“ஆமா ஸார், இந்தம்மா என்னவோ பூடகமா பேசிட்டு போகுது. எனக்கு என் வேலை ரொம்ப முக்கியம்….”
“பெரிய இந்த வேலை. இது ஒரு விஷயமா? அப்படியெல்லாம் ஒன்னுமாகாது…” அலட்சியமாய் அவன் பேச,
“இந்தா ஸார், இந்த வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம்…”
“மாசி, எதுக்கு இப்ப இவ்வளோ பயப்படற? நம்ம அய்யாக்கிட்ட இல்லாத வேலையா?…”
“என்னது அடியாளுன்னு நான் வந்து வேலை பார்க்கனுமா? அந்த காசு எதுக்கு நாக்கு வலிக்கவா?…” என்று மாசி பேச,
“மாசி…”
“எல்லாம் தெரியும் ஸார், இப்ப தலைவர்கிட்ட பேசனும். முடியுமா முடியாதா?…” என்று அதிகாரமாய் மாசிலாமணி சொல்ல உதவியாளருக்கு கடுகடுவென்று வந்தது.
“உன் தகுதியறிஞ்சு பேசு மாசி. என்னவோ அய்யா உன்னை மதிச்சு பேசவும் அவ்வளோ ஈசியா போச்சா உனக்கு? அதான் அந்த வேலை தான் முக்கியம்ன்னு சொல்லிட்டியே அப்பறம் என்ன?…” என்றான் அவன்.
“ஆமா அதுக்குத்தான் சொல்றேன். என்னவோ என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்கு பண்ணிக்குடுத்துட்டேன். இத்தோட போதும். எனக்கு கைமாறா நீங்க செய்யற உதவி ஒன்னே ஒன்னு தான். என் பேர் இந்த கேஸ்ல வராம இருக்கனும். நான் கெஞ்சி கேட்டுக்கறேன்…” மாசி சொல்ல,
“அதிகாரமால தெரியுது. கெஞ்சற மாதிரி இல்லையே?…” என்றவன்,
“அய்யா பதவி போனதுல ரொம்ப கோவத்துல இருக்கார். நல்லவேளை அவர்கிட்ட நீ இப்படி பேசலை. இல்லைன்னா…”
“இல்லைன்னா? என்ன ஸார் மிரட்டறீங்களா? நானே அப்ரூவராகிருவேன் அப்பறம்…”
“மாசி…”
“எனக்கு வேலை எப்படி முக்கியமோ உயிரும் முக்கியம். இங்க இருந்துக்கிட்டே இந்தம்மாக்கிட்ட இருந்த ஆதாரங்களை உங்களுக்கு எடுத்து குடுத்த எனக்கு இது பெரிசில்ல. இந்த போத சமாச்சாரத்துக்குள்ள நான் வந்ததே தப்பு…” என்றான்.
“டேய் டேய்…”
“நீங்களே தலைவர்கிட்ட சொல்லிருங்க. வேதநாயகம் அய்யாவுக்காக மட்டும் தான் அவர் பேச்சுக்காக மட்டும் தான் பேசறேன். என் வேலைக்கோ, உயிருக்கோ, என் குடும்பத்துக்கோ ஒண்ணுன்னா நான் என்ன செய்வேன்னே தெரியாது. யாருக்கும் பார்க்கமாட்டேன்…”
“மாசி மாசி, நான் என்னவோ பேசிட்டேன். பொறுமையா இருப்பா. இப்ப என்ன உனக்கு உன் பேர் எதுலையும் வரகூடாது. உன்னை தெரியாத மாதிரியே இருந்துக்கறோம். அவ்வளோ தான?…”
“ஆமா, உங்க சங்காத்தம் போதும் சாமி…” என்ற மாசி,
“என்னை புடிச்சாங்கன்னா யோசிக்காம மாட்டிவிட்டுடுவேன். பார்த்துக்கோங்க…” என்று மீண்டும் சொல்லிவைத்தான்.
“சரி அது போதுமா இல்ல வேற இடத்துக்கு வெளிய மாத்துதல் வேணுமா?…”
“அதெல்லாம் வேண்டாம்ங்க, இப்ப உங்களால இத தான பண்ண முடியும். வைக்கிறேன்…” என்று பேசி வைத்துவிட்டான்.
ஸ்பூர்த்தியிடம் என்ன ஆதாரம் இருக்கும் என்று சுத்தமாய் தெரியவில்லை. அந்தளவிற்கு மிக துல்லியமாய் தெளிவாய் தன் தலை உருளாதவரையில் நடந்திருந்தான்.
