இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும். மாடியின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் தோளில் சாய்ந்திருந்தாள் ஸ்பூர்த்தி.
அழுது ஓய்ந்தவள் முகம் புன்னகைத்தாலும் விழிகளில் கண்ணீர் கசிந்தவண்ணம் தான் இருந்தது.
அவளை அனுப்பவும் முடியாமல், உடன் செல்லவும் முடியாமல் அங்கேயே அமர்ந்தவன் தோளில் சாய்ந்துகொண்டவள் விரல்கள் அவனின் விரலோடு கோர்த்திருந்தது.
“இன்னும் எவ்வளோ நேரம் ஸ்பூர்த்தி? கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இருக்கறதா?…” என விளையாட்டாய் கேட்டவன் விரல்கள் அவளை பிரியேன் என்பதை போல தான் பிணைந்திருந்தது.
“இன்னும் கொஞ்ச நேரம், கொஞ்சமே கொஞ்சம் மாமா…” என்று சலுகையாய் சொல்லியவள் பிடிவாதத்தில் புன்னகைத்துக்கொண்டான்.
இத்தனை தூரம் சந்தோஷத்தில் கண்ணீர் வருமா என்று அவனை திக்குமுக்காட செய்திருந்தாள் ஸ்பூர்த்தி.
அவளாக வரட்டும் என்று இரண்டு வருடங்கள் இடைவெளி விட்டு காத்திருந்தது எத்தனை தவறென்று உறுத்தியது.
இவ்வளவு இலகுவாய் அவள் கிடைத்துவிட்டாளா என்று இன்னும் நம்பமுடியாமல், நம்பவிடாமல் ஒரு அழுத்தம்.
முன்பே தானே தேடி சென்றிருக்கவேண்டுமோ என உள்ளுக்குள் பேரலை அவனை சுருட்டிக்கொண்டே இருந்தது.
தன்னுடைய தவிர்ப்பு அவள் மனதில் எவ்வளவு காயத்தை, ஏக்கத்தை, தவிப்பை தந்துவிட்டதென உளபூர்வமாய் உணர்ந்துகொண்டான்.
மேலும் அரைமணி நேரம் சென்றிருக்க அவன் தோளில் அசைவில்லாமல் சாய்ந்திருந்தவள் உறங்கிவிட்டாளோ என நினைத்து லேசாய் அசைத்து பார்க்க,
“தூங்கலை மாமா, முழிச்சு தான் இருக்கேன்…” அவனை நிமிர்ந்து பார்த்து சொல்ல அஷ்வினின் இதழ்களை சமீபித்தது ஸ்பூர்த்தியின் பிறை நெற்றி.
“ஹ்ம்ம், டா…” என்றவன் தன் அதரங்களை நெற்றியில் அழுத்தினான்.
“உங்களுக்கு தூக்கம் வருதா மாமா? போகவா?…”
“ஹ்ம்ம், கொஞ்சமாவது ரெஸ்ட் எடுக்கனும். இல்லைன்னா நாளைக்கு மேடையில உக்கார முடியாது. அங்க தூங்குவோமா?…” என அவள் நெற்றியில் லேசாய் முட்டி விலக,
“போகனும்னா போங்க. என்னை கேட்கவேண்டாம். எனக்கு தூக்கம் வரலை…” என்று சொல்லி அவனை பிடித்திருந்த கையை விலக்கவில்லை.
“போங்கன்னா? எப்படி? இப்படியா?…” என கையை காண்பித்தவன்,
“ஹேய் யாராச்சும் வந்திட போறாங்க?…” என்று அவள் முகத்தை தன் தோளில் புதைத்தான்.
“என் கழுத்து மாமா…” என்று முனங்கலாய் சொல்லியவள் அஷ்வின் விடவும்,
“இதை வந்தப்பவே சொல்லியிருக்கனும். இப்ப போ போன்னா?…” என்று சொல்ல அவள் முகத்தையே கவனித்தபடி கன்னத்தில் கை ஊன்றிக்கொண்டான்.
