“மாப்பிள்ளை, பூவி எப்படி இருக்கா?…” என அய்யாசாமி கேட்க,
“ஹ்ம்ம், இங்க தான் இருக்கா…” என்றான் பொதுவாக.
“என் பொண்ணுக்கிட்ட பேசனுமே?…” என்றதும் அவள் பேசமாட்டாள் என்று தெரிந்து போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அங்கிருந்து அறைக்குள் நுழைந்துகொண்டான் உடை மாற்ற.
“பூவிம்மா, பூவி….” என மாற்றி மாற்றி வீட்டினர் அனைவருமே பேச அதற்கு மேலும் மௌனம் காக்க முடியாமல்,
“சொல்லுங்கம்மா…” என்றாள் அவள்.
எப்போதும் பேசுவதை போலல்லாது மரியாதையுடம் அவள் பேச மஞ்சுவிற்கு அழுகை பொங்கியது.
“சொல்லும்மா, என்ன பன்ற?…” என்று எடுத்ததும் படபடத்து பேசும் தன் பெண்ணை நினைத்து கலங்கியவர்,
“பூவிம்மா, அம்மா மேல கோவமாடா? ஏன்டா இப்படி பேசற?…” என்று ஒரு பாடு அழுது தீர்க்க,
“இல்லை, அதெல்லாம் இல்லை. என்னன்னு சொல்லுங்கம்மா…” என்றாள் அப்போதும் அவர்களின் கண்ணீரை பொறுக்கமாட்டாது.
“இப்படி பேசமாட்டியே நீ?…”
“இல்லை, ஒண்ணுமில்லை. சொல்லுங்க நீங்க. கிளம்பியாச்சா?…” என சாதாரணம் போல பேச,
“அவளே தெளிவா இருக்கா. உனக்கு என்ன இப்போ?…” என்று யசோதா திட்டுவது இதயாவிற்கு கேட்டது.
“இல்லை, இல்லை…” என்று மஞ்சுவும் சமாளித்து,
“பூவிம்மா, நல்லா இருக்கனும்டா. சந்தோஷமா இருக்கனும். மனசு விட்டு பேசு. தப்பு பண்ணினவங்களே நம்மளை தேடி வரும் போது நாம இன்னும் முகம் திருப்பறது நல்லதில்லைம்மா…” என்று சொல்ல,
“மஞ்சு, அதான் அவளை அங்க விட்டாச்சுல. போக போக சரியாகிடும். அவளுக்கு தைரியம் சொல்லாம அழுதுட்டு பேசற? ஒரு குழந்தைன்னு ஆகிட்டா எல்லாம் மாறி போய்டும்…” என யசோதா மீண்டும் இடையிட அதன் பின் ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் பேசினார்கள்.
அப்படி இரு, இப்படி நட, பார்த்து பேசு, விட்டுகொடுத்து போ, சிரித்த முகமாக இரு, படபடவென்று பேசாதே என்று அத்தனை அறிவுரைகளை அவள் மேல் திணிக்க திணிக்க மூச்சு திணறியது பூவிதயாவிற்கு.
நவீனும், தீப்தியும் மட்டும் எப்போதும் போல அவளின் நலனை பேசிவிட்டு முடித்துக்கொள்ள மீண்டும் பெரியவர்கள் பேசிவிட்டு கண்ணனிடம் போனை கொடுக்க சொல்ல அப்போது தான் உடை மாற்றி வந்தான்.
கையில்லா பனியனும், லுங்கியுமாக அவன் வர நிமிர்ந்து பார்த்தவளுக்கு கண்ணை கரித்தது.
எத்தனை முறை வீடியோகாலில் அவனை இவ்வாறு பார்த்து கேலி செய்திருந்திருக்கிறாள். மரித்து போன ஞாபகங்கள் எல்லாம் தலை தூக்க விழிகள் கலங்கலாக மாறியது.
“பேசிட்டியா?…” என கண்ணன் வந்து அவளெதிரே அமர,
“மாப்பிள்ளை…” என்றனர் அவனின் குரலிலேயே.
பின் அவனிடமும் இதயாவை பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு கிளம்புகிறோம் என்று பேசி முடித்து வைத்துவிட்டனர்.
போனை கீழே வைத்தவன் ஐந்து நிமிடம் எதுவும் பேசாமல் இருக்க இதயா வாயை திறந்தாள் இல்லை.
“ஏன் சாப்பிடாம இருக்க இதயா? சாப்பிட வா…” என்று அழைத்தான்.
ஒன்றும் பேசாம எழுந்து வந்தவள் நடை தள்ளாடியது. சமாளித்து டையனிங்கில் வந்து அமர்ந்தவள் மௌனமாகவே இருக்க அவனே பரிமாறினான்.
