“ஓகே, வா உன் மாமா வந்தாச்சு…” என்று எழுந்துகொண்டாள்.
அங்கே வைத்து எதையும் கேட்கும் விதமாக இல்லை. மேகாவிற்குமே அன்றைய நாள் சரியில்லாததை போல் தான் இருந்தது.
அத்தனை கேள்விகளுக்கும் பதில் சரியாய் இருந்ததோடில்லாமல், கணக்குகளும் காட்டப்பட்டிருக்க இங்கே தன் தந்தையும், அண்ணனும் எத்தனை சிரமப்பட்டிருப்பார்கள் என வருத்தத்தோடு தான் உடனே பார்க்க வந்தது.
வந்தால் அதைவிட வேறு எதோ ஒன்று இருக்கும் போலவே என தோன்ற ஆரம்பித்துவிட கலங்கிய மனதுடன் வெளியே வந்தாள்.
அவள் முகம் பார்த்த அதிரன் கண்டுகொண்டான் சூழ்நிலை அத்தனை சுபமில்லை என்று.
“மேகா…” என்ற அதிரனின் அழைப்பில் அஷ்வினை விடுத்து அவனை பார்க்க,
“வந்து இப்படி உட்கார்…” என தன்னருகே அழைத்துகொண்டான்.
“இன்னைக்கு இந்த ரெய்ட் யாருமே எதிர்பார்க்காதது தான் மாமா…” அதிரன் கூற,
“இருக்கட்டும்ங்க மாப்பிள்ளை. எங்களுக்கு புரியுது…” அமுதன் அதிரன் சங்கடப்படுவதை விரும்பாமல் கூற, அதற்கும் பல்லவன் ஒன்றும் பேசவில்லை அப்போதும்.
மலரும், மோனிகாவும் பல்லவனை கண்ஜாடையில் பேசுமாறு சொல்ல கல்லென தான் அமர்ந்திருந்தான் அவன்.
“மாமா, விடுங்க. இது ஒரு விஷயமா?…” என்ற அஷ்வின்,
“அப்பாவே இதை பெருசா நினைக்கலை. இன்பாக்ட் நான் கூட அப்பா கஷ்டப்பட்டிருப்பாங்க போலன்னு நினைச்சேன். அதெல்லாம் ஜஸ்ட் லைக் தட்ன்னு தட்டிவிட்டுட்டாங்க…” என்று சொல்ல பல்லவனால் மகனை முறைக்கவும் முடியவில்லை.
“ஓஹ்…” என்றுமட்டும் அதிரன் சொல்ல,
“முதல்ல ஏதாவது சாப்பிடலாம்…” என்றதும் மோனிகா உள்ளே குடிக்க எடுத்துவர செல்ல மலரும் சென்றார்.
“நானும் வரேன் அண்ணி…” என்ற மேகா அதிரனிடம் தலையசைத்துவிட்டு செல்லவும் அதிரன் போன் சப்தமிடவும் சரியாக இருந்தது.
ஹர்ஷத் அதிரனின் பி.ஏ தான் அழைத்திருந்தான் அவனுக்கு. உடனே எடுத்தவன் பேச்சில் ஒன்றும் தெரியவில்லை மற்றவர்களுக்கு.
“ஓகே, கனெக்ட் பண்ணு ஹர்ஷத்…” என்று அதிரன் சொல்லவும் சில நொடியில் இன்னொரு அழைப்பில் இணைந்தான் அதிரன்.
“அதிரன் தேவராஜ்…” என சொல்லியவிதத்தை அஷ்வின் கவனித்தாலும் அதிரனின் முகத்தில் தீவிரத்தன்மையில் யாராக இருக்கும் என்று யோசித்தான்.
ஸ்பூர்த்தியும் அதற்கு மேல் வெறுமனே படுத்திருக்க முடியாமல் எழுந்து வந்துவிட அதிரன் கையை நீட்டி மகளை தன்னருகே அழைத்துக்கொண்டான்.
“சொல்லுங்க மிஸ்டர் வேதநாயகம்…” என்றதும் அத்தனைபேருக்கும் யார் என்று தெரிந்துவிட்டது.
அஷ்வின் அதிரனை பார்த்த பார்வையில் அவனுக்கு அந்த கேள்வியும் புலப்பட ஒற்றை தலையசைப்பில் ஆமோதித்தான் அதிரன்.
“என்ன அதிரன் பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கே?…” வேதநாயகத்தின் எக்காள குரலில் அதிரனின் புன்னகை இன்னும் மிளிர்ந்தது.
“என்னைக்கும் போல தான் என் பேச்சு. இப்ப பிஸியா இருக்கேன். இது ஃபேமிலிக்கான டைம். உங்ககிட்ட அதை லாஸ் பண்ண முடியாதே?…” என்ற அதிரன்,
“இதுவும் நீங்க டூ த்ரீ டேய்ஸா என்னை ரீச் பண்ண ட்ரை பண்ணினதால தான் உங்களுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணினேன்…” என்றவனின் பேச்சில் வேதநாயகம் பல்லை கடித்தார்.
“அதிரன், என்னை பத்தி தெரியாம உங்க பொண்ணுதான் ரொம்ப ஆடறான்னா…”
“மைன்ட் யூர் வேர்ட்ஸ் மிஸ்டர்.வேதநாயகம். இதுதான் உங்க லிமிட்…” என்றான் மாறாமல் அதே குரலில்.
