“ஹ்ம்ம், நீ…. நீதான் காரணம். தெரிஞ்சிருச்சா?…” என்று சொல்லும் பொழுதே அன்றைய நாளின் கோபத்தின் வெளிப்பாடு இன்றும் அவன் விழிகளில் கனலாய் ஒளிர்ந்தது.
“விருப்பம், நான் அப்படி ஒன்னை யோசிக்காம இருந்தப்போ, ஏன் நம்ம குடும்பத்துல யாருமே யோசிக்காத ஒன்னை நீ என்கிட்டே தெரிவிச்சிட்டு போன. அப்படி எனக்குள்ள நீ விதைச்சதை என் அனுமதி இல்லாமலே எப்படி பிடுங்கி எறிய நினைப்ப?…” என்றான் அடக்கப்பட்ட ஆவேசத்துடன்.
“மாமா, நான்…”
“நீ என்ன காரணம் சொன்னாலும் இந்த காயம் எனக்கு ஆறாது ஸ்பூர்த்தி. கேட்ட தானே என்ன காரணம்ன்னு, நான் முடிக்கிற வரை சைலண்டா இரு…” என்றவன்,
“இந்த ரெண்டுவருஷமா நான் விரும்பறேனா இல்லைனான்னு எதையும் பத்தி நினைக்காம, யோசிக்காம உன்னை மட்டுமே நினைச்சு ஒதுங்கி நின்ன. அப்கோர்ஸ் அன்னைக்கு நான் நடந்துக்கிட்டதும் அப்படித்தான் இருந்துச்சு. அதனால நீ விலகி போன….”
“உனக்காக நான் வெய்ட் பண்ணேன். ஆனா வந்தவ என்னையும், என் மனசையும் தெரிஞ்ச பின்னாடியும் மாமாவுக்காகன்னு என்னை தூக்கி எறிய நினைச்ச. அவ்வளோ ஈசியா போச்சுல…”
“வேண்டாம் வேண்டாம்ன்னு அத்தனைதடவை சொல்றியே? அதுவும் எப்படி, உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து. உன்னால எப்படி அதை சொல்ல முடிஞ்சது? எனக்கு புரியவே இல்லை…”
“நீ என்கிட்டே சொல்லி கிளம்பின அந்த நிமிஷம் எனக்கு தோணுச்சோ இல்லையோ? ஆனா நீ தான்னு நான் முடிவு பண்ணின நொடில இருந்து நான் இம்மியளவு மாறலை. நீ மாறிட்டன்னு சொல்லலை. உன்னால வார்த்தைக்கு கூட சொல்ல முடிஞ்சதுனா நான் என்ன இடத்துல இருக்கேன்னு யோசிக்க வைக்குது…”
“ஆனாலும் நீ தான் வேணும்னு தோணுதே. விடமுடியலை. அவ்வளோ கோவம் வருது. உன்னை என்ன பண்ணலாம்ன்னு தெரியலை. கல்யாணம் முடியட்டும்ன்னு இருக்கு…” என்றவன்,
“என்ன பார்க்கற? நான் சொல்றதோட வீரியம் இப்ப உனக்கு புரியாது ஸ்பூர்த்தி. நீ உணருவ. வேண்டாம் வேண்டாம்ன்னு சொன்னதால இப்படியாகிருச்சுன்னு என்னைக்காச்சும் தோணும்…”
“மாமா ப்ளீஸ். இப்படியெல்லாம் பேசாதீங்க…” அவனின் இந்த பேச்சுக்களின் தாக்கத்தில் உடைந்துபோயிருந்தாள் அவள்.
“இத்தனைக்கும் அன்னைக்கு நான் மறுத்து உன்னை அடிச்ச வலியை அனுபவிச்சவ தானே நீ? அதையே எனக்கும் நீ செய்ய நினைச்சுட்ட பார்த்தியா? அதான் என்னால மறக்க முடியலை…”
“மாமா, நான் சூழ்நிலை…” ஸ்பூர்த்தி பேச வர,
“ம்ஹூம், சில விஷயங்கள் காலத்துக்கும் மாறாது. நீ என்னை வேண்டாம்ன்னு மனசார சொல்லலைனாலும் நான் உன்கிட்ட அத்துமீறின பிறகும் நீ எங்கப்பாவை பார்த்து நின்னியே? அப்ப நான்?…” முகத்தில் அத்தனை வேதனை அஷ்வினிடம்.
