ஸ்பூர்த்தி கிளம்பவும் பல்லவனை பார்த்து உறுத்து விழித்தார் அமுதினியன்.
“நீயெல்லாம் என்னடா மனுஷன்?…”
“அப்பா…”
“சும்மா இரு பல்லவா. இப்படி நீ என் பேத்தி மனசை உடைச்சிட்டியே?…” என ஆதங்கமாய் கலங்கிவிட்ட விழிகளுடன் கேட்க,
“அப்பா குட்டிம்மா தான் வந்து இதை பத்தி பேசினா…”
“அவ என் பேத்திடா. என் மக ரத்தம். வேற எப்படி பேசுவா? அதுவும் உன் மூஞ்சிலையே எழுதி ஒட்டியிருக்கே நீ என்ன நினைக்கிறன்னு?…” என்று சத்தம் போட பல்லவனுக்கு தாளவில்லை.
“நான் என்ன செய்ய? என்னால முடிஞ்சது அமைதியா இருக்கறது. ஆனா ஸ்பூர்த்தி இப்ப என்ன செய்யன்னு வந்து சொல்லுங்க மாமான்னு கேட்கும் போது வேற எப்படி பேச?…” என்றவன்,
“இது அவ நல்லதுக்கும் சேர்த்துன்னு உங்க யாருக்குமே ஏன் புரியலை?…”
“எதுடா நல்லது? இப்படி ரெண்டு பிள்ளைங்களையும் பிரிச்சு வாழ வைக்கிறதா நல்லது? அது ஒரு வாழ்க்கையா?…”
“அப்பா நீங்க அமைதியா இருங்க…”
“என்ன அமைதியா இருக்க? இது உன் மகனுக்கு தெரிஞ்சா சும்மா இருப்பானா?…” என்றவர்,
“என் பேத்தி உயிரே இல்லாம போறாடா. என்னடா குறை அவளுக்கு?…”
“அப்படி நான் சொல்லலையேப்பா?…”
“ஆனா அதுக்கும் மேல பேசிட்டியே? உன்கிட்ட கேட்டா தானே? என்ன செய்யனும் மாமான்னு. அஷ்வினுக்கு பொண்ணு பாருங்கன்னு சொல்லி சொன்னா தானே?…”
“ஆமா…”
“அப்ப கூடவா அவ முகத்தை பார்த்து உன்னால அந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சது. அவன் ஒத்துக்கமாட்டான்ம்மான்னு சொன்னியே. அந்தளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கறவன் அவ வாயாலையே எனக்கு வரன் பாருங்கன்னு சொல்ல வச்சிட்டியே?…”
“அப்பா எனக்குமே ஸ்பூர்த்தி இதை சொல்வான்னு தெரியாது…” பல்லவன் தகப்பனுக்கு புரிய வைக்க முயன்றான்.
“என்னடா தெரியாது? என்ன தெரியாது? அவளை அப்படி சொல்ற சூழ்நிலைக்கு தள்ளினதே நீ தான். வேற என்ன பண்ணுவா என் பேத்தி?…” என்று தளர்ந்து போய் கீழே இறங்க,
“அப்பா பார்த்து…” என்று அவரை பல்லவன் பிடிக்க,
“இன்னும் என்னை என்னலாம் பார்க்க வைக்க போறியோ?…” என்றவர்,
“ஆமா மாப்பிள்ளை பார்க்கனும்ன்ற முடிவுக்கு வந்துட்டியா நீ?…” என்றார் மகனிடம்.
“அப்பா ப்ளீஸ்…” பல்லவன் தடுமாற,
“பதில் இல்லைல. இல்லை என்கிட்டே சொல்லமாட்டியா? உன் மருமக உன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டா. நீ பார்ப்ப தானே?…” அமுதன் வலியுடன் கேட்க பல்லவன் அமைதியாய் நின்றான்.
“நீ சொல்லு, என்கிட்டே இல்லை, உன் மகன் வருவான், அவன்கிட்ட சொல்லு…” என்றதும்,
“அஷ்வினா? அவன் இங்க?…” பல்லவன் அதிர,
“அவன் தான். அவனே தான். ஸ்பூர்த்தி இங்க வந்திருக்கவுமே நான் அவன்கிட்ட சொல்லிட்டு தான் மாடிக்கே வந்தேன். வந்துருவான்…” என்று கீழே இறங்கிவிட்டார்.
பல்லவன் அங்கிருந்து அசையவில்லை. அங்கேயே இருந்த மேஜை அருகே சென்று அமர்ந்து தலையை பிடித்துக்கொண்டான்.