மேலிடத்திற்கு புகார் என்று சென்றால் கூட அதிலிருந்து தப்பிக்க தெரிந்திருந்தது.
தன்னுடைய கைரேகை முதற்கொண்டு எந்தவித ஆதாரத்தையும் அவளால் சேகரிக்க முடியாது.
அப்படித்தான் இதுவரை இருந்தது. இப்போது நினைக்க தன்னுடைய பயம் அர்த்தமற்றதாக தெரிந்தது.
ஆனாலும் ஒரு எச்சரிக்கை தான். அத்தனை பெரிய அமைச்சரே அங்கே பதவி இழந்து இருக்க தான் எம்மாத்திரம் என்று தோன்றியது.
“முதல்ல இந்த போனை ஒளிச்சுக்கட்டனும்…” என்று கையடக்க தொலைபேசியை பார்த்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.
மெதுவாய் அந்த இடத்தை விட்டு பின்னால் சென்று பார்க்க அங்கிருந்த ஒரு கல்மேடையில் கையிலிருந்த போனை அதன் மேல் வைத்தவன்
அதனை உடைக்க கீழே இருந்த ஒரு கல்லை எடுத்துக்கொண்டு திரும்ப மேடையில் போன் இல்லை.
“போன் என்கிட்டே இருக்கு மாசிலாமணி….” என்று சொல்லியவள்,
“தேங்க் யூ. என் வேலையை சுலபமாக்கினதுக்கு…” என்றாள்.
பேசும் பொழுதே மூச்சுவாங்கியது ஸ்பூர்த்திக்கு. அவள்மேல் வியர்வை ஆறாய் ஓடிக்கொண்டிருந்ததிலேயே எத்தனை வேகமாய் இங்கே ஓடி வந்திருப்பாள் என்று புரிந்துவிட்டது.
தன் மடத்தனத்தை எண்ணி முட்டிக்கொள்ளாத குறையாக தான் ஸ்பூர்த்தியை பார்த்தான் மாசிலாமணி.
“மேம்…”
“பக்கா எவிடன்ஸ்….” என்று கையிலிருந்த மொபைலை காண்பித்து சொல்லியவள்,
“இதுக்காக எவ்வளோ தூரத்துல இருந்து ஓடி வரவச்சிட்டீங்க? ஹ்ம்ம், இதுவும் நல்லது தான். ட்ரெயினிங் பீரியட்ல ஓடினதுக்கப்பறம் எப்பவாச்சும் தான் இப்படி சான்ஸ் கிடைக்குது…” என்று கல் மேடையில் அமர்ந்துகொண்டாள்.
“மேம், மேம்…”
“எதுவும் சொல்லவேண்டாம். எல்லாமே ரெக்காடட் தான். இப்ப இந்த ஆதாரம் போதுமே மாசிலாமணி…”
“மேம், இனிமே இப்படி பண்ணமாட்டேன். அந்த போன குடுத்திருங்க…” அதிகாரமாய் அவன் கேட்க ஸ்பூர்த்தி கண்கள் இடுங்கியது.
“இல்லைன்னா?…”
“மேம்…”
“திரும்பவும் முட்டாள்தனம் பன்றீங்க மாசிலாமணி. புத்திசாலித்தனமா தப்புல இருந்து தப்பிச்சிட்டே வந்தீங்க. அது எல்லா நேரமுமா உங்களுக்கு கை குடுக்கும்?…” என்று சொல்லியவள்,
“இல்லைன்னு சொல்லுவீங்களா? சொல்லிக்கோங்க. அதை போலீஸ் பார்த்துப்பாங்க. இப்ப என்ன செய்யறீங்க? மினிஸ்டர்ட்ட, அச்சச்சோ இப்ப அவர் மினிஸ்டர் இல்லைல…” என்று உச்சுக்கொட்டினாள்.
“இப்ப அவர் எந்த கட்சின்னு கூட தெரியலை தானே? பாவம் உடம்பு முடியாம ட்ரீட்மென்ட்ல இருக்கார். விசாரணையை வேற தள்ளி வச்சிருக்காங்க…” என்று பாவம் போல சொல்ல கிலி பிடித்தது மாசிலாமணிக்கு.
“மேம்…”
“இதை நான் சொல்லனும்னு இல்லை. அப்ரூவராகிட்டா தண்டனைல இருந்து தப்பிக்க முடியாது. குறைய வாய்ப்பிருக்கு. பார்த்துக்கோங்க…” என்று சொல்லிக்கொண்டிருக்க முருகவேல், காளி இருவரும் வந்துவிட்டனர்.
