அஷ்வின் மோனிகா, மலரை கூட்டிக்கொண்டு கிளம்பி இரண்டு நாட்களாகிற்று.
இரண்டு நாளும் வீட்டில் இருந்தபடி தான் ஸ்பூர்த்தி வேலைகள் எல்லாம். கால் சரியாகும் வரை செல்லவேண்டாம் என்று சொல்லியிருக்க அவளாலும் செல்லமுடியவில்லை.
“செப்டிக் ஆகிட்டா இன்னும் பிரச்சனை. அப்பறம் முழுசா ஆறும் வரை நீ லீவ்ல தான் இருக்கனும் ஸ்பூர்த்தி…” என அஷ்வின் கடிந்து சொல்லிவிட்டான்.
அதனைக்கொண்டு அதுவும் சரி என்று தோன்ற வீட்டில் இருந்தவள் வேலையில் எந்தவித குறைவையும் வைக்கவில்லை.
முருகவேல், காளியுடன் சென்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டான். ஸ்பூர்த்தி சொல்லியதை போல மலைவாழ் மக்களை அழைத்து அவர்கள் உதவியின் படி வேலி அமைக்கும் வேலைகளும் நடந்தது.
அஷ்வினும், நந்தனும் அங்கே சென்று பார்த்துவிட்டு வர என்று இருக்க அடுத்த மூன்றாம் நாள் அஷ்வின் கிளம்பிவிட்டான்.
கிளம்பும் அன்று அவனின் காலுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது சேம்பி.
“ஹ்ம்ம், அவங்களால சென்ஸ் பண்ண முடியும் தானே?…” என சேம்பியை வருடிவிட்டவனுக்கும் விட்டு செல்ல மனதில்லை.
ஸ்பூர்த்திக்கென்று வாங்கிவிட்டு அவளிடம் சொல்லியும்விட்டு தானே எடுத்து செல்ல முடியாதே என மனதை இறுக்கிக்கொண்டான்.
பழகிய இந்த சிறிது நாட்களில் தன்னோடே ஒட்டி திரிந்த ஜீவனை பிரிகையில் அத்தனை வருத்தம்.
“நல்லா பார்த்துக்கோ ஸ்பூர்த்தி…” என அவளிடம் வலியுறுத்த,
“கஷ்டமா இருந்தா நீங்க கூட்டிட்டு போங்க மாமா. உங்க முகம் அதுக்கு மேல இருக்கு…” என்று கேலி போல சொன்னாலும் உண்மையும் அதுதான் என ஸ்பூர்த்திக்கு தெரிந்திருந்தது.
“ச்சே ச்சே அதெல்லாம் இல்லை. மேனேஜ் பண்ணிப்பேன். உன்கிட்ட தானே இருக்கா…” என்று சொல்லி புன்னகைத்து சமாளித்து கிளம்பிவிட்டான்.
கிளம்பிய அன்றிலிருந்து உணவில்லை, சரியான உறக்கமுமில்லை சேம்பிக்கு. கதவு திறக்கும் சப்தம் வந்தால் கூட ஓடி சென்று பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் வாசலை பார்த்து அமர்ந்துவிடுவாள்.
சொல்லவும் வாயில்லை. அதன் முகபாவனைகளும் தளர்ந்த செயல்களுமே ஸ்பூர்த்தியை கலங்க செய்தது.
அதனுடனே இருந்து பார்த்து, கவனித்து, விளையாடி என எத்தனை செய்தும் ஸ்பூர்த்தியால் சேம்பியிடம் பழைய உற்சாகத்தை கொண்டுவரமுடியவில்லை.
வெறுமனே அதன் மெத்தையில் சுருண்டு படுத்திருக்கையில் கண்ணில் லேசாய் நீர் கசிந்திருக்கும்.
பொறுத்து பொறுத்து பார்த்தவளுக்கு அத்தனை கவலை. இப்படி கஷ்ட்டப்பட்டு தன்னுடன் இருக்கவேண்டுமா என்றே தோன்றிவிட்டது.
“நந்து மாமாவை வர சொல்லி பொண்ணுக்குட்டியை கூட்டிட்டு போக சொல்லு…” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள் ஸ்பூர்த்தி.
“என்ன விளையாடறியா? ரெண்டுநாளாகளை அதுக்குள்ளே நீ ஆரம்பிச்சிட்ட? போக போக சரியாகிடும்…” நந்தனும் அசால்ட்டாக சொல்ல,
“நீ என்ன பேச? நானே பேசிப்பேன்…” என்று அஷ்வினுக்கு அழைத்துவிட்டாள்.
“மாமா வீடியோ கால் வாங்க…” என்று கட் செய்துவிட்டு காத்திருக்க என்னவோ என பதறி அஷ்வின் உடனே அழைத்தான்.
