அஷ்வினை அங்கே பார்த்ததும் எல்லாம் மறந்தது ஸ்பூர்த்திக்கு. அத்தனை சந்தோஷம்.
அவனை நெருங்கி பேசும் முன் கையிலிருந்த பப்பி அவளிடமிருந்து விடுபட கத்தியது.
“ஹேய் இரு…” என்று சொல்லும் முன் நழுவிக்கொண்டு கீழே விழ பார்க்க அவளே இறக்கிவிட்டாள்.
விட்ட வேகத்தில் அது துள்ளிக்கொண்டு ஓடியது அஷ்வினை நோக்கி. அதிலேயே ஆச்சர்யம்.
ஆனாலும் தானும் அதுனுடன் செல்ல அஷ்வினும் முன்னே வர பப்பி அவனை நெருங்கிவிட்டது.
அவன் கால்களை சுற்றிக்கொண்டு அவன் எட்டு வைக்கும் பாதச்சுவட்டை கவனித்து அந்த எல்லைக்குள்ளேயே குதித்துக்கொண்டு வந்தது பப்பி.
“எப்ப வந்தீங்க மாமா?…”
“கொஞ்சம் முன்னாடி தான் ஸ்பூர்த்தி…”
“எப்படி இருக்கீங்க மாமா? யாரெல்லாம் வந்தீங்க?…” என கேட்டவள் அவன் காலுக்கருகே அமர்ந்தவாக்கில் தன்னை பார்த்த பப்பியையும் கவனித்தாள்.
“பிடிச்சிருக்கா?…” என அஷ்வின் கேட்க,
“என்ன?…” என்று அவனை பார்த்தாள்.
“பப்பி தான், பிடிச்சிருக்கான்னு கேட்டேன்…”
“அழகா, க்யூட்டா இருக்கு. பிடிக்காம எப்படி?…”
“உனக்கு தான்…” என்றான் அவன்.
“என்ன? எனக்கா? நான் கேட்கவே இல்லையே?…” என்று சொன்னாலும் அவனருகே மண்டியிட்டு அந்த பப்பியை கை நீட்டி அழைக்க உடனே பக்கவாட்டில் திரும்பிக்கொண்டு அஷ்வினை திரும்பி அண்ணார்ந்து பார்த்து அழைத்தது பப்பி.
“இதுக்கு சேட்டையை பாருங்க, கூப்பிட்டா வரமாட்டேன்னு திரும்பறதை…” என்றவள் அதனை வலுக்கட்டாயமாய் பிடித்து தூக்கினாள்.
மீண்டும் அவளிடம் சிக்கிவிட்டதில் திரும்பி திரும்பி அஷ்வினை பார்த்து அழைத்துக்கொண்டே இருந்தது ஒருகட்டத்தில் துள்ளி கீழே விழ அஷ்வின் பிடித்துக்கொண்டான்.
“பார்த்து ஸ்பூர்த்தி, ஒன் மந்த் தான் ஆகுது…” என்றான் அதனை அணைத்துக்கொண்டு தடவியபடி.
அஷ்வினின் கைக்குள் பாந்தமாய் பொருந்தி தலையை அவனின் நெஞ்சில் வைத்துக்கொண்டு மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தது ஸ்பூர்த்தியை.
“ஏத்தம் தான்…” என்றவள்,
“வாங்க மாமா வீட்டுக்கு…” என்று நடந்தாள்.
அங்கே மலரும், மோனிகாவும் கூட வந்திருந்தார்கள். இருவரையும் பார்த்து சென்றவள்,
“என்கிட்டே சொல்லவே இல்லை த்தை. என்ன சர்ப்ரைஸா?…” என்று மோனிகாவை கட்டிக்கொண்டு கேட்க மலரும் பேத்தியின் கன்னத்தை வாஞ்சையாக வருடினார்.
“எனக்கே நைட் தான் தெரியும். அஷ்வின் கிளம்புங்கன்னு சொன்னான். அப்படியே கிளம்பிட்டோம்…” என்ற மோனிகா,
“உன்னை பார்த்துட்டு தான் படுக்கலாம்ன்னு இருந்தேன். அத்தையும் அதான் வெய்ட் பண்ணிட்டிருக்காங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறோம்…” என்று மோனிகா எழுந்துகொண்டாள்.
“நானும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வரேன். காலெல்லாம் வலி. இதுவேற நைட்டெல்லாம் கத்திட்டே வந்துச்சு கூடவே…” என்று சொல்லிய மலரும் மோனிகாவுடன் சென்றுவிட்டார்.
அவர்கள் இருவரும் செல்லவும் நந்தனின் அறைக்குள் அஷ்வினின் சத்தம் கேட்க போகலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் ஹாலிலேயே ஸ்பூர்த்தி அமர்ந்துகொண்டாள்.
இன்னும் அஷ்வினின் பேச்சில் இருந்து எதையும் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
பேசினான், பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாய் மட்டுமே இருந்தது. அதுவும் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்ததை போன்ற பேச்சுக்கள்.
