தனது அலுவலகம் வந்ததுமே வேலையை உடனே ஆரம்பித்துவிட்டாள் ஸ்பூர்த்தி.
வேலி உடைந்திருந்த இடத்தை செம்மை படுத்தவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பதை எல்லாம் தொகுத்து மேலதிகாரிக்கு உடனே தகவல் அனுப்பியவள் தொலைபேசி மூலமாகவும் தெரிவித்துவிட்டாள்.
அத்தனை கோபம் அவளுக்கு. ‘பார்க்கலாம்’ என்று அத்தனை சாதாரணமாக ஒரு பதில்.
கொடுத்த வேலையை கூட செம்மையாக செய்யமுடியாமல் இவர்களுக்கு எதற்கு இந்த வேலை என்று தோன்றியது.
தன்னிடம் மட்டும் அதிகாரமிருந்தால் இதற்கான தக்க நடவடிக்கையை உடனே எடுத்திருக்க முடியும் என்று நினைத்தவளுக்கு ஒருபக்கம் மனவுளைச்சல் தோன்ற ஆரம்பித்தது.
“மேம்…” வாட்சர் முருகவேல் வர அங்கே நிலவரம் என்ன என்று கேட்டுக்கொண்டாள்.
“இப்போதைக்கு அங்க காவலுக்கு ரெண்டுபேரை நிறுத்தியிருக்கோம் மேம். வேலியை உடனே போடலைன்னா இதுமாதிரி அசம்பாவிதம் திரும்ப நடக்கும்…” என்றான் அவன்.
“இங்க ஆட்களுக்கு நான் ஏற்பாடு பன்றேன். வேலியை இவனுங்க என்ன போடறது? எல்லாம் ஒன்னுகூடி விவாதிக்கிறேன்ற பேர்ல போண்டா சாப்பிட தான் லாயக்கு….” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“மேம்…” ஸ்பூர்த்தியின் கோபத்தில் முருகவேல் தயங்க,
“காளியை கூப்பிட்டு போய் நான் சொல்ற இடத்துல இருக்கறவங்கட்ட பேசுங்க. இங்க உள்ள வனப்பகுதி ஜனங்கள் தான். கண்டிப்பா இந்த வேலையை குடுத்தா நல்லபடியா செய்வாங்க. நான் சொன்னேன்னு அழைச்சிட்டு வாங்க. உடனே ஆரம்பிப்போம்…” என்றாள்.
“மேம், ஹையர் அபிஷியர்ட்ட இருந்து அப்ரூவல்…”
“ஹையர்னா? எங்க? அந்த எமன்கிட்ட இருந்தா?…” கடுப்போ கடுப்பு ஸ்பூர்த்திக்கு. முருகவேலின் பார்வையில்,
“இவனுங்க முழுங்கின காசுக்கு அந்த வாயில்லா ஜீவன்களை சாகட்டும்ன்னு விட சொல்றீங்களா முருகவேல்? பார்த்தீங்க தானே அந்த குட்டியும், தாயும் பட்ட வேதனையை. எவ்வளோ பதறினாங்கன்னு….”
“ஆமா மேம்…” என்று ஆமோதித்தான்.
“இதை செய்யறதால நான் எங்கயும் குறைஞ்சு போய்டமாட்டேன் முருகவேல். போங்க. என் சம்பளத்துல செய்யறேன். போய் நான் சொல்றதை செய்ங்க…” அவனிடம் சொல்ல,
“மேம் இப்படி செஞ்சாலும் விபத்து வராது தானே?…”
“என்ன?…”
“சரக்கு ரயில் இத்தனை வேகம் வர கூடாது தானே? அதை கம்ப்ளெயின்ட் பண்ணலாமே?…”
“இவ்வளோ நேரம் அந்த வெட்ஆனியனை தான் செஞ்சிட்டிருந்தேன்…” என்றாள் அவள்.
அவனிடம் இப்படி ஸ்பூர்த்தி பேசுவது இதுவே முதல்முறை. கோபப்படுவாள் தான். ஆனால் இப்படி பேசியதில்லை.