அவனின் பின்புறம் ரெக்கார்டிங் தியேட்டரை காண்பித்தது. முகத்தில் தீவிரம் வேறு.
“கம்போசிங்கா?…” ஸ்பூர்த்தி கேட்க,
“ஆமாடா, என்னன்னு சொல்லு. ப்ரேக் சொல்லிட்டு வந்திருக்கேன். எதுவும் பிரச்சனையா? நந்து எதுவும் சொல்லலை…” என அவனாக பேச,
“பிரச்சனைன்னா தான் கூப்பிடனுமா? என்னை பேசவிடுங்க மாமா…”
“ஹ்ம்ம், சொல்லு…” என்றவன்,
“சேம்பி என்ன பன்றா?…” என்று கேட்க,
“நீங்களே பாருங்க…” என்று காண்பிக்க அஷ்வினின் குரலை கேட்டு துள்ளிக்கொண்டு வந்தது பொண்ணுக்குட்டி.
திரையில் அவன் முகமும், குரலும் தெரியவும், புரியவும் அதன் மேல் பாய்ந்து விழுந்து ஒருவிதமாய் குரல் எழுப்ப அஷ்வினுக்கும், ஸ்பூர்த்திக்கும் நெஞ்சடைத்தது.
“உங்களை ரொம்ப தேடுது மாமா…” என்றாள்.
“ஹ்ம்ம், சரியாகிடும். கொஞ்ச நாள்…”
“எனக்கு கோவம் வரும் மாமா. நீங்க கூட்டிட்டு போங்க…”
“ஸ்பூர்த்தி…”
“என்னால முடியலை. என்னோட இருக்கனும்னு எனக்கு ஆசை தான். ஆனா இப்படி வேண்டாம். பாவம் மாமா…” என்றாள் அவள்.
“உனக்காக வாங்கிட்டு வந்தேன்…” அஷ்வின் சொல்ல,
“அன்னைக்கு என்னவோ சொன்னீங்க? நீ தான் நான்னு. எங்க இருந்தா என்ன? அவ ஹேப்பியா இருக்கனும்…” என்றாள் சேம்பியை மடியில் வைத்து தடவிக்கொடுத்து.
“சொல்றதை கேளு ஸ்பூர்த்தி…”
“ம்ஹூம், நீங்க கேளுங்க….”
“ஏன் பூரிக்குட்டியால பொண்ணுக்குட்டியை பார்த்துக்க முடியலையோ?…” என அவளை சீண்ட,
“அப்படியே வச்சுக்கோங்க. நீங்க வந்து கூட்டிட்டு போறீங்களா? இல்லை நந்துக்கிட்ட குடுத்தனுப்பவா?…” என்றாள் பிடிவாதமாய்.
“ம்ஹூம், வேண்டாம், வேண்டாம். மறுபடியும் எங்கையோ கொண்டுபோய் விடபோறாங்கன்னு பயந்திடுவா. நானே வரேன்…”
புதிதாய் ஒப்புக்கொண்ட படங்களில் அதிரனதும் ஒன்று. அதனால் வேலைகள் நிறைய இருக்க மூச்சுவிடமுடியாத அளவிற்கு அவனை இழுத்து பிடித்திருந்தது.
“ஓகே, வாங்க…” என்று வைத்துவிட்டாள்.
சொல்லியபடி அன்றிரவே கிளம்பி மறுநாள் காலையே அங்கே வந்து சேர்ந்துவிட்டான் அஷ்வின்.
வந்ததிலிருந்து அவனுடனே கொஞ்சி இழைந்தபடி சுற்றி வந்த சேம்பியை கவனித்தவள்,
“சேட்டையை பாருங்க. சாப்பாடு கூட இப்ப தான் ஒழுங்கா சாப்பிடறா…” என்று சொல்லி கிண்டல் வேறு செய்தாள்.
அஷ்வினை எங்கும் செல்ல அனுமதிக்கவில்லை சேம்பி. தன்னை விட்டு சென்றுவிடுவானோ என பயந்து பயந்து அவனை தன் கண்பார்வையில் வைத்திருந்தது.
இரவு அங்கிருந்து கிளம்பும் நேரம் தான் ஸ்பூர்த்தியை கவனித்தது. காரின் அருகே நின்றுகொண்டு அவளை பார்க்கவும் அஷ்வினை பார்க்கவுமாக இருந்து பின் ஸ்பூர்த்தி காலை வந்து சுற்றியது.
“பார்த்தியா? இதான் சொன்னேன், அவளே சரியாகிருப்பா. நீ என்னடான்னா?…” என அஷ்வின் சொல்ல ஸ்பூர்த்தி சேம்பியை தூக்கி கொஞ்சியவள்,
“சீக்கிரம் வரேன். இப்ப நீ மாமாகூட போவியாம்…” என்றவள் முகத்தை நாவால் வருடி கொஞ்சி பின் இறங்கி அஷ்வினிடம் ஓடிவிட்டது சேம்பி.
