அதிரனுடன் அஷ்வினும் வர அவனை பார்க்க வேண்டாம் என்று வந்துவிட்டவளை அதிரனும் கவனித்தான்.
“பை மாமா…” என்ற அஷ்வினிடம் திரும்பிய அதிரன்,
“சேம்ப் உனக்கென்னடா, ஏன் டல்லா இருக்க? மாமா இருக்கேன்? சியரப் மை பாய்…” என்று அவனின் கன்னத்தை தட்டினான் அதிரன்.
அதுவரை இறுக்கமாய், மிதமான கடுப்புடன் நின்றிருந்த அஷ்வினுக்கு தன்னுடைய இறுக்கத்தை பிடித்துவைக்க முடியாமல் அதிரனை கட்டிக்கொண்டான் அஷ்வின்.
“லவ் யூ மாமா…” என்றவனின் வார்த்தைகள் எப்பொழுதையும் போல் அதிரனை நெக்குருக செய்தது.
“சேம்ப், நீ இன்னும் லிட்டில் சேம்ப் தான்…” என்று அவனை இறுக்கமாய் கட்டி லேசாய் தூக்கி இறக்கினான் அதிரன்.
“எப்பவும் போல சிரிச்சுட்டே இருக்கனும் சேம்ப். புரியுதா? எப்பவும். மாமா சொல்றேன்ல…” என்றதும் அஷ்வினும் தலையசைக்க ஸ்பூர்த்தியை தவிர்த்து அத்தனைபேரும் இவற்றை கலங்கிய விழிகளுடன் கவனித்தனர்.
“ஓகே, இப்ப மாமா கிளம்பவா? இல்லை, என்னோட வரியா?…” என கேட்க,
“இன்னைக்கு நைட் நீங்க ப்ரீனா ஒரு ட்ரைவ் போலாம் மாமா…”
“சூர் சேம்ப், உனக்கில்லாத நேரமா? நானே வந்து பிக்கப் பண்ணிக்கறேன். அதுவரை ரெஸ்ட் எடு. ஸ்லீப்பிங் ஒரு குட் மெடிஸின். நான் வர வரைக்கும் தூங்கு சேம்ப்…” என்று சொல்லி சிரித்தவன் காரில் ஏறிக்கொண்டான்.
“ஆனா இவ்வளோ மோசமானவரா நீங்க மாறுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லைங்க. பிள்ளைங்களை இப்படி கஷ்டப்படுத்தறீங்க. இது சரியில்லை. அவ்வளோ தான்…” என்ற மோனிகா,
“மாமா, உங்க பிள்ளைட்ட சொல்லி வைங்க. அவருக்கு அஷ்வின் எப்படியோ அப்படித்தான் எனக்கும். எதுக்கோ பயந்து வீட்டை எரிச்ச கதையா ஆகிருச்சுன்னா நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்…” என்று சொல்லிவிட்டு செல்ல அமுதன் மகனை முறைத்தார்.
அதிரனுடன் காரில் வந்துகொண்டிருந்த ஸ்பூர்த்தியிடம் மேகாவும், அதிரனும் எதுவும் கேட்கவில்லை.
வீடு வரும் வரை அமைதியே நீடிக்க உள்ளே வந்ததுமே வேகமாய் மாடிக்கு செல்ல ஓடியவள் பின் தன் பின்னே திரும்பி பார்த்தாள்.
நிதானமான நடையுடன் சாதாரணமாக அதிரன் வர அதற்கு மேல் அப்படியே செல்ல முடியாமல் மீண்டும் கீழிறங்கினாள் ஸ்பூர்த்தி.
“ப்பா…” என அவனின் கையை பிடித்துக்கொள்ள,
“சொல்லுப்பா…” என்றான் மகளின் தலையை கோதி.
“மாமா ரொம்ப கஷ்டப்படறாங்கப்பா…” என பொத்தாம்பொதுவாய் சொல்ல மேகா வேதனையுடன் மகளை பார்த்தாள்.
