தேசிய வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு அனுமதியின்றி ஜீப்பில் நான்கு வாலிபர்கள் நுழைந்திருக்க அதனை தடுக்க முயன்ற பணியாளருக்கும், வாலிபர்களுக்கும் இடையே தகராறு.
இதில் ஜீப்பை வேகமாய் செலுத்த ஜீப் கட்டுப்பாட்டை இழந்து பாதுகாப்பு தடுப்பை தாண்டி சென்று மரத்தில் மோதி உருண்டிருந்தது.
இதில் அந்த இடத்தில் உலாத்திக்கொண்டிருந்த இரு சிறுத்தைப்புலி குட்டிகளின் மேல் பட்டு அதற்கும் காயம் ஏற்பட்டிருக்க நிலைமை கவலைக்கிடம்.
மதுபோதையில் இருந்தவர்களை துரிதமாய் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உடன் சென்று அப்போதே யார் என விசாரித்து அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ய ஆவன செய்தால் அந்த நேரத்திலேயே மேலதிகாரியிடமிருந்து அழுத்தம்.
வழக்கு பதிவு செய்ய கூடாதென்று. எதுவும் நடக்கட்டும் என்று தன்னுடைய வேலையை செய்து, முடித்து வந்திருந்தாள்.
ஏற்கனவே ஒரு பிரச்சனையில் இப்போது அவள் மீது கடும் கோபத்தில் தான் இருந்தது மேலிடம்.
வனத்துறை அமைச்சரிடம் நேரடியாகவே பேசியிருந்தாள் பெண். எத்தனை தான் பொருத்து போவது?
அதுவும் சமீபத்தில் நடந்த விஷயம் எல்லாம் நேர்மையான அதிகாரியாக அவளால் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று.
காடுகளையும், இயற்கையையும் நேசித்து இந்த அரணுக்குள் நுழைந்திருந்தவள், அதனையே அழிக்கும் விதமான செயல்பாடுகளை என்றுமே அனுமதித்ததில்லை.
அலாரம் வைத்ததை போல இரண்டுமணி நேரத்தில் அவளாகவே எழுந்துகொண்டாள்.
உடலுக்கு மட்டுமே ஓய்வு போல. கண்கள் உறக்கமின்றி ரத்தமாய் சிவந்திருந்தது.
எழுந்தவள் தயாராகி வெளியே வர பூவம்மா போனில் பவ்யமாய் பேசிக்கொண்டிருந்தார்.
அதனை பார்த்துக்கொண்டே கவனிக்காததை போல தனது சாக்ஸ், ஷூவுடன் அமர்ந்தாள்.
“போலீஸ் கண்ணு வந்திருச்சு…” அவர் மெல்லிய குரலில் சொல்லியது கேட்க மறுமுனை என்ன சொல்லியிருக்கும் என தெரிய இதழில் புன்முறுவல்.
“கண்ணு இந்தா அம்மாட்ட பேசு…” என ரிசீவரை நீட்ட வாங்கிக்கொண்டாள்.
“பூவம்மா…” என்று சிரித்தபடி அவரின் கையை பிடித்து தடுத்துவிட்டு தனது தொப்பியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
தோள் வரை சுருண்டிருந்த கூந்தலை சிறு கொண்டையாக்கி போடப்பட்டிருக்க காதிலும், கழுத்திலும் எதுவுமில்லை கையில் அந்த மோதிரம் தவிர்த்து.
“எ ப்ரவுட் மொமென்ட்…” என அவளுக்கு பணி உத்தரவு வந்த அன்று அவன் அளித்த பரிசு அவளை அலங்கரிக்கும் ஒரே விஷயம்.
ஜீப்பின் முன் இருக்கையில் லாவகமாய் ஏறி அமர்ந்தவள் முகம் இப்போது இறுகி இருந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை கொண்டுவரும் விஷயம்.
அப்படி ஒன்றை தான் மேலிடத்திற்கு எதிராக தான் செய்யவிருப்பது. முன்பே மீடியாவில் இதனை சொல்லியும்விட பிரச்சனை பூதாகரம் தான்.
