ஸ்வப்பன ஸ்பரிசங்கள் – 9
கண்ணன் வீட்டில் இருந்து அலுவலகம் வந்து சேர்ந்தவனுக்கு வேலைகள் அணிவகுத்து இருந்தாலும் மனதின் ஓரத்தில் இதயா என்ன செய்துகொண்டு இருப்பாளோ என்று ஓடிக்கொண்டே இருந்தது.
மதிய உணவு நேர இடைவேளையில் நிஷாவிற்கு அழைத்து கேட்க நிஷா இதயா அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லை என்று சொல்ல அவளை சாப்பிட வைக்குமாறு சொல்லிவிட்டு போனை வைத்தான்.
மறுநாள் அரசு விடுமுறை வேறு என்பதால் முக்கிய வேலைகளை கவனமாக பார்த்துவர அகிலன் வந்தார் அவனிடத்தில்.
“சொல்லுங்க அகிலன்…” என லேப்டாப்பில் பார்வையை பதித்தபடி கேட்க,
“ஸார் பூவிதயா தம்பி நவீன் அப்டின்னு ஒரு பையன் வந்திருக்கான். உங்களை பார்க்கனும்னு சொல்லி…” என்று சொல்ல,
“ஒஹ், சரி அனுப்பி வைங்க…” என்று சொல்ல அகிலனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நவீன் எதற்காக கண்ணனை சந்திக்க வந்திருப்பான் என்று மண்டை குடைச்சலாக இருந்தது. அத்துடன் இதயாவும் அலுவலகத்திற்கு வராமல் இருக்க என்ன விவகாரமோ என்று குறுக்குவிதமாய் தான் யோசித்தார்.
“தம்பி உங்களை உள்ள வர சொன்னார் ஸார்…” என்று நவீனிடம் வந்து சொல்ல,
“தேங்க் யூ…” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல அவனை தற்செயலாக நிமிர்ந்து பார்த்த மிருணா,
“நளினிக்கா அது நவீன் தானே?…” என அழைத்து காண்பித்தாள்.
“ஆமா மிருணா…” என நளினியும் ஆமோதிக்க,
“நான் சொல்லலை இது லவ் மேட்டர் தான். நவீன் கோவமா போற மாதிரி இருக்குது. அப்போ என் க்ரஷ்…” என்று பாவமாய் நளினியை பார்க்க,
“விடு, விடு அடுத்து யாராச்சும் சிக்காமலா போய்டுவாங்க…” என்று கிண்டல் பேச,
“போங்க நளினிக்கா…” என்றவள்,
“நவீன் வரவும் பூவி எப்படி இருக்கான்னு கேட்கனும். முடிஞ்சா ஈவ்னிங் அவ வீட்டுக்கு போவோமான்னு யோசிக்கறேன்?…”
“இன்னைக்கு வேண்டாமே? இந்த வீக்கென்ட் போவோம். இன்னைக்கு ஒரு விசேஷ வீட்டுக்கு போகனும். நாளைக்கு லீவ் வேற. மாமியார் எங்கயும் போக விடமாட்டாங்க…” என நளினி சொல்ல,
“ப்ச், க்கா இதான் இஸ்திரிகளோட சம்பந்தம் வச்சுக்க கூடாதுன்றது. நினைச்சா எங்கயும் போக வர முடியுதா?…” என்றவள் நவீனை மறந்து நளினியை கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.
நவீன் வேகமாய் கண்ணபிரானின் அறைக்குள் செல்ல போக அவனை தடுத்த காவலாளி,
“ஒரு பத்து நிமிஷம் இங்க வெய்ட் பண்ண சொன்னாங்க. ஸார் ஒரு முக்கியமான கால்ல இருக்கார்…” என்றதும் நவீனுக்கு எரிச்சலாக இருந்தது.
ஆனாலும் பார்க்கவேண்டுமே? பேசவேண்டுமே? அப்படியே செல்ல முடியாதே என்று நினைத்தபடி அமர்ந்தவனுக்கு கண்ணனின் பொறுப்பும், பதவியும் கொஞ்சம் நிதானத்தையும் தந்தது.