“இந்த ஒருமாசமும் என்னால உன்னோட பேசாம இருக்க முடியலை. நீ கேட்ட மாதிரி பேசவும் முடியலை. என்னை விட்டு வேற ஒரு முடிவுக்கு சூழ்நிலை காரணமா கூட உன்னால எப்படி பேச முடிஞ்சதுன்னு என்னை குடைஞ்சிட்டே இருந்துச்சு. உன்கிட்ட காமிக்க கூடாதுன்னு ரொம்ப மெய்ண்டெய்ன் பண்ணேன். பட்…” என்று கையை விரித்தான்.
“லவ் அவ்வளோ ஈசியா உனக்கு? பிரச்சனை, வீட்ல நோ சொன்னா உடனே வேற முடிவுக்கு போக? ஏன் கூட கொஞ்ச நாள் வெய்ட் பன்றதுக்கென்ன? இல்லை எங்கப்பாவை பேசி கன்வின்ஸ் பண்ண முடியாதா உன்னால?…” என்றவன் எழுந்து நின்று அவள் முன் விரல் நீட்டி,
“எங்கப்பாட்ட கேட்டேன் நீ கடைக்கு வந்துட்டு போனதும். ஏன்ப்பா என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்களான்னு? அவருக்கு அதுலயே புரிஞ்சிருக்கும். உனக்கு புரியும்ன்னு நினைச்சேன். நான் முட்டாள்டி…” என ரௌத்திரம் பொங்க கூறி விலக அவன் கையை பிடித்துவிட்டாள்.
“ப்ச், விடு ஸ்பூர்த்தி…” என்று அவன் முறைக்க,
“உட்காருங்க மாமா…” என்று தன்னருகே இழுக்கவும் கோபத்துடன் அஷ்வின் அமர அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் ஸ்பூர்த்தி.
“திரும்ப சொல்லுங்க, மாமாக்கிட்ட என்ன சொன்னீங்க?…” முகத்தில் இருந்த அதிர்ச்சி, திகைப்பு எல்லாம் கலைந்து அவன் கடைசியாய் சொல்லியதில் மனம் லயிக்க ஒருவித பூரிப்பு.
“ப்ச், விடு ஸ்பூர்த்தி…” என விலகி அமர்ந்தான்.
“ஏன்? நான் உங்க வொய்ப் தானே? கையை பிடிக்க கூடாதா?…” சின்ன சிரிப்புடன் கேட்க,
“அப்பாக்கிட்டையா? என்னாச்சு?…” ஸ்பூர்த்தி நிமிர்ந்து பார்த்து கேட்க,
“நான் பேசினதெல்லாம் விட்டுட்டு கேள்வி கேட்கிற நீ? பயம் விட்டு போச்சு. இல்லையா?…” என்றான் அவளின் காதை திருகி.
“புருஷன்கிட்டே எந்த பொண்டாட்டியும் பயப்படமாட்டாங்களாம். என்னோட அத்தை சொன்னாங்க…” என்றாள் கண்சிமிட்டி.
“ஓஹ், வாவ். ஈஸிட்?…” என்று அவளின் சிரிப்பை அளவெடுத்தபடி முகத்தை சாய்த்து பார்த்தவன் விரல்கள் தன்னையறியாமல் அவள் கன்னத்திற்கு இடம்பெயர,
“பூரிக்குட்டி…” என்றான் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாய்.
“ஹ்ம்ம் மாமா…” கண்களை மூடியபடி அவன் ஸ்பரிசத்தை மனதால் தீண்டிக்கொண்டிருந்தாள் ஸ்பூர்த்தி.
“இன்னைக்கு நீ ஏன் இப்படி பன்ற என்னை?…” என தன் கன்னம் கொண்டு அவள் கன்னத்தை உராய்ந்தான்.
