“கண்டிப்பா கூப்பிடறேன். இப்ப முன்னாடி பார்த்து ஜீப்பை ஓட்டுங்க காளி…” என்றாள் சிரித்தபடி.
மனதில் சில உறுத்தல்கள் இருந்தாலும் வேலை என்று வந்த பின் அவற்றை காட்ட முடியாதே?
பார்வையிட்டபடி காட்டுக்குள் இருக்கும் வேறொரு பகுதிக்கு சொல்ல என்னவோ சத்தம் கேட்டது.
“ஜீப்பை நிப்பாட்டுங்க காளி, என்ன சத்தம்?…” என்று இறங்கினாள்.
யானைகள் பிளிறும் சப்தம் அது. அதுவும் வெகு அருகில் கேட்க என்னவென்று பார்க்க இறங்கினாள்.
“மேடம், யானைங்க க்ராஸ் பண்ணி போகும்ங்க. வாங்க போகலாம்…” என்று சொல்லியும் கேட்காமல் முன்னே செல்ல காளியும் அவளுடன் வந்தான்.
“மேடம் இங்க பாதுகாப்பில்லை. இப்படி வரலாமா? வாங்க முதல்ல…”
“இருங்க காளி, இந்த ட்ரெயினிங் கூடவா இல்லாம வந்திருப்போம்? உங்களுக்கு வேண்டாம்ன்னா நீங்க ஜீப்ல இருங்க. வந்திடறேன்…” என்று சொல்ல காளியும் உடன் சென்றார்.
சில நேரங்களில் அசம்பாவிதங்கள் கூட நடந்துவிடும். அப்படி இருக்க இவள் தனியாய் சென்று பார்க்க போகிறாளே என்று புலம்பியபடி சென்றார்.
சற்று தூரத்தில் யானைகள் கூட்டமாய் அந்த பகுதியில் நடமாடிக்கொண்டிருக்க விளையாட்டோ சண்டையோ என்பதை போல இரு யானைகள் மோதவும், கீழே விழுந்து எழவுமாய் இருந்தது.
“மேடம் பக்கத்துல போகவேண்டாம். இங்கயே இருங்க. அதுங்க என்னவோ பண்ணிட்டிருக்குதுங்க….” காளி எங்கே ஸ்பூர்த்தி நெருங்கிவிடுவாளோ என பயந்து அவளின் முன்னால் நின்றார்.
“அட போகலை. நீங்க இருங்க…” என்றவள் அந்த காட்சியை ரசித்தபடி இருந்தாள்.
யானை குட்டிகள் எல்லாம் துள்ளி குதித்தபடி தாய் யானையின் காலுக்கு சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்க கவிதையாய் இருந்தது.
கண்ணெடுக்க முடியவில்லை. பார்த்துக்கொண்டிருந்தவள் இதழுக்குள் புன்னகை.
“க்யூட்…” என்று சொல்ல,
“அழகு ஆபத்துங்க மேடம்…” என்றார் காளி.
“அட என்ன நீங்க?…” என்று சொல்ல அந்த நேரம் பார்த்து எல்லா யானைகளும் வேறு திசைக்கு ஓட என்னவோ என பார்த்தாள்.
“அவங்க வேற பக்கம் கிளம்பிட்டாங்க…” என்று காளி சொல்ல,
“சரி வாங்க…” என்று மீண்டும் ஜீப்பில் அமர மீண்டும் உள்ளே ஜீப்பை ஓட்டி சென்றார் காளி.
“இது சரக்கு ரயில் போற நேரம்ல…” என்று மணியை பார்த்த ஸ்பூர்த்தி,
“அந்த பக்கம் ஜீப்பை விடுங்க…” என்றாள்.
“அங்க எல்லாம் பாதுகாப்பு தானே மேடம். தடுப்பு வேலி எல்லாம் இருக்கே?…” காளி மறுக்க,
“காளி சொல்றதை மட்டும் செய்ங்க. காடு முழுக்க கண்காணிக்கிறது தான் என் வேலை. சரியா இருக்குன்னு அந்த பக்கம் கவனிக்காம இருக்கறதா? போங்க…” என அதட்ட காளியும் வண்டியை செலுத்தினார்.
அன்று மதியத்திற்கு மேல் விடுமுறை வாங்கவேண்டும் என்று நினைத்திருக்க இப்படி இவ்வளவு தூரம் வந்தால் எங்கே விடுமுறை என்று கடுப்பு வேறு.
ஜீப் சற்று வேகம் கூட காளியை கண்டனத்துடன் பார்த்தாள் ஸ்பூர்த்தி. அவளின் பார்வையிலேயே வேகத்தை குறைத்துக்கொண்டார் அவர்.