“ஸார் நீங்க உள்ள போகலாம்…” என்று சொல்லவும் எழுந்து நவீன் உள்ளே செல்ல அங்கே கண்ணபிரான் முகத்தில் பெரும் அயர்ச்சி. நவீன் ஒரு நொடி தான் அதை கண்டு தயங்கி நின்றதெல்லாம்.
“வா நவீன்…” என்ற கண்ணனின் குரலில் தெளிந்தவன் அவனை பார்க்க கண்ணனின் முகம் இப்போது இயல்புநிலை திரும்பியிருந்தது.
“ஒரு முக்கியமான விஷயம் பேசனும் உங்ககிட்ட…” என்றான் நவீன்.
“ஊரை காலி பன்ற முடிவை மாத்திக்கிட்டீங்களா?…” என்றான் கண்ணன் சற்று எள்ளலும், கோபமும் கலந்த உணர்வில். அதை கேட்டதுமே நவீன் முகம் மாறிவிட,
“ஓகே, ஈஸி. இப்போ என்ன விஷயமா வந்திருக்க? அதை பேசலாம்…” என கண்ணன் சொல்லவும்,
“எனக்கு பூவிக்காவை உங்க வீட்டுல விட கொஞ்சமும் விருப்பம் இல்லை…”
“ஓஹ், எனக்கு தெரியாது….” என்று அவன் சொல்ல நவீனுக்கு கோபம் கூடியது.
“இதென்ன பதில் தெரியாதுன்னு? உங்களுக்கு எல்லாமே தெரியும். தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடந்துக்கறீங்க…”
“ஓகே, தெரியும். என்ன செய்யலாம் அதுக்கு?…” என அதற்கும் கண்ணனிடம் கேள்வியே.
“ப்ச், இது என்னோட பேரன்ட்ஸ் அன்ட் என் மாமா அத்தை எடுத்த முடிவு. பூவிக்காவை ரொம்ப பேசி வேற வழி இல்லாம அங்க கொண்டு வந்து விட்டாங்க…” என்றவன் நடந்ததை சொல்ல கண்ணன் எந்த உணர்வையும் காண்பிக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.
ஆக அப்பாவிற்காக குடும்பத்திற்காக மட்டுமே வந்திருக்கிறாள். ஓரளவு யூகித்தது தான். ஆனாலும் வலித்தது.
அவளின் மனதில் இப்போது தனக்கு எந்த இடம் என்று இதுவரை யோசித்துக்கொண்டிருந்தவன் இப்போது ஏதாவது ஒரு சிறு இடம் இருக்குமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.
“நான் பேசிட்டு இருக்கேன். நீங்க வேற எதையோ நினைச்சிட்டு இருக்கீங்க?…” என்று நவீன் சூடாக,
“நான் என் வொய்ப் பத்தி நினைச்சிட்டு இருக்கேன். இதுல உனக்கு என்ன நஷ்டம்?…” என்றான் கண்ணன்.
அவனின் பேச்சில் ஒரு நிமிடம் தடுமாறி பேச வந்ததை மறந்ததை போல நவீன் திணறி பார்க்க மெல்லிய புன்னகையுடன் அவனை ஏறிட்டான் கண்ணன்.
“சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லு நவீன். எனக்கு வொர்க் இருக்குது…” என சொல்ல,
“எங்களுக்கும் வேலை இருக்குது. நான் என்ன வெட்டியாவா வந்திருக்கேன்?…” என சிடுசிடுக்க,
“என்ன வேலை? வீட்டை காலி பண்ண பேக்கிங் வொர்க்கா? அதுக்கு தான் பேக்கேஜர்ஸ் சொல்லிட்டதா உன் மாமா சொன்னாரே?…” என்றான் கண்ணன் படுநக்கலான குரலில்.
“இது எல்லாம் எனக்கு தெரியாம நடந்தது…” என்றான் நவீன் தன் முகம் கன்ற.