“பை டா. டேக் கேர்…” என கிளம்பிவிட்டான் அஷ்வின்.
கிளம்பி சென்றவன் மீண்டும் அங்கே ஸ்பூர்த்தி பாதுகாப்பிற்கு நிறுருத்தியிருந்தவர்களை அழைத்து திரும்ப திரும்ப எச்சரித்துவிட்டு தான் சென்றான்.
யானைக்குட்டி விபத்தில் மாட்டிய அன்றே அவனுக்கு அத்தனை கோபம் அவர்கள் மேல்.
தாங்கள் அப்படி ஒரு சிக்கலில் இருக்க கவனிக்காமல், கண்காணிக்காமல் அப்படி எங்கே சென்றார்கள் என்று.
அந்த அலட்சியத்தை நேரில் கவனித்துவிட்டவன் கூடுதலாக இருவரை வரவழைத்து நியமித்துவிட்டே சென்றான்.
அன்று தான் இல்லாமல் ஸ்பூர்த்தி மட்டும் அங்கே சென்று அவளுக்கும் ஏதாவது ஒன்றென்றால் என்ற பயமே இன்னும் பிரதானமாய் இருந்தது.
அதிரன் அழைத்து வேறு கண்டித்திருக்க இப்போது அவர்களும் தவறுணர்ந்து கொடுத்த வேலைக்கு உண்மையாய் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.
வேதநாயகத்தின் வழக்கு தீவிரமடைந்திருந்தது. மாசிலாமணியின் ஒப்புதல் வாக்குமூலத்தை சிபிஐ கோர்ட்டில் சமர்பிக்க ஜாமீன் கூட வழங்க இயலாதென்று சொல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவரை நடுங்க செய்தது நீதிமன்றம்.
எத்தனை முறை வாதாடியும் வேதநாயகத்தால் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க முடியவில்லை.
அதுவே ஸ்பூர்த்தியின் மேல் தீரா வன்மத்தை விதைத்தது. சின்ன சின்ன வழக்குகள் இருந்திருந்தாலும் இத்தனை ஆணித்தரமாய் யாரும் கடைசி வரை நிற்கவில்லை.
ஸ்பூர்த்தி வனம் மாசுபாடு, வனத்தில் தீ பற்றியதன் காரணி, வனவிலங்கின் உயிருக்கு ஆபத்து விளைவித்தது என்று கொண்டுவந்து கடைசியாய் அந்த விபத்தில் சிக்கிய வஸ்துவை வைத்து வேதநாயகத்தை மொத்தமாய் கட்டி போட்டிருந்தாள்.
எல்லாவற்றையும் தாண்டிவிட முடிந்தவரால் இதிலிருந்து மீள முடியும் என்று தோன்றவில்லை.
அதுவே வேதநாயகம் முன்பு செய்திருந்த, தப்பித்த மற்ற குற்றங்களை இன்னும் தோண்ட வைத்தது.
இப்போது நேர்மையான அதிகாரிகள் வாயிலாக விசாரணை நடந்துகொண்டிருக்க மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடித்து இதோ மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் வேதநாயகம்.
ஒன்றரை மாதங்கள் முழுதாய் முடிந்திருந்தது இதிலேயே. இன்னும் வழக்கு முடித்து வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும் விசாரணை என்று வேதநாயகத்தை கஸ்டடியில் எடுத்திருந்தனர் அதிகாரிகள்.
வழக்கு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் முன்ஜாமீன் வழங்க முடியாதென்று வேறு சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் உறுதியாய் தெரிவித்துவிட்டது நீதிமன்றம்.
எந்த வழியிலும் தப்பிக்க முடியாமல் மாட்டிக்கொண்டவரின் மொத்த ஆத்திரமும் ஸ்பூர்த்தி மீது தான்.
எங்கிருந்து யாரை வைத்து இத்தனை செய்கிறாள் என்று சுத்தமாய் கண்டுகொள்ளமுடியவில்லை.
கமிஷனரிடமும் கேட்டு பார்த்தாகிற்று. இதற்கு மேலும் தொடர்புகொண்டால் தனக்கும் இதில் பங்கென்றாகிவிடுமோ என கமிஷனர் பின்வாங்கிவிட்டார்.
“என்ன இழவுய்யா இந்தாளோட? சரி கொஞ்சம் உதவி பண்ணுவோமே? நம்மையும் கவனிச்சிருக்காறேன்னு பார்த்தா போட்டு நோண்டிட்டே இருக்காரு மனுஷனை. என்னவோ எனக்கு வேலையே இல்லாத மாதிரி…” என்று லக்ஷ்மணனிடம் தான் எகிறினார்.