தன் அண்ணனை தெரியும் தானே? தான் பார்க்காததா? ஆனால் அதை போல இந்த விஷயம் அத்தனை சுலபமாகிவிடுமா என தெரியாமல் மேகாவின் மனது வருந்தியது.
“கஷ்டமில்லாம லைஃப்ல எதுவுமே சாத்தியமில்லை ஸ்பூர்த்திப்பா…” என்றான் அதிரன் சிறு புன்னகையுடன்.
“ப்பா…” அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“எனக்கு நீ எப்படியோ, என் சேம்ப் அப்படித்தான் ஸ்பூர்த்தி…” என்ற அதிரன்,
“நீ மேல போ. பாட்டி கோவிலுக்கு போயிருக்காங்க. வரவும் டின்னருக்கு கீழே வா. அதுவரை உன் ரூம்ல இரு….” என்றான் அவன்.
ஸ்பூர்த்தி ஒன்றும் சொல்லாமல் தலையசைத்துவிட்டு மாடிக்கு செல்ல அவள் செல்வதை பார்த்த மேகா,
“இருந்தாலும்…” என்ற மனைவியின் கையை எடுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டவன்,
“மேகா நான் சொல்றேனே? ஏன்டா? நாம பார்க்காததாடா? சில் மேகா….” என்றான் அவளின் தலையில் கை வைத்து அழுத்தியபடி.
இரவு உணவும் ஸ்பூர்த்திக்கு அறைக்கே சென்றது. மாடிக்கு சென்ற பின் அவள் கீழே வரவே இல்லை.
அஷ்வின் அழைப்பானோ என்னவோ என்று காத்திருந்து, அழைத்தால் என்ன பேசவது என்று யோசித்து என ஸ்பூர்த்தி மனதெல்லாம் ரணவேதனை.
காத்திருந்து கை சேரும் நேரம் இப்படி ஒரு திருப்பத்தை நினைத்தும் பார்க்கவில்லை.
விருப்பம் சொல்லிவிட்டு வந்த பின்னர் அதில் பல்லவனுக்கு அதிர்ச்சி மட்டுமே என நினைத்திருந்தாள்.
அதுவும் தான் பேசியதை வைத்தும், இதுவரை தாங்கள் பழகிய விதத்தை வைத்தும் இதனை எதிர்பார்த்திருக்காமல் இருந்ததனால் உண்டான அதிர்ச்சி.
தான் கடைசியாக பேசிவிட்டு வந்ததில் உண்டான கோபத்தின் ஒதுக்கம் என்று நினைத்திருக்க இப்போது தானே பல்லவன் மனதில் இருப்பதே புரிந்தது.
மனதெல்லாம் விண்டுபோனது. அஷ்வினா? வேலையா? என்று வரும் பொழுது அஷ்வினுக்காகவே இந்த வேலையை தான் விட முடியாது.
அதை அவன் மன்னிக்கவே மாட்டான் என தெரியும். அத்தனை தூரம் அஷ்வினை அறிந்து வைத்திருந்தாள்.
இப்போது தன்னை உயிராய் வளர்த்த தாய்மாமனின் மனதின் வேதனையில் வாழ்க்கையை வாழ்வதா?
தனக்கு காயம்பட்ட சற்று நேரத்தில் எப்படி துடித்து போனான் பல்லவன்? நினைத்தவளுக்கு கண்ணீர் இறங்கும் போலிருக்க முயன்று அடக்கினாள்.
“ம்ஹூம், நான் ஸ்ட்ராங்கா இருக்கனும். பலவீனமாகிட்டா என்னால என் முடிவுல உறுதியா இருக்க முடியாது. ஸ்பூர்த்தி பீ ஸ்ட்ராங்…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.
எல்லாம் தெரிந்தும், அஷ்வின் வீட்டில் வைத்து பல்லவனுடனான அஷ்வின் பேச்சை கேட்டும் என்று முழுதாய் தளர்ந்துபோயிருந்தாள்.
அஷ்வின் மறுநாள் காலை வரை அழைக்கவே இல்லை. வீட்டிற்கு தன்னை பார்க்க வருவானோ என்று நினைத்திருக்க அதுவும் இல்லை.
