ஸ்பூர்த்தி வரும்வரை அஷ்வின் வீட்டின் வாசலிலேயே தான் உலாத்திக்கொண்டிருந்தான்.
அவன் அங்குமிங்கும் திரும்பி நடக்க சேம்பியும் அவன் கால்களுக்கிடையில் தான் அவனை போலவே நடக்கவும், அவன் நிற்கையில் காலுக்கருகே அமரவுமாய் இருந்தது.
அஷ்வினுக்கு உள்ளே செல்லவும் மனதில்லை. ஓரிடத்தில் அமரவும் முடியவில்லை. அங்கே சென்று பார்க்கவும் முடியவில்லை.
காட்டிற்குள்ளிருந்து தன்னை வீட்டினருகே வந்து விட்டுவிட்டு கீழே கூட இறங்காமல் அப்படியே திரும்பி சென்றுவிட்டாள் ஸ்பூர்த்தி.
உடன் வருகிறேன் என்றதற்கு அனுமதிக்கவும் இல்லை. சற்று நேரத்தில் வந்துவிடுவதாகவும், தாமதமானால் தன்னை தேடி அங்கே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.
அதனால் அவள் வரும் வரை வெளியில் காத்துக்கொண்டு இருக்க அஷ்வினின் இந்த தன்மையில் வீட்டில் இருந்தவர்கள் என்ன என கேட்க ஸ்பூர்த்திக்காக காத்திருப்பதாய் சொல்லியிருந்தான்.
உண்மை நிலவரத்தை இன்னும் சொல்லவில்லை. ஸ்டேஷனில் எதுவும் பிரச்சனையோ என்று தோன்றியது.
ஜீப் வரும் சத்தத்தில் அஷ்வின் அத்திசையை பார்த்தபடியே நிற்க முன்னிருக்கையில் இருந்து களைப்புடன் இறங்கினாள் ஸ்பூர்த்தி.
ஒரு கையில் தனது ஷூவை பிடித்திருந்தவள் மெதுவாய் கால் ஊன்றி வர முகம் லேசாய் சுருங்கி மீண்டது.
“ஸ்பூர்த்தி…” என அவளருகே அவன் ஓடி வந்தான்.
“நீங்க போங்க காளி….” என்று காளியை அனுப்பியவள் அஷ்வினை பார்த்து,
“ஒண்ணுமில்லை மாமா, இருங்க…” என்றாள்.
“நீ என்னை ட்ராப் பண்ணிட்டு போறவரை நல்லா தான நடந்த?…” என்று அவள் கையை பிடித்துக்கொண்டவன் கை தாங்கலாக உள்ளே கூட்டி வர நந்தன், மோனிகா, மலர் மூவரும் வெளியே வந்தனர்.
“என்னாச்சு ஸ்பூர்த்தி?…” என ஆளாளுக்கு கேட்க,
“அச்சோ ப்ளீஸ், கொஞ்சம் பேசாம இருங்க…” என்று வந்தவள் இருக்கையில் அமர்ந்து பாதத்தை தூக்கி முன்னிருந்த டீப்பாயில் வைத்தாள்.
உள்ளங்கால்கள் புண்ணாகியிருந்தது. கிளம்பும் வரை தெரியாத வலி அப்போது தெரிந்தது.
“பூவம்மாக்கிட்ட ஹாட்வாட்டர் வைக்க சொல்லுங்க…” என்று பின்னால் சாய்ந்தவள் உடல் தளர்ந்தது.
மலரும், மோனிகாவும் அவளுக்கு இருபக்கம் அமர்ந்துகொள்ள நந்தன் ஸ்பூர்த்தியின் கால்களை பார்த்து அமர்ந்திருந்தான்.
அஷ்வினுக்கு இவர்களை வைத்துக்கொண்டு அவளிடம் நெருங்கவும் முடியவில்லை.
விலகி இருந்து வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை. பல்லை கடித்தபடி அவளின் முகத்தையும், பாதத்தையுமே பார்வையிட்டுக்கொண்டிருந்தான்.
அதற்குள் வீட்டின் பின்னால் இருந்த பூவம்மா வந்துவிட்டார். மருந்து போட முதலுதவி பெட்டியும் வெந்நீருமாய் வந்துவிட அஷ்வின் அதை வாங்கிக்கொண்டான்.
“நந்து நகரு…” என்று ஸ்பூர்த்தியின் காலை சுத்தம் செய்ய ஆரம்பிக்க சேம்பி அவனின் கால்களுக்கிடையே படுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்தது.
“மாமா நான் பன்றேன்…” என நந்தன் கேட்டும்,
“போடா…” என்றவன் முகத்தின் தீவிரம் நந்தனை அடுத்து பேசவிடவில்லை.
“என்ன பண்ண ஸ்பூர்த்தி? ஷூ போட்டு தான போன?…” மோனிகா கேட்க,
“கிண்டலா உனக்கு? நான் எவ்வளோ பதறி போய் கேட்கறேன்?…” மோனிகாவின் முகம் கவலையாய் இருந்தது.