“ஹ்ம்ம், என்ன மாசிலாமணி, கட்டி வைக்கனுமா? இல்லை நீங்களே உள்ள போய் போலீஸ் வர வரைக்கும் உட்கார்ந்திருக்கீங்களா?…” என்றாள் ஸ்பூர்த்தி.
ஒன்றும் சொல்லாமல் குனிந்த தலையுடன் அவன் உள்ளே செல்ல அவனோடு தானும் வந்தவள் அங்கிருந்த மூன்று பேனாக்களை எடுத்தாள் ஒவ்வொன்றாய்.
“எவிடன்ஸ் வேணுமே? இப்படி நம்ம ஸ்டேஷன்குள்ளயே ஸ்பை கேமரா வைக்க வேண்டி வரும்ன்னு நான் நினைச்சதே இல்லை மாசிலாமணி…” என்று சொல்ல தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
“காளி இவரை சாப்பிட வைங்க…” என்று முருகவேல், காளியை கண்ணை காண்பித்துவிட்டு அங்கேயே ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்துகொண்டாள்.
அத்தனை களைப்பு. மாசிலாமணியை கண்காணிக்க என்று ஓட்டி சென்ற ஜீப்பை நிறுத்திவிட்டு காலிலிருந்த ஷூவை கூட கழற்றிவிட்டு ஓடி வந்திருந்தாள்.
காலெல்லாம் புண்ணாகியிருக்க அதை கவனிக்கும் நேரமில்லை. பேனாவிலிருந்த வீடியோவை எங்கெல்லாம் பத்திரப்படுத்த முடியுமோ அதில் சேமித்து ஒரு காப்பியை லக்ஷ்மணனுக்கு தனியே அனுப்பி வைத்தாள்.
இது அவளுக்கு மிகப்பெரிய சவால். வேதநாயகம் அவரின் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பட்டியலிலிருந்தே நீக்கப்பட்டிருந்தார்.
எப்படி என்று யோசிக்கமுடியாதளவிற்கான ஆதாரங்கள் லக்ஷ்மணன் மூலமாக அங்கே சென்றுகொண்டிருந்தது.
அவனின் மேலதிகாரியே இதில் தலையிடமுடியாதளவிற்கு செல்ல இப்போது வழக்கு சிபிஐயிடம் சேர்ப்பிக்கப்பட்டிருந்தது.
காட்டிற்குள் வேதநாயகத்தின் உறவான அந்த வாலிபன் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தாக சித்தரிக்கப்பட்டிருந்ததில் அவனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அது வெறும் மது போதையினால் அல்ல என்பது நிரூபணமாகியிருந்தது.
தடைசெய்யப்பட்ட போதை வஸ்துவை அவன் பயன்படுத்தியிருந்ததும் அந்த வாகனத்தில் அவை கைப்பட்டப்பட்டதும் என்று கையும் களவுமாக மாட்டியிருக்க ஸ்பூர்த்தியிடம் அவர்கள் சிக்கியது தான் வேதநாயகத்தின் இறங்குமுகம்.
அதனைகொண்டே அவசர அவசரமாக ஸ்பூர்த்தியை அங்கிருந்து அப்புறப்படுத்தவும், அவள் வைத்திருக்கும் ஆதாரங்களை கைப்பற்றவும் என்று முயற்சிகள் நடக்க இதை எல்லாம் ஏற்கனவே லக்ஷ்மணனிடம் சேர்ப்பித்துவிட்டவள் தன்னாலான எல்லாவற்றையும் செய்துவிட்டாள்.
வனத்தை தாண்டி பெரிதாய் இவள் என்ன அதிகாரம் செய்துவிடமுடியும் என இருக்க தன்னால் முடியும் என காண்பித்ததன் விளைவு வேதநாயகம் மொத்தமாய் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரை விலக்கி வைக்கப்பட்டதோடு விசாரணையும் அவர் மீது பாய்ந்தது தான்.
அவை மட்டும் போதாதே? என்னதான் இருந்தாலும் இந்த காட்டிற்குள் என்ன செய்ய இருந்தனர் என்னும் ஆதாரமும் வேண்டுமே?
முதலில் மாசிலாமணியை இங்கிருந்து நீக்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தவள் அவகாசம் தேட இதோ அமைத்துவிட்டது.
லக்ஷ்மணனே நேரடியாக வந்துவிட்டான் அங்கே. யாரையும் நம்பமுடியாது இந்த கேஸில் என்பதில் அத்தனை திண்ணம் இருவருக்கும்.