“ஸ்பூர்த்தி எழுந்து வா…” மேகா அழைத்துவிட்டாள் மகளை.
“ம்மா, ப்ளீஸ். இப்படி செஞ்சா மாமா சரின்னு தான் சொல்லுவாங்க. இது முழுமையா ஒப்புக்கறதா அர்த்தமா?…” என எழுந்து நின்று கேட்க,
“இப்பவும் மாமாவுக்காக பார்க்கற. வாழ போறது என் பையனும், நீயும். அவனை யோசிக்கவே மாட்டியா நீ? திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிற? அவர் தான் சரின்னுட்டாரே…” என்ற மோனிகா,
“பார்த்துக்கோங்க இவளை. இவ்வளோ பேர் சொல்றோம். ஆனாலும் என் மாமாவுக்குன்னு உங்களை தான் யோசிக்கிறா…” என்றாள் மோனிகா.
“ப்பா, நீங்க சொல்லுங்க. நான் நினைக்கிறதுல தப்பா?…” என அதிரனின் முன்னால் வந்து நின்றாள் ஸ்பூர்த்தி.
“இல்லடா ஸ்பூர்த்திப்பா. அப்பா பேசறேன். நீ கொஞ்சம் அமைதியா இரு. இங்க யாரோட சம்மதம் இல்லாமலும் எதுவும் நடந்திடாது…” என அதிரன் சொல்ல அஷ்வினுக்கு சுள்ளென்று வந்தது ஸ்பூர்த்தியின் பேச்சில்.
“இப்ப என்ன சொல்லனும்ன்ற? என் அப்பாவை உனக்கு மாப்பிள்ளை பார்க்கனும்னா?…” என அஷ்வினும் எழுந்துவிட்டான்.
“மாமா நான் என்ன பேசறேன்…” ஸ்பூர்த்தி விளக்க முற்பட,
“இப்ப என் அப்பா விருப்பப்படினா நீ சொல்றது தானே? அதுதானே அர்த்தம்…” என்று நின்றவனிடம் வார்த்தையாட முடியவில்லை.
“ஸ்பூர்த்திப்பா அப்பா சொல்றேன்ல. நீ போடா…” என்ற அதிரன்,
“ஒருவிஷயம் புரிஞ்சுக்கோ, இதை ஒரு விஷயத்தை ஆரம்பிக்கும் முன்னாடி செய்யவே கூடாதுன்ற முடிவுக்கு வரதை விட செய்யும் போது எந்தவித சறுக்கலும் இல்லாம பாதுகாப்பா செய்யனும்னு தான் ஆரம்பிக்கனும். வாழ்க்கையும் அப்படித்தான்….” என்றான்.
“ப்பா…” ஸ்பூர்த்தி இன்னும் மனதின்றி நிற்க,
“அதுவும் ரெண்டுபேர் விருப்பப்பட்ட வாழ்க்கை. விளையாட்டு இல்லை. சும்மா கட்டவும், கலைக்கவும். புரியுதா?…” என்று சொல்ல ஸ்பூர்த்தி வேகமாய் மாடிக்கு சென்றுவிட்டாள்.
“நான் பார்த்துக்கறேன், நீங்க பேசுங்க…” என்று நந்தன் அவளுடன் மேலே செல்ல,
“சரி மதியம் இங்கயே எல்லாரும் சாப்பிட்டுடலாம்…” என்று சுபத்ரா சொல்லவும் பெண்கள் அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
எல்லோரும் செல்லவும் பல்லவனுக்கு அங்கிருக்கவே முடியவில்லை. எழுந்து கடைக்கு கிளம்பிவிடலாம் என யோசிக்க அதற்குள் அஷ்வின் ஆரம்பித்தான்.
“தாத்தா ஒருவிஷயம் நானே உங்ககிட்ட பேசனும்னு இருந்தேன்….” என செல்வத்தை அழைத்தான்.
“சொல்லுப்பா, என்ன விஷயமா?…” செல்வம் கேட்க,
“எங்கப்பா பேசினதா தான் இருக்கும். வேற என்ன பேச போறான்…” என்ற பல்லவன்,
“இப்ப என்னடா? கல்யாணத்துக்கு நான் தான் சரின்னுட்டேனே?…” பல்லவன் மகனை முறைக்க,
“நீங்க சரின்னு சொன்னதுக்கு தான் உங்க மருமக பேசிட்டு போனாளே? அப்படி இருந்துச்சு உங்க சம்மதம்…” அஷ்வினும் பதிலுக்கு பேச,
“சேம்ப்…” என்றான் அதிரன்.