ஏற்கனவே எரியும் எண்ணையில் மேலும் பெட்ரோலை ஊற்றும் விதமான செயல் தான்.
அதை பற்றி எள்ளளவும் கவலை என்பதில்லை. வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று திமிராய் அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய அலுவலகம் வந்ததும் இறங்கி மிடுக்குடன் உள்ளே செல்ல மற்றவர்களின் சல்யூட்டிற்கு தலையசைத்துவிட்டு நேராய் தன்னறைக்கு நுழைந்தாள்.
“குட்மார்னிங் மேம்…” என்று வந்த உதவியாளரை பார்த்தவள்,
“மாசிலாமணி, ந்யூ ஜாயினி வாட்சர் முருகவேலை வர சொல்லுங்க…” என்றவள் அலைபேசியை ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்னால் இருந்த பையிலை எடுத்தாள்.
முதல்நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர்களின் மருத்துவ அறிக்கை அது.
அதனை பார்த்துக்கொண்டிருந்தவள் முகத்தில் அத்தனை கர்வம். நிச்சயம் வேறொரு அறிக்கையும் இன்னும் சற்று நேரத்தில் மாற்றுதலாய் வரும்.
ஆனால் அதற்கு முன்பே அங்கேயே இருந்து உண்மை அறிக்கையை தான் வாங்க செய்திருக்க இதழ்களில் எள்ளல் புன்னகை.
“மினிஸ்டர் வேதநாயகம்…” என சொல்லிக்கொண்டவள் உள்ளே இருவர் வரும் அரவத்தில் நிமிர்ந்து பார்த்தாள்.
“மேம்…” என்று சல்யூட் அடித்தவன்,
“வாட்சர் முருகவேல்….” என்று சொல்லி தனது பணிக்கான உத்தரவு காகிதத்தை அவளிடம் நீட்டினான்.
வாங்கி அதனை பார்த்தவள் அவனை பற்றிய விஷயங்களை தெரிந்துகொண்டிருக்க,
“குட்…” என்ற தலையசைப்புடன்,
“உங்களுக்கான குவாட்டர்ஸ் அலார்ட் பண்ண சொல்லிட்டேன். நீங்க பேமிலியோட வந்தாலும் ஓகே. யூர் விஷ்….” என்று அவனுக்கு வாழ்த்தையும் சொல்லியவள்,
“ட்யூட்டில ஜாயின் பண்ணிடுங்க…” என கையெழுத்திட்டு அனுப்பினாள்.
“காளி ஹாஸ்பிட்டல் போகனும். ஜீப் எடுங்க…” என்று எழுந்துகொள்ள அலைபேசி சத்தம்.
இதனை எதிர்பார்த்தது தானே? காளி போகவா வேண்டாமா என்பதை போல நிற்க,
“நீங்க போய் ஜீப் எடுங்க. வரேன்…” என அனுப்பிவிட்டு அழைப்பை ஏற்றாள்.
“என்ன பண்ணியிருக்கம்மா நீ? உன்னை யாரும் எதுவும் கேட்க முடியாதுன்னா?…” என்ற குரல் சீற்றத்துடன் அவளை எட்டியது.
“என் ட்யூட்டியை தான் ஸார் நான் பண்ணினேன். இதோ இப்போ கூட நீங்க கேட்கறீங்களே?…” அமர்த்தலான குரல்.
‘அப்படித்தான் செய்வேன், என்ன செய்ய முடியும் உங்களால்?’ என்பதை போலொரு பதில் அறைகூவல்.
“தப்பு பன்றம்மா. ரொம்ப பொறுமையா இருக்கோம். நீயே இவ்வளோ செய்யும் போது அதிகாரத்தை வச்சுட்டு எங்களாலையும் ஒன்னும் பண்ண முடியாதுன்னா நினைக்கிற?…” என்றவரின் வார்த்தை கூட பயந்து தான் வந்தது.