“என்ன பண்ணேன்?…” என்றவள்,
“அப்பா என்ன சொன்னாங்கன்னே சொல்லலை மாமா?…” என கேட்க அஷ்வினிடம் சன்னமாய் ஒரு சிரிப்பு.
“இப்ப அது தேவையில்லை. ஃபாதர் திங்கிங். அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்…” என அசால்ட்டாய் சொல்லி,
“ஹவ் ஸ்வீட் ஸ்பூர்த்தி? டெஸ்ட் பண்ணி டேஸ்ட் பண்ணவா?…” என இரு கைகளால் அவள் முகத்தை பிடித்துக்கொள்ள மனம் மயங்கி விழி மூடியிருந்தவள் பட்டென்று கண்களை திறந்தாள்.
“மாமா…” என திகைக்க,
“இன்னைக்கு ஹர்ட் பண்ணாம…” என்றவன் சிரிப்போடு நெருங்கிய நொடி சேம்பி வவ்வென்று அவன் மீது விழ இருவருமே பதறி விலகினார்கள்.
“ஹேய் சேம்பி…” என அதை சிரிப்புடன் தூக்கிக்கொண்டவன் ஸ்பூர்த்தியின் முகத்தை ஆசையுடன் விழிகளால் அள்ளிக்கொண்டான்.
அதுவரை இருந்த பேச்சுக்கள் எல்லாம் எங்கோ காணாமல் செல்ல ஸ்பூர்த்தி முகத்தில் வெட்கசிவப்பு.
அங்கே இருவருக்கும் இடையிலான இடத்தில் வசதியாய் சேம்பி படுத்துக்கொண்டு தலையை அஷ்வினின் மடியில் வைத்தபடி ஸ்பூர்த்தியை பார்த்தது.
“சேட்டை குட்டி…” என்றாள் அதன் தலையை வருடிக்கொடுத்து.
அத்தனையிலும் அஷ்வினை நிமிர்ந்து பார்க்கவில்லை ஸ்பூர்த்தி. அதை கவனித்தபடி இருந்தவன் மனதில் உல்லாச புன்னகை.
“டாப்பிக் எங்கையோ ஆரம்பிச்சு சூடுபிடிச்சு எங்கையோ போய் இப்ப இந்த பொண்ணுக்குட்டி வந்திருச்சு…” என்றான் அதன் தலையை பிடித்து ஆட்டியபடி.
“ஹ்ம்ம்…” ஸ்பூர்த்தி தலையசைத்து ஆமோதிக்க,
“என்ன ஹ்ம்ம்? எங்க, என்னை பார்த்து சொல்லு…” என்று வம்பிழுத்தான்.
“ஏன் பார்க்காம? பார்ப்பேனே?…” என்று பார்த்தவள் மீண்டும் சேம்பியை பார்க்க,
“சொல்ற எதையும் கேட்கிறதில்லை…” என்றவன்,
“வரேன் இரு…” என்று உள்ளே சென்றான்.
அவன் எழுந்து செல்லவும் சேம்பியும் அவன் பின்னாடியே இறங்கி சென்றுவிட்டது. ஸ்பூர்த்தியால் காலை அசைக்க முடியவில்லை.
வலி குறைந்திருந்தாலும் அசைக்கும் பொழுது எரிச்சல் இருந்தது. அஷ்வின் இருக்கும் வரை அதனை உணரவே இல்லை அவள்.
இப்போது அவன் நகர்ந்து சென்ற சில நொடிகளிலேயே வலியையும் உணர்ந்து, மறுநாள் பணிக்கு செல்ல முடியுமோ முடியாதோ என்றிருந்தது.
பாதம் ஊன்ற முடியவில்லை என்றால் எப்படி செல்லமுடியும் என யோசித்துக்கொண்டே அவள் தலை சாய்த்திருக்க அஷ்வின் வந்துவிட்டான்.
“ஸ்பூர்த்தி…” என அவன் நீட்டியதை பார்த்ததும் விழிகள் விரிய அதை வாங்கிக்கொண்டவள் முகத்தில் லட்சாதிலட்சம் மத்தாப்பூக்கள்.