“நான் வேற விஷயம் பேச வந்தேன் மாமா…” அஷ்வின் சொல்ல,
“அட சண்டை போடாதீங்கப்பா….” என்றார் செல்வம்.
“அப்படியே அம்மா மாதிரி, ஒன்னு பேசவே மாட்டான். இல்லை பேசினா என்னோட மல்லுக்கு நிக்கனும். நான்லாம் என் அப்பா பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டேன்…” என்ற பல்லவன் செல்வத்திடம்,
“சொல்லுங்க பெரியப்பா, உங்களுக்கு தெரியும் தானே?…” என சிறுபிள்ளை போல பல்லவன் சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர் இதில்.
“ம்க்கும், மகனுக்கு பதில் சொல்ல முடியலை. இதுல கம்ப்ளைன்ட் வேற நான் அப்பவே அப்படின்னு. எல்லாம் எல்லாருக்கும் தெரியும்…” என்று வந்தாள் மோனிகா.
“இவ வேற கரெக்ட்டான நேரத்துல கரெக்ட்டா வந்துகிட்டு. இப்ப எதுக்கு இங்க வந்த?…” பல்லவன் கடுப்பாய் கேட்க அதை பார்த்து அஷ்வினும், தேவராஜும் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டனர்.
“வேண்டுதல், கடையில இருந்து போன். உங்க போனை அங்கயே விட்டுட்டு வந்திருக்கீங்க. அதான் எனக்கு கூப்பிட்டாங்க. மாமா போன் எடுக்கலையாம்…” என நீட்டினாள்.
“போனை கார்லயே விட்டுட்டேன் ம்மா…” என சொல்லிய அமுதினியன்,
“என்கிட்டே கொண்டா. அவன் கோவமா இருக்கான்…” என தன்னிடம் வாங்கிக்கொண்டவர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தனர் மற்றவர்கள்.
மோனிகா சென்றதும் அமுதன் பேசி முடித்து போனை வைக்கவும் அஷ்வினை பார்த்த செல்வம்,
“என்னப்பா என்னவோ பேசனும்னு சொன்ன?…” என்றார்.
“ஃபினான்ஸ் மினிஸ்டர் ஆவுடையப்பன் பத்தி தான் பேசனும்னு இருந்தேன் தாத்தா…” என அஷ்வின் சொல்லவும் அதிரனுக்கு புரிய பல்லவன் எதற்கு என்று பார்த்தான்.
ஆவுடையப்பான் நல்லவனுக்கு நல்லவன். சிறுவயதிலேயே மினிஸ்டர் பதவியில் அரியணை ஏறியவன் எதற்கும் வளைந்து கொடுக்காத அரசியல்வாதி. தனக்கு சரி என்பதை மட்டுமே செய்பவன்.
இப்போது அஷ்வின் சொல்லவுமே செல்வம் முகம் பளிச்சிட அமுதனை பார்த்துவிட்டு,
“எப்பா இது எனக்கு தோணலையே? நம்ம பூஜா வீட்டுக்காரன் கூட அந்த கட்சி தான். இப்ப என்ன? நம்ம பக்கத்துக்கு ஒரு வலுவான ஆளு அந்த ஏரியாவிலயே வேணும். அவ்வளோ தானே? பார்த்துப்போம்…” செல்வம் சொல்ல,
“அவ்வளோ தூரம் போகனுமான்னு யோசிக்கிறேன் சேம்ப். இந்த கேஸ்ல இருந்து ஸ்பூர்த்தி பின்வாங்கமாட்டா. கேஸ் முடியவும் வேற ஸ்டேட்க்கு ட்ரான்ஸ்பர் கிடைக்குமான்னு பார்க்கனும்…” அதிரன் சொல்ல,
“இதுக்கு இவ்வளோ மெனக்கெடனுமா? பாரஸ்ட் மட்டும் தானா? வேற ஏதாவது டிப்பார்ட்மென்ட்ல அலகேட் பண்ண வைக்க முடியாதா?…” என்ற பல்லவன்,
“ஏன் பெரியப்பா, ஆவுடையப்பன் இன்ப்ளூயன்ஸ் வச்சு ஸ்பூர்த்திக்கு வேலையை வேற துறைக்கு மாத்த சொல்லலாமா? எந்தவித பிரச்சனையும் வராம அவளும் நிம்மதியா இருக்கறமாதிரி….” என்றான்.