“ரூல்ஸ் நமக்கும் தான் காளி. கவனம்…” என்று எச்சரித்துவிட்டு வெளியே பார்க்க பக்கவாட்டு கண்ணாடியில் பின்னால் பைக்கில் யாரோ வருவது தெரிந்தது.
ஸ்பூர்த்தி திரும்பி பார்க்க பைக்கில் வந்துகொண்டிருந்தான் அஷ்வின். அவனுக்கு பின்னால் வாட்சர் முருகவேல்.
“காளி ஜீப்பை நிறுத்துங்க…” என்று சொல்லி அவள் இறங்கிக்கொள்ள பைக்கின் வேகமும் குறைந்தது அவள் அருகே வரவும்.
“இங்க எதுக்கு மாமா வந்தீங்க? அதுவும்…” என்றவள்,
“முருகவேல், இந்த ஏரியால இங்க இவங்களுக்கு அலோவ்ட் இல்லை. தெரியும் தானே? என்ன நீங்க?…” என்று கண்டித்தாள்.
கொஞ்சமும் இளகாத தன்மையும், விரைப்புமாய் இந்த ஸ்பூர்த்தி அஷ்வினின் கருத்தை பெரிதுமே கவர்ந்தாள்.
“நீ ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலை. உன்னை தேடி இவர் வந்தார். அதான் நானும் அவர் கூடவே வந்துட்டேன்…” என்ற அஷ்வின் முருகவேலை காண்பித்து சொல்ல அவனை முறைக்கமுடியாமல் மேலும் பேசும் முன் யானையின் சப்தம் பெரிதாய்.
“அப்ப அங்க பார்த்தோம்ல மேடம். அதான் இந்த பக்கம் வந்துடுச்சுங்க போல?…” காளி அசால்ட்டாய் சொல்ல,
“இது கூட்டமா இருக்கற மாதிரி தெரியலை….” என்ற ஸ்பூர்த்தி,
“ஒஹ் காட், இங்க தான் ரயில்வே ட்ராக் இருக்கு…” என்று பதறி ஓடினாள்.
காளியும், முருகவேலும் உடன் பின்னால் செல்ல அஷ்வினும் அவர்களுடன் ஓடினான்.
“ஒண்ணுமிருக்காது மேடம்…” என அப்போதும் காளி சொல்ல,
“ஷட் அப் காளி. அதை அங்க போய் பார்த்துப்போம்…” என்று இவள் போக ஸ்பூர்த்தியின் எண்ணம் சரி என்பதை போல தான் இருந்தது.
பெரிய யானை ஒன்று வேலியை தாண்டி அந்த பக்கம் நிற்க லேசாய் சாய்ந்திருந்த வேலியில் சிறிய யானைக்குட்டி வேலியை கடக்க முடியாமல் ஒரு கால் அதற்குள் சிக்கிக்கொள்ள அது கத்தியது.
தாய் யானையின் பரிதவிப்பும், குட்டியானையின் உயிர் பயத்தின் கூச்சலும் என்று தைரியமெல்லாம் தாண்டி கலங்கி போனாள்.
என்னை எப்படியாவது காப்பாற்று என்பதை போல ஒரு இறைஞ்சலோ என்னும் விதமாய் அதன் குரல்.
“காட்டுக்குள்ள வர ட்ரெயின் ஸ்பீட் கம்மியா தானே வரும். அதுக்குள்ளே இந்த வேலில இருந்து குட்டியை சேவ் பண்ணிடலாம்…” என்று சொல்ல அந்த நேரத்தில் வேலி அப்படியே பிடிமானமில்லாததை போல சரிந்தது.
அதில் இன்னுமே அதிர்ச்சி ஸ்பூர்த்திக்கு. பாதுகாப்பாய் இருக்கவேண்டிய தடுப்பு வேலிகள் இப்படி சரியும் என நினைக்கவே இல்லை.
சமீபமாக தான் இது மாற்றப்பட்டது என்று அங்கே பணிக்கு சேர்ந்த நேரத்தில் அவளுக்கு தெரிய வந்திருந்தது.
“ஓஹ் நோ…” என்று தலையில் கை வைக்க வேலி விழவும் பெரிய யானை ஓடி வந்தது.
“பர்ஸ்ட் ட்ரெயினை ஸ்டாப் பண்ணனும். முதல்ல வேலில இருந்து குட்டியை பிரிக்கனும். கால் எப்படி சிக்கியிருக்கு?…” என்றான் அஷ்வின்.