ஸ்பூர்த்தி கலங்கிய முகத்தில் இருந்து தந்தையின் பேச்சுக்கள் என்று ஒவ்வொன்றாய் மனதிற்குள் அலைமோத தன்னுடைய எண்ணங்களை மீண்டும் ஒருமுறை சுய அலசலில் கொண்டு வந்து நிறுத்தினான்.
எல்லாவற்றிற்கும் மேல் முதல்நாள் மாலை அஷ்வின், ஸ்பூர்த்தி வீட்டிற்கு வரும் முன்னான வேதநாயகத்தின் அலைபேசி அழைப்பு.
ஆம், அந்த அழைப்பை பற்றி வீட்டில் யாரிடமும் இன்னும் தெரியப்படுத்தவில்லை பல்லவன்.
அழைத்ததோடில்லாமல் தன்னிடமே அதிரனையும், ஸ்பூர்த்தி சொல்லிவைக்கும்படி மிரட்டியிருக்க அதை மற்றவரிடம் சொல்லும் எண்ணம் இருந்தாலும் அதிரனின் பேச்சு அதற்கு தடையாய் இருந்துவிட்டது.
சொன்னால் மட்டும் என்னவாகிவிடும்? தன்னை பேசி சரிக்கட்டத்தான் பார்ப்பார்கள் தன் வீட்டில் என்று தோன்ற அப்படியே அமர்ந்திருந்தவன் காதில் மடமடவென்று மாடிக்கு யாரோ வரும் சத்தம்.
படியில் அத்தனை அதிர்வு ஏற்பட காலடி சத்தத்திலேயே அது மகன் என்றும், அவன் கோபத்தின் அளவு என்ன என்பதையும் வெளிப்படுத்தியது.
தடதடப்புடன் மகன் என்ன சண்டையிடுவானோ, என்ன கோவப்படுவானோ என்று பார்க்க மாடிக்கு வந்த அஷ்வின் பல்லவனை நோக்கி வேக நடையுடன் வந்தான்.
“இல்லைன்னு சொல்லலைப்பா. இப்ப கூட நீங்க என் அப்பான்றதை தாண்டி என் மனைவியோட மாமனார்ன்ற பொசிஷன்ல வச்சு பேசறேன்…” என்றதும் பல்லவன் அதிர்ந்தான்.
“அஷ்வின்…”
“எஸ், ஐ மீன் இட். ஸ்பூர்த்தியை நான் மனைவியா நினைக்க ஆரம்பிச்சுட்டேன். இந்த ரெண்டுவருஷமா மனசளவுல அவளோட வாழ்ந்திட்டிருக்கேன். நீங்க என்னடான்னா இப்ப போய் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கறேன்னு கிளம்பறீங்களே?…” என்றான் சின்ன சிரிப்புடன்.
பல்லவன் முகம் வெளிறியது மகனின் பேச்சில். இத்தனை தூரம் தீவிரமாய் இருப்பவனை மீறி என்ன செய்துவிட முடியும்?
தனக்கு மட்டும் இப்படி நடந்துகொள்ள ஆசையா? இந்த வேலை, அதனால் குடும்பத்தில் குலையவிருக்கும் அமைதி, எதிர்கால வாழ்க்கை என ஒவ்வொன்றையும் பார்க்கையில் மற்றவை எல்லாம் பின்னுக்கு தான் போனது.
“அஷ்வின்…”
“சொல்லுங்கப்பா, என்னை பார்த்தா ஸ்பூர்த்திக்கு ஏத்த மாப்பிள்ளை மாதிரி தெரியலையா? இல்லை அவளை கல்யாணம் பன்ற தகுதி எனக்கில்லைன்னு நினைக்கறீங்களா?…”
“என்னடா நீ? தகுதி அது இதுன்னு?…”
“அப்போ ஸ்பூர்த்தி நம்ம வீட்டுக்கு மருமகளா வர தகுதி இல்லையா? வேற என்ன நினைக்கறீங்க?…” என்றவன்,
“இந்த பயம், எதாச்சும் நடந்திரும், உன் வாழ்க்கை போயிரும்ன்ற நல்லெண்ணம் அப்படின்ற கதையெல்லாம் வேண்டாம்…” என்றான் இன்னும் சிரிப்போடு.
அஷ்வினின் அந்த புன்னகைக்கு பின்னான வலி அவனின் விழியில் பிரதிபலித்தது.