“அம்மா வரதுக்கு முன்னாடி மெஸ்ல இருந்து தான் சாப்பாடு வரும். அம்மா வரவும் அவங்க செஞ்சாங்க. இனி சமைக்க அங்கயே ஒரு லேடியை சொல்லிருக்கேன். வருவாங்க…” என்று பேசினான்.
“சாப்பிடு. வச்சிட்டே இருக்க?…” என்று சொல்ல,
“எனக்கு பசி இல்லை…” என்றாள் முதன் முறையாக அன்றைய பேச்சாக.
“பசி இல்லைன்னாலும் பரவாயில்லை. சாப்பிடாம இருந்தா உடம்பு கெட்டுடும். அதுக்காகவேணும் நீ சாப்பிடு. கொஞ்சமா உன்னால முடிஞ்சளவுக்கு…” என்று சொல்ல,
“ம்ஹூம்…” என்றாள்.
“சாப்பிட வந்து உட்கார்ந்துட்டு இதென்ன வீம்பு? முதல்ல சாப்பிடு. பேசறதுக்கு நிறைய நேரம் இருக்குது. மெதுவா சண்டை போடலாம்…” என சொல்ல,
“இல்லை வேண்டாம்…” என்று அவள் எழுந்துவிட்டாள்.
கண்ணனுக்கும் கோபம் வந்துவிட தானும் வேகமாய் எழுந்து அவளின் கையை பற்றியவன்,
“சொன்னா கேட்கமாட்டேன்னு ஏன்டி பிடிவாதம் பன்ற?…” என பொறுமையிழந்து கத்திவிட்டான்.
வந்ததில் இருந்து பசியில் கிறங்கி போய் தளர்வாக அவள் அமர்ந்திருக்க முகம் பார்த்தே கண்டுகொண்டு அவளை சாப்பிட சொன்னாள் இத்தனை பிடிவாதமா அவள் இருக்க பொறுமை பறந்தது.
“சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னா கேட்கவே மாட்டியா? எனக்கு தெரியும் உனக்கு என்னோட இருக்க பிடிக்கலைன்னு. அதுக்காக பட்டினியா இருந்தா ஆச்சா?…” என கேட்டவன் இன்னும் அவள் திண்ணக்கமாக நிற்க,
“சரி இப்போ என்ன? இங்க இருக்க உனக்கு இஷ்டம் இல்லை. அவ்வளோ தானே? நானே உங்க வீட்டுல பேசி உன்னை கொண்டு போய் விடறேன். போதுமா? இப்போ சாப்பிடு…” என்று சொல்லிய நொடி அவனின் கையை உதறிவிடு முறைக்க,
“இன்னும் என்ன? அதான் உன் இஷ்டத்துக்கு போய்க்கோன்னு சொல்லிட்டேனே? போதாதா? சரி நான் வரலை, நீயா போ. ஆனா அதுக்காச்சும் தெம்பு வேணும் இதயா…” என்று சொல்ல,
“போதும் போதும். என்னை என்ன நினைச்சுட்டு இருக்கீங்க ஆளாளுக்கு? அவங்க இங்க போன்றாங்க. நீங்க அங்க போன்றீங்க? என்ன செய்யனும் நான்?…” என்று கத்த வேகமாய் ஓடி சென்று கதவை பூட்டினான்.
“போ போன்னா எங்க போக? அதன் எங்கயும் போக முடியாதபடி என்னை கட்டி போட்டுட்டாங்களே? நானே நினைச்சாலும் நான் போக முடியாதே? இப்ப நீங்களும் போன்னு சொன்னா நான் செத்து தான் போகனும். போகவா?…” என்று சொல்லியவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“என்ன பேச்சுடி இது? நீ சாப்பிடலையேன்னு…”
“ஆமா சாப்பிடலை. சாப்பிடனும்னு நினைக்கேன் முடியலையே. என்ன செய்ய நான்? அதுக்கு போன்னு சொல்லுவீங்க இல்ல? இப்பவும் நான் போறேன்னா என்ன ஏதுன்னு கேக்காம போனா போதும்னு விடனும்னு தானே பார்க்கறீங்க? அதை சரி செய்யனும்னு கொஞ்சமும் தோணலை இல்ல?…” என்றவள்,
“உங்களை சொல்லி தப்பில்லை. இப்ப நான் இருக்கிற நிலைமை அப்படி. அப்போ என்னை பந்தாட தானே தோணும்? எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்குது….” என்று மூச்சடைக்க நெஞ்சை நீவியபடி அவள் கேவ,
“இதயா…” என்று அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
அவனின் அணைப்பில் அத்தனை அடி அடித்தவள் ஒருகட்டத்தில் திமிறி பின் அத்தனையும் மறந்து கழிவிரக்கத்தில் நின்றாள்.
