர் சொல்லியதும்,
“நீங்க இல்லைன்னா நானும் இல்லைங்க. என்னையும் கூட்டிட்டு போய்டுங்க…” என மஞ்சுவும் அழ அங்கே இதயாவிற்கு வேறு எந்த வழியும் இல்லை.
அத்தனை பேரும் சூழ்நிலை என்று அவளை ஒரு வட்டத்திற்குள் கொண்டுவந்து நிறுத்தினார்கள். உருவமில்லா ஒரு சுழல் அவளை அசையவிடாமல் பிடித்துக்கொள்ள இனி தப்ப முடியாதென்று உணர்வுகளை கொன்றாள்.
மனதை கட்டுப்படுத்தியவள் எந்தவித பாவனையும் இன்றி ஒரு முடிவெடுத்துக்கொண்டவள்,
“நான் அவங்கக்கிட்ட போகட்டுமாப்பா? நான் போனா ஹாஸ்பிட்டல் போவீங்களா?…”
“நிஜமா நீ உன் புருஷன் வீட்டுக்கு போவியாம்மா? இல்லை அப்பாவுக்காக இப்ப சொல்லி என்னை ஏமாத்தினா அப்பறம்…” என்ற அய்யாசாமியிடம்,
“இல்ல, இல்ல, நான் போறேன். நவீ வா என்னை இப்பவே கூட்டிட்டு போ. அங்க போய்டறேன். நான் போனா சரியாகிடும்…” என தம்பியின் கையை பிடித்தவள்,
“அப்பா ப்ளீஸ், ஹாஸ்பிட்டல் கிளம்புங்க. நான் அவங்க வீட்டுக்கே போறேன். சத்தியம். அப்பா சத்தியம். சத்தியமா சொல்றேன். போறேன்ப்பா….” என்று அவரின் கையை பிடித்துக்கொண்டு சொட்டு கண்ணீர் இன்றி மகள் சொல்ல,
“பூவிம்மா, அப்பா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்டா…” என்றவரிடம் எந்த பதிலும் சொல்லவில்லை.
“நவீ போலாமா? இல்லை நானே கிளம்பட்டா?…” என்று தம்பியிடம் இதயா கேட்க,
“பூவிக்கா, ஏன் இப்படி?…” என நவீன் பாவமாய் பார்த்தான் தன் அக்காவை.
அந்த நேரத்தில் பெற்றோரையும் கண்டிக்க முடியவில்லை. அக்காவிற்கும் துணை நிற்க முடியவில்லை.
“எல்லாரும் இந்த சூழ்நிலையை வச்சு பூவியை ப்ளாக்மெய்ல் பன்றீங்க. பாருங்க அண்ணி முகத்தை…” என்று தீப்தி இதயாவை அணைத்துக்கொண்டு மற்றவர்களை பார்த்து சத்தம் போட,
“தீப்தி, வாயை மூடு…” என்று கத்தினார் யசோதா.
“பூவி, நீ சொல்றது நிஜமா?…” என்று சொல்ல,
“அதான் சத்தியமே பண்ண வச்சுட்டீங்களே? ஏன் அவங்களை போட்டு படுத்தறீங்க?…” என்று தீப்தி இன்னுமே கொந்தளித்தாள்.
“தீப், விடுடா…” என்றாள் இதயா.
“நீயே இந்த மாத்திரையை அப்பாவுக்கு குடு. அங்க போறதா நீ சொன்னதே போதும். அதுக்காக இந்த நேரம் உன்னை நாங்க அனுப்ப முடியாது. நல்ல நேரம் பார்த்து நாங்களே கொண்டு போய் விடறோம்…”
சுதாகரன் சொல்ல சொல்லியதை இயந்திரம் போல செய்தவள் அங்கேயே தரையில் அமர்ந்துகொண்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் காய்ச்சல் குறைந்து வியர்த்துவிட சீரான உறக்கத்திற்கு சென்றார் அய்யாசாமி.
இரவு யாருக்கும் சரியாக உறக்கமில்லை. விடியற்காலையே சிவசுந்தரத்திற்கு அழைத்து பேசினார் சுதாகரன். பேசி முடித்து வீட்டினர் அனைவரையும் வரவழைத்து,
“நாளைக்கு நாள் நல்லா இருக்குது. நாளைக்கே கொண்டு போய் விட்டு வருவோம்…” என்று சொல்ல இதயா தலையை மட்டுமே ஆட்டினாள்.