“என்ன என்ன பார்க்கறீங்க? பைத்தியம் மாதிரி பேசறேன்னா? ஹ்ம்ம், அப்படியும் வச்சுக்கலாம்…” என்று தோளை குலுக்கி சொல்ல,
“ஸ்பூர்த்தி என்ன இது?…” என்று அதட்டினான்.
அவனின் பதட்டத்தில் சிரித்தபடி விலகி எழுந்து நின்றவள் தன் இரு கைகளையும் சூடுபறக்க தேய்த்துவிட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்டாள்.
“உங்களுக்கு…” என்று சொல்ல தானாய் முன்வந்து தன் கன்னம் கொடுத்து நின்றான் அஷ்வின்.
“உங்களுக்கு இதெல்லாம் புரியுமான்னு தெரியலை மாமா. ஆனா எனக்கு நான் இப்ப என்ன நினைக்கறேன், எப்படி பீல் பன்றேன்னு புரியவைக்க முடியுமான்னு தெரியலை. அவ்வளோ ஒரு சந்தோஷம். இப்ப இங்க இருந்து குதிச்சு…”
“ஸ்பூர்த்தி…” என்று அவள் பேச்சை கைகொண்டு நிறுத்தினான்.
முகத்தில் ஏக கலவரம். ஏற்கனவே மனதளவில் அழுத்தத்தில் இருந்தவனுக்கு இந்த தற்செயல் பேச்சுக்கள் கூட பயத்தை தந்தது.
விடிந்தால் தங்கள் திருமணம் மட்டுமல்ல, வேதநாயகத்தின் விசாரணையுடன் தீர்ப்பும் கூட.
வேதநாயகத்தை கவனிக்க ஆட்களை வைத்திருந்தும் வேதநாயகம் எந்தவித பதட்டமும் இல்லாமல் இருப்பது தான் இங்கே அஷ்வினுக்கும், அதிரனுக்கும் பதட்டத்தை உண்டுசெய்திருந்தது.
எப்போது என்ன நடக்கும் என்று இன்றுவரை தெரியவில்லை. அஷ்வினுக்கு அழைப்பு வந்திருந்தது.
“கல்யாண மாப்பிள்ளையாமே நீ? வாழ்க்கையை ஆரம்பிக்க போற உனக்கு வாழ்த்து சொல்லனுமே? என்னை இங்க உள்ள உக்கார வச்சிட்டு அவளுக்கு சந்தோஷம் கேட்குதா?…” என்று வேதநாயகம் பேசியிருக்க அஷ்வினால் அதனை சாதாரணமாக எடுக்க முடியவில்லை.
“என்னவோ இது ஒன்னு தான் கேஸ் அப்படின்ற மாதிரி நீங்க பேசறீங்க? இதுக்கு முன்னாடியும் உங்க மேல பல வழக்கு இருக்கு. அப்ப அவங்க எல்லாரையும் பழி வாங்குவீங்களா?…” என்றான் அஷ்வினும்.
“நல்ல கேள்வி தான். ஆனா இப்படி என்னை மொத்தமா சோலியை முடிக்கவச்சு மூலையில செல்லாக்காசா யாரும் தூக்கி போடலையே? என்னை என் அதிகாரத்தை எல்லாத்தையும் பறிக்க வச்சாளே…” என்றதோடு இல்லாமல்,
“அப்பனுக்கும் அறிவில்லை. பெண்ணை சொல்லி வளர்க்க துப்பில்லை. ரெண்டுபேரும் அனுபவிக்க போறாங்க பாரு. உன் மாமன் பேசினானே அவ்வளவு எகத்தாளமா. அவனுக்கும் இருக்கு…” என்று சொல்லியிருக்க அஷ்வினின் உயிர் அடங்கிவிடும் போலானது.
“அடுத்த வாரம் கல்யாணமா? பார்த்துக்கறேன்…” என்று சொல்லி வைத்திருந்தான்.