“மேம்…”
“அதை தமிழ்ல புரிஞ்சுக்கோங்க. என்னை அப்படியெல்லாம் பேச கூடாதுன்னு வேற சொல்லிவச்சிருக்காங்க…” முனுமுனுப்பு வேறு அவளிடம் கடுப்பாய்.
“அதாம்ய்யா, உனக்கு சொல்லியா தரனும். குழி தோண்டனும். அங்க கீழே கிடக்கற வேலியை தூக்கி போட்டுட்டு புது வேலி நட்டு வைக்க குழி தோண்டனும். ஸார் தான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே?…” என்று சொல்ல மாசிலாமணிக்கு வியர்த்தது.
“அச்சோ, உண்மையை சொல்லிட்டேனா மாசிலாமணி?…” என்று எள்ளலாய் கேட்டவள்,
“கமிஷன் காசை செலவுக்கு வச்சுக்கோங்க. கவர்மன்ட் குடுக்கற காசுக்கு நான் சொல்ற வேலையை பாருங்க…” என்றாள் அவள் கோபத்தை அடக்கிய குரலில்.
“மேம், அது என்னோட வேலை இல்லை…”
“டேமிட்…” என்று மேஜையை ஓங்கி குத்திவிட்டு எழுந்தவள்,
“என்னை வாட்ச் பன்றது மட்டும் என்ன டேஷ் வேலை? அதுக்கு தான் உன்னை இங்க அப்பாயின்ட் பண்ணியிருக்காங்களா?…” என்றதும் மாசிலாமணியின் முகம் கருத்தது.
“உன்னை நல்லா தெரியும் மேன் எனக்கு. உன்னை விட்டுவைக்கிறது ஏன்னு உனக்கு தான் புரியலை. சும்மா வெட்டி வெட்டி விட்டுட்டே இருந்தா வேலைக்காகுமா?…”
“மேம்…” மாசிலாமணிக்கு புரியவில்லை என்ன சொல்ல வருகிறாள் என்று.
“புரியலை போல? அதான, அவ்வளவும் கமிஷன் காசு. மூளைக்கு என்ன வேலை? அப்படி ஒன்னு இருக்கா?…” என்று கேட்க இன்று என்ன இத்தனை பேசுகிறாள் என்றானது மாசிலாமணிக்கு.
“மேம்…”
“ரோஷம் எல்லாம் வருதே? ஓகே ஓகே. எந்த காசா இருந்தாலும் உப்பு உரைப்பெல்லாம் போட்டு தானே சாப்பிடற?…”
“மேம், போதும். நீங்க ரொம்ப பேசிட்டீங்க…”
“இன்னும் பேசுவேன் மேன். என்ன பண்ணுவ? உன்னை இவ்வளோ தூரம் வளரவிட்டதுக்கு காரணம் மொத்தமா பிடுங்கி எறியத்தான்…” என்றவள் அவனுக்கெதிரே வந்து நின்றாள்.
“சும்மா உன் மேல கம்ப்ளைண்ட் பண்ணி அதுக்கு கவர்மென்ட் சம்பளத்தோட உன்னை சஸ்பென்ட் பண்ணி திரும்ப நீ வேலைக்கு வந்து. ப்ச், எதுக்கு இந்த விளையாட்டு? அது வேஸ்ட் ஆஃப் டைம். மொத்தமா உன் வேலை போகனும். அப்பத்தான் புத்தி வரும்…” என்றாள் ஸ்பூர்த்தி.
“மேம், என்ன சொல்றீங்க? நான் என்ன செஞ்சேன்?…”
“அதை நான் சொல்லனுமா? உனக்கா தெரியாதா? முடிஞ்சா தப்பிச்சிக்க பாரு…” என்று சொல்லிவிட்டு,
“லஞ்ச் வந்திருச்சுன்னா சாப்பிட்டு போய் தூங்கு. உன்கிட்ட பேசினதுல என் வேலையை மறந்துட்டேன்…” என்று சொல்லிவிட்டு அவள் செல்ல மாசிலாமணிக்கு பதறியது.
