அஷ்வின் கிளம்பி செல்லவும் அத்தனைபேரும் பல்லவனிடம் பார்வையை செலுத்த அவன் நின்ற கோலத்தில் மோனிகா சிரித்துவிட்டாள்.
தேவராஜிற்கு கூட புரிந்தது இது அஷ்வினின் வேலை என்று. அதில் பல்லவன் திணறிக்கொண்டிருந்த விதத்தில் தலையசைத்தவர்,
“சரி உட்காருங்க. பேசலாம்…” என்றார் அவரும்.
‘என்ன பேசலாமா?’ பல்லவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அமைதியாக அமர்ந்தான்.
மனதிற்குள் மகனை போட்டு திட்டுவதற்கு கூட தோன்றவில்லை. அடுத்து என்ன? இதிலிருந்து பின்வாங்க முடியாதே?
யாரையும் பார்க்கவில்லை. யாரின் முகம் பார்த்தும் பேச முடியவில்லை. இதற்கு மேலும் தன்னால் இதை தடுக்க முடியும் என்று தோன்றவில்லை.
வந்த பொழுது அஷ்வின் இருந்ததற்கும், ஸ்பூர்த்தியை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றவன் அங்கிருந்து கிளம்பிய விதத்திற்கும் பல்லவனுக்கு என்னவோ புரிந்தது.
ம்ஹூம், இது இனி தன் கையில் இல்லை. மகன் அத்தனையையும் உடைத்துவிட்டான் என்று புரிந்து போனது.
“என்ன செய்யலாம்? பெரியவங்க நீங்களே சொல்லுங்க…” பல்லவன் குரல் சுரத்தின்றி வந்தது தேவராஜிடம்.
அதிரனை பார்க்கவில்லை. தங்கையையும் பார்க்கவில்லை. அவர்கள் முகம் பார்த்து இதனை கேட்கும் மனநிலை சுத்தமாய் இல்லை.
ஆனால் பல்லவனின் தளர்ந்த நிலை அதிரனுக்கு தெளிவாய் விளங்கியது. அவன் தேவராஜை பார்க்க அவர் கண்ணமர்த்தினார்.
“கொஞ்சம் அமைதியா இருப்பா பல்லவா. பெரியவங்கன்னா நான் மட்டும் கிடையாதே? சம்பந்தி வரனும்…” என்றார் அவர்.
“மேகா எல்லாருக்கும் குடிக்க ஜூஸ் கொண்டு வர சொல்லு…” அதிரன் மேகாவிடம் சொல்லிவிட்டு பல்லவன் அருகே அமர்ந்தவன் பல்லவனின் கையின் மீது கை வைத்து அழுத்தினான்.
அதிரனுக்கு அதுவரை இருந்த தவிப்பு போய் இப்போது தகப்பனாக பல்லவன் நிலை புரிய அவனருகே அமர்ந்துகொண்டான்.
அதிரனின் அந்த ஆறுதலான தொடுகையும் அருகாமையுமே பல்லவனை உடைந்துபோக செய்ய அப்படியே முகத்தை மூடியபடி கைகளை ஊன்றிக்கொண்டான்.
அவனால் இதனை ஜீரணிக்கவும் முடியவில்லை. நடக்க போவதை தடுக்கவும் முடியவில்லை.
எல்லாவற்றிற்கும் மேல் அங்கிருப்பவர்கள் முன்னிலையில் தன்னுணர்வுகளை அடக்க முடியவில்லை.
அங்கே, தங்கையை கொடுத்த வீட்டில் அவர்கள் முன்பு பெரிதாய் துவண்டு போயிருந்தான் பல்லவன். மனதளவிலும், உடலளவிலும்.
அஷ்வினை பொறுத்தவரை மட்டுமல்ல, தன்னை தவிர மற்றவர்களுக்கு இது தவறாக இருந்தாலும் தன்னால் அப்படி இலகுவாய் எடுக்க முடியவில்லை என்பதே வருத்தமாக இருந்தது.
இது தன்னுடைய குறையா? தவறா? இல்லை வேறு எதுவுமா? பல்லவனால் யோசிக்கமுடியவில்லை.
ஆனால் அந்த நொடி நெஞ்செல்லாம் விம்மி வெடிக்க இனி நடப்பதாவது நல்லவிதமாய் நடக்கட்டும் என்று முடிவிற்கு வருவதை தவிர வேறு வழி தெரியவில்லை.
மகனுக்கடுத்து தான் மற்றவை, உறவுகள் என்று நினைத்தாலும் இந்த நொடி மகன் என்னும் உறவோடு சேர்ந்து மற்றவர்களும் தொட்டு தொட்டு நிற்க பூச்சரமாய் இருந்த இந்த பந்தத்தை உதிர்க்க மனது வரவில்லை.
“பல்லவன், ப்ளீஸ் காம் டவுன்…” அதிரன் அவனின் கைப்பிடியின் வலுவை இன்னும் கூட்டினான்.
“அஷ்வின் சொன்னமாதிரி கல்யாணத்துக்கு நாள் பார்க்கலாம்…” பல்லவன் சொல்ல அதிரனுக்கு அதுவே வலித்தது.
“உங்க வருத்தத்தோட கல்யாணத்தை முடிவு பன்றதா? நெவர்…” என்றான் அதிரன்.
பல்லவன் அவனை நிமிர்ந்து பார்க்க சற்றுமுன் இருந்த கலக்கம் குறைந்து தெளிவாய் பார்த்தான் அதிரன்.