‘இவன் என்ன சூடாகாமல் இத்தனை இலகுவான குரலில் பேசுகிறான்?’ என்று வேதநாயகத்திற்கு தோன்றினாலும் அதிரன் குரலில் இருந்த மறைமுக எச்சரிக்கையை கவனிக்க தவறவில்லை.
அரசியலில் எத்தனைபேரை பார்த்திருப்பார். எத்தனை பேச்சுக்களை கடந்திருப்பார். இது அதற்கு மேலான ஒன்றா?
ஆனால் அதையெல்லாம் இப்போது நினைத்து பெருமைப்பட முடியாதே? முதலில் இவனிடம் சொல்லி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம் என்று தான் அதிரனை தொடர்புகொள்ள முயன்றது.
“இங்க பாருப்பா, வாழவேண்டிய பொண்ணு. வீணா இந்த கேஸ்ல சிக்கி மாட்டிக்க வேண்டாம். ஒரு வார்னிங்கா தான் சொல்றேன்…” என்று வேதநாயகம் சொல்ல,
“ஓஹ்…” என்றான் அதிரன்.
“இந்த அலட்சியம் தான் உன் வீட்டுக்கும், உன் மாமனார் வீட்டுக்கும் சேர்த்து இன்னைக்கு நான் வச்ச வேட்டு. பார்த்தியா ஒரு நாள் முழுக்க உன்னை முடக்கிட்டேன். என் செல்வாக்கு புரியாம நடக்காதீங்க அப்பாவும் பொண்ணும்…”
“ஓகே…” அவ்வளவே அதிரனிடம்.
“என்ன சாதாரணமா சொல்ற? என்கிட்டே நான் பேச நினைச்சப்பவே பேசியிருந்தா இந்த ரெய்டே அவசியமில்லை. உன் அலட்சியம் தான். இப்ப இது தேவையா?…”
“மிஸ்டர் வேதநாயகம், நான் பிஸி. இன்னொரு நாள் இது விஷயமா பேசுவோம்…”
“அதிரன்…”
“இங்க பாருங்க, இந்த வார்னிங், மிரட்டறது இதெல்லாம் என்கிட்டே வேண்டாம். நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை….” அதிரன் சொல்ல,
“என்ன? என்ன நான் நினைக்கிற மாதிரி இல்லை? எதுவுமே ரெய்ட்ல சிக்கலைன்னு சந்தோஷமா? ரெய்ட் வரவச்ச நான் உன்னை மாட்டிவிட பொருளை சேர்த்து வச்சிருந்தா என்ன பண்ணியிருப்ப?…” என குதித்துக்கொண்டு பேச,
“ஓகே, டூ இட்…” என்ற அதிரனின் சிரிப்பில் வேதநாயகத்தின் ரத்தக்கொதிப்பு இன்னும் அதிகமானது.
“அதிரன்…”
“உங்களால என்ன முடியுமோ முயற்சி பண்ணிக்கோங்க. பை…” என்று சொல்லி அழைப்பை வைத்துவிட எதிரிருந்த பல்லவனும், அமுதனும் கிலி பிடித்த முகத்தோடு பார்த்திருந்தனர்.
“என்ன நீங்க? நம்ம பிள்ளைக்கு எடுத்து சொல்லி என்னன்னு பார்க்காம இப்படி அவனுக்கு கொம்பு சீவி விட்டுட்டீங்க? இந்த வேலையே வேண்டாம்ன்னு சொல்லுங்க ஸ்பூர்த்திகிட்ட…” பல்லவன் வேகமாய் சொல்ல,
“தப்பே பண்ணாம என்ன எடுத்து சொல்லனும்? அதுவும் வேலையை விடனும்ன்ற அளவுக்கு என்ன நடந்திருச்சு?…” என்றான் அதிரன்.
“என்ன?…” பல்லவன் திகைக்க மோனிகா வந்துவிட்டாள்.
“நிஜம் தானே? என் பொண்ணு அவளோட ட்யூட்டி என்னவோ அதை செஞ்சா. இதுல யார் என்ன பண்ணிட முடியும் என் பொண்ணை. அதுவும் என்னை மீறி நெருங்கிட முடியுமா?…” என்றான் அதிரன் ஸ்பூர்த்தியை தோளோடு அணைத்தபடி.
“இல்லை எனக்கென்னவோ இது சரியாப்படலை…” பல்லவன் பேச,
“இப்ப இந்த பேச்சு எதுக்கு வீட்டுல. வந்த நேரத்துல இதான் பேசனுமா?…” என்று கடிந்தவள் அனைவருக்கும் குடிக்க தர ஸ்பூர்த்தியும் எடுத்துக்கொண்டாள்.
அஷ்வினின் பார்வை அவளிடமிருக்க அவள் அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“நந்து எங்கப்பா?…” என்றாள் அதிரனிடம்.
“தாத்தாவோட இருக்கான் ம்மா….” என்ற அதிரன் பல்லவனின் முகத்தை அவதானித்தபடி அமுதனிடம் அன்று என்ன நடந்ததென கேட்டபடி இருந்தான்.
அரைமணி நேரம் கூட இருந்திருக்காது. என்னவோ அந்த கனத்த சூழல் அங்கே அவர்களை இருக்கவிடவில்லை.
“காயம் வலிக்குதா ஸ்பூர்த்திப்பா? ஹாஸ்பிட்டல் போகனுமா? இல்லை டாக்டரை வீட்டுக்கு வர சொல்லவா?…” என்றவனிடம்,
“இல்லப்பா, லேசா தான். மாமா பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டாங்க. சரியாகிடும்…” என்றாள்.