“அதுக்கு நீங்களா ஒன்னை தான் உருவாக்கணும் ப்பா. பிரச்சனை இல்லாத இடம்ன்னு என்ன இருக்கு? இவ்வளோ யோசிக்கறீங்க? இதோ இந்த கார்பெட் தடுக்கி என் தலை இந்த டீப்பாய்ல மோதி…”
“அஷ்வின்…” பல்லவன் பதற,
“என்ன பேசற நீ?…” என்று மற்றவர்களும் கண்டித்தனர்.
“ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன். ஆபத்துன்னு நினைச்சா எல்லாமே ஆபத்துதான். ஒருவாய் சாப்பாடு கூட ஆபத்து தான் தொண்டையில இறங்குமுன்ன சிக்கினா?…” என்று அஷ்வின் சொல்ல,
“சேம்ப்…” அதிரன் அவனை அமைதிப்படுத்தினான்.
பல்லவன் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தான். மகன் சொல்வது முற்றிலும் உண்மை. பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லையே?
“சரி சரி விடு…” என்று சொல்லவும் அஷ்வின் அமைதியானான்.
“நடக்கறதை பேசுவோம். எதுவா இருந்தாலும் செல்வம் அண்ணன் சொன்னதுமாதிரி கல்யாணம் இன்னும் மூணு மாசத்துல. நீ என்ன சொல்ற பல்லவா? மென்னு முழுங்காம சொல்லு. இனி நம்ம பார்த்துக்குவோம்…” அமுதன் மகனிடம் அழுத்தமாய் கேட்க,
“சம்மதம் ப்பா. ஏற்பாடு பண்ணலாம்…” என்றான் பல்லவன்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்த அஷ்வினின் முகத்தில் அழகிய கீற்றாய் புன்னகை.
அதன் பின்னர் ஆகவேண்டியதை பார்க்க அதிரனின், யோசனைகளும், அஷ்வினின் நடைமுறைகளும், இதில் பல்லவனே சிலவற்றை சொல்ல இருவருக்கும் அத்தனை சந்தோஷம்.
முடிவுக்கு வந்துவிட்டால் பல்லவன் வேறு அல்லவா? இதில் முடிவுக்கும் வந்துவிட்டான் அவன்.
முதலில் மனதில்லாமல் சரி என்றாலும் இப்போது நம்பிக்கையில் சம்மதித்துவிட்டான்.
அன்றிலிருந்து மூன்றாம் மாதத்தில் வரும் ஒரு நாளை முடிவு செய்துகொள்ளலாம் என்றும் திருமண தேதியை மறுவாரம் ஒரு நல்ல நாளில் சென்று குறித்துவிட்டு வரலாம் என்றும் முடிவு செய்துகொண்டனர்.
இரண்டு நாளில் ஸ்பூர்த்தி மீண்டும் தன் பணிக்கு சென்றுவிட இப்போது நந்தனும் அங்கே தான் இருந்தான் அவளுடன்.
சிறிது நாட்கள் ஓய்வு தேவை என்று அவன் கிளம்பி வந்திருக்க ஸ்பூர்த்திக்கும் அத்தனை சந்தோஷம்.
பூவம்மா, காளி என்று மட்டுமே அங்கே தனியாய் இருந்தவள் வீட்டினர் வந்தாலும் ஓரிரு நாட்களோ இல்லை ஒரு வாரமோ தான் இருப்பார்கள்.
இந்தமுறை நந்தன் ஒரு மாதத்திற்கு அங்கே அவளுடன் இருக்கிறேன் என்று வந்திருந்தான்.
உதவி இயக்குனராய் ஒரு படத்தில் பணியாற்றி இருந்தவன் இப்போது தன் படம் பற்றிய வேலையிலும், கதையை செம்மை படுத்துவதிலுமாய் தீவிரமாய் இருக்க தனக்கும் அமைதியான இடம் தேவை என்று கிளம்பி வந்துவிட்டான்.
வந்து ஒருமாதமாகிற்று. நேரமும் செல்ல, பிரச்சனைகள் வந்து சென்றாலும் அவற்றை ஸ்பூர்த்தி கஷ்டமாக இருந்தாலும் தைரியம் குறையாமல் எதிர்கொள்வதிலும் குறைவில்லை.
“உன் சரவுண்டிங் ப்ராப்ளமை சால்வ் பன்றதோட இருந்துக்கோம்மா. தேவையில்லாம மத்த விஷயத்துல மூக்கை நுழைக்காத…” என்ற கமிஷனரின் பேச்சை எல்லாம் கேட்டு பதிலளித்து என்று நித்தமும் ஒருவித சுவாரஸ்யம் தான்.