“என்னடா? கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படி அடிபட்டு வந்திருக்க?…” மலரும் கேட்க,
“நல்லாருக்கே கதை? தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுட்டு நீச்சலடிக்காதன்னு சொல்றமாதிரில இருக்கு?…” என பூவம்மா ஸ்பூர்த்திக்கு சூடாக அப்போது செய்திருந்த சூப்பை கொண்டுவந்து தந்தார்.
“என்ன சொல்ற பூவு?…” மலர் கேட்க,
“பின்ன என்னம்மா? நம்ம போலீஸ் கண்ணு வேலை அப்படி? எந்த எடுபட்டபய என்ன கோக்குமாக்குத்தனம் பண்ணுனானோ? இம்புட்டு காயம்பட்டு வந்திருக்காங்க. சரியாயிரும்…” என்ற பூவம்மா,
“தம்பி, உடனே கட்டு போடாம கொஞ்சம் உணரட்டும் விடுங்க. மருந்த மட்டும் பூசுங்க….” என்று சொல்லிவிட்டு ஸ்பூர்த்தி சூப்பை குடிக்கும் வரை பார்த்துக்கொண்டு நின்றார்.
ஏற்கனவே காலையில் உண்ணாமல் சென்றது, மதிய உணவு வேளை தாண்டியும் இன்னும் வயிற்றிற்கு எதுவுமில்லாமல் இருப்பது என்று ஸ்பூர்த்தியை வெகுவாய் தளர்த்தியிருந்தது.
எப்போதும் உணவை தள்ளி வைப்பதோ ஒதுக்குவதோ அவளின் பழக்கத்திலேயே இல்லை.
நன்றாக சாப்பிட்டால் தான் உடலுக்கு ஜீவன் என்று உணவு எதையும் தவிர்ப்பவளும் இல்லை.
அன்று காலை அஷ்வினின் மனவோட்டத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்க உண்ணாமல் சென்றுவிட்டவள் இப்போது தவறு செய்துவிட்டோம் என நினைத்தாள்.
“பூவம்மா இன்னொரு கப் தாங்களேன்…” என்று அதனை குடித்துவிட்டு நீட்ட,
“முதல்ல சாப்பிடுங்க போலீஸ் கண்ணு. அப்பறமா குடிக்கலாம்…” என்று உள்ளே சென்றார் அவர்.
“நீங்க சாப்பிட்டீங்களா பாட்டி?…” என மலரிடம் ஸ்பூர்த்தி பேச,
“அஷ்வின் தான் இன்னும் சாப்பிடலை. நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சு…” என்றவர்,
“பாட்டி, அதான் மருந்து போட்டாச்சுல. அவ ரெஸ்ட்டெடுக்கட்டும்…” என்றவன் மோனிகாவை பார்க்க,
“அதுவும் சரிதான். அத்தை வாங்க போவோம். நாம இருந்தா பேசிட்டே தான் இருப்போம். இங்க இருந்தா அந்த வலியை நாம வாங்கிக்க போறோமா என்ன?…” என்று மலரை கிளப்பிக்கொண்டு மோனிகா செல்ல நந்தன் ஸ்பூர்த்தியை பார்த்துவிட்டு நகர்ந்தான்.
“ஏய் பொண்ணுக்குட்டி, நீ போகலை?…” என ஸ்பூர்த்தி சேம்பி அமர்ந்திருந்த விதத்தை பார்த்து சிரிப்புடன் கேட்க அவளை பார்த்துவிட்டு அஷ்வினின் காலின் அருகே படுத்துக்கொண்டது.
“நீங்க இங்க வாங்க மாமா…” என தனக்கருகே இருந்த இருக்கையை காண்பித்தாள் ஸ்பூர்த்தி வேண்டுமென்றே.
“அவ என்ன உனக்கு போட்டியா? உதை தான் உனக்கு ஸ்பூர்த்தி…” அஷ்வின் சொல்ல அதை கண்டுகொள்ளாதவள்,
“உன்னை எனக்காக தான் வாங்கிட்டு வந்திருக்காங்க. என் கூட தான் இருக்கனும். ஞாபகம் வச்சுக்கோ…” என அதை பார்த்து லேசாய் மிரட்டி சிரிக்க உடனே அஷ்வினிடம் என்னவோ சப்தமெழுப்பியது சேம்பி.
“உன்னை தான் கம்ப்ளைண்ட் பன்றா…” என அஷ்வினும் சிரித்துக்கொண்டே அவளருகே இருந்த தனி இருக்கையில் அமர்ந்தான்.
மீண்டும் அவனின் காலுக்கருகே வந்து குத்தவைத்து அமர்ந்த சேம்பி இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு அப்படியே மடங்கி படுத்துக்கொண்டது.