“எங்கயும் போகவேண்டாம். தப்பு என் தப்பு தான். இனி பேச்சுக்கு கூட போன்னு சொல்லமாட்டேன். சொல்லவேமாட்டேன்…” என்று அவன் இதயாவின் முகத்தை தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள அதை எல்லாம் உணராதவள்,
“எல்லாரும் இதையே சொல்றாங்க. தேடி போனேன், தேடி போனேன், தேடி போனேன். ஏன் போனா என்ன? தேடி போனதால எந்த வகையில நான் குறைஞ்சுட்டேன்? இல்லை என்னை அப்படி தேடி வரவழைச்சுட்டு தேமேன்னு இருந்தீங்களே? நீங்க எந்த வகையில உசந்துட்டீங்க?…”
“தப்பு பண்ணிட்டேன்டாம்மா…” என்று அவளின் தலையை வருடினான்.
“என்னை எல்லாம் இதை சொல்லியே அசிங்கப்படுத்தறாங்க. தப்பு தப்பா பேசறாங்க. நீ அமைச்சிக்கிட்ட வாழ்க்கை. அப்போ நீ தான் வாழனும்னு டம்ப் பன்றாங்க. என்னால முடியலை. அவங்க அமைச்சு குடுத்த வாழ்க்கையை தானே நான் சரி பண்ண பார்த்தேன்?…” என அவனிடமே கேட்டவள்,
“என்னோட வாழ்க்கையில நான் எடுத்த மிகப்பெரிய தப்பு இந்த கல்யாணம். என்னோட மேரெஜ் லைப் இப்படி இருக்கும்ன்னு நான் நினைச்சதே இல்லை…” என்று சொல்லி அவனின் அணைப்பில் இருந்து மெல்ல விலகினாள்.
“இதயா…” என்று அவன் பேச வர,
“குளிக்கனும். இனி இங்க தானே இருக்கனும். எங்கன்னு கேட்கனும்னு நினைச்சேன். தோணலை. நீங்க சொல்லுங்க. நான் எங்க இருக்கனும்?…” என்றாள்.
அவளின் பேச்சிலேயே அந்த வீட்டில் ஒன்ற முடியாத தன்மை தெரிய வந்த அன்றே அவளை தானும் புண்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன்,
“நமக்குன்னு ஒரு ரூம் இருக்குது. உனக்கு ஓகேனா அங்கயே தங்கலாம்…” என்று சொல்ல தலையசைத்தாள். அந்த அறையை திறந்தவன்,
“குளிச்சுட்டு வா. வெய்ட் பன்றேன்…” என்று சொல்லவும் அறைக்குள் சென்றவள் உறைந்து போய் நின்றாள்.
அறையின் ஒவ்வொரு இடத்திலும் அவளும் அவனும் பேசி பழகிய நாட்களில் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் எல்லாம் நிறைந்திருந்தது. நான்கு பக்க சுவர்களில் எல்லாம் புகைப்படங்களாக இருக்க இது அவளின் கனவு.
“வெடிங் அன்னைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…” என்று அவள் சொல்லியிருக்க பேசி பேசியே அவளின் வாயில் இருந்தே அதை வரவழைத்திருந்தான்.
“உங்ககிட்ட இனி சர்ப்ரைஸ்னு கூட சொல்லமாட்டேன். சரியான கறவை கேஸ்…” என்று அவனை ஒரு பிடி பிடித்தாள் அன்றைக்கு.
அன்றைக்கு இருந்த நெஞ்சை முட்டும் அளவிற்கு இருந்த சந்தோஷம் இன்று அத்தனை பாரமாக சுமக்கமுடியாத அளவிற்கு இருந்தது.
“இதயா குளிக்கலையா?…” என கண்ணன் கேட்கவும் தான் தன்னுணர்வு வந்தவள்,
“இங்க இந்த ரூம் எனக்கு இங்க வேண்டாம்….” என்று சட்டென அவனை இடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வர,
“ஓகே, இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ…” என்று பக்கத்தில் இருந்த அறையை திறந்து காண்பிக்கவும் ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டாள்.
“ஒன்னும் எடுத்துட்டு போகாம போய்ட்டாளே…” என பார்த்தவன், அதற்குள் ஷவரின் சத்தம் கேட்க இதயாவின் உடமைகளை கொண்டுவந்து அறையில் வைத்துவிட்டு ஹாலில் அமர நேரம் சென்றதே தவிர அவள் வெளியே வருவதை போல தெரியவில்லை.
கண்ணனுக்கு போன் வரவும் அதில் தீவிரமானவன் பேசி முடித்து இன்னும் இதயா வராமல் இருக்க அதுவும் அரைமணி நேரம் கடந்து போகவும் தான் பதறி போனான்.