மெதுவாய் அவள் செல்வதை எட்டி பார்த்தான். வெளியே ஜீப் நின்றிருக்க முருகவேல் காளியுடன் பைக்கில் சென்றிருந்தான்.
ஜீப்பில் ஏறி ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவள் வேகமாய் திரும்பி பார்க்க மாசிலாமணி மறைய முயன்றான்.
“என்ன மாசிலாமணி என்னை ட்ராப் பண்ணலாம்ன்னு கேட்க வந்தீங்களா?…” மிக சத்தமாய் அவளின் குரல்.
அதில் பதறிபோய் மறைந்து நின்றவன் வெளியே அவள் எதிரே வந்து நிற்கவும் ஸ்பூர்த்தி இதழ்களில் இளக்காரமாய் ஒரு புன்னகை.
“நானே போய்ப்பேன்…” என்று சொல்லிவிட்டு ஜீப்பை கிளப்ப கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்தபடி நின்றான் அவன்.
ஜீப் சென்றதும் தான் நிம்மதியானது. அதுவுமே சில நொடி மட்டுமே. வேகமாய் உள்ளே சென்றான் பதட்டத்துடன்.
மூளை செயல்பாட்டை இழந்திருந்தது ஸ்பூர்த்தி சொல்லிவிட்டு சென்றதை கேட்டதிலிருந்து.
எப்போதுமே ஒரு அலட்சியத்துடன் தான் ஸ்பூர்த்தி இருப்பாள் அவனிடம். ஆனால் அழைப்பிலும் பேச்சிலும் பன்மை தன்மை இருக்கும்.
மரியாதையை என்றைக்கும் விட்டிருந்ததில்லை. இன்று அப்படி ஒன்றை அவளிடம் காணவே இல்லை.
அதுவே பதறியது. என்ன செய்திருக்கிறாளோ? வேலையை விட்டே தூக்குமளவு ஆதாரம் என்றால் என்னவென்று பதறியவன் உடனே வேதநாயகத்தின் உதவியாளருக்கு அழைத்தான்.
அங்கே அந்த கட்டிடத்தில் ஒருவரும் இருக்கவில்லை என்பது அவனுக்கு அத்தனை சாதகமாக இருந்தது.
வருவதற்கும் தாமதமாகும். அதற்குள் பேசிவிடவேண்டும் என்ற வேகம் மாசிலாமணிக்கு.
“இந்த மனுஷன் கூட சேர்ந்ததுக்கு…” என்று புலம்பல் வேறு அவனிடம்.
அழைப்பு எடுக்கும் வரை உயிரில்லை. படபடவென்று வர அந்த குளிர்ந்த சூழ்நிலையிலும் வியர்த்தது.
“போனை எடுங்கடா…” என்று பதட்டமாய் சொல்லிக்கொண்டே கைக்குட்டையால் வியர்வையை துடைத்தான்.
“என்ன மாசி, இப்ப போன் போட்டிருக்க?…” என உதவியாளர் மறுபக்கம் கேட்க,
“ஏன் ஸார், உங்களுக்கு போன் எடுக்க இம்புட்டு நேரமா? இங்க தலைபோற காரியம்ன்னு நானே பதட்டத்துல இருக்கேன்…” என்று மாசிலாமணி இரைய,
“என்னய்யா? என்னன்னு மெல்ல சொல்லு….” என்றான் உதவியாளர்.
“என்னத்த சொல்ல சொல்றீங்க? இன்னைக்கு ரவுண்ட்ஸ் போய்ட்டு வந்துட்டு இந்தம்மா என்னை கிழிச்சிருச்சு. நானே பதறிபோய் போன் போட்டா அம்புட்டு சாவகாசம் உங்களுக்கு…” என்றான் மாசிலாமணி.
“யோவ், என்ன பேச்செல்லாம் எகிறுது. பார்த்து பேசு மாசி, ஏற்கனவே இங்க ஏகப்பட்ட பிரச்சனை…”
“உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனையா? எங்களுக்கில்லையா?…”