அவனின் விருப்பம் அறிந்த பின்னர் அவனிடம் இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருந்தாலும் இப்போது மீண்டும் முதலில் இருந்து என்பதை போல அவன் இருக்க ஒன்றும் தெரியாமல் ஒரு தவிப்பு.
“கண்ணு இந்தா காபி…” என்ற சத்தத்தில் கண்களை திறந்து பார்க்க பூவம்மா ஒரு ட்ரேயில் காபியை வைத்திருக்க அதில் அகன்ற பாத்திரத்தில் பாலை வைத்திருந்தார்.
“பால் யாருக்கு பூவம்மா? அதுவும் இவ்வளோ பெரிய கிண்ணத்துல?…” தெரிந்தாலும் கேட்காமல் இருக்கமுடியவில்லை.
“நம்ம அஷ்வின் தம்பி கொண்டு வந்திருக்குல ஒரு நாய்க்குட்டி. அதுக்குத்தான்…” என்றவர்,
“எவ்வளோ நாளாச்சு தம்பியை பார்த்து. அப்பவே நீங்க போறப்பவே வந்திருக்கனும். ஆனா முடியாம போச்சு. நல்லவேளை தம்பியே வந்திருச்சு…” என்றபடி நந்தனின் அறை கதவை தட்ட ஸ்பூர்த்தி பார்வையெல்லாம் அங்கே தான்.
கதவை வந்து திறந்ததோ நந்தன். பால் பாத்திரத்தை வாங்கிக்கொண்டவன் அவர்கள் இருவருக்கும் வெந்நீர் வேண்டும் என்று சொல்லிவிட்டு கதவை சாற்றிக்கொள்ள கடுப்பானது.
“நந்து…” என்று சத்தமாக அழைத்தாள் ஸ்பூர்த்தி.
“என்ன கண்ணு, இம்புட்டு கத்தற? இரு நா கூப்பிடுதேன்…” என்று பூவம்மா கதவை தட்டும் முன் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான் அஷ்வின்.
“என்ன பூவம்மா?…” என்று அவரிடம் கேட்டபடி வர அவன் காலுக்கு கீழ் குட்டியாய் துள்ளிக்கொண்டு வந்தது பப்பி.
அப்படி ஒரு ஆட்டம், இங்குமங்குமாய் சுற்றிக்கொண்டு வந்தாலும் எச்சரிக்கையாய், லேசான பயத்துடன் கவனித்தது அந்த புது இடத்தை.
“எப்படி பார்க்குது பாரு?…” என்ற முணுமுணுப்பில் அஷ்வின் திரும்பி பார்க்க,
“ஒண்ணுமில்லை மாமா…” என்றாள் தானாக.
“நான் எதுவுமே கேட்கலையே…” என்று அவளுக்கெதிரே வந்தவன்,
“நீங்க போங்க பூவம்மா…” என்றான்.
“போலீஸ் கண்ணு தான் நந்து தம்பியை கூப்பிட்டுச்சு. அதான் கதவை தட்டுனேன் தம்பி. உறங்கிட்டிருந்தீங்களா?…” என அஷ்வினை கேட்க,
“ம்ஹூம், இல்லை. நீங்க போங்க…” என்றவன் பாதத்தில் பப்பியும் தலைவைத்து படுத்துக்கொள்ள ஸ்பூர்த்தி அதனை தான் பார்த்தாள்.
“ஹேய் குட்டி, கால்ல படுக்காதீங்க…” என தன் கையில் தூக்கிக்கொண்டான்.
“பப்பீஸை சும்மா சும்மா கைல தூக்கி வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க மாமா…” ஸ்பூர்த்தி சொல்ல அஷ்வினின் இதழ்களுக்குள் அப்படி ஒரு புன்னகை.
ஆனாலும் அடக்கிக்கொண்டு சாதாரணம் போல அவன் பார்க்க ஸ்பூர்த்திக்கு இன்னும் பற்றிக்கொண்டு வந்தது.
‘இவன் என்ன முன்பு போல பார்த்து வைக்கறான்? இடையில நடந்ததெல்லாம் மறந்துருச்சோ?’ என ஒருநொடி குழம்பி போனாள்.
இத்தனை நாட்களும் போனில் தான் பேசினானே தவிர வீடியோ காலில் அழைக்கவே இல்லை.
இப்போதும் அப்படி இருக்க அந்த வித்தியாசம் நன்றாகவே புரிந்தது ஸ்பூர்த்திக்கு.
“மாமா என் மேல ஏதாவது கோவமா?…” என்று கேட்டவள் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“இன்னும் பப்பிக்கு பேர் வைக்கலை. நீயே ஒரு பேர் வை…” என்று அவளிடம் தூக்கி நீட்ட ஸ்பூர்த்தி வாங்கி மடியில் வைத்து தடவினாள்.
மீண்டும் அவள் மடியிலிருந்து தவ்வி இறங்கி அஷ்வினின் காலில் வந்து நின்று தூக்குமாறு அழைத்தது.
“ஏன் என்கிட்டே இருந்தா என்னவாம்?…” என்று ஸ்பூர்த்தி பிடிவாதமாய் அதனை தூக்க பார்க்க அஷ்வின் சிரித்தான்.