“அது ஒரு எமோஷன்ல. நானே எதிர்பார்க்கலை. இனிமே பார்த்துக்கறேன் மாமா…” என்ற அஷ்வினின் கையை தட்டிக்கொடுத்தவன்,
“ஓகே சில்…” என்றான் லேசாய் புன்னகைத்து.
ஆனாலும் அஷ்வினுக்கு அது அவஸ்தையை தந்துவிட்டதென்னவோ பெரிதும் உண்மை.
சற்றுமுன் ஸ்பூர்த்திக்கு அவன் தந்த முத்தம் உள்ளுக்குள் சுவை கூட்டி தித்தித்தாலும் முழுதாய் அனுபவிக்கமுடியாத முட்கள் அவனை இம்சித்தது.
‘ஹவ் ஸ்வீட்?’ நினைக்கையில் மீண்டும் அவற்றை கேள்வியாகவும் பதிலாகவும் வாங்க தோன்ற ‘அடங்குடா அஷ்வின்’ என்று தன்னையே அதட்டி வைத்தான்.
மகனின் இந்த அவஸ்தையை கவனித்துக்கொண்டே இருந்த மோனிகாவிற்குள் என்னவாக இருக்கும் என்ற குறுகுறுப்பு.
“என்னவோ சரியில்லை. வரட்டும், தனியா பேசிக்கறேன்…” என்று மேகாவிடம் மோனிகா சொல்ல,
“எப்ப பாருங்க அண்ணாவை வம்பிழுக்கறது, சண்டை போடறது. சும்மா இருங்கண்ணி…” என்றாள் மேகா.
“ம்க்கும், அதான் அப்படியே அச்சுல வார்த்தமாதிரி பிள்ளையை பெத்து வச்சிருக்கேனே? அவனை தான் சொன்னேன்…”
“அஷ்வின் என்ன பண்ணான்?…”
“அதான தெரியலை. உன் அண்ணன் ஒரு பங்குன்னா, இவன் ஒம்பதாயிரம் பங்குக்கு செய்வான். என்னன்னு தெரியலையே?…” என மோனிகா புலம்ப மேகாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
வழக்கமாக நடப்பது தானே என்று சிரித்தபடி தங்கள் வீட்டு பிள்ளைகளை பார்த்தாள் அவள்.
மலரும், சுபத்ராவும் ஒருபக்கம் அமர்ந்திருக்க ஆண்கள் எல்லோரும் திருமணம் பற்றிய பேச்சை ஆரம்பிக்கலாமா என யோசிக்க செல்வம் ஆரம்பித்துவிட்டார்.
“இன்னும் என்ன பல்லவா? எப்ப பாரு ஒரு கல்யாணம்ன்னா பிடிவாதமா முன்னால குதிக்கிறது. எப்பவும் பாசிட்டிவா நினைக்கனும். ஆனா நீ ஆரம்பத்தில இருந்தே அதுல என்ன பிரச்சனை வரும்ன்னு தான் பார்க்கற…” செல்வம் கண்டிக்க,
“அவர் யோசிக்கிறதுல தப்பில்லையே மாமா. எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க முடியாது. ஒரே மாதிரி யோசிக்கனும்னும் சொல்ல கூடாதில்லையா? யாராச்சும் மத்த விஷயத்தையும் எடுத்து சொல்லனும்…” அதிரன் பல்லவனுக்கு தான் பரிந்துகொண்டு வந்தான்.
“அப்ப பல்லவன் சொல்ற மாதிரி இந்த கல்யாணத்தை நடத்தாம விட்டா எல்லாம் ஆச்சா?…” என்ற செல்வம்,
“ஏன் பல்லவா நாளைக்கே அந்த மினிஸ்டரால நம்ம பிள்ளைக்கு பிரச்சனைன்னா?…”
“பெரியப்பா…” ஏற்கனவே கலங்கிக்கொண்டிருந்த பல்லவன் இன்னும் பதறினான்.
“நான் ஸ்பூர்த்தியை தான் சொல்றேன். இந்த கல்யாண பேச்சே இல்லை. அந்த மாதிரி நேரத்துல ஸ்பூர்த்திக்கு அந்த மினிஸ்டரை வச்சு ப்ராப்ளம்ன்னா நீ சும்மா இருப்பியா?…”
“அதெப்படி இருப்பேன்?…” உடனே பல்லவன் சொல்லிவிட்டு அருகிருந்த ஸ்பூர்த்தியின் தோளில் கைய்யிட்டு அப்போதே காப்பதை போல் அணைத்துக்கொண்டான்.
அப்போதும், அந்த நொடியுமே பல்லவன் கைகள் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது என்பதை ஸ்பூர்த்தியால் உணர முடிந்தது.
“அதே மாதிரி இப்பவும் இரு. அவ்வளோ தானே?…” என்ற செல்வம்,
“ஏன் சம்பந்தி அவருக்கு மட்டும் தான் செல்வாக்கா? ஏன் நமக்கில்லையா?…” என்றார் தேவராஜை பார்த்து செல்வம்.