“இந்தாங்க கண்ணு. சாப்பிட்டு செத்த உறங்குங்க…” என்று சொல்லிவிட்டு பூவம்மா நகர,
இருவருக்குமே தனி தனி கிண்ணங்களில் சாதத்தை நொறுங்க பிசைந்து ரசத்தை தாராளமாக ஊற்றி துவையலுடன் ஒரு ஸ்பூனை போட்டு கொண்டுவந்து வைத்திருந்தார் பூவம்மா.
“ஹ்ம்ம், வேற சாப்பிடற மூட் இல்லை…” என்ற அஷ்வின் சாப்பிட்டபடி,
“இப்ப வலி இருக்கா?…” என்றான்.
“ஹ்ம்ம், லைட்டா…” என்றவள்,
“ஜீப்பை நிப்பாட்டிட்டு ஓட வேண்டிய சூழ்நிலை. அப்படி போனதால அக்யூஸ்ட் மாட்டினான்…”
“அதுக்கு ஏன் ஷூவை கழட்டிட்டு ஓடின ஸ்பூர்த்தி?…”
“மாமா, என்ன நீங்க? ஷூ சத்தம் மட்டும் கேட்காதா? அதான் சாக்ஸ் போட்டிருந்தேன். ஆனாலும் காயமாகிருச்சு. இப்ப தான் இந்த பெய்னுமே தெரிஞ்சது…” என்று கிண்ணத்தை வைத்துவிட்டாள்.
“என்ன போதுமா? நீ வேஸ்ட் பண்ண மாட்டியே?…” என அவள் மிச்சம் வைத்திருந்ததை பார்த்து கேட்க,
“காலையில இருந்து சாப்பிடலையா? அதான் இப்ப சாப்பிட முடியலை. ஒருமாதிரி இருக்கு. கொஞ்சம் நேரம் கழிச்சு இன்னும் கொஞ்சம் எடுத்துக்கறேன்…” என்றாள்.
அவளுக்கு மாத்திரையை எடுத்து தந்தவன் தண்ணீருடன் குடித்து முடிக்கவும் பூவம்மாவை வரவழைத்து அவற்றை எடுத்து போக செய்தான்.
வெளியே வேலை என்று அவரும் கிளம்பிவிட வீட்டில் இருவர் மட்டுமே தனித்திருந்தனர்.
“கொஞ்ச நேரம் உன் ரூம்ல ரெஸ்ட் எடு ஸ்பூர்த்தி…” அஷ்வின் அவளின் களைப்பை கண்டு சொல்ல,
“ம்ஹூம், இங்கயே இருக்கேன் மாமா…” என்றாள் அவள்.
அவசர மறுப்பாக அடுத்தநொடி அவள் சொல்லியவிதம் அஷ்வினின் மனதை பதம் பார்த்தது.
“நான் எங்கயும் போலம்மா…” என்றான் மென்மையாக.
“ஹ்ம்ம்…” என்று வாடிவிட்ட முகத்துடன் தனது பாதத்தை பார்த்துவிட்டு திரும்ப அங்கே சேம்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.
“இன்னும் வலிக்குதா ஸ்பூர்த்தி? கொஞ்சம் தூங்கி எழுந்தா பெட்டரா இருக்கும்ல?…” என்றான்.
“இப்ப என்ன மாமா? நான் போகனுமா?…” என தன்னை இப்படி விரட்டுகிறானே என்ற கோபத்துடன் வேகமாய் கேட்டுவிட்டாள்.
“ஸ்பூர்த்தி…”
“அப்ப இருந்து இதான் சொல்றீங்க? என்கிட்டே சரியா பேசவும் இல்லை. ஏன் இப்படி இருக்கீங்க மாமா?…” என்றவள்,
“இந்த காயத்தை விட நீங்க பன்றது தான் ரொம்ப வலிக்குது…” என சொல்லியேவிட அஷ்வின் முகத்தில் அமைதியே.
“என்கிட்டே எந்த மாற்றமும் இல்லை ஸ்பூர்த்தி. நீயா தான் நினைக்கிற…”
“நானா நினைக்கிற அளவுக்கு நான் என்ன சின்னபிள்ளையா? நீங்க பேசறதை வச்சு புரிஞ்சுக்க முடியாதா? அதுவும் முன்னாடிமாதிரியே இருந்தா பரவாயில்லை. இடையில இந்த லீவ்ல என்கிட்டே அப்படி இருந்துட்டு…”
“எப்படியாம்?…” என்றான் லேசாய் சிரிப்போடு.
“மாமா, பேச்சை மாத்தாதீங்க. நீங்க என்னவோ வச்சிக்கிட்டு சொல்லாம என்னை காயப்படுத்தறீங்க…” என்றதும் கூர்மையான பார்வை அவளை துளைத்தது.
“ஏன் உனக்கு இது புரியலை ஸ்பூர்த்தி?…” என்றான்.
“எது?…”
“நான் சரியா பேசலைன்னு தெரியுது. ஆனா அது ஏன்னு மட்டும் தெரியலையா?…” என்றவன் கேட்டதில் என்னவோ பொதிந்திருக்க ஸ்பூர்த்தி யோசித்தாள்.