“அஷ்வின் ஸ்பூர்த்தி வெடிங் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அதை முழுமனசா நாம நடத்தி வைக்கிறது. உங்க சங்கடத்துல அது வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்…” அதிரன் சொல்லவும் இன்னுமே கஷ்டமாக இருந்தது பல்லவனுக்கு.
அதிரனின் பெண்ணை, தன் தங்கை மகளை, தான் வளர்த்த உறவை வேண்டாம் என்று எத்தனை தூரம் மெனக்கெட்டும் இன்னும் அவர்களின் மனதில் தன்னிடம் அப்படியே இருக்க ஒருவாறு சஞ்சலம் பூண்டது அவன் மனது.
ஒருபக்கம் பிள்ளைகளை தவிக்கவிட்டதன் குற்றவுணர்ச்சி, இன்னொருபக்கம் நடக்க வேண்டாம் என்று நினைத்த ஒன்று நடக்க போகும் அச்சம், மறுபக்கம் இது தன்னால் தான் என எல்லாருக்கும் தெரிந்திருந்தும் தன்னை தாங்கும் குடும்பம் என பல்லவன் நிலை பரிதாபமாய் போனது.
“எனக்கு மட்டுமில்லை இங்க எல்லாருக்குமே உங்களை புரியும் பல்லவன். அவரவர்க்கு அவரவர் நியாயம். உங்க நியாயத்தில எந்த தப்பும் நான் சொல்லமாட்டேன் அஸ் எ பாதரா நீங்க வேற எப்படி யோசிக்கமுடியும்?…” என அதிரன் சொல்ல,
“அதி இந்த டாப்பிக் போதும்….” என்ற தேவராஜ்,
“பல்லவா நாம நடக்கவேண்டியதை பார்ப்போம் ப்பா. நம்ம பிள்ளைங்க சந்தோஷமா இருப்பாங்க. நம்பிக்கை வைப்பா. இப்படி ஆகிடுமோன்னு நினைச்சு பதறிட்டே இருக்க கூடாது…” என்றதும் பல்லவன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.
“ஓகே, இன்னைக்கு இதை பத்தி பேச வேண்டாம். இதை விடுங்க…” என அதிரன் சொல்ல,
“அண்ணா எடுத்துக்கோங்க…” என்று மேகா அவனுக்கு குடிக்க நீட்ட,
“நீ பயந்தவன் தான். என்கிட்டையே இதை பண்ணாத அஷ்வின்…”
“ம்மா, மாமாவை எப்படி பார்க்க?…” என்று குழைவாய் அவன் பேச,
“டேய் அஷ்வின், என்னடா? என்னத்தை செஞ்ச? அடிச்சிட்டியா? நான் கூட ஸ்பூர்த்தியை பேசினதுக்கு கண்டிச்சிட்டு எங்க திரும்ப உன் அப்பா முருங்கை மரம் ஏறுவாரோன்னு நினைச்சு கோர்த்துவிட்டுடு கிளம்பினன்னு நினைச்சேன். இல்லையா?…” என மோனிகா கேட்க,
“பல்லவனுக்கு தப்பாத பல்லவிம்மா நீங்க. நிரூபிக்கிறீங்க?…” என்று சத்தமாய் சிரித்தான் அஷ்வின்.
“ஓகே வரேன். வைங்க…” என்று போனை கட் செய்துவிட்டான்.
அதற்குள் அமுதினியனுக்கு அங்கே இருப்பு கொள்ளாமல் பேரனுக்கு அழைக்க முயன்று முடியவில்லை என்றதும் மோனிகாவிற்கு அழைக்க அவள் காலும் பிசி என்றதும் கிளம்ப நினைத்தார்.
அதற்கு முன் அஷ்வினே அழைத்துவிட என்ன ஏதென்று கேட்டதும் முழுதாய் அவன் சொல்லாமல்,
“பிரச்சனை பெருசில்லை தாத்தா. நீங்க பாட்டியை கூட்டிட்டு மாமா வீட்டுக்கு கிளம்புங்க. அப்பா அங்க தான் இருக்காங்க. நானும் வரேன்…” என்று மட்டும் சொல்லி வைத்துவிட்டான்.
உடனே மலருக்கு அழைத்து கிளம்பி மகளின் வீடு வருமாறு சொல்லிவிட்டு இங்கிருந்து இவர் கிளம்பினார் வேண்டுதல்களுடன்.
அங்கே இப்போது பிரச்சனை இல்லை என்றாலும் வேறு எந்த அசம்பாவிதமும் நடந்துவிட கூடாதென்று அத்தனை வேண்டுதல்கள் அவரின் மனதில்.
அஷ்வின் மோனிகாவின் சாதுர்யத்தை கொண்டு பிறந்திருந்தாலும் பல்லவனின் முன்கோபம் பெருமளவு அவனிடத்தில் ஊறியிருந்தது.
ரோல்மாடலாக அதிரனை கொண்டு அவனை போல் இருக்கவேண்டும் என்று வளர்ந்து வந்தவன் ரத்தத்திலேயே இருந்த குண இயல்புகள் பல நேரங்களில் படாரென்று வெளிப்படத்தான் செய்யும்.
இப்போதோ பிரச்சனை எந்த விதத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்குமோ என பதறியபடி தான் கிளம்பி வந்திருந்தார் அமுதன்.