அதுவே அஷ்வினை நிம்மதியிழக்க செய்தது. அந்த அழைப்பின் எண் பற்றிய விவரங்களை ஆராய எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.
பாதுகாப்புகள் எப்போதும் பலம் தான். இப்போது இன்னும் கூடுதல் கவனத்தில் தான் திருமண ஏற்பாடுகள்.
அத்தனை சிரத்தையாக கவனித்து வந்தனர். அதுவும் வேதநாயகத்தின் கோபம் எப்படியோ என்று எதுவும் தெரியவில்லை.
அனைவருமே கவனமாக இருக்கவேண்டிய அவசியத்தில் இருக்க இப்போது ஸ்பூர்த்தியின் இந்த உணர்ச்சி ததும்பல் அஷ்வினை இன்னுமே தடுமாற செய்தது.
“போகலாம் மாமா, என்னவோ யோசிக்கிறீங்க. என்னன்னு தெரியலை….” என்று சொல்ல,
“நத்திங் டா. நம்ம கல்யாணம் பத்தி தான்…”
“அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல நடக்க போகுதே….” என்று மீண்டும் அவனை கிள்ளி வைத்தாள்.
“சேட்டையா போச்சு உனக்கு. போய் தூங்கு….” என்று அவளை அழைத்து கொண்டு அவள் அறை வரை வந்தான்.
“போதுமா? இல்லை உள்ள வந்தும் தாலாட்டு படுவீங்களா?…” என கிண்டல் பேசினாள்.
அவளின் முகமும், பேச்சும் அதன் துள்ளலும் அஷ்வினுக்கு ஸ்பூர்த்தியின் மகிழ்ச்சியின் அளவு என்ன என்பதை தெரியப்படுத்தியது.
“பாடலாமே? நாளைக்கே பாடறேன். இப்ப போ…” என்றான் கதவை திறந்து அவளை பிடித்து உள்ளே தள்ளி.
“ஈஸிட்?…” என்று ஸ்பூர்த்தி புருவம் உயர்த்த அஷ்வினும் யோசிக்காமல்,
“கண்டிப்பா பாடி தூங்க வச்சிடறேன். போதுமா?…”
“ம்ஹூம், நீங்க இன்னைக்கு சரியில்லை மாமா…” என்று தலையில் தட்டிக்கொண்டு சிரிக்க,
“ஏன்?…” என்று தன்னை குனிந்து பார்த்தவன்,
“சரியா தான் இருக்கேன்…”
“ரொம்ப சரியா இருக்கீங்க. ஆனா இன்னைக்கு இது சரியில்லை தானே? அதுவும் அவ்வளோ நேரம் மாடில இருந்தோம். அப்பவும்…” என்று சொல்லிக்கொண்டிருக்க அஷ்வின் மூளையில் என்னெவென்று பளிச்சிட,
“ஹேய் ஸ்பூர்த்தி…” என்று அவளை எட்டி பிடிக்கும் முன் கதவை சாற்றியிருந்தாள்.
“பேச்சா பேசற. வா வச்சுக்கறேன்…” என்று கதவினருகே மெல்லிய குரலில் சொல்லிவிட்டு செல்ல ஸ்பூர்த்தி முகம் கொள்ளா புன்னகையுடன் கதவில் சாய்ந்து நின்றாள்.
“மக்கு மாமா…” என்று அவனுக்கு செய்தி அனுப்ப,
“பயம் விட்டு போச்சு. நேர்ல வா. பார்த்துக்கறேன். இப்ப நீ தூங்கலைன்னா அடி தான்…” என அஷ்வினும் பதிலுக்கு அனுப்பிவிட்டு விட்டுவிட்டான்.
அதனுடனே வந்து படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. வெறுமனே கண்ணை மூடி படுத்துவிட்டாள்.
வேதநாயகத்தின் வழக்கு நிலவரம் என்ன என்பதும் ஸ்பூர்த்தி லக்ஷ்மணன் மூலம் அறிந்திருந்தாள்.