அன்று அலுவலகத்திற்கும் செல்லாமல் அவள் இருந்துகொள்ள நவீனும், தீப்தியும் அவளிடம் வந்தனர்.
“பூவிக்கா, உன்னால அங்க இருக்க முடியுமா?…” என நவீன் கேட்க,
“தெரியலையே நவீ? யாருமே அதை யோசிக்கலையே?…” என தலையை பிடித்துக்கொண்டவள்,
“நேத்து நான் பேசனும்னு நினைச்சதை கூட எல்லார் முன்னாடியும் பேச முடியலைடா. என்னடா பண்ண போறேன் நான்? இப்படியே போய்டுமா? இதென்னடா நவீ வாழ்க்கை?…” என்றதும் அவனின் தோளில் சாய்த்துக்கொண்டான்.
அவனின் தோளில் சாய்ந்தபடி அவள் இன்னுமின்னும் ஏதேதோ முணுமுணுத்துக்கொண்டே தான் இருந்தாள்.
இருவரும் மட்டுமே அவளுக்கு ஆறுதலாக இருக்க அன்றைய நாள் அப்படியே கழிந்தது.
வீட்டினர் யாரும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. பேசவும் இல்லை. அவளின் உடமைகள் அத்தனையும் துடைத்தெடுத்தார் போன்று யசோதாவும் மஞ்சுவும் பேக்கிங் செய்தனர். அத்தனைக்கும் பிள்ளைகள் பார்வையாளர்கள் தான்.
மதியம் போல மிருணா இதயாவிற்கு அழைக்க நவீன் தான் அட்டன் செய்தான் அவளின் அழைப்பை.
“பூவி இன்னைக்கு லீவ்ன்னு நீ சொல்லவே இல்லையே…” என்றதும்,
“மிருணாக்கா நான் நவீன் பேசறேன். அக்காவுக்கு உடம்பு சரியில்லை. தூங்கறாங்க. எழுந்ததும் பேச சொல்றேன்…” என்று நவீன் சொல்ல,
“ஓஹ், ஓகே, சொல்லிரு நவீன். வேற ஒன்னும் இல்லையே?…” என்று கேட்க,
“இல்லை எதுவுமில்லை. சரியானதும் அக்காவே வருவா…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
“மிருணாக்கா தான் போன்ல. உன்னை கேட்டாங்க…” என்று நவீன் சொல்லவும்,
“நான் லீவ் கூட சொல்லலையே நவீ. குடு நான் அனுப்பிடறேன்…” என்று போனை வாங்கினாள்.
அகிலனுக்கு அழைத்து விடுமுறை சொல்ல அவர் ஒன்றும் பேசாமல், கேட்காமல் சரி என்று மட்டும் சொல்லி வைத்துவிட கண்ணன் எதுவும் சொல்லியிருப்பானோ என்று நினைத்து அப்படியே விட்டுவிட்டாள்.
மறுநாள் காலை பத்து மணிக்கும் மேல் நல்ல நேரம் என்றதும் இதயாவின் உடைமைகளுடன் ஒரு பொருளாக அவளும் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு கண்ணனின் கெஸ்ட்ஹவுஸ் நோக்கி கிளம்பினார்கள் இதயா குடும்பத்தினர்.
எந்த வித உணர்வுகளும் அற்ற ஒரு இயந்திரம் போலவே இதயா கிளம்பி செல்ல பெற்றோருக்கும், உற்றோர்க்கும் மனது பதைத்தாலும் கொஞ்சமும் வெளி காட்டிக்கொள்ளவில்லை.
இப்போதும் அவள் போக்கில் விட்டால் காலத்திற்கும் இப்படியே இருந்துவிடுவாளோ என்ற பயத்தில் மௌனமாகவே இருந்தார்கள்.
மகளிடம் எண்ணி எண்ணி ஓரிரண்டு வார்த்தைகள் தான் மஞ்சுவும், அய்யாசாமியும். மேலும் பேசினால் உடைந்துவிடுவோமோ என்று இறுக்கமாகவே இருந்தனர்.