“ஓகே, ஜிப்…” என்று மேகாவிடம் வாயை மூடுவதை போல சைகை செய்தாள்.
“ஏன் த்தை நீங்க இன்னொரு பொண்ணை பெத்துக்கலை. உங்களை மாதிரியே வளர்த்திருக்கலாம்ல? நான் ஆரோ தானே?…” நந்தன் அவளின் காதில் பேச,
“ம்க்கும், நீ சினிமால டைரக்டர்ன்னு சொல்லியே பொண்ணை தரமாட்டேன்னு ஒருமூச்சு ஒத்தை கால்ல உச்சி வெயில்ல நின்னாலும் நிப்பார் உன் மாமா. அதான் உனக்கு ஏன் அந்த கஷ்டம் பொண்ணு பெத்துக்கலை…” என்ற மோனிகா,
“வீட்டுக்கு ரெண்டையே சமாளிக்கமுடியலை. இதுல இன்னொன்னா அப்படின்னு…” என முழுதாய் முடிக்கும் முன் நந்தன் பேசினான்.
“அப்படின்னு நீங்க சொல்லிட்டீங்களா? அந்த ரெண்டு பல்லவன் மாமாவும், அஷ்வின் மாமாவும் தானே?…” நந்தன் கிண்டலாய் சொல்ல மறுத்து சிரித்தாள்.
“அய்ய, நான் எங்க சொன்னேன்? உன் மாமா தான். அந்த ரெண்டுபேரு நானும் என் மாமனாரும். உன் மாமாவுக்கு எங்க கூட்டணி மேல எப்பவும் ஒரு காண்டு. அப்பப்ப காமிச்சிருவார்….”
“வரலாறு?…” நந்தன் கிண்டல் பேசினான்.
“பாரேன் இப்பவும் செல்வம் மாமாவை உன் தாத்தா கூட்டிட்டு வந்ததுக்கு என்னை தான் புடிச்சு கத்துவார் உன் மாமா. நான் தான் ஐடியா குடுத்தேன்ற மாதிரி உனக்கு இதே வேலையா போச்சுலன்னு…”
“அட, இதுக்கு நான் பேசலைன்னா தான் இன்னும் பேசுவாங்க. பதிலுக்கு பேசிடனும். இல்லைன்னா மதிக்கமாட்டார்…” மோனிகா அசால்ட்டாய் சொல்ல நந்தன் ஹைஃபை அடிக்க பல்லவன் மோனிகாவை முறைத்தான்.
“குறுகுறுன்னு நம்மளை பார்க்கற அந்த மாய சக்தி வேற யாருமில்லை. உன் மாமா தான். வீட்டுக்கு போகவும் மம்மி ரிட்டர்ன்ஸ் எல்லாம் காட்டுவார் பாரு…” மோனிகா சலசலத்துக்கொண்டே இருக்க,
“அண்ணி, கொஞ்ச நேரம் சும்மா இருங்க…” என்றாள் மேகா.
“இவ ஒருத்தி இவளும் பேசமாட்டா, நம்மளையும் பேசவிடமாட்டா…” என்று சலித்த மோனிகா,
“அங்க தான் எல்லாரும் மூஞ்சியை மூஞ்சியை பார்த்துட்டு உக்கார்ந்திருக்காங்களே? எதாச்சும் பேசட்டும்…” அதற்கும் மோனிகா.
“அதானே? ம்மா, அத்தை என்கிட்டே பேசினா உங்களுக்கென்ன?…” என்ற நந்தன்,
“ஒண்ணுமில்லை மாமா, என் வீட்டுக்காரர் வந்ததுமே சொல்லிட்டார் கல்யாணத்துக்கு நாள் பாருங்கன்னு. இங்க இவங்க என்னடான்னா திரும்ப முதல்ல இருந்துன்னு பிள்ளையார் சுழிக்கு ஊ போட்டு டார்க்கா அன்டர்லைன் குடுத்திட்டிருக்காங்க…” என்று சொல்லவும் அனைவரும் என்னடா என்று பார்த்தனர்.
“ஏன்டா இப்படி பார்க்காங்க? நல்லா இல்லையா?…” நந்தனிடம் மோனிகா கேட்க,
“அவங்க இதையெல்லாம் ரசிக்கமாட்டாங்க த்தை. இதுவொரு கனமான சூழ்நிலை அப்படின்னு பெரியவங்க எல்லாம் விரைப்பா உக்கார்ந்திருக்காங்க. நீங்க பேசுங்க…” என்றான் நந்தன்.
“உதை தான் உனக்கு நந்து….” என்ற மேகா,
“நீ முதல்ல அஷ்வின் பக்கத்துல போய் உக்கார்….” என்று விரட்டினாள் அவனை.