“ஆனா இதயாவை இத்தனை பேசும் போது தெரியும் தானே? பார்த்துட்டா இருந்த?…”
“ஆமா, பார்க்கத்தான் முடிஞ்சது. நீங்க சொன்னீங்களே உங்களுக்கு ஒரு சூழ்நிலைன்னு அதே தான். நீங்க புருஷன், நான் தம்பி. அவ்வளோ தான். ஆனா உங்க வீட்டுலையும் சரி, எங்க வீட்டுலையும் சரி கஷ்டப்பட்டது எங்கக்கா தான். அன்னைக்கு நீங்க பேசாம இருந்தீங்க. இப்ப நான்…”
நவீன் சொல்ல சொல்ல கண்ணனுக்கு சுளீரென்று இருந்தது. உண்மை தானே அவன் சொன்னதும் என்று பார்க்க,
“நான் இதை பேச வரலை. இங்க பாருங்க, எத்தனை இருக்கட்டும். இனி பூவிக்கா உங்களோட தான் இருக்க போறா. இன்னொரு தடவை அவ கண்ணீரோட எங்களை தேடி வரமாட்டான்னு நினைக்கறேன்…” என்றவன்,
“ம்ஹூம், அவளே சொல்லிட்டா எல்லாரும் போக சொல்றீங்க, இன்னொருதடவை அப்படி ஒரு சூழ்நிலை வந்தா எங்க போவேன்னு கேட்காம கேட்டுட்டா. அப்படி ஒரு நிலைமைக்கு எல்லாரும் கொண்டு வந்துட்டோம். அதுக்கு முக்கிய காரணம் நீங்க…” என சொல்ல,
“நவீன்…” என்று கண்ணன் வாயை திறக்க,
“வேற எதுவும் வேண்டாம். உங்ககிட்ட கேட்கிறது ஒன்னு தான். பூவிக்காவை நல்லா பார்த்துப்பீங்களா?…” என கேட்டு,
“பார்த்துக்கோங்க. இனி பூவிக்காவுக்கு நீங்க மட்டும் தான். முதல் தடவையும் உங்களை நம்பி தான் உங்க வீட்டுக்குள்ள வந்தாங்க. அப்போ விட்டுட்டீங்க. இப்போவும் பூவிக்காவை விட்டுடமாட்டீங்க தானே?…” என்று கேட்கும் போதே அவனின் கண்கள் கலங்கிவிட,
“நவீன் என்ன இது? ஸ்டாப் க்ரையிங் மேன்…” என்று கடிந்தான் கண்ணன்.
“இதயாவை இத்தனை கஷ்டப்படுத்தி கொண்டுவந்து விட்டுட்டு இப்போ வந்து. ப்ச்…” என்று கண்ணன் வார்த்தைகளை அடக்க,
“எனக்கு வேற வழி தெரியலை. எங்க வீட்டுல ஒருத்தரும் ஒன்னும் பேசவிடாம அவளை அங்க கூட்டிட்டு வந்துட்டாங்க. அவங்க மட்டும் இல்லைன்னா பூவிக்காவை நான் பார்த்துப்பேன்…” என்று சொல்ல அவனின் அன்பை கண்டு சிறு புன்னகையுடன் எழுந்து அவன் பக்கம் வந்தான்.
“கெட் அப்…” என்று கை பிடித்து எழுப்பியவன் அவனை அணைத்துக்கொள்ள,
“வேண்டாம். இப்பவும் என்னால உங்களை நம்ப முடியலை…” என்று அவனின் அணைப்பை மறுத்தாலும் ஒருகட்டத்தில் தானும் கண்ணனை அணைத்துக்கொண்டான்.
“உங்கக்கா நம்பினா தான நீ நம்பறதுக்கு. எனக்கு இது தேவை தான்…” என்று அவனை விடுவிக்க,
“ஆமா, ஆனா திரும்ப பிரச்சனைன்னு வந்துச்சு நீங்க கலெக்ட்டர்ன்னு கூட பார்க்கமாட்டேன்…” என்றான் மிரட்டலாக.