ஹெஸ்ட்ஹவுஸ் உள்ளே கார் நுழைந்ததுமே மனதில் பெரும் சூறாவளி இதயாவை சுழற்ற கண்களை மூடி நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
“பூவிக்கா…” என்றவனின் அழைப்பில் கண்ணை திறக்க அங்கே வாசலில் ஆரத்தி தட்டுடன் நிஷா, அவளருகே கண்ணனின் பெற்றோர் நின்றிருக்க அப்போது தான் சட்டையின் கையை முழங்கை வரை மடித்தபடி வெளியே வந்தான் அவன்.
அத்தனையையும் உணர்ந்தாள். ஆனால் எதையும், யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை அவள்.
“கண்ணா சேர்ந்து நில்லுங்கப்பா…” என சிவசுந்தரம் சொல்ல அமைதியாக வந்து இதயாவின் அருகே நின்றான் கண்ணன்.
அத்தனை கோபம் அவனுக்கு. வேண்டாம் என்று சொல்லியும் இதயாவை இங்கே வரவழைத்ததற்கு. நிச்சயம் அவளாக வர சம்மதித்திருக்கவே மாட்டாள் என்று தெரியும்.
ஏற்கனவே மனதால் நொந்து இருப்பவளை இப்படி வம்படியாக வற்புறுத்தி அழைக்க வேண்டுமா? என்று கோபமாய் வந்தது.
ஆனால் கொண்டுவந்து விட வேண்டாம் என்று அவனால் சொல்லமுடியவில்லை சுதாகரனே கண்ணனிடம் நேரடியாக பேசும் பொழுது.
ஆலம் சுற்றப்பட்டு இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தவர்கள் தாங்களும் உள்ளே செல்ல,
“நிஷா உன் அண்ணியை விளக்கேத்த சொல்லும்மா…” என்றார் ருக்மணி.
“போ பூவி…” என்று யசோதாவே அவளை அழைத்துக்கொண்டு செல்ல மார்பின் குறுக்கே கையை கட்டியபடி அத்தனையையும் வேடிக்கை பார்த்தபடி நின்றான் கண்ணன்.
அனைவருக்குமே ஏதோ ஒரு சங்கடம். யாராலும் சகஜமாய் பேச முடியவில்லை. ஓரிரு வார்த்தை கேள்விகளுக்கும் பதில்களும் அவ்வாறே.
விளக்கேற்றி வந்த சிறிது நேரத்தில் இதயாவின் வீட்டினர் கிளம்ப, சாப்பிட்டு விட்டு செல்லும்படி சிவசுந்தரமும் ருக்மணியும் சொல்ல,
“அதெல்லாம் இல்லை இருக்கட்டும்…” என்று சொல்ல வெறும் காபி, பலகாரம் போதும் என்றனர்.
“இருந்து சாயங்காலம் போகலாம் தானே? இப்பவே கிளம்பனுமா? நாங்களும் இன்னைக்கே ஊருக்கு புறப்படறோம்…” என்று சிவசுந்தரம் சொல்ல,
“இல்லைங்க, போய் எல்லாத்தையும் பேக் பண்ணனும். நவீனுக்கும் லீவ் கம்மி தான். அதனால சாயங்காலம் பேக்கேஜர்ஸ் வந்துருவாங்க…” என்றார் சுதாகரன்.
“என்ன பேக்கேஜர்ஸ் மாமா?…” என்றான் நவீன் புரியாமல்.
“உங்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன். வீட்டை காலி பண்ணி உன் அப்பாம்மாவை சிதம்பரத்துக்கே கூட்டிட்டு போய்டலாம்னு பார்க்கறேன்…” என்று சொல்ல இதயா உட்பட தீப்தி, நவீன் மூவரும் அதிர்ந்து பார்த்தனர்.