“இதயா, கதவை திற. என்ன பன்ற இவ்வளோ நேரம்?…” என்று பலமாக கதவை தட்டினான்.
எதற்கும் அவளிடத்தில் பதிலில்லாமல் போக முடிந்தமட்டும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஷவரின் கீழே நடுங்கியபடி அரைமயக்கநிலையில் அமர்ந்திருந்தாள் அவள்.
மனவுளைச்சல், தன்னிரக்கம், சாப்பிடாதது என மொத்தமாய் அவளை அன்று நிலையிழக்க செய்திருந்தது.
“ஏய்…” என்ற சத்தத்துடன் வந்தவன் உடனே ஷவரை அணைத்துவிட்டு அவளை தூக்கிக்கொண்டான்.
“ஏன்டி உன்னை நீயே கஷ்டபடுத்திக்கற?…” என்ற புலம்பலுடன் அவளை படுக்க வைத்தவன் டவலை எடுத்து துடைக்க நேரம் செல்ல செல்ல குளிர் அதிகமாகி உடல் வெடவெடக்க தொடங்கியது.
“முதல்ல ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிடு. உன்னால முடியுமா?…” என கேட்க,
“போங்க, நீங்க வெளில போங்க…” என்று தடுமாறி அவனை போக சொல்லியவள் மெல்ல எழுந்து அமர அவளே மாற்றிக்கொள்வாள் என்று வெளியே வந்தான்.
வந்தும் அவனுக்கு மனதே இல்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் மாற்றியிருப்பாளா என்று உள்ளே சென்று பார்க்க கட்டிலில் அதே ஈரத்துடன் சுருண்டு படுத்துவிட்டிருந்தாள்.
“போச்சு. இப்படியே படுத்தா ஜன்னி கண்டிடும் இதயா…” என்று அவளை எழுப்பி அமர வைத்தான்.
“என்னால முடியலை விடுங்க…” என்று அமர முடியாமல் தொய்ந்து சரிந்து விழ அவளின் உடலில் சூடு ஏற ஆரம்பித்தது.
“ஷிட்…” என்றவன் ஒரு முடிவோடு தானே அவளுக்கு உடை மாற்ற ஆரம்பிக்க,
“அச்சோ, அச்சோ. விடுங்க. வேணாம், போங்க. போயா. போடா…” என்று அவளின் மறுப்புகள் அவனிடத்தில் மரியாதையின்றி வர ஒரு சிரிப்புடன்,
“சரியாகிட்டு அடிச்சுக்க கூட செய். இப்ப மாத்த விடு. இது தேவையா உனக்கு?…” என்று அவளை கடிந்தவன்,
“புருஷன் தானே? தப்பென்னடி?…” என்று முரண்டிக்கொண்டான் அவளின் கோபத்தில்.
என்ன நடக்கிறது என்று உணர்ந்தாலும் எதையும் தடுக்கும் திராணி இன்றி அவனை அத்தனை பேச்சு பேசிக்கொண்டு இருந்தாள் இதயா.
ஈர உடைகளை ஓரமாய் போட்டுவிட்டு அவளுக்கு பெட்ஷீட்டை போர்த்திவிட்டவன் அவளின் பெட்டியில் உடைகளை தேட இரவு உடை ஒன்றை எடுத்து இதயாவிற்கு அணிவித்துவிட்டு பாலை காய்ச்ச சென்றான்.
மனது இன்னும் சமநிலைக்கு வரவே இல்லை. ஒருமாதிரி படபடப்புடன் லேசாய் வியர்க்க ஆரம்பிக்க தண்ணீரை குடித்துவிட்டு அவளுக்கு பாலை எடுத்து வந்து கொடுத்தவன் குடிக்க வைக்க,
“இதெல்லாம் பண்ணினா நீ நல்லவனா? டெவில், டெவில்…” என்று அவள் உளற,
“ஆமா, இதை மட்டும் ஞாபகமா வச்சுக்கோ…” என அவளின் வாயில் ஒரு மாத்திரையை போட்டு முழுதாய் குடிக்க வைத்து படுக்க வைத்தவனின் தூக்கம் தொலைந்தது.
அரை உறக்கத்தில் அவளின் ஆழமனதில் அழுத்தமாய் பதிந்து இருப்பவை எல்லாம் புலம்பல்களாக வெளிவர கேட்டவனின் மனது கலங்கி போனது.
நினைவுகள் பெண் பார்த்துவிட்டு திருமணத்தை பேசிமுடித்த சென்றபின்னர் முதன்முதலாக தனிமையில் சந்திக்க பிச்சாவரம் ஏரிக்கு வந்த நாளில் சென்று நின்றது.