“முதல்ல அக்கா புருஷனா பாரு. கலெக்டரா பார்க்க நிறைய பேர் இருக்காங்க. அது வேண்டாம்….” என்று அவனின் தோளில் தட்டியவன்,
“ஆனா இத்தனை வம்படியா அவளை கையை காலை கட்டி கொண்டுவந்து விட்டிருந்திருக்க வேண்டாம்…” என்று பெருமூச்சுடன் சொல்ல,
“அப்ப கூட அவ வந்துட்டான்னு உங்களுக்கு சந்தோஷமே இல்லை இல்லையா?…” என்று நவீன் மீண்டும் முறுக்கிக்கொண்டு நிற்க,
“டேய் திரும்பவும் முதல்ல இருந்தா? போதும். இனி நான் பார்த்துப்பேன். புரியுதா?…” என்று அவனின் தோளில் தட்ட,
“ஹ்ம்ம்…” என்றான் முகத்தை அழுத்தமாய் துடைத்துவிட்டு.
“எப்போ கிளம்பறீங்க? வீட்டுக்கு வந்துட்டு போவீங்களா?…”
“தெரியலை. என்கிட்டே யார் கேட்கறா?…”
“ஹ்ம்ம், பார்த்து போய்ட்டு வாங்க. அதுக்கு முன்னாடி இதயாட்ட பேசுங்க. அவ தேடுவா தானே?…”
“இப்போ இவ்வளவு அக்கறையா பேசறவர் அன்னைக்கு ஏன் அப்படி இருந்தீங்கலாம்?…” என்று வெடுக்கென்று பேச,
“நீ இப்படி என்னை நிக்க வச்சு கேட்கனும்னு இருக்கும் போது யாரால அதை மாத்த முடியும்?…” என கண்ணனும் சொல்ல நவீனுக்கு ஒருமாதிரியானது.
“ஓகே, வேற எதுவும் சொல்லனுமா? ஆனா கலெக்டர் ஆபீஸ்க்கே வந்து கலெக்ட்டரை மிரட்டற…” என்று சிரிக்க,
“இப்ப கொஞ்சம் முன்னாடி அக்கா புருஷனா பாருன்னுட்டு இப்போ வந்து கலெக்டர்ன்னு கெத்து காமிக்கறீங்களா? வாய்ப்பே இல்லை. அப்படித்தான் மிரட்டுவோம். பொண்ணை குடுத்திருக்கோம்…” என்று அவனும் பேச,
“போதும்டா…” என இலகுவாக பேச அதற்குள் மீண்டும் கண்ணனின் தொலைபேசி அலறியது.
“மினிஸ்டர்…” என தன்னைப்போல சொல்லிக்கொண்டவன் தன்னிருக்கை பக்கம் நகர,
“நான் கிளம்பறேன், நீங்க உங்க வேலையை பாருங்க…” என்று நவீன் விடைபெற கடைசி வரை அத்தான் என்று அவனை அழைக்காமலே அவன் செல்ல கண்ணனும் கவனித்து ஒன்றும் கேட்கவில்லை.
ஒரு தலையசைப்புடன் அவனுக்கு விடை கொடுத்தவன் தொலைபேசியில் கவனமானான்.
அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் எதிர்கட்சியின் பொதுக்கூட்டத்தின் ஊர்வலத்திற்கான அனுமதி பற்றிய விவாதம் தான் போய்க்கொண்டு இருந்தது.
அனுமதி கொடுத்தாலும் பிரச்சனை. கொடுக்காவிட்டாலும் பிரச்சனை. இதை எப்படி சமாளிப்பது என்று உரையாடிக்கொண்டு இருந்தார்கள்.
அது சம்பந்தமான அவரச ஆலோசனை வேறு காவல்துறை அதிகாரிகளுடன் போடப்பட்டு ஒருவழியாக அனுமதி வழங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.
கண்ணன் வீடு வர இரவாக, வரும் பொழுதே கிளம்பி தயாராக இருந்தார்கள் அவனின் பெற்றோரும் நிஷாவும்.