“என்னவோ செய்யாத பழியை தூக்கி இந்த மனுஷன் மேல போட்ட மாதிரி எவ்வளோ பேச்சு?…” என புலம்பிக்கொண்டிருந்தார்.
“உன்னை யாருய்யா அந்த மாசிலாமணியை முந்திக்கிட்டு போய் அரஸ்ட் பண்ண சொன்னது? என்கிட்டே ஏன் சொல்லாம போன?…” என அவனையும் பிடித்து காய்ந்தார்.
ஒன்றுமறியாததை போல லக்ஷ்மணன் அவற்றை கேட்டுக்கொண்டு மௌனமாக தான் இருப்பான்.
“நீங்க வேற மேம், இங்க மண்டை காயுது எங்க கமிஷனருக்கு. அந்தபக்கம் வேதநாயகத்தை சமாளிக்க முடியலை. இந்தபக்கம் யார் என்ன பன்றாங்கன்னு தெரியலை….” என்று சொல்லி சிரிக்க,
“அப்படித்தான் இருக்கனும். சும்மா இருக்கற மூளைக்கு இந்த வேலையாச்சும் மிஞ்சட்டும். கண்டுபிடிக்கட்டும். இல்லனா என்ன கமிஷனர் அவரு?…” என கிண்டலாய் பேசினாள் ஸ்பூர்த்தி.
“ஆல்மோஸ்ட் கேஸ் பைனல் ஸ்டேஜ்க்கு வந்திருச்சு மேம். இன்னும் ஒரு ஹியரிங் அதுலயே ஜட்ஜ்மென்ட் தான்னு நினைக்கேன்…” என்றவன்,
“உங்க கல்யாணத்துக்குள்ள தீர்ப்பு வந்திரும்…” என்றான்.
“உங்களை தான் இன்வைட் பண்ண முடியலைன்னு வருத்தமாய் இருக்கு லக்ஷ்மணன்…” என்றாள் ஸ்பூர்த்தி.
“இந்த பொண்ணு என்னை எல்லாம் நினைக்கவே இல்லை பாரு லக்ஷ்மணா?…” என்று அதே அழைப்பில் இன்னொரு குரல் இடையில் வந்தது.
“தியாகராஜன் ஸார், உங்களை தான் இன்வைட் பண்ணிட்டேனே?…” என ஸ்பூர்த்தி சொல்ல,
“எங்க? சும்மா மத்தவங்களுக்கு குடுத்த மாதிரி ஒரு பார்மல் இன்விடேஷன்…” என்றார் அவர்.
அவர் வேதநாயகத்தை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளில் ஒருவர். அங்கே மேலதிகாரியும் கூட.
ஸ்பூர்த்தி பயிற்சி காலத்தில் சில முறை அவரை சந்தித்திருக்க அதன் பழக்கம் நட்பாய் இன்றுவரை தொடர்கிறது.
தனது தகப்பனின் வயதை ஒட்டியவரின் மேல் மரியாதையும் கூடியிருந்தது அவரின் நேர்மையான செயல்களில் மூலம்.
வேலையில் சேர்ந்துவிட்ட பின் நேரில் சந்திக்கமுடியவில்லை என்றாலும் எப்போதாவது பேசிக்கொள்வதுண்டு.
அப்படி ஒரு பேச்சில் தான் வேதநாயகம் பற்றி தியாகராஜன் எடுத்துரைக்க லக்ஷ்மணனை உள்ளே வரவழைத்தாள் ஸ்பூர்த்தி.
கெட்டது செய்ய நாற்பது பேர் ஒன்றிணைந்தால் நல்லது செய்ய நான்குபேராவது ஒன்றினையமாட்டர்களா?
அப்படியான பேச்சின் துவக்கத்தில் சில வழக்குகளின் நிலுவை பற்றி பேச அதனை தொட்டு வேதநாயகத்தின் வழக்கு பற்றிய விசாரணை வேதநாயகத்தின் மேல் ஸ்பூர்த்தி தொடுத்த முதல் வழக்கின் முன்பே துவங்கிவிட்டது.
அதற்கு ஏதுவாக வனத்திற்குள் விளம்பரம் எடுக்க என்று தன் செல்வாக்கின் மூலம் அதிகாரமாய் நுழைந்து மாட்டிக்கொண்டார் வேதநாயகம்.
அதன் பின்பே அடுத்தடுத்த வழக்குகள் பதிவாக இன்றுவரை அதன் பின்னணியை யாராலும் அறியமுடியவில்லை.
இப்போதும் தியாகராஜன், ஸ்பூர்த்தி, லக்ஷ்மணன் மூவரும் கலந்தாலோசித்து தான் அடுத்த படியை எடுத்து வைப்பது.