“இதை நேர்ல காமிக்கலாம்ன்னு தான் கிளம்பி வந்தேன்…” என்று அவளுக்கு எதிரிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
ஸ்பூர்த்தி அவன் தந்த திருமண பத்திரிக்கையையே ஆசையுடன் தடவவும் படிக்கவும் என்று முகத்தில் புன்னகையுடன் பார்வையை பதித்திருக்க அஷ்வின் பார்வை அவளிடத்தில்.
இருவருக்குமே அது ஒரு பொன்னான தருணம். மனதின் ஆற்றாமையை சொல்லிவிட்டதனாலோ என்னவோ இன்னும் இலகுவாய் அவளிடம் அவனால் இருக்க முடிந்தது.
அத்தனை உற்சாகம் ஸ்பூர்த்தியின் சந்தோஷத்தை பார்த்து. அதை உள்வாங்கியபடி,
“இதை தான் நீ வேண்டாம்ன்னு சொன்ன பூரிக்குட்டி…” என்றான் அஷ்வின்.
“மாமா ப்ளீஸ். அதையே சொல்லாதீங்க…” என அஷ்வினை இறைஞ்சுதலுடன் அவள் பார்க்க,
“சொல்லுவேன். என்னால சொல்லாம எல்லாம் இருக்கமுடியாது. நீ சொன்னியே அன்னைக்கு நீங்க பார்த்த பார்வையை மறக்க முடியாதுன்னு. அதுமாதிரி தான் எனக்கும். ஏன் எனக்கெல்லாம் அப்படி தோண கூடாதா?…” என்றான் அவளிடத்தில்.
“மாமா என்ன இது?…” பத்திரிக்கையை கையில் வைத்தபடி அவள் கெஞ்சலுடன் பார்க்க,
“என்ன எது? சொல்லு. பேசு…” என மல்லுக்கு நின்றான்.
“ஓஹ், நோ. மாமா முன்னாடியெல்லாம்…”
“முன்னடின்னா எப்ப நீ பிறந்தப்பவா? சும்மா அதையே சொல்லிட்டிருக்க? உன்கிட்ட இப்படித்தான் பேச முடியும். டெமோவே காமிச்சுட்டேன்.இன்னுமா டவுட்?…”
“டவுட்டே இல்லை. ஆமா எங்கப்பா என்ன சொன்னாங்க?…”
“உன்னை நல்லா பத்திரமா பார்த்துக்க சொன்னாங்க. வா பார்த்துக்கறேன்…” என கை நீட்டி அழைத்து சொல்ல,
“அச்சோ…” என பத்திரிகையால் முகத்தை மூடிக்கொள்ள ரசனையுடன் அந்த காட்சியை விழிகளால் ஸ்பரிசித்தவன் இதழ்களில் ரகசிய புன்னகை.
“ஏன் பார்த்துக்கமாட்டேனா? இல்ல வரமாட்டியா?…” என்று வீம்பிற்கு மீண்டும் அழைக்க,
“அப்படியெல்லாம் இல்லை மாமா…” என கொஞ்சல் குரலில் கெஞ்ச அஷ்வின் எழுந்து நின்றுவிட்டான்.
“ஸ்பூர்த்தி…” என அவளருகே வந்தவன் தலையை கோதிக்கொண்டு,
“டேமிட்….” என காலை உதைத்து வாசல் வரை நடந்துவிட்டு வந்தான்.
“போதும், நீ எழுந்து உள்ள போய்டுடா பூரிக்குட்டி…” என்று வந்ததும் சொல்லியவன்,
“ஓகே, நான் போகட்டா?…” என்று கேட்டு நிற்க,
“உட்காருங்க மாமா. என் கூட இருங்க…” என்றாள் புன்னகை மின்ன.
“அவ்வளோ நம்பிக்கை…” என்று மீண்டும் எதிரே அமர்ந்தவன் அந்த இருக்கையில் காலை நீட்டி ஸ்பூர்த்தியை பார்த்தபடி படுத்துவிட்டான்.
இருவரை சுற்றிலும் வார்த்தைகள் அற்ற மௌனம் இடம்பிடித்திருக்க இருவருக்குமிடையே தூரங்கள் சுருங்கினாலும் விழி வாசல் வழி மனதில் நுழைந்து உயிரோடு கலந்திருந்தனர்.