“மாமா…” என்று நவீன் அங்கே வைத்து ஒன்றும் பேசமுடியாமல் பார்க்க,
“இல்லைன்னா சொல்லு, உன் ஆபீஸ் இருக்கற ஏரியால என் ப்ரென்ட் ஒருத்தன் இருக்கான். சும்மா பொதுவா வீட்டை பத்தி விசாரிச்சேன். அங்க கூட ஒரு அப்பார்ட்மென்ட்ல ப்ளாட் இருக்காம். நீ சரின்னு சொன்னா நேரா சென்னைக்கு கிளம்பிடலாம் நாளைக்கு…” என்றவர்,
“எனக்கும் கூட இன்னும் மூணு நாள் லீவ் இருக்குது. அப்படியே அங்க செட் பண்ணி விட்டுட்டு வந்திரலாம் பாரு. உனக்கும் வீட்டு சாப்பாடா ஆகிடும். ப்ரெண்ட்ஸ் கூட தங்கிருக்க வேண்டாம்…”
ஆக சுதாகரன் அத்தனையையும் ஏற்பாடு செய்துவிட்டு தான் தங்களிடம் சொல்கிறார் என்று புரிந்து போனது அவர்களுக்கு. இதை தான் கூடி கூடி பேசிக்கொண்டார்களா என்று பார்த்தார்கள் பிள்ளைகள்.
“என்னப்பா என்ன சொல்ற? நானே கூட்டிட்டு போகட்டுமா?…” என்றதுமே நவீனுக்கு கோபம் வர,
“இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்திருக்கலாம் மாமா…” என்றவன்,
“ம்மா, என்னோடையே வந்திருங்க. சென்னை போய்டலாம்…” என்று சொல்லிவிட,
“அதத்தான் மஞ்சுவும் சொன்னா. நவீன் விடமாட்டான்னு. நீயும் அப்படியே சொல்லிட்ட. கார் தான். அதனால சென்னையே போய்டலாம் எல்லாரும். நான் போய் வீட்டுக்கு சொல்லிட்டு வரேன். ஒரு வாரம் பெண்டிங்ல வைக்க சொல்லிருந்தேன்…” என சொல்லியபடி எழுந்து அவர் வெளியே சென்றார்.
“சரியான கிரிமினல் நவீத்தான் என் அப்பா. நீ இப்படி மாமான்னு கம்முன்னு இருக்காத. எதாச்சும் கேளேன்…” என்று நவீனை தீப்தி திட்ட,
“காபி எடுத்துக்கோங்க…” என்று வந்தாள் நிஷா.
அவளை பார்த்தும் தீப்தி ஒரு ஸ்நேகபாவனையுடன் எடுத்துக்கொள்ள நவீன் மறுத்துவிட்டான்.
“எடுத்துக்கோ நவீத்தான். காபியை குடி. கோபப்பட்டு நோ யூஸ்…” என்று சொல்ல,
“எனக்கு தான் வேண்டாம்னு சொல்றேன்ல…” என்று தீப்தியிடம் அவன் முகத்தை காட்ட நிஷா அமைதியாக நகர்ந்துவிட்டாள். நவீன் அங்கே வந்ததில் இருந்து பச்சை தண்ணீர் கூட குடிக்கவில்லை.
“சரி எல்லாரும் பேசிட்டு இருங்க. நான் கிளம்பறேன்…” என்று கண்ணன் எழுந்துகொள்ள,
“கண்ணா இன்னைக்கு போகனுமா?…” என்றார் சிவசுந்தரம்.
“ஆமாப்பா, கண்டிப்பா போகனும். கிளம்பறேன்…” என்றவன் இதயாவை பார்க்க அவள் நிமிரவே இல்லை.
“பார்த்துக்கோங்கபா…” என்று தந்தையிடம் மட்டும் சொல்லிவிட்டு நிஷாவிடம் கண்ணை காண்பித்துவிட்டு அனைவரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.
அவன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் இதயாவின் வீட்டினரும் கிளம்பிவிட வந்து அமர்ந்த இடத்தை விட்டு அங்குமிங்கும் அசையவில்லை அவள்.
சிவசுந்தரமும் அவளை சொந்தரவு செய்யவேண்டாம் என்று சொல்லியிருக்க தூரத்தில் இருந்தே அவளை பார்த்துக்கொண்டே தான் இருந்தார்கள் ருக்மணியும், நிஷாவும்.
இதயாவிற்கு புரிந்தது மீண்டும் தாய் வீட்டை தேடி அங்கே வந்துவிட கூடுமோ என்று தான் இப்படி ஒரு ஏற்பாடு என்று. அழுகை கூட வரவில்லை. அப்படியே தான் இருந்தாள்.