“இது கதையாடா? நான் கவலையோட சொல்றது உனக்கு கதையா தெரியுதா?…” பல்லவன் கேட்க,
“என்ன பார்க்கலை? மாமா அரேஞ்ச் பன்னிருக்கறது தான் உங்களுக்கு தெரியும். என்னோட பார்ட் தெரியாது தானே?…”
“அஷ்வின்…” இது பேரதிர்ச்சி.
தன் மகன் இத்தனை தூரம் இறங்கி யோசிக்க கூடியவனா என சுத்தமாய் இதுவரை தெரிந்திருக்கவில்லை பல்லவனுக்கு.
“ஸ்பூர்த்திக்கே தெரியாது. இவ்வளோ தூரம் நம்ம வீட்டு பொண்ணை வேலைக்கு அதுவும் இவ்வளோ ரிஸ்க்கியான வேலைக்கு அனுப்பியிருக்கும் போது எப்படி சும்மா நீயே பார்த்துக்கோன்னு விடுவோம்?…” என்றவன்,
“ஸ்பூர்த்திக்கு தெரிஞ்சா இன்னும் குதிப்பா. அதான் அவகிட்ட சொல்லலை. காட்ஸ் இல்லைன்னாலும் ஸ்பூர்த்தியால எதையும் பேஸ் பண்ண முடியும். இருந்தாலும் அங்க என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியனுமே?…”
“அஷ்வின் எவ்வளோ நாள் இதையே பண்ண முடியும்?…” பல்லவனுக்கு இதில் இன்னுமே எரிச்சல் தான்.
“ஏன் முடியாதுன்னு நீங்க நினைக்கறீங்க ப்பா? எனக்கு புரியலை. சரி இதை விடுங்க. உங்களால எப்படி அவளை கஷ்டப்படுத்த முடிஞ்சது?…” என்றதும் அதுவரை இருந்த பல்லவனின் முகமே மாறிவிட்டது.
அப்பட்டமாய் குற்றவுணர்வுடன் கூடியே பெரும் தவிப்பு. மகனையும் எதிர்கொள்ள முடியவில்லை.
“உங்களுக்காக பன்றேன் மாமான்னு வந்த பொண்ணை அழவிட்டு அனுப்பியிருக்கீங்க. உங்களுக்கு ஏன் ஸ்பூர்த்திக்காக கொஞ்சம் மனசை மாத்தனும்னு நினைக்க தோணலை?…” என்றான்.
“நான் உங்க ரெண்டுபேருக்காக…”
“ப்பா எழுந்திரிங்க…” என அஷ்வின் எழுந்துவிட்டான்.
பொறுமை எல்லாம் சென்றுவிட்டது அவனுக்கு. எத்தனை பேசியும் பல்லவன் இப்படியே இருக்கிறாரே என்ற கோபம் ஒருபக்கம்.
தானிருக்கையில் மாப்பிள்ளை பார்க்க சொல்லுமளவிற்கு எவ்வளவு துணிச்சல் அவளுக்கு என்று ஸ்பூர்த்தியின் மேல் பலமடங்கு கோபம் அவள் பக்கம்.
“அஷ்வின் என்னன்னு சொல்லு…”
“உங்க மருமகளை பார்க்க போகனும்…”
“இப்ப அங்க எதுக்கு?…” என பதறினான் பல்லவன்.
“அவளை எப்பவும் பார்ப்பேன். என் வொய்ப். இப்ப பார்க்கனும்னு தோணுது. அதுவும் மாமனாரும் மருமகளும் என்னை வச்சா கேம் ஆடறீங்க?…”
“அஷ்வின்…”
“இதுக்கு மேல மாப்பிள்ளைன்னு ஒரு பார்ப்பீங்களான்னு நானும் பார்க்கறேன். அதுக்கு முன்னாடி அவளை நான் பார்க்கறேன்…”
“அஷ்வின்…”
“வாங்கப்பா முதல்ல…”
“ம்ஹூம், நான் வரலை…”
“என்னை வச்சு தானே இந்த பேச்சு. எனக்காக தானே? இப்ப என் முன்னாடியே அவளை உங்ககிட்ட பேச சொல்றேன். அவ சொன்னா பார்த்துக்கலாம்…” என்று சொல்ல,
“ஸ்பூர்த்தியை பத்தி உனக்கு தெரியும் தானே?…” அவள் சொல்லிவிடுவாள் என்ற அர்த்தத்தில் பல்லவன் சொல்ல,
“என்னை பத்தியும் உங்களுக்கு தெரியும். ஸ்பூர்த்திக்கு இன்னும் நல்லாவே தெரியும். சோ அங்க பேசுவோம்…” என்று தகப்பனின் கையை பிடித்துக்கொண்டு வேகமாய் கீழே இறங்கினான்.