தான் செல்லவேண்டிய அவசியமில்லை. திருமணம் என்று சொல்லியிருக்க அங்கே எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என்று அத்தனை நம்பிக்கை.
தியாகராஜனும் சொல்லிவிட்டார். தீர்ப்பு வேதநாயகத்திற்கு எதிராக தான் வரும் என்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஆவணப்படுத்தப்பட்டு ஒப்படைக்கப்பட்டாகிற்று என்றும் சொல்லிவிட்டிருந்தார்.
அவராலும், லக்ஷ்மணனாலும் திருமணத்திற்கு வரமுடியாதது போல் அமைந்துவிட்டது இந்த சூழ்நிலை.
வழக்கை வைத்துக்கொண்டு, அதுவும் தீர்ப்பில் இருக்கையில் அதை தவிர்க்கவே முடியாது என்பதால் போனிலேயே வாழ்த்திவிட்டனர்.
அவர்கள் வரமுடியாதே என்பதில் ஏமாற்றம் தான். ஆனாலும் இனி இந்த வேதநாயகம் பிரச்சனை இத்துடன் ஒழிந்தது என்பது தான் ஸ்பூர்த்தியின் எண்ணம்.
ஆனால் அடிபட்ட பாம்பின் சீற்றம் அடித்தவரை கொத்துமளவிற்கு அல்லவா இருக்கிறது என ஸ்பூர்த்தி பெரிதாய் கவனம் கொள்ளவில்லை.
மிஞ்சி மிஞ்சி போனால் மிரட்ட முடியும். அதற்கு மேல் தண்டனை வழங்கப்பட்டதும் இதில் அவரால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்தாள்.
சட்டத்தை அதன் தண்டனையை சட்டத்தின் அளவீட்டை வைத்துமட்டும் அவள் பார்த்திருந்தாள்.
தண்டனை கிடைக்கபெற்று, அரசியலிலும் இடமில்லாதவரால் என்ன செய்துவிட முடியும் என்ற ஒரு அலட்சியமும், இந்த திருமணமும் அவளை திசைதிருப்பியிருந்தது.
உயிராய் விரும்பியவன் வாழ்க்கைக்குள் முழு உரிமையுடன் நுழையவிருக்கிறாள்.
அதுவே ஸ்பூர்த்தியின் மனதில் வேறு எதற்கும் இடமளிக்கவில்லை. உருண்டுபுரண்டு படுத்து இதோ எழுந்து குளித்து கிளம்பி தயாராகி மணப்பெண்ணாய் மணமேடையில் அஷ்வினின் அருகே ஸ்பூர்த்தி.
முன்னிருந்தவர்களுக்கு உறவுகளுக்கு என அனைவருக்கும் கையசைத்து புன்னகையுடன் அவர்களை தலையாட்டி வரவேற்று என்று அவள் இலகுவாய் இருக்க அஷ்வின் தான் கை பிடித்து அதட்டி அமர வைத்தான்.
“விட்டா எந்திச்சு போய் அவங்களை கூட்டிட்டு வந்து உக்கார வச்சிடுவ போல? இங்க மந்திரத்தை கவனி ஸ்பூர்த்தி…” என்றான் அஷ்வின்.
அதற்கும் அவனிடத்தில் தோளை குலுக்கி கண்சிமிட்டி சிரித்தவள் முகத்தில் அத்தனை பூரிப்பு.
“பூரிக்குட்டி என்னை ரொம்ப இம்சை பன்றடா…” அஷ்வின் மலைத்தேவிட்டான் அவளின் இந்த பரிமாணத்தில்.
“ஏன் மாமா? என்ன பண்ணேன்?…” என்று கேட்க,
“ஒண்ணுமே பண்ணலை. கொஞ்ச நேரம் கீப் கொயட்…” என்று வாயில் விரல் வைத்து காண்பித்து சொல்ல,
“ஓகே ஓகே…” என்று வாயை மூடிக்கொண்டு பவ்யமாய் பார்த்த தருணம் நிழற்படமானது.