“என்னப்பா இப்பவே கிளம்பிட்டீங்க?…” என்று அவன் கேட்க,
“இல்லப்பா, இனி நீ பார்த்துக்க. நீ தான் சரிபண்ணனும். பண்ணிடுவன்னு நம்பறேன். நாங்க இருந்தா அது…” என்று இழுக்க,
“அண்ணா அண்ணி அங்க இருந்து எழுந்துக்கவே இல்லை. அப்படியே சாய்ஞ்சு படுத்தவங்க தான். போய் எழுப்பினேன் நிமிர்ந்து பார்த்துட்டு தலையை அசைச்சுட்டு கண்ணை மூடிட்டாங்க…” என்றாள் கவலையுடன்.
“அதை அவன் பார்த்துப்பான் நிஷாக்குட்டி. பஸ்க்கு நேரமாச்சு பாரு…”
“ப்ச், நான் தான் கார் அரேஞ்ச் பன்றேன்னு சொன்னேன்லப்பா…” என்றவன் ருக்மணியிடம் பேசவே இல்லை.
“இருக்கட்டும் கண்ணா. நாங்க கிளம்பறோம். பேசிட்டே இருந்தா நேரமாகிடும்…” என்றவர் இதயாவிடம் வந்தார்.
“அம்மாடி பூவி…” என்று அழைக்கவும் திடுக்கிட்டு வேகமாய் எழுந்து அமர்ந்தவள் கண்களை கசக்கிக்கொண்டு பார்க்க,
“ஒன்னும் இல்லமா, பதறாத. நாங்க ஊருக்கு புறப்பட்டுட்டோம். அதான் சொல்லிட்டு போகலாம்ன்னு…” என்று அவர் சொல்லவுமே இதயாவின் நினைவுகள் தன் வீட்டை சென்று சேர்ந்தது.
“போய்ட்டு வரோம்மா. நடந்த எல்லாத்தையும் மறந்துருன்னு சொன்னா அது ஏத்துக்கும்படியா இருக்காது. ஆனா முயற்சி பண்ணலாம் தானே? எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்றேன். பார்த்துக்கோம்மா….” என்ற அவர் நகர ருக்கு வந்தார்.
“தப்பு என் மேலயும் இருக்கும்மா. உன்கிட்ட மன்னிப்பு கூட கேட்க முடியாது. ஏனா எல்லாத்தையும் பார்த்துட்டு நானும் வாயை திறக்காம நின்னேன்…” என்றவர் மகனை திரும்பி பார்க்க அவன் இன்னும் இறுக்கத்துடன் நின்றான்.
“ரெண்டு பேரும் நல்லா வாழ்ந்தா அதுவே போதும். நாங்க கிளம்பறோம். முடிஞ்சா உன்னால மன்னிக்க முடிஞ்சா நீ அங்க நம்ம வீட்டுக்கு கண்டிப்பா வரனும்…” என்று சொல்லி செல்ல நிஷா,
“போய்ட்டு வரேன் அண்ணி. டேக் கேர்…” என்று மட்டும் சொல்லிவிட்டு கிளம்ப இதயா தன் வீட்டை நினைத்தாள்.
இந்த நேரம் கிளம்பியிருப்பார்களோ என்னவோ என்று சிந்தனை அங்கேயே சுற்ற மனது வலித்தது.
வாசல் வரை சென்று தனது காரிலேயே அவர்களை அனுப்பி வைத்தவன் மீண்டும் உள்ளே வர இதயாவின் போன் அடித்துக்கொண்டு இருந்தது.
டீப்பாயின் மேல் இருந்ததை எட்டி பார்த்துவிட்டு அவளையும் பார்த்தான். அவள் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் அந்த அழைப்பை.
“இதயா போன் அடிக்குது. எடுத்து அட்டன் பண்ணு…” என சொல்ல பதிலில்லை.
“இதயா உன் அப்பா தான் கூப்பிடறார். பேசு. என்னன்னு கேளு…” என்றான் எதிரே அமர்ந்து.
அவள் அசைவேனா என்பதை போல இருக்க தானே போனை எடுத்து அட்டன் செய்தவன்,
“சொல்லுங்க மாமா…” என்றான்.