தாய் யானை தும்பிக்கையால் குட்டியை காப்பாற்ற முயல முடியாமல் அந்த காடே அதிரும்படி கத்தியது.
ரயில் வேறு வேகமாய் வந்துகொண்டிருக்கும் சப்தம். குட்டி யானையின் கால்கள் வேலிக்குள் இருந்து எடுக்க முடியாமல் வலியில் கத்த படபடத்து வந்தது.
“நத்திங் நத்திங் குட்டி…” என்று தடவி, தடவி ஸ்பூர்த்தி அதனை எடுக்க பார்க்க,
“ம்ஹூம், ஸ்பூர்த்தி முதல்ல ட்ராக்ல இருந்து வேலியோட குட்டியை சேர்த்து தூக்கிடுவோம். அதுதான் சேஃப். இங்க அவ்வளவு ஸ்ட்ராங் இல்லை…” என்ற அஷ்வின்,
இடையில் அலைபேசி மூலம் வன காவலர் அலுவலகத்திற்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் அழைப்புவிடுத்து செய்தியை தெரியப்படுத்தியிருந்தனர்.
ரயில் வரும் சமயம் வேலியில் மாட்டியிருந்த குட்டியானையின் கால்களை சுற்றியிருந்த கம்பிகளை பிடித்து இழுக்க லேசாய் வளைந்தது.
“மை குட்னஸ். இன்னும் இன்னும் பாஸ்ட்டா…” அஷ்வின் பிடித்து இழுக்க, ஸ்பூர்த்தி, காளியுடன் சேர்ந்து யானைக்குட்டியின் காலை இழுத்தாள்.
“கமான், இன்னும் பாஸ்ட்டா…” என்ற சத்தத்துடன் இழுக்க சற்று நேரத்தில் அவர்கள் முயற்சியில் கால் விடுபட்டு யானைக்குட்டி எழவும் வேலியை தூக்கி மறுபக்கம் தள்ளிவிட்டு மூச்சுவாங்க எழுந்தனர்.
திரும்பி பார்க்க அங்கே தாய் யானை காலுக்குள் கொஞ்சிக்கொண்டு குட்டியானை நிற்க பார்ப்பதற்கே அத்தனை அழகு.
“நல்லவேளை நாம வந்தோம் மேம்…” முருகவேல் சொல்ல,
“ஹ்ம்ம், கிரேட் ஜாப்…” என்றாள் ஸ்பூர்த்தி முருகவேல், காளி இருவரிடமும்.
இருவரும் புன்னகைக்க பெரும் சத்தத்துடன் புகையை கக்கிக்கொண்டு வந்தது சரக்கு ரயில்.
“ஹேய் ட்ரெயின்…” என்று அஷ்வின் ஸ்பூர்த்தியை தன் பக்கம் இழுக்க தண்டவாளத்தின் மறு திசையில் முருகவேல், காளி சென்றனர்.
அத்தனை வேகத்துடன் ரயில் செல்ல அதை கவனித்தாலும் அந்த நொடி அவளருகே அஷ்வின்.
அவன் இழுத்த வேகத்தில் அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டாள் ஸ்பூர்த்தி.
“ஸ்பூர்த்தி…” என்றவனுக்கு சத்தமே வரவில்லை.
இந்த அணைப்பில் கட்டுண்டு நின்றவன் மெல்ல நகர நகர தன் அணைப்பிலிருந்து அவள் அவனை விடுக்கவே இல்லை.
என்னவோ அத்தனை சந்தோஷம். அவன் தன்னை தள்ளி நிறுத்தியதெல்லாம் ஞாபகமே இல்லை.
அந்த நிமிடம் எதையோ செய்துவிட்ட மகிழ்ச்சி. அவனிடத்தில் மட்டும் சிறுபிள்ளையாய் ஆதுரத்தை தேடி நிற்கும் பரிதவிப்பு.
“முருகவேல் என்னை ட்ராப் பண்ணிட முடியுமா? மேடம் ஆபீஸ் போறாங்க…” என்று அஷ்வின் கேட்க,
“சூர் ஸார்…” என்றான் அவன்.
“பை ஸ்பூர்த்தி…” என்று அஷ்வின் சொல்லிக்கொண்டு முன்னே நடக்க போக,
“இல்லை அவங் ரெண்டுபேரும் இங்க ஸ்பாட்ல இருக்கட்டும். நான் போய் ஆளை அனுப்பி வைக்கிற வரைக்கும். இங்க திரும்ப இன்னும் ரெண்டுமணி நேரத்துல ஒரு ட்ரெயின் வருது. இந்த வேலியை வேற அப்புறப்படுத்தனும்…” என்ற ஸ்பூர்த்தி,