வார்த்தைகளை விட்டால் விஷயமும், விபரீதமாகிவிடுமே? இவளிடம் வைத்துக்கொள்ளவும் முடியவில்லையே என்னும் பேரெரிச்சல் அந்த குரலில்.
அதனை கண்டுகொண்டவளுக்கு தான் அப்படி ஒரு சந்தோஷம். தெரிந்துதானே செய்கிறாள்.
மேஜை மேல் அமர்ந்து சாவகாசமாக கால்களை ஆட்டியபடி அவள் கேட்டுக்கொண்டிருக்க,
“மீடியாவுக்கு யார் சொன்னா?…” என்றார் அவர் மறுமுனையில்.
அகம்பாவமான பதில் தான். அவளிடம் அதுதானே வரும். பல்லை கடிக்கும் சத்தமும், அருகில் யாரோ கிசுகிசுக்கும் சத்தமும்.
“ஓகே, இந்த கேசை நான் டீல் பண்ணிக்கறேன்…”
“எப்படி ஸார்? கொஞ்ச நாள் முன்னாடி பாரஸ்ட்க்குள்ள ஆட் ஷூட்க்கு பர்மிஷன் குடுத்து ஃபயர் ஆக்சிடன்ட் நடந்துச்சே? அந்த கேஸை டீல் பண்ணின மாதிரியா?…” என்றதற்கு,
“இங்க பாரும்மா, காடு தானே? தானா உண்டாகிற போகுது…” என மறுமுனை பதில் சொல்லவும் நொடியில் நழுவ இருந்த தன் நிதானத்தை இழுத்து பிடித்தாள்.
“அன்னைக்கு எரிஞ்ச பகுதிகள் துளிர்விட்டு பழையபடி மாறவே இன்னும் இருபது, முப்பது வருஷமாகும். எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க காடு தானேன்னு? அவ்வளவு அலட்சியம். ஹ்ம்ம்…” என்றவள்,
“ஓகே ஸார். நான் ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டேன். நீங்க பார்க்கிறதை பார்த்துக்கோங்க. ஹ்ம்ம், நெக்ஸ்ட்…” என்றவள் யோசிப்பதை போல பாவனை செய்துவிட்டு,
“விதை பந்துங்க எல்லாம் ரெடியா இருக்கு ஸார். ஒன் டே நீங்க ப்ரீனா சொல்லுங்க. சின்னதா பங்க்ஷன் மாதிரி உங்க தலைமையில வச்சு டிஸ்டிஃபூட் பண்ணிருவோம்…” என்று நக்கலாய் சொல்லி வைத்துவிட்டாள்.
“மினிஸ்டர் வேதநாயகம் இப்பவே எரியுது போல?…” என சிரித்துக்கொண்டே உற்சாகமாய் வெளியே வந்தாள்.
வெளியே மாசிலாமணியின் நடுக்கமான பார்வை அவளை எட்ட அதை உணர்ந்துகொண்டவள் உடல்மொழியில் அத்தனை அலட்சியம்.
வெளியே வந்து ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் ஜீப்பின் வேகத்தில் சில்லென்ற காற்று முகத்திலறைய சில பெயரறியா பூக்களின் வாசனையில் மனது மயங்கியது.
இந்த வாழ்க்கை அவளால் உருவாக்கப்பட்டது. அவனால் இப்போது உருவாக்கப்பட்டது.
எத்தனை சந்தோஷமாய் இந்த பணியை தேர்ந்தெடுத்தாளோ இப்பொது அதுவே அவளுக்கு இதமாய், பரிவாய் கூடவே சுவாரசியமாய், புதிதாய் செலுத்த உந்துசக்தியாய் இருந்தது.
இந்த அரணுக்கு அரணாய் அவளிருக்க அந்த அரணே அவள் மனதிற்கு அரணாய்.
எல்லாவற்றிற்கும் மேல் குழந்தையென அந்த ஸ்வரத்தை நோக்கி செலுத்தாத அரணாய் அவளை பிடித்து வைத்திருந்தது.