அதற்கு மேலும் தள்ளி போடாமல் பல்லவனுக்கு அழைத்து கடைக்கு வருகிறேன் என்று கூறி வந்தும் விட்டாள்.
“சொல்லுங்க மாமா, நான் என்ன பண்ணட்டும்?…” என்று நேரடியாக கேட்ட பெண்ணை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை பல்லவனால்.
“இப்ப கால் காயம் பரவாயில்லையா ஸ்பூர்த்தி?…” பல்லவன் கேட்க,
“நகம் உடைஞ்சுருச்சு மாமா. அப்படியே விட்டா உறுத்துமே. காயத்துல பட்டு இன்னும் வலிச்சுட்டே இருக்கும். காயமும் ஆறாது. அதான் வெட்டி எறிஞ்சுட்டேன்…”
ஸ்பூர்த்தி முகம் மாறாமல் மிதமான புன்னகையுடனே தெளிவாய் பேச அது அதிரனை நினைவுப்படுத்தியது பல்லவனுக்கு.
“நீங்க சொல்லுங்க மாமா. நான் நாளைக்கு பாரஸ்ட்க்கு கிளம்பிருவேன். சொல்லுங்க என்ன பண்ணட்டும் நான்?…”
“குட்டிம்மா?…”
“ரெண்டுவருஷம் முன்னாடி ஒரு கோவத்துல எல்லாரையும் கத்திட்டு அப்படியே கிளம்பிட்டேன். முட்டாள்த்தனம்ன்னு அப்போ புரியலை. இந்த தடவையும் என்னால இவ்வளோ இருக்கும் போது அப்படியே போகமுடியாதே மாமா. சொல்லுங்க…”
பல்லவன் அப்போதும் அமைதியாய் இருக்க அமுதன் மாடிக்கு வந்தவர் அங்கேயே நின்றுவிட்டார் இவர்களின் பேச்சுக்குரலில்.
தனக்கு முன்பே பல்லவன் கடைக்கு கிளம்பி வந்துவிட்டிருக்க, தான் வரவும் ஸ்பூர்த்தியும் வந்திருப்பதை அறிந்து மாடிக்கு வந்து பார்த்துவிட்டு நின்றுகொண்டார்.
“அன்னைக்கு நான் கேட்டதால நீங்க அப்படியே ஷாக்ல நின்னீங்கன்னு நினைச்சுட்டேன். ஆனா எனக்கு அப்போ தெரியாதே மாமா நீங்க முன்னாடி இருந்தே இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்திர கூடாதுன்னு நினைச்சது…”
“அஷ்வின் மாமா மேல இப்படி ஒரு விருப்பம் வரும்ன்னு நானுமே நினைச்சதில்லை. அன்னைக்கு எனக்கு அப்படி ஒரு விஷயம் நடக்கவும் தான் பர்ஸ்ட் அவுட்டாகி அவ்வளோ பேசிட்டேன்..”
“ப்ச், அதை விடுங்க. இப்ப நான் என்ன செய்யட்டும். வேணும்னு சொன்ன நானே வேண்டாம்ன்னு சொல்றேன். சொல்லிடட்டுமா மாமா?…” என்றவள் பார்வையை எதிர்கொள்ளமுடியவில்லை பல்லவனால்.
அந்த கருவிழிகளுக்குள் உணர்வுகள் போராட்டம் புரிய பல்லவனுக்கு அதனை காண முடியவில்லை.
“ஸ்பூர்த்தி…”
“நீங்க என்னோட தாய்மாமா. உங்களுக்கு என் வாழ்க்கையை முடிவு பன்ற அதிகாரம் உரிமை எல்லாமே இருக்கு மாமா….” என்றவள்,
“நீங்கன்னா எனக்கு அவ்வளோ புடிக்கும். உங்க மனசை உடைச்சுட்டு உங்களை வேதனைப்படுத்திட்டு அந்த வீட்டுக்குள்ள நான் மருமகளா, வேண்டாம் மாமா…”
“அஷ்வின் மாமாவுக்கு அலையன்ஸ் பாருங்க. நான் விலகிடறேன்…”
“அவன் ஒத்துக்கமாட்டான் ம்மா…” பல்லவனுக்கு அவனறியாமலேயே அந்த வார்த்தை வந்துவிட அது ஸ்பூர்த்தியை பலமாய் காயப்படுத்தியது.