“சீரியஸா இருக்கனுமாக்கும்?…” என நந்தனிடம் சொல்லிய மோனிகா,
“சொல்லுங்க மாமா. தேதியை பார்த்திருவோமா? காலண்டர் கொண்டு வரவா?…” என்று படபடவென்று பேச சுபத்ரா அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.
அவர் சிரிக்கவும் அனைவரின் முகத்திலும் புன்னகை. பல்லவன் கூட லேசாய் சிரித்துவிட்டான்.
“ம்க்கும்…” என்று பல்லவனிடம் முறைத்த மோனிகா,
“பேச வந்துட்டு சிரிச்சிட்டிருக்கீங்க?…” என்றதும்,
“சரி…” என்ற செல்வம் பேசும் முன்,
“தாத்தா ப்ளீஸ், இப்ப இன்னைக்கு பேச வேண்டாம். பேசலாம். இன்னொருநாள் நல்ல மனநிலையில பேசலாமே? இப்போ எனக்கும்…” என்ற ஸ்பூர்த்தி பல்லவனை பார்க்க அவன் எதிரிருந்த டீப்பாயில் பார்வையை பதித்திருந்தான்.
ஸ்பூர்த்தி சொல்லவும் அஷ்வினின் உடல்மொழியில் சிறு மாற்றம் ஏற்பட அதிரன் அவனின் கையை தட்டிக்கொடுத்தான் அமைதியாக இருக்கும்படி.
ஒரே பெரிய இருக்கை. நடுவில் அதிரனும், பல்லவனும். இருவருக்கும் பக்கவாட்டில் அவர்களின் பிள்ளைகள் இருவரும் அஷ்வின், ஸ்பூர்த்தி.
பார்க்கவே கண்ணுக்கு நிறைவாய் இருந்தது அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு.
மாமன்கள் இருவரும் பிள்ளைகளின் கை பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க உறவின் மேன்மையை உணர்த்துவதை போலிருந்தது அந்த தருணம்.
எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தின் பிணைப்பு குலையாமல் இருக்க இந்த ஆதரவும் நம்பிக்கையும் போதுமே.
“எம்மா மலரு, முதல்ல இவங்களுக்கு சுத்தி போடும்மா. என் கண்ணே பட்டுரும். பாரேன்…” என செல்வம் நிறைந்து போய் சொல்ல,
“ஆமா, ஆமா…” என்றனர் சுபத்ராவும், மலரும்.
“சரி நீங்க போய் மத்த வேலையை பாருங்க. கிளம்புங்க. அதான் எல்லாம் சரியாகிருச்சே…” என்ற செல்வம்,
“மாப்பிள்ளை…” என்றார் அதிரனை.
“சொல்லுங்க மாமா…” அவன் நகர்ந்து முன்னே வர,
“கல்யாணத்தை சுருக்கா ஒரு மூணு மாசத்துல முடிச்சிருவோம். அதுக்குள்ளே நல்ல நாளா பார்ப்போம். தள்ளி போடவேண்டாம்ன்னு மனசு சொல்லுது…” செல்வம் சொல்ல அவன் அஷ்வினை பார்த்தான்.
“என்ன ஸ்பூர்த்தி உனக்கு சரியா? அந்த டைம் போதுமா?…” என்று அவர் ஸ்பூர்த்தியிடம் கேட்க,
“தாத்தா…” என்றாள் திகைப்பாய்.
பல்லவனை திரும்பி பார்க்க அவனும் செல்வத்தை பார்த்துவிட்டு தலையசைத்தான் இனி இதில் மறுக்க என்ன என்று.
“அவனை ஏன் பார்க்கற? அவன் பயந்துக்கிட்டு அப்படி பேசிட்டான். நீ ஒன்னும் கலங்க கூடாது. தாத்தா சொல்றேன்ல…” என்று செல்வம் சொல்ல,
“மாமா…” என்றாள் பல்லவனிடம் ஸ்பூர்த்தி.
“போச்சுடா, இவ மாமனை விடமாட்டா. எப்பா பல்லவா நீயே உன் மருமகளுக்கு சொல்லு…” என்று தேவராஜ் சிரிப்புடன் சொல்ல,
“சரின்னு சொல்லுடா குட்டிம்மா…” என்றான் அவள் முகம் பார்த்து.
இன்னும் ஸ்பூர்த்தியின் மனது தெளிவாகவில்லை. பல்லவன் வேறு வழியின்றி தானே சம்மதிக்கிறான் என்று அவளுள் தோன்றிக்கொண்டே இருந்தது.
எல்லோரும் சேர்த்து அவனை அசையவிடாமல் கட்டி வைத்துவிட்டதை போன்ற ஒரு தோற்றம்.
அதை என்னவோ ஏற்கவே முடியவில்லை ஸ்பூர்த்தியால். அவளுக்கு தெரியவில்லை எல்லாம் சரியாகி வந்துவிடாது என்பது.