ஒருமாதங்களாய் அஷ்வினுடனான பேச்சுக்கள் மிக அளவே. அதிலும் முதல் போலவே பேசிக்கொண்டிருந்தான் அஷ்வின்.
இதனை ஸ்பூர்த்தி எதிர்பார்க்கவே இல்லை. இனி அஷ்வினின் அணுகுமுறைகள் தன்னிடம் வேறுவிதமாய் இருக்கும் என்று நினைத்திருக்க அப்படி அல்ல என்று காட்டினான்.
அவனிடம் கேட்கமுடியவில்லை, ஆனாலும் உள்ளூர குறுகுறுப்பு. திருமணம் முடியட்டும் என்று அவன் காத்திருப்பது தெரியவில்லை.
அதிரனின் பேச்சு அவனுக்கு அணையிட்டிருப்பதை ஸ்பூர்த்தி அறியவில்லை. ஒருபக்கம் ஏமாற்றமாகவும், இன்னொருபக்கம் சிரிப்பாகவும் இருந்தது.
பேச்சுக்கள் எல்லை மீறவில்லை என்றாலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் பேசிவிடுவான்.
இதோ ஒருவாரமாகிற்று. பேசுவதும் இல்லை. குறுஞ்செய்தி என அவனிடமிருந்து எதுவுமில்லை.
அத்தகைய நாட்கள் என்னவோ இழந்ததை போல இறுக்கத்துடன் கழிய உறக்கம் வராமல் எழுந்து ஜாக்கிங் கிளம்பிவிட்டாள் ஸ்பூர்த்தி.
“ஓடிட்டு வந்து சொல்லுவேனாம். பூவம்மா அதுக்குள்ளே எனக்கு டிபன் செஞ்சு வைப்பீங்கலாம்…” என்று சொல்லிவிட்டு ஷூவை மாட்டிக்கொண்டு வெளியேறினாள்.
நந்தன் அறையில் விளக்கு லேசாய் வெளிச்சம் காட்ட அவனும் விழித்திருப்பானோ என நினைத்தாலும் அழைக்கவில்லை.
குளிர் காற்றோடு பனியும் உடலை துளைக்க வேகமாய் வியர்க்க ஓடிக்கொண்டிருந்தாள்.
ஜாக்கிங் முடித்து வீட்டிற்கு அருகே நடந்துவந்துகொண்டிருக்க பனிமூட்டம் விலகி லேசாய் வெளிச்சம்.
அங்கிருந்த ஒரு மரத்தினாலான இருக்கையில் அமர்ந்தவள் ஆசுவாசமாய் மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டிருந்தாள்.
“ஊஃப் இன்னைக்கு கூட கொஞ்ச நேரம் ஓடிட்டேன் போல?…” என்று நெற்றியில் வடிந்த வியர்வையை துடைத்தபடி மூச்சிரைக்க குனிந்தமர காலுக்குள் குட்டியாய் ஒரு நாய்க்குட்டி ஊட்டி வந்து அவளை சுற்றிக்கொண்டு எதையோ புல்லில் தேடியது.
“வாவ்…” என்று பார்த்தவள், இங்கே இது எப்படி என்று யோசனையுடன் தன் காலை சுற்றிய அந்த பப்பியை தூக்கிக்கொண்டாள் ஸ்பூர்த்தி.
“ஹேய் யார் நீங்க? இங்க எப்படி?…” என்று அதனை தூக்கி வைத்து கேட்க குறுகுறுவென்று அவளை பார்த்தபடி நாக்கை நீட்டியது.
“நந்தன் வாங்கியிருப்பானோ? ஆனா அவனுக்கு இதுல எல்லாம் இன்ரெஸ்ட் இல்லையே?…” என பேசிக்கொண்டே எழுந்தவள் அவ்விடத்தை சுற்றி பார்க்க ஒரு மரத்தில் சாய்ந்தபடி அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் அஷ்வின்.
“வெரி குட்மார்னிங்…” என கேமராவை நகர்த்திவிட்டு புன்னகையுடன் சொல்ல அசையாது பார்த்தபடி நின்றவள் முகம் மலர்ந்து புன்னகைத்தது.
“அஷ்வின் மாமா…” என்று சந்தோஷத்துடன் ஸ்பூர்த்தி சத்தமாய் சொல்ல,
“குட்மார்னிங் ஸ்பூர்த்தி…” என்றான் மீண்டும் அஷ்வின்.
சுற்றிலும் காட்டு மரங்கள். அடர்ந்த வனத்தின் நடுவே அவன் நின்றிருந்த தோற்றம் மனதில் நீங்காமல் படம் பிடித்தது.