இப்படி சட்டென பல்லவன் சொல்லிவிடுவான் என்று எதிர்பார்க்காத மனது பலத்த அடிவாங்கிவிட அவற்றை முயன்று விழுங்கினாள்.
தன்னை ஒருவிதத்தில் தயார்ப்படுத்திக்கொள்வதை போல கண்களை மூடி வேறு திசையில் திரும்பியவள் உணர்ச்சிகளை அடக்க போராடி மீண்டுவிட்டாள்.
“ஓகே, அப்போ எனக்கு வேற வரன் பாருங்க. நான் கல்யாணம் பண்ணிக்கறேன். நான் செட்டிலாகிட்டா அஷ்வின் மாமா என்ன பண்ணிட முடியும்? அப்பா அப்படியே விட்டுட மாட்டாங்க மாமாவை…”
“குட்டிம்மா…” என அவளின் வார்த்தையில் அமுதனும், பல்லவனும் அலற,
“வீட்டுக்கு போறேன்னு சொன்னேன்…” என்று கிளம்பிவிட்டாள்.
அதற்கு மேல் அங்கே எப்படி இருக்கமுடியும்? அங்குமட்டுமல்லாமல் அந்த நகரத்திற்குள்ளேயே இருக்க நரகம் போல் மூச்சு முட்டியது.
அஷ்வின் தன்னை வேண்டாம் என்று அறைந்த பொழுது கூட இத்தனை வலித்திராதவளுக்கு இப்போது இந்த முடிவில் உயிர்வலி உயிரை எடுத்தது.
வீட்டிற்கு வரும் வரை வேறு யோசனைகள் எதுவுமில்லை. என்னவோ தைரியத்தில் வரன் பார்க்க சொல்லிவிட்டாலும் மனதிற்குள் பெரும் அச்சம்.
ஒருவேளை இதே வேகத்தில் பல்லவனும் பார்த்து வரனுடன் வந்துவிட்டால்? ஓவென்று கத்தவேண்டும் போல் வெறி வந்தது.
உணர்வுகளை காட்ட கூட முடியாமல் வெறித்த பார்வையுடன் விரல்களை கோர்த்தும் பிரித்துமாய் அவள் பரிதவிப்புடன் வீடு வர மேகா மட்டுமே வீட்டில்.
யாரையும் பார்க்க விருப்பமில்லை. வேகமாய் தன்னறைக்கு சென்றவள் அன்றே எங்காவது கிளம்பி விடலாம் என்று தோன்ற தன் உடமைகளை எடுத்து வைத்தாள்.
அஷ்வின் வந்துவிட்டால் நிச்சயம் அதற்கு பதில் கூற முடியாது. அதிலும் தானே தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்ன விஷயம் அவனை உக்கிரப்படுத்தி இருக்கும் என்பதில் அத்தனை நிச்சயம்.
அஷ்வினை நினைக்கையில் வேதனை மனதை பிழிய அங்கே தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டாள் ஸ்பூர்த்தி.
அவனின்றி ஒரு வாழ்க்கை? பல்லவனின் மனது மாறிவிடாதா என ஒருபக்கம் ஆசைகள் விம்மி வெடிக்க, இன்னொருபக்கம் மாறவில்லை என்றாலும் வரன் என்ற ஒன்றை பார்த்துவிட வேண்டாம் என்றும் துடிக்க ஆரம்பித்தது.
“அஷ்வின் மாமா…” என்று முணுமுணுக்க தொண்டை எல்லாம் இறுக்கி பிடித்து மூச்சு விடமுடியாமல் திணறி போய் அமர்ந்திருந்தாள்.